பிரகடனங்களும், பிரமைகளும் – 1 (ஜெயகாந்தன் உரை குறித்து)

This entry is part [part not set] of 39 in the series 20031016_Issue

K.ரவி ஸ்ரீநிவாஸ்


ஜெயமோகன் எழுதிய ஏழு நூல்களை வெளியிட்டு ஜெயகாந்தன் ஆற்றிய உரையைப் படித்ததும் கடவுளே என்ன ஆயிற்று ஜெயகாந்தனுக்கு என்ற எண்ணம்தான் தோன்றியது. இந்த உரை ஜெயகாந்தனா இப்படிப் பேசினார் என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. இப்படி பேசியதற்கும் அப்பாற்பட்டுதான் நாம் ஜெயகாந்தனை மதிக்கிறோம், அவரது பங்களிப்பினை புரிந்துகொள்கிறோம். 1970 களிலும், அதன் பின்னரும் கூட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்திரா காந்தி, காங்கிரஸ் குறித்து பல பிரமைகளில் அடிப்படையில் தன் அரசியல் கொள்கைகளை வகுத்தது. அதுவே அரசியல் ரீதியாக பல மோசமான சமரசங்களுக்கு வழிவகுத்தது.ஜெயகாந்தனுக்கும் சில பிரமைகள் இருப்பதையே இவ்வுரை காட்டுகிறது.

ஜெயகாந்தன் பேசியிருப்பது ஜெயமோகனின் விளம்பர நோக்கங்களுக்கு பயன்படலாம்.மற்றபடி அதனால் ஒரு பயனும் இல்லை.முற்போக்கு எழுத்தாளர் என்று அவர் ஜெயமோகனை அங்கீகரித்துள்ளதும்,அவர் தரும்

விளக்கங்களும் வேடிக்கையாக உள்ளன.பாவம் இடதுசாரி தோழர்கள், அவர்களாவது ஜெயகாந்தனுக்கு

விபரங்களை எடுத்துச் சொல்லியிருக்கலாம்.ஆனால் தான் ஒரு முற்போக்கு எழுத்தாளர், ஜெயகாந்தனால்

அவ்வாறு அங்கீகரிக்கப்படவர் என்பதை ஜெயமோகன் எந்த அளவிற்கு பயன்படுத்துகிறார் என்பதை பொருத்திருந்தே பார்க்க வேண்டும்.ஏனெனில் சில சமயங்களில் அவருக்கு தன்னை முன்னிறுத்த முற்போக்கு முத்திரையை விட சிறுபத்திரிகை முத்திரையே அவருக்கு பயனுள்ளதாக இருக்கும்.

தான் ஒரு வாசகன் அல்ல என்றும் சொல்லிக் கொள்ளும் ஜெயகாந்தன் ஜெயமோகன் எழுத்துக்களை படிக்காமலேயே புகழ்கிறாரோ என்ற சந்தேகம் எழுகிறது. அவ்வாறே தோன்றுகிறது. விஷ்ணுபுரம் நாவலை வாசிக்கவில்லை என்று அவரே குறிப்பிடுகிறார். கீழ்கண்டதை அவர் வாசித்திருப்பாரா என்பது சந்தேகமே.

‘எனக்கு தலைவர்கள் நிகழ்வுகள் உடனடியாக பிம்பங்களும் ஐதீகங்களும் ஆக மாறுவது பற்றிய ஓர் ஆர்வம்

எப்ப்பொதுமுண்டு .நாவல் அதை காட்ட ஒரு சிறந்த ஊடகம் . என் பெரியப்பா சொல்வார் அந்தக்கால மேடைகளில் முத்துராமலிங்கதேவர் காமராஜரை எப்படி சாதிப்பெயர் சொல்லி ஆபாசமாக வைவார் என்று .இன்று அதை பதிவுசெய்வதே கஷ்டம் . ஜீவாவுக்கு ஓரினச்சேர்க்கை ஆர்வமுண்டு என ஒருவர் இலேசாக சொல்லியிருக்கிறார் [ நீங்கள் ஊகிப்பவரே] . பாரதி அயோத்திதாச பண்டிதரை ‘பட்லர் பறையர் ‘ என மறைமுகமாக வைதது உங்களுக்கு தெரியுமா ? வரலாற்றுக்கு அடியில் மனிதர்கள்.அவர்களுக்கு அடியில் ஆசாபாசங்கள் . அடிப்படை மனித இயல்புகள் . அதிலிருந்து வரலாறு விக்கிரகங்களை உருவாக்குகிறது . இந்த ஆக்கத்தை உங்கள் நாவலில் காணமுடியவில்லை .நீங்கள் விக்கிரகங்களை அடையாளக்கற்களாக பயன்படுத்தி கால ஓட்டத்தை நம்பகமாக சித்திரிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறீர்கள்

http://www.thinnai.com/ar0317031.html

இதில் எத்தகைய வரலாற்றுப்பார்வை வெளிப்படுகிறது.எத்தகைய முற்போக்குப் பார்வை இது.

ஜெயமோகன் எழுதியுள்ள விமர்சனக் கட்டுரைகளை அவர் முழுமையாக வாசித்தாரா என்று தெரியவில்லை. அவற்றின மூலம் ஜெயமோகன் நடத்தும் இலக்கிய அரசியல் கீழ்த்தரமானது.மருதம் இணைய தளத்தில் சூர்யா எழுதிய கட்டுரை இன்னொரு படைப்பாளி மீது அவதூறு கூற ஒலிவர் சாக்ஸ், லெய்ங் போன்ற பெயர்களை பயன்படுத்துகிறது. அவர்கள் எழுத்திற்கும் முன் வைக்கப்படும் குற்றச்சாட்டிற்கும் எந்த தொடர்பும் கிடையாது.ஆனால் பிரமிள் எழுதிய ஒரு சம்பவத்தின் அடிப்படையில் ஒரு அவதூறு பரப்பவே அக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. சக படைப்பாளிகள் குறித்து ஜெயமோகன் திண்ணையில் எழுதியதிலிருந்து சில உதாரணங்களை வேறோரு கட்டுரையில் நான் முன்வைக்க இருப்பதால் அவற்றை இங்கே மீண்டும் சுட்டிக்காட்ட விரும்பவில்லை.தி.க.சி க்கு சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்ட போது அவர் பற்றி ஜெயமோகன் என்ன எழுதினார் என்றாவது ஜெயகாந்தனுக்கு தெரியுமா ? அப்படி எழுதியவர் ஜெயகாந்தனுக்கு ஆசான் என்றால் ஜெயகாந்தன் நிலை அப்படியா உள்ளது என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.

அவரது நாவல்கள் குறித்து கடுமையான விமர்சனங்கள் இருக்கின்றன. அவை ஒரு புறம் இருக்கட்டும்.முற்போக்கு இலக்கியங்கள் பிரச்சார ரீதியானவை, யதார்த்ததினை சூத்திரங்களுக்குள் அடைக்க முயல்ப்வை என்ற குற்றசாட்டுகள் உண்டு. ஆனால் சிறுவர் இலக்கியம் என்ற பெயரில் பனிமனிதன் என்ற நாவலில் அவர் செய்யும் பிரச்சாரமும், முன்வைக்கும் கருத்துகள் பலவும் சகிக்க முடியாதவை.தமிழ் திரைப்படங்களில், வெகுஜனப் பத்திரிகைகளில் கூட அத்தகைய சகிக்க முடியாத அபத்தங்களை காணமுடியாது. அது மட்டுமின்றி மானுட விரோதக் கருத்தினை பரப்பும் நூல். பரிணாமம் குறித்து ஒரு ஆபத்தான புரிதலை முன்வைக்கும் நூல் அது. இவையெல்லாம் சிறுவருக்கான இலக்கிய நூலில் இருப்பதை நாம் கவனிக்க வேண்டும். மனித குலத்தினை அந்த நூல் சித்தரிக்கும் விதம் சிறுவர்கள் மானுடம் குறித்து நம்பிக்கை இழக்கும் வகையில் உள்ளது. எனவே ஜெயகாந்தன் முன்வைக்கும் இலக்கியம் குறித்த விளக்கம் அதற்குப்

பொருந்தாது. இந்த விளக்கம் அவரது பிற எழுத்துகளுக்கு பொருந்துமா என்பதையும் விவாதிக்க வேண்டும்.

கி.ராஜநாரயணன் எழுதியதை இனக்குழ அழகியல் என்ற பெயரில் குறுகிய கண்ணோட்டத்தில் சித்தரித்தவர் ஜெயமோகன்.அதில் மார்க்சிய அழகியல் குறித்த தவறான பார்வையையும் முன்வைத்தார். ஜெயமோகன் முற்போக்கு எழுத்தாளர் என்றால் யார்தான் முற்போக்கு எழுத்தாளர் இல்லை என்று கேட்கத் தோன்றுகிறது. புலம் பெயர்ந்தோர் இலக்க்கியம் குறித்து ஜெயமோகன் கணையாழியில் வெளியான பேட்டியில் கூறியதையும், அதை பிறர் மறுத்தும் காரசாரமான விவாதம் நடந்தது, பதிவுகள் இணையததளத்தில்.

கணையாழி பேட்டியிலிருந்து

புலம் பெயர்ந்தவர்களுக்கு பெரும்பாலும் உயிர்வாழ்வதற்கான கடுமையான சவால்களை எதிர் கொள்ள வேண்டியுள்ளது. இந்தச் சவாலுடன் அவர்களால் பெரிய இலக்கியத்தைப் படைத்து விட முடியாது இலக்கியம் என்பது ஓய்வுடன், நிதானத்துடன் சம்பந்தப்பட்டது. எனவே புலம் பெயர்ந்த எழுத்துக்களில் முக்கியமாக கடுமையான போராட்டங்களின் நடுவில், வாழ்க்கையின் நடுவில் என்னையறியாமல் எழுதப்படும் சில. அது அவர்களுக்கு ரொம்ப முக்கியம். ஏனென்றால் அவற்றின் வழியாகத்தான் அவர்கள் இளைப்பாறுகிறார்கள். ஆனால் ஒரு வாசகனாக நான் அவற்றைப் படிக்கும்போது எனக்கு வெகுசாதாரணமாகத்தான் படுகிறது. இப்படி நான் சொல்வதனால் அவர்களுக்கு என்மீது வருத்தங்கள் இருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில் புலம் பெயர்ந்த எழுத்தாளர்களில் ஆ. முத்துலிங்கம் அவர்களை சிகரம் என்று சொல்லலாம். புலம் பெயர்ந்த எழுத்துக்களில் இருக்க வேண்டிய மாறுபட்ட மதிப்பீடுகளை சந்திக்கும்போது எடுக்கக்கூடிய அக விழிப்பு, வெவ்வேறு நிலக்காட்சிகளை கண்டு வந்த ஒரு படிம உலகம் மற்றும் இந்த மதிப்பீடுகள் உலகம் முழுக்க செல்லும்போது ஏற்படும் மாற்றம் பற்றிய சித்திரம் ஆகிய முக்கிய மூன்று அம்சங்களும் ஆ. முத்துலிங்கத்திடம் உள்ளது அடுத்தபடியாக ஜோபா சக்தியின் ‘கொரில்லா’ புலம் பெயர்ந்தவர்கள் மட்டுமல்லாது மற்ற வாசகர்களும் உணர்ந்து படிக்கும் படைப்பு இவருடையது. ஆரம்ப கால கட்டத்தில் பொ. கருணாமூர்த்தியின் கதைகளைச் சொல்லலாம். இவ்வளவு போருக்குப் பின்னரும், பிரச்சனைகளுக்குப் பின்னரும் அவர்களின் இலக்கிய உலகம் தட்டையாகத்தான் இருக்கிறது. வாழ்வனுபவங்களுக்கும், இலக்கியத்துக்கும் நேரடித் தொடர்பு ஒன்றும் கிடையாது. வாணலியில் போட்டு ஒருவனை வறுத்தெடுத்தால் அவனொன்றும் பெரிய இலக்கியவாதியாகிவிட முடியாது.

http://www.min-kanaiyazhi.com/kanai_july_2003/Nerkanal_01.htm

ஜெயகாந்தன் இதை ஏற்கிறரா ?.இப்பேட்டியில் அவர் தெரிவித்துள்ள வேறு பல கருத்துக்கள் அவர் சிந்தனையின் தரம் எத்தகையது என்பதை தெளிவாக்குகின்றன.

இடது சாரி இயக்கங்களும், தோழர்களும் தவறான நிலைப்பாடு எடுப்பதும் புதிததல்ல, பின் சுய விமர்சனம் செய்து கொள்வதும் புதிததல்ல. அது போல்தான் ஜெயகாந்தன் உரையின் பல பகுதிகள் பின்னர் தவறான நிலைப்பாடு என்று விளக்கப்படும். இடது சாரி/முற்போக்கு இலக்கியவாதிகளும், விமர்சகர்களும் ஜெயகாந்தன் உரையின் பெரும்பான்மையினை நிராகரித்துவிடுவார்கள். வயதான சிங்கம் குள்ள நரியை சிங்கக் குட்டி என்று கருதுவது போலுள்ளது இவ்வுரையில் ஜெயகாந்தன் கூறியுள்ளவை.

இந்திய ஜனநாயகத்தினைக் காக்க இந்திரா காந்தி அவசர நிலையை பிரகடனப்படுத்தினார் , அமெரிக்கா சோசலிச நாடு- இவை எந்தளவு உண்மையோ அந்தளவு உண்மை ஜெயமோகன் முற்போக்கு எழுத்தாளர்

என்பது.

Series Navigation