This entry is in the series 20030911_Issue

வேதா


சொல்லாமல் தெரிய வேண்டும்
சொல்லவும் தனிமை வேண்டும்
சோகங்கள் சொல்லி அழ
சுகம் சுரக்கும் மார் வேண்டும்

காணாத ஏக்கமெல்லாம்
கண்நொடியில் கரைய வேண்டும்
கண்மணியை மடி சாய்த்து
கறையெல்லாம் கழுவ வேண்டும்

தேனூறும் தனிமொழியில்
தெரியாமல் தொலைய வேண்டும்
தெற்றுப்பல் சிரிப்பழகில்
உயிர் மெழுகாய் உருக வேண்டும்

பாதைவழி முளைவிட்டு
பார்வைகளில் பூக்க வேண்டும்
பாழ்பட்ட பக்கமெல்லாம்
பாசத்தால் புதைக்க வேண்டும்

உள்ளுக்குள் கூடுகட்டி
உயரத்தில் வசிக்க வேண்டும்
உலகத்து இன்பமெல்லாம்
உருவத்தால் உணரவேண்டும்

வேண்டுதல் வேண்டாமை இல்லாத நிறையாக
இனி வேறொன்றில்லாத வரமாக
வெளிளை மனசுக்குள் வேரோடு வேராக
விதையாக, விழுதாக, விதியாக, விடையாக
விருப்பமாய் இக்கணமே
எனக்கொரு மரணம் வேண்டும்!!
piraati@hotmail.com

Series Navigation