‘பெருஞ்சுவருக்குப் பின்னே’ – ஜெயந்தி சங்கர் (நூல் அறிமுகம்)

This entry is part [part not set] of 41 in the series 20071115_Issue

மதுமிதா


ஜெயந்தி சங்கரின் ‘பெருஞ்சுவருக்குப் பின்னே’ நூலின் தலைப்பே சீனப்பெருஞ்சுவரினை நினைவுபடுத்துவதோடு பெருஞ்சுவருக்குப் பின்னே நிகழ்ந்திருப்பது என்ன என்ன என்பதை வாசித்தறியும் ஆர்வத்தினை தூண்டுவதாகவும் உள்ளது.
‘சீனப் பெண்களின் வாழ்வும் வரலாறும்’ எனும் சிறு தலைப்பு நூலின் சாரம்சம் இதுதான் என்பதனை கோடிட்டுக் காட்டி விடுகிறது. பெண்களின் வாழ்க்கையே சுவருக்குப் பின்னேயான வாழ்க்கையாய் அடைபட்டு விடுவதை சீனப் பெண்களின் வாழ்வும் வரலாறும் நூலில் அப்பட்டமாக அப்படியே காட்டப்பட்டுள்ளது.
சீனப் பெண்களின் வாழ்க்கைநிலை குறித்து தமிழுக்கு முற்றிலும் புதுமையானதொரு நூல் இது. ஜெயந்தி சங்கரின் இந்நூல் உயிர்மை வெளியீடாக 192 பக்கங்களில் வெளிவந்துள்ளது. 37 தலைப்புகளில் நூலாசிரியர் கட்டுரைகளை அளித்துள்ளார்.
கட்டுரைகள் அனைத்தையும் மெனக்கெட்டு தன்னார்வத்துடன் ஆய்வுரீதியில் கொடுத்துள்ளார். எனினும் மொழிபெயர்ப்புநூலாகத் தெரிவதனை தவிர்க்க இயலவில்லை. நம் சூழலுக்கு முற்றிலும் புதிதான ஒரு படைப்பாகையால் இப்படித் தோன்றுவதனை தவிர்க்கவியலவில்லை. அனைத்தையும் மீறி அவரின் கடின உழைப்பும் அக்கறையும் தெரிகிறது.
நூலாசிரியரின் முன்னுரையில் சொல்லும் இவ்வரிகளே அவரின் ஆய்வுக்குக் கட்டியம் கூறும் – ‘வேறு எதிலும் கவனம் செலுத்தாமல் பல வாரங்களுக்கு இது ஒன்றையே செய்து கொண்டிருந்தேன். தேசிய நூலகத்தின் குறிப்பெடுக்கும் பிரிவில் வாரா வாரம் சில மணி நேரங்கள் செலவழித்து எடுத்த குறிப்புகளைக் கொண்டு பல மணி நேரங்கள் கணினியில் எழுதினேன். இது தவிர, இணையமும் கைகொடுத்தது. சில வருடங்களுக்கு முன்பு சீனாவிலிருந்து வந்து இங்கு வசிக்கும் தோழி ஸேராவிடமும் அவர்களின் தோழிகளிடமும் எழுதியதை அவ்வந்த வாரமே கலந்து பேசி சரி பார்த்துக் கொண்டேன். ஒரு சில விவரங்களில் அவர்களுக்கே சந்தேகம் வந்தது.’
முதல் அத்தியாயத்திலேயே முகத்திலறையும் உண்மை வெளிப்பட ஆரம்பிக்கிறது.
‘ஒரு பெண்ணைக் குறிக்கும் சீனத்தின் சித்திர எழுத்தில்பணிவுடன் மண்டியிட்டிருக்கும் பெண்தான் சித்தரிக்கப்படுகிறாள். மணமான பெண்ணைக் குறிக்கும் சீன எழுத்து இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளாது. ஒன்று துடைப்பம்; இன்னொன்று ஒரு பெண். அதன் உச்சரிப்பு – ஷ¥வென் ஜெயிட்சு. இதற்கு அகராதி கொடுக்கும் விளக்கம் ‘கீழ்ப்படிதல் மற்றும் பெண் தரையைக் கூட்டுதல்’ என்று இருவேறு பொருள்கள். எழுத்து வடிவம் வருவதற்கு முன்பே சீனத்தில் ஆணாதிக்கச் சிந்தனைக்கு விதை போட்டாகி விட்டது என்பதற்கு இதுவும் நல்ல ஒரு சான்று’
என்று கொடுத்துள்ளார்.
தொடர்ந்து ‘திறமையற்ற ஒரு பெண்தான் நற்குணமுடையவள்’ மற்றும் ‘மகள்களை வளர்ப்பதைவிட வாத்துகளை வளர்ப்பது இன்னும் லாபகரமானது’ போன்ற சீன பழமொழிகள் சீனப் பெண்களின் நிலையினை தெளிவாகவே சொல்கின்றன.
‘நன்றி கெட்ட மகனை விட நாய்கள் மேலடா’ என்ற பாடல்தான் கேட்டுள்ளோம். வாழ்க்கையில் நன்றிகெட்ட மகனால் மனதிலடிபட்ட தந்தையின் மன உணர்வு அது. மகளை வளர்ப்பதைவிட வாத்தை வளர்ப்பது லாபகரமானதா வாசிக்கையிலேயே வலிக்கிறது.
சமீப வருடங்களுக்கு முன்னால்வரை எந்தக் காலக்கட்டத்திலும் அரசு வேலைகளில் பெண் அனுமதிக்கப்பட்டதில்லை. அவளுக்கு வீடு மட்டுமே உலகம் என்று வகுக்கப்பட்டுள்ளது. குடும்பப் பெண் வெளியில் செல்வது பிள்ளைப்பேறு தொடர்பாகவும், வேறுவகைப்பெண்கள் ஆணின் சௌகரியம் கருதி மட்டுமே. வாழ்நாள் முழுவதுமான உடல் மற்றும் மனவலிதான் பழஞ்சீனப்பெண்களுக்கு விதிக்கப்பட்டிருந்தது. பிறந்ததிலிருந்தே இவ்வகையான வாழ்வு முறைக்குத் தயார்படுத்தப்பட்டே வந்திருக்கிறாள்.
இரண்டாம் அத்தியாயத்தில் பெண் குறித்த சீனப்பழங்கவிதை:
மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த ·பூ ஷ¤வான் என்ற சீனப் பெண் கவிஞரின் ‘பெண்’ என்ற கவிதையை ந்யூயார்க்கைச் சேர்ந்த ஆர்தர் வேய்லி என்பவர் 1946ல் மொழிபெயர்த்தார். அதன் ஒரு பகுதியின் எளிய தமிழாக்கம் –
பெண்ணாயிருப்பது எத்தனை வருந்தத் தக்கது ! !
பூமியில் வேறு எதுவும் இத்தனை கீழ்த்தரமில்லை
ஆண்கள் வாயிற்கதவில் சாய்ந்து நிற்பது
சொர்க்கத்திலிருந்து தெய்வங்கள் வீழ்ந்தது போல்.

நான்கு கடல்களையும் வீரத்துடன் எதிர்கொள்வான்
ஆயிரம் மைல்களுக்கு காற்றையும் தூசியையும் கூட.
பெண் பிறந்தால் யாருக்கும் பிடிக்காது
அவளை அவள் குடும்பத்தினருக்கும்.

அவள் வளர்ந்ததும் அறையில் ஒளிந்து கொள்வாள்
ஓர் ஆணை முகத்திற்கு நேராகப் பார்க்க பயந்து.

யாரும் அழுவதில்லை அவள் வீட்டை விட்டுச் செல்லும் போது-
சட்டென்று மழை நின்று மேகங்கள் தெரிவதைப் போல
அவள் தலை குனிந்து தன்னைத் திடப் படுத்திக் கொள்வாள்.

சிவந்த உதடுகளைக் கடிக்கும் அவளின் பற்கள்,
பணிவாகப் பலமுறை குனிந்தும் மண்டியிட்டும்
வேலைக் காரர்களையும் வணங்குதல் வேண்டும் அவள்

அவனின் அன்பு வானத்து நட்சத்திரங்களைப் போல தூரத்தில்
இருந்தாலும், சூரியகாந்தி சூரியனை நோக்கிச் சாயும்.

இருவரின் உள்ளமும் நீரும் நெருப்பும் போன்ற எதிர் நிலையில்
நூறு இன்னல்கள் கவிழும் அவளின் மீது.

அவளின் முகம் வருடங்களின் மாற்றங்களையடைய
அவள் தலைவனோ விதவிதமான சுகங்களைத் தேடிய படி.

அப்படியே வாசிக்க வாசிக்க அப்பெண் கடந்து செல்ல வேண்டிய இன்னல்கள் கண்முன்னே தெரிகின்றன காட்சிகளாய்.
தொடரும் அத்தியாயங்களில் முழுமையான சீனப்பெண்கள் குறித்த வரலாறு சீனத்தின் வரலாறாகவே காணக் கிடைக்கிறது. மதம், முடியாட்சி, சித்திரஎழுத்து, பெண்மொழி, அரசிகள், வீரப்பெண்கள், ஆசைநாயகிகள், அழகிகள், குரூபிகள், இலக்கியத்தில், அரசியலில் பெண்கள், பெண்கல்வி, குடும்பம், சிசுக்கொலை, வரதட்சிணை, திருமணம்………. என பல்வேறு தலைப்புகளில் பெண்களின் பல்வேறு வாழ்க்கை நிலையினைக் கொடுத்துள்ளார்.
பெண்களின் பாதங்களைக் கட்டும் ‘மரணித்த பாதங்கள்’ வாசிக்கையில் மரத்துப்போகிறது மனம்.
உலகளவில் பெண் சிசுக்கொலை பிரபலம் போலிருக்கிறது. இங்கே உசிலம்பட்டியில் மட்டுமே என்று இனி வருந்த வேண்டாமோ? சீனாவிலும் பெண் சிசுக்களுக்கு உயிரின் மீதான பாதுகாப்பில்லை.
1996 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி சீனாவில் மட்டும் ஒவ்வொரு வருடமும் 10,000 பெண்குழந்தைகள் கொல்லப்படுவதாகத்தெரிகின்றன. என்ன நெஞ்சு கொதிக்கிறதா. அடங்கலாம் என்று இந்தப் பாடலை வாசித்தால் இன்னும் எகிறுகிறது.
‘பாடல்களின் நூல்’ என்ற 1000 – 700 கிமு வைச் சேர்ந்த பழஞ்சீன இலக்கியத்தில் உள்ள

மகன் பிறந்தால்
அவனைப் படுக்கையின் மீது தூங்க வை
அவனுக்கு உயரிய உடைகளை அணிவி
அவனுக்கு விளையாட பச்சைப் பவழத்தைக் கொடு

மகள் பிறந்தால்
அவள் தரையில் உறங்கட்டும்
கந்தலைக் கொண்டு அவளைப் போர்த்து
உடைந்த பீங்கானை விளையாடக் கொடு

1947 ல் ‘ஒரே குழந்தை’ கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டபின் சீனப்பெண்கள் அடிக்கடி காணாமல் போகிறார்களாம். ஒரு குழந்தைக்கு மேல் உருவான கருவைக் கலைக்கவோ, பெற்றெடுத்துவிட்டு மேலை நாட்டினருக்குத் தத்து கொடுக்கவோ பெண்களுக்கு அவகாசம் தேவையாக இருந்தது. அதனால், குறிப்பிட்ட காலத்துக்கு இப்பெண்கள் காணாமல் போனார்கள். ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டால், ஊதியத்தில் வெட்டு விழுந்தது. அரசாங்கத்தால் ஓய்வூதியம் குறைக்கப்பட்டும் மறுக்கப்பட்டும் வந்தது. இன்னும் சில வருடங்களில் 40 முதல் 60 மில்லியன் பெண்கள் கணக்கில் வராமல் காணாமல் போகலாம் என்கிறார்கள் மக்கட் தொகையியல் வல்லுநர்கள். இந்த வரிகளை எழுதும் போது ஜெயந்தி எப்படியெல்லாம் வேதனைப்பட்டாரோ என்றெண்னுகையில் இதையும் மீறும் வண்ணமாய் பாலியல் தொல்லை, குடும்ப வன்முறை, திருமண சிக்கல் குறித்த சில கட்டுரைகள் வருகின்றன. வாசிக்கையில் வாசிக்கையிலேயே இத்துனை துன்பம் என்றால் வாழ்ந்த பெண்களின் நிலை என்ற கேள்விக்குறி பெரிதாய் தோன்றுகிறது.
சட்டத்தின் பெயரால் பெண்கள் சிறையிலும், காவலிலும் அடைந்த கொடுமை ரத்தக்கண்ணீர் வரச்செய்யும்.
சீனத்தில் நான்கு நிமிடங்களுக்கு ஒரு பெண் தற்கொலை செய்து கொள்கிறாள். உலக சுகாதார நிறுவனத்தின் கணக்கெடுப்பின்படி ஒவ்வொரு வருடமும் 1.5 மில்லியன் சீனப்பெண்கள் தற்கொலைக்கு முயற்சிக்கிறார்கள். அதில் 1,50,000 பேர் சாகிறார்கள். கிராமப்புறங்களில் நகரங்களைக் காட்டிலும் மூன்று மடங்கு சீனப்பெண்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். கிட்டத்தட்ட 70-80 சதவிகிதம் கணவன் மனைவி சண்டையால் விளைந்தவையாம்.
மணவிலக்குகள் அதிகரித்துவிட்ட நிலையில் போலி மணவிலக்கு குறித்து சொல்லியிருப்பது அதிர்ச்சியளிக்கக்கூடிய விஷயமாயுள்ளது. சர்வ சாதாரணமான போலிமணவிலக்குகள் நிஜமான மனவிலக்குகளுக்கு தம்பதியினரிடையே உண்மையான பிளவுக்கு காரணமாகிவிடுகிறதாம்.
புலம் பெயர் நாடுகளில் சீனப்பெண்களின் நிலையினைக் காணும்போது உலகம் முழுக்க பெண்களின் நிலை இதுதானோ, அது எந்த தேசத்து, இனத்துப் பெண்ணாக இருந்தாலும் என்னும் நிலை தீவிர யோசனையைக் கிளப்புகிறது. பாலியல் ரீதியான சிரமங்கள்தான் எத்தனை எத்தனை.
ஜப்பானியர் ஆட்சிக்காலத்தில் தென்கிழக்காசிய வட்டாரத்தில் சீனப்பெண்களே ஜப்பானிய இராணுவத்தினரின் உடற்தேவைகளுக்கு அதிகமாக இலக்கானார்கள். ஏராளமான பெண்கள் ஊரை விட்டுத்தள்ளி ஒதுக்குப்புறமாக அமைக்கப்பெற்ற வீடுகளில் சிறை வைக்கப்பட்டார்கள். இவ்வகையில் சிறைப்படுத்தப்பட்ட மொத்தப் பெண்களில் 80 சதவிகிதம் பேர் சீனப்பெண்கள்.
சீனப்பெண்களின் உடையில் மாற்றம் வரவேண்டுமென்றும், சீனப்பெண்ணுக்கு உடையின் அசௌகரியமாக இருக்கும் என்று அக்கறை கொண்ட ஒரு கவிஞரின் கவிதை இதோ:
ஒரு சீனப் பெண் வியாபாரியைக் கேளுங்கள்
சீனப்பாணியில் உடை உடுத்த வேண்டுமா என்று,…

எத்தனை சிரமம் இந்த வியாபாரப் பெண்களுக்கு
அவர்கள் அழகிய பருத்தித் துணிகளும் பட்டுத் துணிகளும் விற்கிறார்கள்.

ஒரு கையில் துணிப் பொதியைக் கக்கத்தில் இடுக்கிக் கொண்டு
இன்னொரு கையில் குடையையும் எடுத்துக் கொண்டால்
இன்னும் சிரமமாக இருக்காது?

இத்தனையும் கடந்தும் பல பெண்கள் அரசியலில், இலக்கியத்தில், இராணுவத்தில் பல்வேறு துறைகளிலும் முன்னுக்கு வந்துள்ளனர். தன்னம்பிக்கையுடன் போராடி வென்ற பெண்களாகவும் காட்சியளிக்கின்றனர்.

ச்யூ ஜின் (1877-1907) மட்டுமே 1906 ல் பெண்களுக்கான பத்திரிகையைத் தொடங்கியவர். பாடல்களும், கவிதைகளும் எழுதியுள்ளார். ஷாங்குவான், லீ பாய் கவிஞர்கள். ஷன் சுங்க் இலக்கிய வரலாறு ஆளுமை மிக்கவர். ஜீத்தியேன்( கி.மு. 221) கவிஞர். யாங்க் யூஹ¥வான் ஆடல், பாடல்களில் வல்லவர்.

ஷ்வே தாவ் ( கி.பி. 758 – 832) கவிஞர் பாடகி. ஸ்யேதாவ்யுன் கவிஞர், கட்டுரையாளர். லியூ லிங்க் ஸியன் கவிஞர்(கி.பி. 502 – 557). லீச்சிங்க் ஜாவ் கவிஞர், கட்டுரையாளர், பாடலாசிரியர் (கி.பி. 1084 – 1155). ஷீமூ கவிஞர், நாட்டுப்பற்றாளர்.

ஸின்ரன் – இவரின் ‘சீனாவின் நல்ல பெண்மணிகள்’ நூல் 50 நாடுகளில் 22 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

‘வீரப்பெண்கள்’ நெஞ்சுரம் பெற்ற வீர மகளிர்களைக் குறித்த கட்டுரை. சீனப்பெண்களின் வீரத்துக்கு எடுத்துக்காட்டாக இருந்த எண்ணற்ற பெண்களைச் சீன வரலாறு நெடுகிலும் சந்திக்க இயலுகிறது.

‘நவீன சீனத்தில் பெண்களின் நிலை’ மனதை ஆற்றுப்படுத்துவதாய் உள்ளது. அனைத்துத்துறைகளிலும் நெஞ்சுரத்துடன் போராடி வெல்லும் மகளிரின் மாண்பு சீனப்பெண்களிடமும் காணக்கிடைக்கிறது.

இன்றைய சாதனைப்பெண்களில் சிலர் என்ற அத்தியாயம் (இதுவே கடைசி அத்தியாயம்) 8 பெண்கள் குறித்த கட்டுரை அடங்கியது. விமானி, நிறுவனர், செஸ், கம்பூட்டர் சாதனையாளர் என பலதுறைப்பெண்கள் குறித்து பேசுகிறது இவ்வத்தியாயம்.

‘பெருஞ்சுவருக்குப் பின்னே’ சீன பெண்கள் குறித்த நுட்பமான பார்வைக்கான திறவுகோல்.

‘பெருஞ்சுவருக்குப் பின்னே’ ( சீனப்பெண்களின் வாழ்வும் வரலாறும் ) ஆய்வு நூல்

நூலாசிரியர் – ஜெயந்தி சங்கர்
உயிர்மை வெளியீடு – டிசம்பர் 2006

கிடைக்குமிடம் :

உயிர்மை பதிப்பகம்,
11/29, சுப்ரமணியம் தெரு,
அபிராமபுரம், சென்னை- 600 018,

Tele/Fax : 91-44-2493448, residence:91-44-52074030, Mobile : 9444366704

அன்புடன்
மதுமிதா


madhumitha_1964@yahoo.co.in

Series Navigation

மதுமிதா

மதுமிதா

பெருஞ்சுவருக்குப் பின்னே (சீனப் பெண்களின் வாழ்வும் வரலாறும்) – முன்னுரை

This entry is part [part not set] of 37 in the series 20070208_Issue

ஜெயந்தி சங்கர்



சில வார்த்தைகள்

எழுத்தாளனுக்கு மொழி காதில் விழுந்து கொண்டே இருக்க வேண்டியுள்ளது என்றும் அப்படிக் காதில் விழுந்து கொண்டே இருக்கக் கூடிய கலாசாரத்தின் ஒரு முக்கிய கூறான அந்த மொழி மட்டுமே சிறந்த படைப்புகள் உருவாகத் துணை புரியும் என்றும் மறைந்த எழுத்தாளர் சுந்தர ராமசாமி எப்போதும் கூறி வந்ததாக சமீபத்தில் சிங்கப்பூர் வந்திருந்த போது நண்பர் எழுத்தாளர் ஜெயமோகன் சொன்னார்.

பல்லினச் சமூகமாக சிங்கப்பூரில் சீனர்கள் பெரும் பான்மையினர். ஆகவே, வெளியிடங்களுக்குப் போகும் போது ஆங்கிலத்தை விட சீனமே அதிகம் காதில் வந்து விழும்.

முதலில் எல்லாம் ஒரே மாதிரியாக ஒலித்தன. அது மாண்டரினா இல்லை சீன வட்டார வழக்கா என்று மெதுவாக இனம் காணத் தெரிந்தது. பிறகு, பளிச்சென்று ‘மாண்டரின்’ மட்டும் அடையாளம் தெரிந்தது. அதன் பிறகு தான் வட்டார வழக்குகளுக்குள் ஹொக்கேயினா, டியோச்சியோவா அல்லது காண்டனீஸா என்று ஓரளவிற்குத் தெரிந்தாற் போலிருந்தது. முதல் இரண்டும் தான் இங்கு அதிக புழக்கத்தில் இருக்கின்றன. காண்டனீஸ் இங்கு மிகக் குறைவு. ஆனால், சட்டென்று அடையாளம் காண முடிந்த போது என்னைப் பார்த்து எனக்கே வியப்பு.

எப்போதாவது தொலைக் காட்சியில் சீன நிகழ்ச்சிகள் பார்க்க நேர்ந்தால், கீழே ஓடும் ஆங்கில வரிகளைப் படிக்காமலே என்னால் சிரிக்க முடிவதை ஒரு கட்டத்தில் அவதானித்து ஆச்சரியப் பட்டிருக்கிறேன். மொழி தன்னுடன் தன் கலாசாரத்தினையும் கையோடு கூட்டிக் கொண்டு தான் வந்திருந்தது. சீனர்களின் கலாசாரத்தின் மீது எனக்குக் பல்வேறு கேள்விகளும் ஆர்வங்களும் எழுந்தன. சீனக் கலாசாரத்தைக் குறித்து சில கட்டுரைகளை எழுதினேன்.

இரண்டு வருடங்களுக்கு முன்பே சீனப் பெண்களைப் பற்றி எழுத ஆசைப் பட்டு ஆய்வுகள் செய்யத் துவங்கியிருந்தேன். இருப்பினும், வேறு சில வேலைகள் வந்ததில் அதைத் தொடராமல் அப்படியே வைத்திருந்தேன்.
சமீபத்தில் மீண்டும் அதே வேலையை எடுத்து முழு வேகத்துடன் இறங்கினேன். வேறு எதிலும் கவனம் செலுத்தாமல் பல வாரங்களுக்கு இது ஒன்றையே செய்து கொண்டிருந்தேன். தேசிய நூலகத்தின் குறிப்பெடுக்கும் பிரிவில் வாரா வாரம் சில மணி நேரங்கள் செலவழித்து எடுத்த குறிப்புகளைக் கொண்டு பல மணி நேரங்கள் கணினியில் எழுதினேன். இது தவிர, இணையமும் கைகொடுத்தது.

சில வருடங்களுக்கு முன்பு சீனாவிலிருந்து வந்து இங்கு வசிக்கும் தோழி ஸேராவிடமும் அவர்களின் தோழிகளிடமும் எழுதியதை அவ்வந்த வாரமே கலந்து பேசி சரி பார்த்துக் கொண்டேன். ஒரு சில விவரங்களில் அவர்களுக்கே சந்தேகம் வந்தது. அப்போது அவர்கள் குறித்துக் கொண்டு போய் தெரிந்தவர்களிடம் கேட்டு அறிந்து, தொலைபேசியில் எனக்குச் சொன்னார்கள். வேறு ஒரு மொழியில் தங்களின் கலாசாரம் எழுதப் படுவதை அறிந்த அந்தத் தோழிகளில் ஏற்பட்ட மகிழ்ச்சியையும் ஆர்வத்தையும் பெருமையையும் எளிதில் எடுத்துரைக்க முடியாது.
சீனப் பெண்களைக் கூர்ந்து நோக்கும் போதெல்லாம் சொற்கள், பாவங்கள் மற்றும் மெய்ப்பாடுகளின் மூலம் அவர்கள் தங்களுக்குள் ஒளிந்திருக்கும் ஒரு விதத் தீவிரத் தன்மையுடனான போர்க் குணத்தை வெளிப்படுத்தும் சில தருணங்களை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்ததுண்டு. மிகவும் சுவாரஸியம் நிறைந்த நுட்பமான கணங்கள் அவை. காலங்காலமாய் அடிமைப் பட்டு வந்த சீனப் பெண்ணுக்குள் அதற்கிணையாகப் படிந்துள்ள அக்குணத்தில் பொதிந்திருக்கக் கூடிய அளவிலா ஆற்றலையும் நம்மால் எளிதில் அலட்சியப் படுத்தி விட முடியாது என்றே ஒவ்வொரு முறையும் தோன்றும்.

உலகின் ஒவ்வொரு பகுதியைப் பற்றி அறியும் போதும் என்னை வியக்க வைப்பது என்னவென்றால், சொல்லி வைத்துக் கொண்ட மாதிரியே சமூகம் பெண்ணை இரண்டாம் வகுப்பு/நிலைக் குடிமகனாகவே பார்த்திருக்கிறது; இன்றும் பார்க்கிறது. வளர்ந்த நாடுகளைத் தன்னுள் அடக்கிய நவீன ஐரோப்பாவும் இதற்கு விதி விலக்கல்ல.

என்னை மிகவும் கவர்ந்தவற்றுள் ஒன்று பெண் மொழி நுஷ¤. சீனப் பெண்கள் தங்களின் கெடுபிடிகளும் பழமையும் நிறைந்த சமூக மற்றும் குடும்பச் சூழலிலும் எப்படி ஒரு சங்கேத மொழியினை உருவாக்கிப் பயன் படுத்தியுள்ளார்கள் என்று அறியும் போது மிகுந்த ஆச்சரியமாக இருக்கிறது. சீன ஆண்களுக்கே தெரியாத, புரியாத படிக்க முடியாத மொழி நுஷ¤. பழஞ் சீனச் சமூகத்திலிருந்தும் நவீன உலகிலிருந்தும் சாதனைப் பெண்களைப் பற்றி அறியும் போது சீனப் பெண்களுக்குள் இருக்கக் கூடிய வலிமையையும் ஆளுமையும் வியக்காமலிருக்க முடியவில்லை.

‘பாதங்களைக் கட்டும்’ வழக்கம் நான் ஏற்கனவே அறிந்த ஒன்று தான். ஆனால், அதனைப் பற்றி எழுதவென்று முழுவதையும் அறிந்த போது ஒரு வாரத்திற்கு மேல் வேறு எதிலுமே என் கவனம் செல்ல மறுத்தது. ஆகஸ்டு இதழுக்கென்று நான் அனுப்பியதும் படித்த நண்பர் கவிஞர் மனுஷ்ய புத்திரனும் அதையே சொன்ன போது தான் என் மனக்கலக்கம் அசாதாரணமானது ஒன்றுமில்லை என்று புரிந்து கொண்டேன். அதே அளவிலான கலக்கத்துடன் இதழைப் படித்த பலர் மின்மடல் மற்றும் தொலைபேசியின் மூலம் கருத்துரைத்தார்கள். எழுதவும் படிக்கவுமே இப்படியிருக்கிறதே, பார்க்கவும் அனுபவிக்கவும் என்றால்? நினைத்தாலே என்னவோ செய்கிறது.

இந்நூலுக்கான பணியைத் துவங்கியதுமே சீனப் பெண்களைக் குறித்து நான் அது வரை அறிந்திருந்தது மிகமிகக் குறைவு என்று புரிந்து போனது. வரலாறைத் தொடாமல் பழஞ்சீனப் பெண்ணையோ, நடப்பு விவகாரங்களைத் தொடாமல் நவீன சீனப் பெண்ணையோ பேச முடியாதிருந்தது. வரலாறுக்குள்ளும் அரசியலுக்குள்ளும் அதிகமும் புகுந்து விடாமல் தேவைக்கேற்ற அளவு மட்டும் சொல்லி சீனப் பெண்ணைச் சுற்றி எழுதுவது என்பது எழுத எழுதத் தான் மிகப் பெரிய சவாலாக என் முன் வளர்ந்தது.

இப்போதெல்லாம் ஒவ்வொரு சீனப் பெண்ணைப் பார்க்கும் போதும் அவர்களின் கலாசாரப் பழமையும் அது மரபு வழி அவளிலும் அவளின் பாட்டி, முப்பாட்டிகளிலும் ஏற்படுத்தியிருக்கக் கூடிய பாதிப்பு களையும் நினைக்காமல் இருக்க முடிவதில்லை.

இத்தகைய முற்றிலும் வித்தியாசமான நூலை எழுதும் போது அதற்கு வேண்டிய அலைச்சலும் உடலுழைப்பும் உடலளவில் ஒரு வித ஆயாசத்தைக் கொணர்ந்தாலும் எந்த அளவிற்கு ஆத்ம திருப்தியைக் கொடுக்கும் என்பதை இப்புத்தகத்தை எழுதி முடிக்கும் போது உணர்ந்து கொண்டேன்.

சீனப் பெண்களைக் குறித்து அனைத்தையும் சொல்லும் ஒரே நூலாக எழுதும் ஆர்வத்தின் விளைவே இந்நூல். இருப்பினும், இந்நூலில் எழுதாமல் விடப் பட்ட சீனப் பெண்கள் குறித்த வேறு சில விஷயங்களும் நிச்சயம் இருக்கலாம்.

நூலுக்குத் தேவையான வாசிப்பிற்கும் குறிப்புகளுக்கும் உதவிய சிங்கப்பூர் தேசிய நூலகக் கிளைகள், அதிகப் படி ஆய்வுக்கு உதவிய இணையம் மற்றும் சீனப் பெண்களின் பிரச்சனைகளை சீனப் பெண்களிடமே கேட்டு உறுதி செய்து கொள்வதற்கும், எழுதியவற்றைச் சரி பார்ப்பதற்கும் உதவிய சீனத் தோழி திருமதி. ஸேரா வோங்க் மற்றும் அவரின் நட்பு வட்டம் ஆகியோருக்கும் இந்நூலினை வடிவமைத்த உயிர்மை பதிப்பகத்திற்கும் நான் கடமைப் பட்டுள்ளேன். அவர்களுக்கு அன்பான நன்றிகள்.

அன்புடன்,
ஜெயந்தி சங்கர்,



பெருஞ்சுவருக்குப் பின்னே
(சீனப் பெண்களின் வாழ்வும் வரலாறும்)

— ஜெயந்தி சங்கர்

பக்கங்கள் – 198
விலை – 120 (இந்திய) ரூபாய்
உயிர்மை பதிப்பகம்
முகவரி : 11 / 29 சுப்பிரமணியம் தெரு
அபிராமபுரம்
சென்னை – 600 018
இந்தியா

sankari01sg@yahoo.com

Series Navigation

ஜெயந்தி சங்கர்

ஜெயந்தி சங்கர்