தாயே! என்னிருப்பில் உன்னிருப்பறிந்தேன்!

This entry is part [part not set] of 32 in the series 20020407_Issue

வ.ந.கிரிதரன்


உன்னிருப்பாலிருப்பின் மறுப்புதனை
உணர்த்தியெங்கு சென்றாய் ? தாயே!
எங்கு சென்றாய் ?
நினைவுக்கோளத்தினொரு சித்த
விளையாட்டாய் இருந்து நீ
சென்றதெல்லாம் அன்னையே! என்
எண்ணப் பறவைகளின் வெறும்
சிறகடிப்போ ? இருந்தவிருப்பை
இதுவரை நான் இவ்விதம்
உணர்ந்தேனா ? இருப்புணர்ந்து
புரிவதற்கு உன்னிருப்பேயொரு
காரணியாயமைந்த விந்தையென்னே!
உன்னிழல் தொடர்ந்து வரும்
குஞ்சுகளாய் வருமெமையரவணைத்தாய்.
காத்து நின்றாய். உணர்வெல்லாம்
காற்றாக நீ போனதினால் நனவாய்க்
கனவாய் வந்து வந்து மோதும்
செயலென்னே! என்றேனும்
உனைப்பற்றி நீ எண்ணியதுண்டா ? நாம்
நன்றாயிருந்தாலது போதுமென
உன்பணிசெய்து கிடந்தாயே ? தாயே!
உனை நாமெங்கினிக் காண்போமோ ?
இங்கு நீ இருந்ததெல்லாம், இங்கு நீ
நடந்ததெல்லாம், இங்கு நாம்
திரிந்ததெல்லாம் இருந்ததொரு
இருப்போ ? விரியும் வினாக்கள்
விடைநாடிச் சிறகடிக்கும் சிட்டுக்களாய்
சித்தவானினிலே.
விடை தெரியா விடைநாடும்
வினாக்கள் பல சுமந்து
ஒட்டகமாயிப் பாலையிலே
காலையும் மாலையுமாய்
பயணமின்னும் தொடருமோ ?
பயணத்தின் ஒளித்
தெறிப்பெல்லாம் கானற் காட்சியாய்
கடந்ததுவோ ? பாலையும் கானலோ ?
இப்பயணமும் கானலோ ?
இங்கு இப் பயணமும்
கானலோ ?
நெஞ்சிலுரமூட்டியெமை வளர்த்தாய் தாயே!
அஞ்சிடாதுளம் தந்தெமை வார்த்தாய்.
நீ இருந்ததெல்லாம் தாயே! வெறும் நிழலா ?
நீ இருந்ததெல்லாம் தாயே! வெறுங் கனவா ?
உன்னிருப்புமென்னிருப்பால் விளைந்ததொரு
பொய்யானதொரு மெய்யோ ? தாயே!
பொய்யானதொரு மெய்யோ ?
உனது சொல்லும் செயலும்
உணர்வும் பரிவும்
பரவிக்கிடக்கும் வெளிக்குள்
வெளியாய் பரவிக் கலந்தாய்.
மீண்டுமொருமுறை
‘நான் ‘ ‘ஏன் ‘ ‘யார் ‘ என
ஆய்ந்திட வைத்துச் சென்றாய் ? தாயே!
ஆயினுன் உயிரின் உறவின்
உதிரத் துளியாய் இன்னுமிங்கே
இருக்குமென் இருப்பில் நான்
உனைக் கண்டு தெளிவேன். அதனால்
உனைப் புரிந்தேனிந்த
உலகை அறிந்தேன். ஏன்
எனையும் தெரிந்தேன். என்
இருப்பில் இருந்தஉன்
இருப்பின் பொருள் உணர்ந்தேன்.
தாயே! பொருள் கண்டேன்.

****

Series Navigation

வ.ந.கிரிதரன்

வ.ந.கிரிதரன்