காவ்யா என்ன செய்து விட்டார் ?

This entry is part [part not set] of 34 in the series 20060428_Issue

K.ரவி ஸ்ரீநிவாஸ்


காவ்யா விஸ்வநாதன் என்ற இளம் எழுத்தாளரின் நூலிலுள்ள சில பகுதிகள் இன்னொரு எழுத்தாளரின் எழுத்துக்களிலிருந்து உருவப்பட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளதையொட்டி ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. அந்த எழுத்தாளரின் நாவல்களை படித்திருப்பதாகவும், அவரது எழுத்துக்கள்தனக்கு மிகவும் பிடித்தவை என்று அவர் கூறியிருக்கிறார். அவர் அறியாமலே இது நடந்திருக்கலாம் என்று அவர் கூறினாலும் பிரச்சினை முடிந்துவிடப் போவதில்லை. ஏனெனில் அவர் செய்தது முறையான பயன்பாடு (fair use)என்பதன் கீழ் வராது. அவர் எழுதியது அந்த நாவலை அல்லது நாவல்களை பகடி செய்தும் அல்ல. அதே சமயம் இவர் எழுதிய நாவலுக்கும், அந்த நாவல்களுக்கும் கதாபாத்திரங்கள், கதையின் மையக்கரு, கதையில் வரும் நிகழ்வுகள் ஒற்றுமைகள் இருக்கின்றனவா என்பதையும் ஆராய வேண்டும்.அப்படி இருப்பின் அதை தற்செயல் என்று தள்ளிவிட முடியாது.ஒரே மாதிரியான கதைக்கருவினை அடிப்படையாகக் கொண்டு இரு எழுத்தாளர்கள் எழுதலாம். ஒருவரையொருவர் அறியாமல் இது நடக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் இங்கு நடந்திருப்பது வேறு. காவ்யாவின் நூல் வெளியாகும்முன்னரே அந்த நாவல்கள் வெளியாகியுள்ளன, அவரும் அவற்றைப் படித்துள்ளார். பின் இதுஎப்படி நடந்திருக்கும்.

ஒரு சாத்தியக் கூறு எழுதும் போது ஒரு மாதிரிக்காக அவர் இந்த நாவல்களிலிருந்து சிலவற்றை எழுதிவைத்திருந்திருக்கலாம். அவர் முதலில் ஒரு நூறு பக்கமும், சுருக்கமும் கொடுத்திருக்கிறார். ஒப்பந்தம்கையெழுத்தான பின்னர்தான் முழு நாவலும் எழுதப்பட்டுள்ளது. அதை செப்பனிட ஒரு நிறுவனம்உதவியிருக்கிறது. எழுத்தாளரின் படைப்பை வெளியிடத்தக்க பிரதியாக உருமாற்ற இந்த நிறுவனம் உதவியிருக்கிறது. இதில் புதுமை ஏதும் இல்லை. இப்படி பிரதியை செப்பனிடும் போதோ அல்லதுநாவலை எழுதும் போதோ இது மாதிரி நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது. நாவலை குறிப்பிட்டகாலக கெடுவிற்குள் எழுத வேண்டும் என்ற பரபரப்பில் அவர் எழுதும் போது அவர் எழுதி வைத்திருந்ததும்நகல் எடுத்திருந்த பத்திகளும் கலந்து கலந்திருக்கலாம்.

அவர் அறியாமலே சில பத்திகளை தன் குறிப்புகள் என்று நினைத்து பிரதியில் சேர்த்திருக்கலாம். அல்லது இறுதி வடிவம் பெறும் போது குறிப்புகளிலிருந்து சிலவற்றைச் சேர்த்திருக்கலாம்.கவனகுறைவினால் எதை எங்கிருந்து எடுத்தோம் என்பதை அவர் யோசிக்காமல் சேர்த்திருக்கலாம்.

இது போன்ற பிரச்சினைகள் நீண்ட ஆய்வறிக்கைகள் எழுதும் போதும் எழும். குறிப்புகளில் மூலங்களை குறிப்பிடாமல் விட்டால் இது நமது கருத்தா அல்லது எங்கிருந்தாவது எடுத்தோமாஎன்ற சந்தேகம் எழும். ஆய்வாளர்கள் இதைத் தவிர்க்க சில உத்திகளை கையாள்வர். நாவல் எழுதும் போதும், பின்னர் அதை மீண்டும் படித்து, எழுதி செப்பனிடும் போது அவர் அது போன்றஉத்திகளை கையாண்டிருக்கலாம். அவ்வாறு செய்திருந்தால் இந்தப் பிரச்சினை எழுந்திராது.

சட்டரீதியாகப் பார்த்தால் அவர் செய்தது சரியல்ல, அது திருட்டுத்தான். பதிப்புரிமை என்பது கருத்துக்களின் (ideas) மீது சொந்தம் கொண்டாட அனுமதிக்கவில்லை. வெளிப்பாடுகள்(expression) மீது தான் உரிமை கொண்டாட முடியும். யேல் பல்கலைகழகத்தில் சேர ஒரு மாணவர் படும் அவஸ்தைகள் என்பது கருத்தென்றால் அதை வைத்து நான் ஒருவன் தான் நாவல் எழுதுவேன் என்று உரிமை கொண்டாடமுடியாது.அதை வைத்து நான் ஒரு நாவல் எழுதி வெளியிட்ட பின் அதே போன்ற கதைகளன், கதாபாத்திரங்கள், நிகழ்வுகளை வைத்து ஒருவர் நாவல் எழுதினால், என் நாவலைத் தழுவி அவர் எழுதினார் என்று வழக்குத் தொடரலாம். காவ்யா எழுதிய நாவலுக்கும், அந்த நாவல்களுக்கும்இந்த வகையில் பெரும் ஒற்றுமை இருப்பதாகத் தெரியவில்லை.

எனவே அவர் செய்திருப்பது பல பத்திகளை பிறர் நூலிலிருந்து பயன்படுத்தியிருப்பதும், அதை தன் பெயரில் வெளியிட்டதும். அந்த நூற்களின் பதிப்புரிமை யாரிடம் இருக்கிறதோ அவர் நஷ்ட ஈடு கோரலாம், மேலும் சர்ச்சைக்குரிய பத்திகளை நீக்க வேண்டும் என்றும் கோரலாம்.

இதில் காவ்யாவின்பங்கைவிட நாவலை செப்பனிட உதவிய நிறுவனத்தின் பங்கு அதிகம் என்று நிரூபணமானாலும்காவ்யா தன் பொறுப்பினை தட்டிக்கழித்து விட முடியாது. ஏனெனில் அவர்தான் நாவலாசிரியர்என்று கூறிக்கொண்டவர்,அங்கீகரிக்கப்பட்டவர். மேலும் ஒப்பந்தம் அவருக்கும், வெளியீட்டாளருக்கும் இடையேதான்இருப்பதால் வெளியீட்டாளரைப் பொறுத்தவரை காவ்யாவே பொறுப்பாவார். பொதுவாக இது போன்றபிரச்சினைகள் எழக் கூடும் என்பதால் பதிப்பகங்கள் நூலாசிரியருடன் போடும் ஒப்பந்த்தில் இலக்கியத் திருட்டு, அனுமதியற்ற பயன்பாடு போன்ற பிரச்சினைகள் எழுமானால அவற்றிற்கு நூலாசிரியர் பொறுப்பு அல்லது அது குறித்த வழக்குகளில் பதிப்பாளருக்கு ஏற்படும் செலவினை,நட்டத்தினை ஏற்க வேண்டும் என்று ஒரு விதியை இட்டிருப்பார்கள்.

இந்த சர்ச்சைக்குத் தீர்வாக பிரச்சினைக்குரிய பகுதிகளை நீக்கிவிட்டு அல்லது மாற்றி எழுதிக் கொடுத்து நாவலை வெளியிட வாய்ப்புள்ளது.எந்த நாவல்களிலிருந்து பத்திகள் காவ்யா எழுதிய நாவலில் அப்படியேயும், சிறிது மாறுதலுடனும், பெருமளவு ஒத்தும் இடம் பெற்றுள்ளனவோ, அந்த நாவல்களை வெளியிட்ட பதிப்பகம் அவர் மீது வழக்குத் தொடரலாம், நஷ்ட ஈடு கோரலாம். இரு தரப்பாரும் நீதி மன்றத்தினை நாடாமல் சுமுகமாகப் பேசி தீர்த்துக் கொள்ள முடியும். இந்த நாவல் அதிகம் விற்காமல் போயிருந்தால் அல்லது வாசக கவனத்தினைப் பெறாமல் போயிருந்தால் ஒரு வேளை இது இவ்வளவு பெரிய சர்ச்சையாக மாறாமல் போயிருக்கலாம். ஆனால் ஊடக கவனம் குவிந்திருப்பதால் தீர்வு காணப்படும் வரை
இச்சர்ச்சை ஒயாது. இது நூலின் விற்பனையைப் பாதிக்காது, அதிகரிக்கவே உதவும். இனி வெளியாகவிருக்கும் நாவல் இத்தகைய சர்ச்சைகளில் சிக்காது என்று நம்புவோமாக.

சுட்டிகள் :
http://blogpourri.blogspot.com/2006/04/kaavya-viswanathan-acknowledges-using.html
http://mleddy.blogspot.com/2006/04/phrasing-similarities-phrasing.html
http://www.mediabistro.com/galleycat/authors/she_may_have_but_she_also_had_help_35778.asp
http://in.rediff.com/news/2006/apr/26ajp.htm

http://ravisrinivas.blogspot.com/

Series Navigation