This entry is in the series 20050106_Issue

அருள் செல்வன் கந்தசாமி


—-

சீசாக்களில் அடைத்து அடுக்கடுக்காய்த் தேவதைகள்
குளிர் அறைகளின் சுவர்களெங்கும்
இவையன்றோ கோடிகோடி மனிதர்க்கு உணவளித்தன
இவையன்றோ குழந்தைகளின் ஆரோக்கியம் கொடுத்தன
இவையன்றோ மூச்சுக்காற்றையும் எரிபொருளையும்
தீப்பற்றா வீடுகளையும் தந்தன
ஆயினும் ஒரு அதிகாலையில் கண்டேன்
அவற்றின் பற்களில் மனித ரத்தத்தை
அவற்றின் நகங்களூடே மனித தசைத்துணுக்குகளை
அவற்றின் சட்டைப்பைகளில் மனித எலும்பு உதிரிகளை
குளிர் அறையின் மென்மையான சிலுசிலுப்பில்
தேவதைகளின் இளந்தூக்கப்பொழுதில்
நான் பிடுங்கினேன் அவற்றின் பற்களை நகங்களை ஆடைகளை
சீசாக்களை உடைத்து எறியும்முன்
மூடிகளைப் பதுக்கிக்கொண்டேன்
வரும்சீசாக்களுக்கும் பொருந்துகின்றன இதே மூடிகள்

(ஜூலை, 1986)

Series Navigation