கைமறதியாய் எடுத்துவந்த மூக்குக்கண்ணாடி

This entry is part [part not set] of 36 in the series 20080717_Issue

சித்தாந்தன்



விடை பெறுதலின் அவசரத்தில்
கைமறதியாய் எடுத்துவந்த
உனது மூக்குக்கண்ணாடி
சூனியமாய் கரைக்கிறது எனது பார்வையை

இன்றைய இரவை
உனது கண்களால் கடந்துகொண்டிருக்கிறேன்
இப்போது நீ என்ன செய்தவாறிருப்பாய்
சாய்மனைக்கட்டிலில் படுத்திருந்தபடியே
வால் குழைந்து கால்களை நக்கும்
நாய்க்குட்டியின் மென்முதுகு தடவ
எத்தணித்து தோற்றபடியிருப்பாயா
செல்லமகளின் குறும்புத்தனங்களை
ரசிக்கமுடியாப் பொழுதுகளை நொந்து கொள்வாயா

தூக்கத்தின் இருட்டுக்கும்
பொழுதின் இருளுக்கும்
வித்தியாசம் புரியாமல் குழம்பிக்கிடக்கிறேன்
குழந்தையின் கன்னங்களில்
இடவேண்டிய முத்தங்கள் இடந்தவறுகின்றன
இருட்டுடன் பேசிக்கொள்ள வேண்டியிருக்கிறது
இரவுபற்றிய அற்புத வார்த்தைகள் சிதைகின்றன

ஒளிநிரம்பிய அறையிலிருந்துகொண்டு
புத்தகத்தின் கரியபக்கங்களை வாசிக்கிறேன்
சூரியன் புலரும் திசையறியாது
கைகளால் சுவர் தடவி
ஒலிகளை மோந்து கால்கள் இடறுகிறேன்

கைத்தடியில்லாத இந்த இரவுக்கு
தெருக்களுமில்லை

நண்ப,
இளவொளி சிதறும் காலைக்காக
காத்திருக்கிறேன்
உனது பார்வையை உன்னிடந் தந்துவிட்டு
எனது பகலை என்னிடமிருந்து பெறுவதற்கு

[ரமேஸிற்கு] 22.09.2007


deebachelvan@gmail.com

Series Navigation

சித்தாந்தன்

சித்தாந்தன்