காஷ்மீர்: குழியும் பறிக்கும் குதிரைகள் – 2

This entry is part [part not set] of 29 in the series 20081002_Issue

மலர்மன்னன்


ஹிந்துஸ்தானத்திலும் பிற நடுகளிலும் மத அடிப்படையில் முகமதியர்கள் என்பதாக மக்களில் ஒரு பிரிவினர் இருப்பதுபோல பாகிஸ்தானிலும் முகமதியர்கள் உண்டேதவிர, பாகிஸ்தானியர் என்பதாக ஒரு தேசியம் இல்லை! பங்களா தேஷ் மக்களும் ஒரு தனி தேசியம் இல்லை! அவர்கள் பேசும் மொழியால் வங்காளிகள்; வங்காளிகள் ஹிந்துஸ்தானத்திலும் ஒரு மொழி வழி மாநிலமாக இருப்பதை நினைவூட்டத் தேவையில்லை! இங்கேயிருக்கும் மேற்கு வங்க மக்களும் வங்காளிகள், பங்களா தேஷ் மக்களும் வங்காளிகள். ஆனால் அங்கு பெரும்பான்மையினர் முகமதியர் என்பதால் அது ஒரு தனி நாடு!

குழப்பமான காலகட்டம்

குழப்பம் மிகுந்த 1940 களின் கால கட்டத்தில் ஜம்முகாஷ்மீர் சமஸ்தானத்தில் முகமது அப்துல்லா தமது மக்களாட்சிக் கிளர்ச்சியைத் தீவிரப் படுத்தினார். ஜம்முகாஷ்மீர் சமஸ்தானம் மன்னர் ஹரி சிங்கின் முன்னோருக்கு வெள்ளைக்காரன் கொடுத்த கூலி என்று அவர் பிரசாரம் செய்தார்.

வெள்ளையர் சீக்கிய ராஜ்ஜியத்தை வெற்றி கொள்வதற்குத் துணை செய்தமைக்காக ஹரி சிங்கின் முன்னோருக்கு அந்த சீக்கிய ராஜ்ஜியத்தின் ஒரு பகுதியாக இருந்த ஜம்மு, காஷ்மீர் ஆகியவற்றைப் பரிசளித்தது உண்மைதான். ஆனல் எந்த முகமதிய ராஜ்ஜியத்திலிருந்தும் அது பிடுங்கப்படவில்லை. சீக்கிய ராஜ்ஜியத்திலிருந்துதான் கொடுக்கப்பட்டது! ஆராயும் வேளையில் சமஸ்தானங்கள் உருவாவதும், மன்னர்கள் தோன்றுவதும் இப்படியெல்லாம்தான். ஜம்மு காஷ்மீருக்கு மட்டும்தான் அது பொருந்தும் என்பதற்கில்லை. ஹைதராபாத் நிஜாம் மட்டும் ஆகாயத்திலிருந்து குதித்தவரா என்ன?

கிளர்ச்சியை அடக்க அப்துல்லாவையும் அவரது கட்சியினரையும் மன்னராட்சி கைது செய்து சிறை வைப்பதும், வெளியே விடுவதுமாக இருந்தது. அது எங்கும், எந்த வகையான ஆட்சியிலும் உள்ளதுதானே! முகமது அப்துல்லா ஜம்மு காஷ்மீர் மக்களின் ஏகப் பிரதிநிதி போலத் தலையெடுப்பதற்கு அது உதவியது.

இங்கே முக்கியமாக ஒன்றை கவனிக்க வேண்டும். பாகிஸ்தான் பிரிவினை உறுதியாகிவிட்ட தருணம் அது. ஆனால் அப்துல்லாவின் குறி சமஸ்தானத்தின் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்ள வேண்டும் என்பதில்தான் இருந்ததேயன்றி, மத அடிப்படையில் பாகிஸ்தானுடன் சேர்ந்து கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் அவருக்கு இல்லை. தனிக் காட்டு ராஜாவாகத் தட்டிக் கேட்க ஆளில்லாமல் அதிகாரம் செலுத்துவதில் ஆர்வம் மிகுந்திருந்த அவருக்கு ஜின்னாவின் கட்டளைக்கு அடிபணியும் சிற்றரசராக இருக்க மனம் எப்படி ஒப்பும்?

முகமதியர் வேலை வாய்ப்பு

மன்னர் ஹரி சிங்கை அப்துல்லா ஒரு கொடுங்கோலனாகச் சித்திரித்தமைக்குப் பெரிதாக ஆதாரம் எதுவுமில்லை. சமஸ்தான அலுவலகங்களிலும் அமைப்புகளிலும் தகுதி வாய்ந்த முகமதியருக்கு வேலை வாய்ப்பு கிடைக்காமல் போய்விடவில்லை. இன்னும் சொல்லப் போனால் அவரது ராணுவத்தில் ஒரு முகமதிய படைப் பிரிவே இருந்தது. பின்னர் பாகிஸ்தான் காஷ்மீரில் அத்துமீறி ஊடுருவியபோது அந்தப்படைப் பிரிவு மத அடிப் படையில் திடீரெனப் பாகிஸ்தான் படையுடன் சேர்ந்துகொண்டு உண்ட வீட்டுக்கு இரண்டகமும் செய்தது!

முகமதிய சமுதாயத்தில் கல்வி என்றால் அது குரானையும் ஹதீஸ்களையும் பயிலும் மதக் கல்வியாக, மதரஸா கல்வியாகத்தான் இருந்தது. அவர்களுக்கு மன்னராட்சியின் போது அரசாங்க அலுவலகங்களில் வேலை வாய்ப்புக் கிடைக்க வில்லை என்று குறை சொல்லிப் பயனென்ன? இன்று காஷ்மீர் அலுவலகங்களின் முக்கிய பதவிகளில் மட்டுமின்றி அடிமட்டங்களிலும் முகமதியர்களைத்தான் காண முடிகிறது. காரணம் பல முகமதியக் குடும்பங்களிடையே கற்கும் கல்வியில் மாற்றம் விளைந்திருப்பதேயன்றி வேறென்ன?

அதிகாரம் மக்கள் கையில் என்பது கேட்பதற்கு வசீகரமானதுதான். ஆனால் மக்களாட்சி என்கிற ஏற்பாட்டில் என்னவெல்லாம் செய்ய முடிகிறது என்பது தெரிந்த விஷயம்தானே!
மக்களாட்சி என்ற பெயரில் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்ளக் கிளர்ச்சி செய்து சிறை செல்வதும் வெளியே வருவதுமாக அப்துல்லா அரசியல் நடத்திக் கொண்டிருந்தபோதுதான் பாகிஸ்தான் பிரிவினை நிகழ்நதது. அதிகாரம் செலுத்தத் தமக்கென்று ஒரு நிலப் பரப்பு வேண்டும் என்கிற தமது ஜன்ம சாபல்யம் நிறைவேறிய களிப்பில் ஜின்னா உடனுக்குடன் முகலாயப் பேரரசர்கள் போலத் தமது சாம்ராஜ்ஜிய எல்லைகளை விரிவு படுத்திக் கொள்ளும் முயற்சியிலும் இறங்கினார். முகலாயர் காலம் போல அதை நேரடியாக மேற்கொள்ள முடியாது அல்லவா? ஆகவே காஷ்மீரில் ஹிந்து மன்னரின் கொடுங்கோல் ஆட்சியில் தவிக்கும் முகமதியர்களைக் காக்கும் பொருட்டு சகோதர பாசத்துடன் அண்டையிலுள்ள முகமதிய வனவாசிக் குழுக்கள் திரண்டு வருவதாக ஒரு நாடகத்தை அரங்கேற்றினார்.

இன்றைக்கும் வட மேற்கு எல்லைப்புற மலைப் பிரதேசங்களிலும் ஆஃப்கானிஸ்
தானத்திலும் பல கூலிப் படைகள் திரிவதைப் போல அன்றைக்குச் சிறிது கூடுதலாகவே இருந்தன. ஒரு புறம் காஷ்மீருக்குப் பொருளாதாரத் தடையை விதித்து பாகிஸ்தானுடன் இணையுமாறு மன்னருக்கு நிர்பந்தம் செய்துகொண்டு, மறுபுறம் காஷ்மீர் பெண்கள் அழகாக இருப்பார்கள், அங்கு கொள்ளையடித்துக் கொண்டு வர ஏராளமான செல்வங்களும் உண்டு என்று கூலிப் படையினருக்கு ஆசை காட்டி இரு முனைத் தாக்குதலைத் தொடுத்தார், ஜின்னா.

அவசர கால நிர்வாகி அப்துல்லா

இரு முனைத் தாக்குதலைச் சமாளிக்கத் தமது சமஸ்தானத்தை ஹிந்துஸ்தானத்துடன் இணைத்தார், ஹரி சிங். அது சமஸ்தானம் என்கிற அந்தஸ்தைத் துறந்து மாநிலம் என்கிற உரிமையுடன் ஹிந்துஸ்தானத்தின் ஒர் அங்கமாகியது. நேருவின் கடாட்சம் அப்துல்லாவுக்குப் பரிபூரணமாக இருந்ததால் அவர் ஜம்முகாஷ்மீர் மாநிலத்தின் அவசர கால நிர்வாகியாக நியமிக்கப்பட்டார். நிலைமை சரியானதும் ஒரு நிரந்தர ஏற்பாடு செய்து
கொள்ளலாம் என்ற யோசனைக்கு அவர் உடன்பட்டார். எப்படியோ அதிகாரம் அவர் கைக்குக் கிட்டிவிட்டது. அது போதாதா?

பாகிஸ்தானிலிருந்து கூலிப் படைகளும் வனவாசிகள் போல வேட மிட்டுக் கொண்ட பாகிஸ்தான் படைப் பிரிவுகளும் காஷ்மீருக்குள் புகுந்து கொலை, கொள்ளை தீ வைப்பு, வன் புணர்ச்சி என்று தமது கை வரிசையைக் காண்பித்தவாறு முன்னேறின. அதைத்தான் பின்னர் ஐநா அவையில் பாகிஸ்தான் பிரதிநிதி காஷ்மீர் மக்களின் விடுதலைப் போருக்குத் தங்களால் ஆன உதவி என்று வர்ணித்தார்.

ஹிந்துஸ்தானத்து ராணுவம் ஆக்கிரமிப்பாளர்களை விரட்டியடிக்கும் கடமையை வெற்றிகரமாகச் செய்துகொண்டிருக்கையில், அந்தப் பணி முற்றுப் பெறுவதற்கு முன்னதாகவே நேரு அவசரப் பட்டு பாகிஸ்தானின் அத்து மீறல் குறித்து ஐநாவிடம் புகார் செய்தார். உலக அரங்கில் பாகிஸ்தானின் முகத் திரையைக் கிழித்து அதன் சொரூபத்தை அம்பலப் படுத்த வேண்டும் என்பதுதான் அவரது நோக்கம். அனால் சரியாகக் காய் நகர்த்தத் தெரியாமல் காஷ்மீரையும் அதனைத் தன்னோடு இணைத்துக் கொண்ட ஹிந்துஸ்தானத்தையும் ஒரு நிரந்தரமான சிக்கலில் மாட்டிக் கொள்ளச் செய்துவிட்டுப் போய்ச் சேர்ந்துவிட்டார். காஷ்மீரை பாகிஸ்தானின் வன்முறைத் தாக்குதலிலிருந்து காக்கும் பணியில் இதுவரை ஹிந்துஸ்தானத்தின் பல்லாயிரக் கணக்கான ராணுவ வீரர்கள் தங்கள் இன்னுயிரையும் உடல் உறுப்புகளையும் தியாகம் செய்தாயிற்று. இவ்வாறான இழப்பு இன்றளவும் தொடர்கிறது. நேருவின் அனுபவமற்ற ஒரு சிறு அவசரச் செயல் இன்றளவும் காஷ்மீரில் ரத்தக் காவு வாங்கிக் கொண்டேயிருக்கிறது.

காஷ்மீர் விவகாரம் ஐ நா வின் பாதுகாப்புக் கவுன்சிலில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது, காஷ்மீர் ஹிந்துஸ்தானத்தின் ஒரு பகுதியே என்று எடுத்துச் சொல்ல முகமது அப்துல்லாவையே ஹிந்துஸ்தானத்தின் பிரதிநிதிகளுடன் அணுப்பி வைத்தார், நேரு.

பாதுகாப்பு கவுன்சிலில் அப்துல்லா

1948 ஆம் ஆண்டு ஃபிப்ரவரி மாதம் ஐந்தாம் நாள் பாகிஸ்தான் பிரதி நிதி பாதுகாப்பு கவுன்சிலில் பேசுகையில், “காஷ்மீர் மக்களை ஒரு கொடுகோலாட்சியிலிருந்து விடுவிக்க அண்டையிலுள்ள அவர்களின் சகோதரர்கள் முனைந்தபோது பாகிஸ்தான் அவர்களுக்கு உதவியது. காஷ்மீர் மக்களின் விருப்பத்திற்கு இசைய ஒரு பகுதியை மீட்டது. எஞ்சிய பகுதியையும் மீட்டு காஷ்மீர் மக்கள் அனைவரையும் ரட்சிப்பதற்குள் ஹிந்துஸ்தானம் சமஸ்தான மன்னரைச் சரிக்கட்டி, ஜம்மு காஷ்மீரைத் தன்னோடு இணைத்துக் கொண்டு விட்டது. மேலும் காஷ்மீர் சமஸ்தானம் முகமதியர் மிகுதியாக உள்ள பகுதியாதலால் பிரிவினை நடைமுறைக்கு இணங்க அது பாகிஸ்தானுடன்தான் இணைய வேண்டும்’ என்று கூறினார். பிறகு அவரே முன்னுக்குப்பின் முரணாகப் பாகிஸ்தானின் அத்துமீறல் எதுவும் நிகழவில்லை என்றும் சொன்னார்! மறு நாள் ஃபிப்ரவரி ஆறாம் நாள் பாகிஸ்தான் பிரதிநிதி பேசியதையெல்லாம் மறுத்துப் பேசினார், ஜம்முகாஷ்மீர் மாநில அவசர கால நிர்வாகியாக நேருவின் வற்புறுத்தலுக்கு இணங்க நியமிக்கப்பட்ட, முகமது அப்துல்லா.

ஐ நா அவையின் பதுகாப்பு கவுன்சிலில் அவர் பேசிய ஆங்கில உரையைத் தமிழில் தருகிறேன்:

ஷேக் முகமது அப்துல்லா பின் வருமாறு பேசலானார்:
“இங்கே எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள பிரச்சினை ஜம்முகாஷ்மீர் சமஸ்தானம் ஹிந்துஸ் தானத்துடன் இணைந்தது பற்றியல்ல, மாறாக, காஷ்மீர் மீது பாகிஸ்தான் நிகழ்த்தியுள்ள ஆக்கிரமிப்பு பற்றியதாகும் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன். பாகிஸ்தானின் பிரதி நிதியும், பாதுகாப்புக் கவுன்சில் உறுப்பினர்களும், இங்கு பேசியதையும் பல்வேறு சந்தர்ப்பங்களில் என் குழுவினர் தெரிவித்த கருத்துகளையும் பொறுமையோடும், கவனமாகவும், மரியாதையுடனும் கேட்டேன். இந்த விவகாரத்தில் நேரடியாக பாதிக்கப்பட்டவன் நான் என்பதைப் பாதுகாப்பு கவுன்சில் ஒப்புக் கொள்ளும் என்று கருதுகிறேன். ஏனெனில் நான் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பிரச்சினைக்குக் காரணமான நிலப் பரப்பைச் சேர்ந்தவன்.
“இங்கு இரு தரப்பினரும் எனது பேச்சைப் பெருமளவு சுட்டிக் காட்டித் தங்கள் தரப்புக் கருத்தைச் சொன்னார்கள். ஏனெனில், அதிர்ஷ்ட வசமாகவோ, இன்னும் சரியாகச் சொல்வதானால் துரதிர்ஷ்டமாகவோ 1931 லிருந்தே எனது நாட்டு மக்களை விடுதலைக்கு இட்டுச் செல்லும் பணியை நான் செய்து வருகிறேன். இந்தப் பணியில் நான் மிகவும் துன்பங்களை அனுபவித்திருக்கிறேன். ஒரு முறை இரு முறை அல்ல, ஏழு தடவைகள் இதற்காக நான் சிறை வைக்கப்பட்டேன். கடைசியாகச் சிறையிலிடப்பட்டவரை மொத்தம் ஒன்பது ஆண்டுகள் நான் சிறையில் இருந்திருக்கிறேன்.
ஆக்கிரமிப்பே விவாதப் பொருள்
“காஷ்மீரில் பல தொல்லைகள் உள்ளன. பாதுகாப்பு கவுன்சில் விவாதத்தை மிகவும் பொறுமையாகக் கேட்ட போதிலும் அதனால் குழப்பமுற்றிருப்பதாகவே நான் உணர்கிறேன். இந்தப் பிரச்சினைதான் என்ன? பாகிஸ்தான் பிரதிநிதி நேற்று கூறியது போல காஷ்மீர் சமஸ்தானத்தின் மன்னருக்கு உள்ள அதிகாரம் பற்றியதல்ல, இந்தப் பிரச்சினை. என்ன இருந்தாலும் பாகிஸ்தான் பிரதிநிதி சுட்டிக் காட்டிய அதே விஷயத்தை, அதாவது1846 ஆம் வருட ஒப்பந்தத்தைச் சொன்னதற்காகத்தான் நான் மொத்தம் ஒன்பது வருடங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க நேர்ந்தது. அந்த ஒப்பந்தம் குறித்துப் பேசுவதால் தண்டனை எதுவும் கிடைக்க மாட்டாத பாதுகாப்புக் கவுன்சிலில் பாகிஸ்தான் பிரதிநிதி அதைப் பேசியதில் எனக்கு மகிழ்ச்சிதான். எனவே அந்த விஷயம் பற்றி நான் ஆட்சேபிக்கப் போவதில்லை. ஆனால் அது இப்போது இங்கே பாதுகாப்பு கவுன்சில் முன்பாக விவாதிக்க வேண்டிய பிரச்சினை அல்ல (கிழக்கிந்தியக் கம்பெனியாருக்கும் ஹரி சிங்கின் முன்னோருக்கும் இடையில் செய்துகொளப்பட்ட ஒப்பந்தம் பற்றிய பழங் கதை அது; மேற்கு பஞ்சாபை உள்ளடக்கிய சீக்கிய ராஜ்ஜியத்தை வெள்ளையர் வெற்றி கொள்வதற்கு மன்னர் ஹரி சிங்கின் முன்னோர்களான டோக்ரா சகோதரர்கள் உடந்தையாக இருந்தனர். அதற்கு வெகுமதியாக அன்றைய சீக்கிய ராஜ்ஜியத்திற்குட்பட்டிருந்த காஷ்மீர் பிரதேசம் வெள்ளையர்களால் மன்னர் ஹரி சிங்கின் முன்னோருக்கு அளிக்கப் பட்டது. இந்த விவகாரத்தைத்தான் பாகிஸ்தான் பிரதிநிதி பாதுகாப்பு கவுன்சிலில் விவரித்து, மேற்கு பஞ்சாபுடன் முன்பு காஷ்மீர் இணைந்திருந்ததால் தற்போது அதன் மீது உரிமை கோரினார். சொல்லப் போனால் அன்றைய காலகட்டத்தில் பல சமஸ்தானங்கள் வெள்ளையரால் செயற்கையாக உருவாக்கப் பட்டன. தேசத்தை அடகு வைக்கிறோம் என்கிற குற்ற உணர்வு சிறிதுமின்றி முற்றிலும் சுயநலத்துடன் வெள்ளையருக்கு உதவிய பலர் அதன் பயனாக சமஸ்தானாதிபதிகளாகப் பட்டம் சூட்டிக் கோண்டார்கள். காஷ்மீர் மட்டுமே இதற்கு விதி விலக்கு அல்ல).
“பாதுகாப்பு கவுன்சில் முன்பாக விவாதிக்கப் பட வேண்டிய விஷயம் காஷ்மீர் சமஸ்தான மன்னரின் சீர்கேடான நிர்வாகம் பற்றியதுமல்ல. அந்தச் சீர்கேடான நிர்வாகத்தைச் சரி செய்யும் முயற்சியை மேற்கொண்டதற்காகத்தான் நான் மிகவும் துன்பங்களுக்கு உள்ளாக்கப் பட்டதாக நினைக்கிறேன். இன்று இங்கே, பாகிஸ்தான் பிரதிநிதி அது சம்பந்தமாக என்னுடைய வழக்கை ஆதரித்துப் பேசியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியினை அளித்தது.
“இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் உள்ள சச்சரவுதான் என்ன? பாதுகாப்புக் கவுன்சில் முன்பு எனது குழு வைத்துள்ள புகாரிலிருந்து நான் அறிந்து கொண்டது என்னவென்றால் காஷ்மீர் சட்டப்படியும் அரசியல் நிர்ணயப்படியும் இந்தியாவுடன் இணைந்துள்ளது என்கிற விஷயத்தை ஒட்டியதாகும். அதன்பேரில் காஷ்மீர் நிர்வாகத்தைப் பங்கீடு செய்வது தொடர்பாக மாநிலத்திற்குள்ளாவே சிறிது தொல்லைகள் இருந்தன. அதற்குள் எல்லைக் கோட்டிற்கு அப்பாலிருந்து வட மேற்கு எல்லைப் புற மாகாண வனவாசிக் குழுக்கள் எமது நாட்டிற்குள் வந்து குவிந்து விட்டன. அவர்களுக்கு பாகிஸ்தான் அரசு உதவியது, தொடர்ந்து உதவி வருகிறது. இதன் விளவாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பெரும் மோதல் உருவாகும் சாத்தியக் கூறு உள்ளது. எனவே இந்தியா பாதுகாப்புக் கவுன்சிலின் உதவியை நாடியுள்ளது. வனவாசிகளுக்கு ஒத்தாசை செய்வதை நிறுத்திக் கொள்ளுமாறும் சட்டப்படி அமைந்துள்ள ஒரு நிர்வாகத்திற்கு எதிராகக் கிளம்பியுள்ள கிளர்ச்சிக்கு ஆதரவு காட்ட வேண்டாம் என்றும் பாகிஸ்தானிடம் கூறுமாறு பாதுகாப்பு கவுன்சிலிடம் இந்தியா வேண்டிக் கொண்டுள்ளது.
மறுப்பில் உண்மையில்லை
“பாதுகாப்பு கவுன்சில் முன்பாக பாகிஸ்தான் பிரதிநிதி “ஆமாம், நாங்கள் வனவாசிகளுக்கு ஆதரவு அளிக்கிறோம்தான், காஷ்மீருக்குள் குழப்பம் விளைவிக்கிறவர்களையும் நாங்கள் ஆதரிக்கிறோம். ஏனென்றால் காஷ்மீர் இந்தியாவுக்குச் சொந்தமானது அல்ல, பாகிஸ்தானைச் சேர வேண்டியது என்று நாங்கள் கருதுகிறோம். அதனால் காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்ததை ஓர் ஏமாற்று வேலை என்று நாங்கள் எண்ணுகிறோம்’ என்று தைரியமாகக் கூறியிருந்தால் என்னால் அவர்களின் தரப்பைப் புரிந்துகொள்ள முடிந்திருக்கும். அப்போது காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்ததில் உள்ள நியாயத்தைப் பற்றி நாம் விவாதிக்க முடிந்திருக்கும். ஆனால் பாகிஸ்தான் பிரதிநிதியின் நிலைப்பாடு அவ்வாறாக இல்லை. வனவாசிகள் காஷ்மீருக்குள் நுழைவதற்கோ, காஷ்மீருக்குள் சட்டப்படி அமைந்துள்ள நிர்வாகத்திற்கு எதிராகச் சிலர் குழப்பம் விளைவிப்பதற்கோ பாகிஸ்தான் எவ்வித உதவியும் வழங்கவில்லை என்கிற மறுப்பைத்தான் அவர் தெரிவித்திருக்கிறார்.
“அவரது இந்த மறுப்பு முற்றிலும் பொய்யானது என்பதைப் பாதுகாப்புக் கவுன்சில் ஒப்புக்கொள்ளுமாறு செய்வதற்கு என்னால் என்ன செய்ய முடியும்? எனது நாட்டிலிருந்து ஆயிரக் கணக்கான மைல்கள் தொலைவிலுள்ள பாதுகாப்பு கவுன்சில் முன்பாக நான் உட்கார்ந்திருக்கிறேன். ஜம்மு காஷ்மீர் எல்லையில் எனது சொந்த மக்களுடன் இணைந்து நான் பல சண்டைகள் போட்டிருக்கிறேன். பாகிஸ்தான் அரசு வனவாசிகளுக்கு பஸ்களை மட்டுமின்றி, ஆயுதங்கள், வெடி மருந்துகள் ஆகியவற்றையும் கொடுத்து ஆதரிப்பதை என் கண்களாலேயே கண்டேன். அது மாத்திரமல்ல, பாகிஸ்தான் படைகளையுங்கூட எல்லைப் புறத்தில் நான் பார்த்தேன்.
“பாகிஸ்தான் தனது செய்கை குறித்துச் சிறிதும் கூசாமல் மறுப்புத் தெரிவிப்பதால் பாதுகாப்பு கவுன்சில் முன் அதனை எப்படிப் பொய் என நிரூபிப்பது என்று எனக்குப் புரியவில்லை. பாதுகாப்பு கவுன்சில் எங்கள் கோரிக்கையினை ஏற்றுத் தனது ஆய்வுக் குழுவை சம்பந்தப் பட்ட இடத்திற்கு அனுப்பி வைத்து, பாகிஸ்தான் அரசு ஆக்கிரமிப்பாளர்களுக்கு உதவி செய்கிறதா இல்லையா என்பதை அந்தக் குழு நேரில்பாõர்த்தால்தான் நாங்கள் சொல்வது சரியா தவறா என்பது தெரிய வரும். அதன் பிறகாவது பாதுகாப்பு கவுன்சில் அவ்வாறு உதவிகளை வழங்கவேண்டாம் என்று பாகிஸ்தானிடம் கேட்டுக் கொள்ளட்டும்.

மன்னரை ஆதரித்த ஜின்னா
“ஆனால் இச்சிறு விஷயம் குழப்பப்படுகிறது. பாகிஸ்தான் அரசு ஒரு பக்கம் “காஷ்மீருக்குள் தொல்லை கொடுப்பவர்களோடு எங்களுக்குப் பங்கில்லை. அங்கு தொந்தரவுகள் அளிக்கப்படுவதற்குக் காரணம் சீர்கேடான நிர்வாகம்தான். ஜம்மு காஷ்மீர் அரசுக்கு எதிராக மக்கள் போராடுகிறார்கள்’ என்று சொல்கிறது. “ஆமாம், நாங்கள் சீர்கேடான நிர்வாகத்திற்கு எதிராக 1931 லிருந்தே போராடிக் கொண்டுதானிருக்கிறோம். அரசு ஜனநாயக முறைப்படி நடைபெற வேண்டும் என்று கேட்டு வருகிறோம். ஆனால் இன்று பாகிஸ்தான் எப்படி எங்கள் கோரிக்கையை முன்னிறுத்தி எங்கள் சுதந்திரத்திற்குக் குரல் கொடுக்க வருகிறது? 1946 இல் சமஸ்தான மன்னருக்கு எதிராக, “காஷ்மீரைவிட்டு வெளியேறு’ என்கிற முழக்கத்தை நான் எழுப்பியபோது, இன்று பாகிஸ்தானின் கவர்னர் ஜெனரலாக இருக்கும் முகமது அலி ஜின்னா, எனது இயக்கத்தைப் பிற்போக்கானது என வர்ணித்து அதற்கும் முஸ்லிம்களுக்கும் சம்பந்தமில்லை என்று சொன்னார் (மன்னர் ஹரி சிங்கிற்குத் தூண்டில் போடுவதற்காக ஜின்னா அவ்வாறு அப்துல்லாவின் இயக்கத்தைக் கண்டித்தார்).
“முஸ்லிம் மாநாடு, எனது இயக்கத்தைக் கண்டித்து, மன்னருக்குத் தனது ஆதரவைத் தெரிவித்தது (தேசிய மாநாடு எனப் பெயர் மாற்றம் செய்தபோது அதன் ஒரு பிரிவினர் கட்சியில் அப்துல்லாவின் மேலாதிக்கம் குறித்துக் கருத்து வேறுபட்டு, தொடர்ந்து முஸ்லிம் மாநாடு என்ற பெயரில் இயங்கலாயினர்). “ஷேக் அப்துல்லா முன்பு மன்னரை காஷ்மீரை விட்டு வெளியேறு என்று சொன்னார். இப்போது அவரே மன்னருடன் கை கோத்துக் கொண்டிருக்கிறார் ‘ என்று பாகிஸ்தான் பிரதிநிதி இங்கு சொன்னார். பொதுக் கூட்டம் ஒன்றில் பேசும் போது, மகாராஜா ஜம்முவுக்கு மட்டுமின்றி ஜம்மு காஷ்மீர் மாநிலம் முழுமைக்கும் மகாராஜாவாக இருக்க வேண்டும் என்று நான் பேசியதாகவும் குறிப்பிட்டார்.
“இத்தவறான பதிவை நான் திருத்தியாக வேண்டும். ஜம்முவில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் நான் பேசினேன்தான். அது எங்கள் ராஜ்ஜியத்தின் குளிர் காலத் தலை நகர். வேறு ஒரு நோக்கில் நான் அவ்வாறு பேசினேன். பாதுகாப்புக் கவுன்சில் முன் எங்கள் குழுவின் தலைவர் முன்னரே சொன்னதுபோல, ஜம்மு பகுதியில் சில படுகொலைகள் நிகழ்ந்தன. வனவாசிகள் காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிக்குள் புகுந்ததன் விளைவாக அங்கு எல்லைப்புற கிராமங்களிலும் நகர்ப் புறங்களிலும் வசித்த ஆயிரக் கணக்கான ஹிந்துக்களும் சீக்கியர்களும் புலம் பெயர்ந்து ஜம்மு பகுதியில் தஞ்சம் புகுந்தனர். அதனால் அங்கு எதிர் விளைவு ஏற்பட்டது. காஷ்மீரில் ஆக்கிரமிப்பாளர்களைத் தடுப்பதற்கான நடவடிக்கையில் நான் மும்முரமாக இருந்ததால் ஜம்மு பகுதியை என்னால் கவனிக்க இயலவில்லை. எனினும் அவகாசம் கிடைத்தபோது நான் ஜம்முவுக்குச் சென்று அறுபதாயிரம் போலத் திரண்டிருந்த ஹிந்துக்கள், சீக்கியர்களுக்கு மிகவும் வெளிப்படையான அறிவுரை கூறினேன்.
காஷ்மீருள் இரு பிரிவு அகதிகள்
“எதிர் விளைவு செய்வதால் ஹிந்துக்களுக்கும் சீக்கியர்களுக்கும் நன்மையில்லை என்று அவர்களிடம் சொன்னேன். அவர்கள் பெரும்பான்மையினராக உள்ள இரண்டொரு மாவட்டங்களில்தான் அவர்களால் எதிர்விளைவு செய்ய முடியும்; அங்குள்ள முஸ்லிம்கள் அனைவரையுமே கூட அவர்களால் அழித்துவிட முடியலாம், ஆனால் மாநிலத்தில் எண்பது சதம் முஸ்லிம்கள் இருப்பதால் அவர்கள் அனைவரையும் அழிப்பது இயலாத காரியம். எனவே இரு மாவட்டங்களில் மட்டும் அவர்கள் எதிர் விளைவு செய்தால் அதன் பிறகு அவர்கள் ஆதரவு காட்டும் மன்னர் அந்த இரு ஜம்மு மாவட்டங்களுக்கு மட்டும்தான் மன்னராக இருக்க முடியும்; அவர் ஜம்முகாஷ்மீர் முழுமைக்கும் மன்னராக இருக்க வேண்டுமென்றால் எதிர் விளைவைக் கைவிடுங்கள் என்றுதான் நான் பேசினேன்.
“எனினும், இந்தச் சங்கடம் எவ்வாறு ஆரம்பித்தது என்பதை நான் முன்னரே குறிப்பிட்டிருக்கிறேன். பாகிஸ்தானின் பிரதிநிதி அதனை ஒப்புக்கொள்ளவும் கூடும். இந்தியா இரண்டாகப் பிளவுபட்டபொழுது, நானும் என் தோழர்கள் அனைவரும் சிறைக் கம்பிகளுக்குப் பின்னாலிருந்தோம். இந்தியா பிரிக்கப்பட்டதன் விளைவு, இரு தரப்பிலும் படுகொலைகள் நடந்தன. முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக இருந்த மேற்கு பஞ்சாபில் ஹிந்துக்களையும் சீக்கியர்களையும் கொல்வது தொடங்கியது. அதற்குக் கிழக்குப் பஞ்சாபில் பதிலடி கொடுக்கப் பட்டது. எங்களது எல்லைப் புறம் நெடுகிலும் ஒரு பக்கம் ஹிந்துக்களும் சீக்கியர்களும் கொல்லப்படுவதும், இன்னொரு புறம் முஸ்லிம்கள் கொல்லப்படுவதும் அன்றாட நிகழ்வுகளாக இருந்தன. ஆனால் ஜம்மு காஷ்மீர் மாநிலமும் அதன் மக்களும் அமைதி காத்தனர். அதன் பயனாக முஸ்லிம்கள், ஹிந்துக்கள் ஆகிய இரு பிரிவுகளையும் சேர்ந்த பல்லயிரக் கணக்கான அகதிகள் எங்கள் மாநிலத்தில் அடைக்கலம் புகுந்தார்கள். அவ்விரு தரப்பினருக்கும் எங்களால் ஆன உதவிகளையெல்லாம் நாங்கள் வழங்கினோம்.
(காஷ்மீரின் ஒருபுறத்து எல்லை பாகிஸ்தானாகவும், இன்னொரு புறத்து எல்லை ஹிந்துஸ்தானாகவும் இருந்தது. ஆகவே பாகிஸ்தான் பகுதியில் தாக்கப் பட்ட ஹிந்துக்களும், ஹிந்துஸ்தானத்தின் பகுதியில் பதில் தாக்குதலுக்குள்ளான முகமதியர்களும் ஒருசேரக் காஷ்மீருக்குள் தஞ்சமடைந்தனர். அவர்கள் தம்முடன் பகையுணர்வு, பழி வாங்கும் உணர்வு ஆகியவற்றையும் காஷ்மீருக்குள் கொண்டு வந்தனர்).
“இது எவ்வறு சாத்தியமாயிற்று? ஏனெனில் நானும் எனது அமைப்பும் ஹிந்துக்களும் முஸ்லிம்களும் இருவேறு தேசியங்கள் என்று நம்பியதே இல்லை. இரு வேறு தேசியக் கோட்பாட்டை நாங்கள் நம்புவதில்லை. மத அடிப்படையிலான மாச்சரியம், மதவாதம் ஆகியவற்றிலும் எங்களுக்கு நம்பிக்கையில்லை. அரசியலில் மதத்திற்கு இடமில்லை என்பதுதான் எங்களது நம்பிக்கை. எனவேதான் “காஷ்மீரைவிட்டு வெளியேறுங்கள்’ என்று ஒரு இயக்கத்தைப் பிற்பாடு நாங்கள் ஆரம்பித்தது வெளியிலிருந்து வந்த முஸ்லிம்களுக்கு மட்டுமின்றி, எமது ஹிந்து, சீக்கியத் தோழர்களையும் பாதிப்பதாக அமைந்தது. அதன் விளைவாக, எல்லைப் புறம் நெடுகிலும் ஹிந்துக்கள், சீக்கியர்கள், முஸ்லிம்கள் ஆகியோர் சண்டையிட்டுக் கொண்டிருக்கையில், ஜம்மு, காஷ்மீரைச் சேர்ந்த முஸ்லிம்கள், ஹிந்துக்கள், சீக்கியர்கள் ஆகியோர் ஒன்றுபோல அமைதியாக இருந்தனர்.
“எங்கள் மாநிலத்தில் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வந்ததால் எங்கள் மாநிலத்தைச் சேர்ந்த சிறுபான்மையினர் (ஹிந்துக்களும் சீக்கியர்களும்)பதற்றமடையத் தொடங்கினார்கள். என்னையும் என் சகாக்களையும் விடுதலை செய்யுமாறு நிர்வாகத்திற்கு பெரிதும் நிர்ப்பந்தம் வரலாயிற்று. சிறைக்கு வெளியே இருந்த நிலைமை எனது தேசிய மாநாடு ஊழியர்களையும் அதன் தலைமையினையும் விடுதலை செய்யுமாறு கோரியது. அதற்கு இணங்க, நாங்கள் விடுதலை செய்யப்பட்டோம் (காஷ்மீரில் தஞ்சம் புகுந்த முகமதியர் மத வெறியைத் தூண்டிவிட்டு ஹிந்துக்கள், சீக்கியர் ஆகியோர் மீதான தாக்குதலைக் காஷ்மீர் மண்ணிலும் தொடர்ந்தனர். பதற்றமடைந்து, ஹிந்துக்கள் மிகுதியாக உள்ள ஜம்மு வட்டாரத்திற்கு இடம் பெயர்ந்தனர். தாக்குதல் பற்றிக் கேள்விப்பட்ட ஜம்மு வட்டார ஹிந்துக்களும் சீக்கியரும் ஆத்திரமடைந்து, முகமதியர் மீது பதில் தாக்குதல் தொடங்கினர். அதனால்தான் முகமதியர் மீது ஹிந்துசீக்கியர் மேற்கொண்ட தாக்குதலை அப்துல்லா “எதிர் விளைவு’ என்று குறிப்பிடுகிறார்).

Series Navigation

மலர் மன்னன்

மலர் மன்னன்

காஷ்மீர்: குழியும் பறிக்கும் குதிரைகள் – 3

This entry is part [part not set] of 29 in the series 20081002_Issue

மலர்மன்னன்


விருப்பத் தேர்வுகள் மூன்று
“நாங்கள் வெளியே வந்த மாத்திரமே காஷ்மீர் பாகிஸ்தானுடன் சேருவதா, இந்தியாவுடன் இணைவதா, அல்லது சுதந்திர ராஜ்ஜியமாக இருப்பதா என்கிற முக்கியமான கேள்விக் குறி எம்முன் நின்றது. ஏனெனில், தேசப் பிரிவினையின் காரணமாக, எங்களுக்கு மட்டுன்றி, எல்லா இந்திய சமஸ்தானங்களுக்கும் மூன்று விதமான விருப்பத் தேர்வுகள் இருந்தன. இந்தப் பிரச்சினை எங்களுக்குத் தீர்வு காண்பதற்கு மிகவும் சிரமமானதாக இருந்தது. எனினும், அது இரண்டாம் பட்சமானதுதான், முதலில் நாம் பதினேழு ஆண்டுகளாக எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் எதேச்சாதிகார மன்னராட்சியிலிருந்து விடுதலை பெறுவதுதான் இப்போது மிக முக்கியம் என்று நான் எங்கள் மக்களிடம் கூறினேன் (பொதுவாக அன்று ஹிந்துஸ்தானத்திலிருந்த எல்லா சுயேற்சை சமஸ்தானங்களிலுமே மன்னராட்சி நீங்கி, மக்களாட்சி நிறுவப்பட வேண்டும் என்கிற வேட்கை இருந்து வந்தது. அது காஷ்மீருக்கும் பொருந்தும். மற்றபடி காஷ்மீர் தனித்து இயங்குவது அல்லது ஹிந்துஸ்தானத்துடனோ பாகிஸ்தானுடனோ இணைவது என்கிற கேள்வி அப்போது எழவில்லை என அப்துல்லா கூறுவதாக இதைப் புரிந்து கொள்ள வேண்டும்). நாம் நமது லட்சியத்தை இன்னும் எய்தியாகவில்லை, எனவே முதலில் அதை எய்துவோம்; அதன் பிறகு, சுதந்திர மக்களாக நமது நலன் எதில் உள்ளது என்பதை நாம் முடிவு செய்வோம். எல்லைப்புற மாநிலமாக, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் எல்லைகளையும் கொண்டுள்ளதாகக் காஷ்மீர் இருப்பதால், இந்தியாவுடன் இணைதல், பாகிஸ்தனுடன் இணைதல், சுயேற்சையாக இருத்தல் ஆகிய மூன்று விருப்பத் தேர்வுகளிலுமே காஷ்மீர் மக்களுக்குச் சாதகங்களும் பாதகங்களும் இருப்பதை எடுத்துக் கூறினேன்.
“நான் ஏற்கனவே குறிப்பிட்டவாறு, முதலில் மன்னராட்சியிலிருந்து சுதந்திரம் பெற்ற பிறகுதான் மிக முக்கியத்துவம் வாய்ந்த இப்பிரச்சினையில் இயற்கையாகவே ஒரு முடிவுக்கு வருவது சாத்தியம் என்பதாக எங்கள் நிலைப்பாடு இருந்தது. எனவேதான் “இணைப்பிற்கு முன் சுதந்திரம்’ என்கிற கோஷத்தை நாங்கள் முன் வைத்தோம். பாகிஸ்தானிலிருந்து வந்த சில நண்பர்கள் என்னை ஸ்ரீநகரில் சந்தித்தார்கள். அவர்களிடம் மனம் விட்டு விவாதித்த நான், எனது கருத்தை அவர்களிடம் விளக்கினேன். கடந்த காலத்தில் எங்கள் விடுதலைப் போரட்டம் குறித்துப் பாகிஸ்தானின் நிலைப்பாடும் போக்கும் எவ்வாறாகவும் இருந்த போதிலும் அது எங்கள் முடிவின் மீது எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று அவர்களிடம் தெளிவு படுத்தினேன். அதேபோல, நாற்பது லட்சம் காஷ்மீர் மக்களின் நலன் கருதி பாகிஸ்தானுடன் இணைய நாங்கள் முடிவெடுக்க வேண்டி வந்தால், பண்டிட் ஜவஹர்லால் நேருவுடனான நட்போ, காங்கிரசுடன் எமக்கு உள்ள உறவோ, அது எங்களுடைய விடுதலை இயக்கத்திற்கு அளித்த ஆதரவோ எங்கள் முடிவை பாதிக்காது என்றும் சொன்னேன்.
முடிவை வற்புறுத்தாதீர்
“முடிவு எடுக்குமாறு எங்களை வற்புறுத்த வேண்டாம் என்று அவர்களிடம் வேண்டியதோடு, எங்கள் போரட்டத்திற்கு ஆதரவு காட்டுமாறும் சொன்னேன். மன்னராட்சியிலிருந்து நாங்கள் விடுதலை அடைந்த பிறகு, இந்த முக்கிய முடிவை எடுப்பதற்கு எங்களுக்குச் சிறிது அவகாசம் கொடுங்கள் என்று மேலும் சொன்னேன். இந்தியா இக்கருத்தை ஏற்றுக் கொண்டு, இணைப்பா அல்லது சுயேற்சையா என்று முடிவு எடுப்பது குறித்து வற்புறுத்தவில்லை என்பதையும் அவர்களிடம் தெரிவித்தேன். உண்மையில், இந்தியாவுடனும் பாகிஸ்தானுடனும் நாங்கள் ஒருசேர எவ்வித முடிவுக்கும் வராத செயலற்ற நிலையைக் கடைப்பிடிப்பதாக ஒப்பந்தம் செய்துகொண்டிருந்தோம். ஆனால் பாகிஸ்தான் எங்களிடம் எப்படி நடந்து கொண்டது என்பது பற்றிப் பாதுகாப்புக் கவுன்சில் முன் இந்தியாவின் பிரதிநிதி ஏற்கனவே விளக்கிக் கூறிவிட்டார்.
“பாகிஸ்தானிலிருந்து வந்தவர்களுடன் நான் உரையாடிக் கொõண்டிருக்கும்பொழுதே என் சகாக்களில் ஒருவரை நான் பாகிஸ்தானில் உள்ள லாஹூருக்கு அனுப்பினேன். அங்கு அவர் பாகிஸ்தான் பிரதம மந்திரி லியாகத் அலிகானையும், மேற்கு பஞ்சாப் மாநில முக்கியஸ்தர்களையும் சந்தித்து, எனது கருத்தையே அவர்களிடம் தெரிவித்தார். இணைப்பு பற்றி முடிவு எடுக்குமாறு எங்களை வற்புறுத்துவதற்குப் பதில் நாங்கள் மன்னராட்சி யிலிருந்து விடுதலை பெறுவதற்கு ஆதரவு அளியுங்கள் என்று அவர் கேட்டுக் கொõண்டார். இவ்வாறு எங்களிடையே பேச்சு நடந்து கொண்டிருக்கையில், காஷ்மீர் மாநிலத்தின் எல்லைப்புற நகரமான முசபராபாத் மீது ஆக்கிரமிப்பாளர்கள் முழு அளவில் திடீரெனத் தாக்குதல் தொடுத்திருப்பதாக எனக்குத் தகவல் வந்தது.
“சிறையிலிருந்து விடுதலையானதும் நான் தில்லிக்குச் சென்று இந்தியாவுடன் காஷ்மீரை இணைப்பது குறித்துப் பேச்சு வார்த்தை நடத்தத் தொடக்கியதாகப் பாகிஸ்தான் பிரதிநிதி இங்கு கூறினார். அது உண்மையல்ல. சிறையில் நான் இருக்கும்போது, அகில இந்திய சமஸ்தான மக்கள் மாநாட்டின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டேன். எனவே விடுதலையானதும் அந்தப் பதவிக்குரிய பொறுப்பை ஏற்க நான் தில்லி சென்று விட்டேன். அதற்கு இணங்க, தில்லியில் அந்த மாநாட்டின் செயற் குழுக் கூட்டத்தைக் கூட்டினேன். இந்த விஷயத்தை பாகிஸ்தான் பிரதமரிடமும் தெரிவித்திருந்தேன். தில்லியிலிருந்து திரும்பியவுடன் அவரைச் சந்தித்து, எனது நிலைப்பாட்டை அவருடன் விவாதிப்பதாகவும் தகவல் கொடுத்திருந்தேன். காஷ்மீர் விஷயமாக எதுவும் பேசி முடிக்க நான் தில்லி செல்லவில்லை. ஏனெனில் விடுதலை செய்யப் பட்ட போதிலும் காஷ்மீர் அரசுக்கு ஒரு எதிராளியாகவே அப்போது நான் இருந்தேன்.
“காஷ்மீர் மாநில நிர்வாகத்தின் தலைவராகத் தற்சமயம் நான் இருப்பினும் அதன் பிரதமராக இல்லை என்பதைப் பாகிஸ்தான் பிரதிநிதிக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். அவசர கால நிர்வாகத் தலைவராகத்தான் நான் உள்ளேன் ( ஆக்கிரமிப்புச் சமயத்தில் ஷேக் அப்துல்லா அகில இந்திய சமஸ்தான மக்கள் மாநாட்டின் தலைவராகத்தாம் தேர்ந்தெடுக்கப்பட்டதைச் சாக்கிட்டு காஷ்மீருக்கு வெளியே பத்திரமாக இருந்து கொண்டார். காஷ்மீரில் ஆக்கிரமிப்பாளர் ஹிந்துஸ்தானத்தின் ராணுவத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் பின் வாங்கத் தொடங்கியதும் இனி பயமில்லை என்பது உறுதியாகி, திரும்பி வந்த அப்துல்லாவுக்கு அவசர கால நிர்வாகி என்கிற அதிகாரத்தை நேரு வழங்கினார். இவ்வாறு அப்துல்லா மீது நேரு அளவு கடந்த சகோதர பாசத்துடன் பரிவு காட்டியது ஏன் என்று பலரும் வியந்தது உண்டு. இதுபற்றிப் பலவாறான தகவல்களும் காற்றில் மிதந்து வந்ததுண்டு. அவை இங்கு தேவைப் படாத விவகாரங்கள்!).
ஆக்கிரமிப்பாளர் அட்டூழியம்
“ஆக்கிரமிப்பாளர்கள் எங்கள் பிரதேச்திற்குள் நுழைந்ததும் ஆயிரக் கணக்கான மக்களைப் படுகொலை செய்தனர். கொல்லப் பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் ஹிந்துக்களும் சீக்கியர்களுமே என்றாலும் முஸ்லிம்களையும் அவர்கள் கொன்றார்கள். ஹிந்து, சீக்கியர், முஸ்லிம் என்கிற பேதம் இன்றி, ஆயிரக் கணக்கான பெண்களை அவர்கள் கடத்திச் சென்றனர். எங்கள் உடமைகள் அவர்களால் சூறையாடப் பட்டன. எங்கள் மாநிலத்தின் கோடை காலத் தலை நகரமான ஸ்ரீ நகரின் வாயிற்புறத்திற்கே ஆக்கிரமிப்பாளர்கள் வந்து விட்டனர். அதன் விளைவாக எங்கள் குடிமை, காவல், ராணுவ நிர்வாகங்கள் அனைத்தும் தோல்வியடைந்தன. இரவோடிரவாக மன்னர் தன் பிரதானிகளுடன் தலைநகரைவிட்டு வெளியேறினார். எங்கும் குழப்பம் நிலவி, நிலைமையைக் கட்டுப்படுத்த எவரும் இல்லாது போனபோது, எங்கள் தேசிய மாநாடு பொறுப்பைத் தானாகவே கைப்பற்றிக் கொண்டது. இவ்வாறாக அதிகாரம் கைமாறியது. நாங்கள் அதிகாரப் பூர்வமற்ற நிர்வாகப் பொறுப்பாளர்களாக இருந்தோம். பிறகு மன்னர் அதற்குச் சட்ட அங்கீகாரம் அளித்தார்.
“ஷேக் அப்துல்லா பண்டிட் ஜவர்ஹர் லால் நேருவின் நண்பர் என்று சொல்லப் படுகிறது. அதை (ஷேக் அப்துல்லாவாகிய) நான் ஒப்புக் கொள்கிறேன். நேருவைப் போன்ற ஒரு பெருமகன் என்னைத் தமது நண்பர் என்று கூறிக் கொள்வதைப்பற்றிப் பெருமிதம் கொள்கிறேன். மேலும் அவர் எனது பிரதேசத்தைச் சேர்ந்தவரே ஆவார். அவரும் ஒரு காஷ்மீரி, ரத்தம் தண்ணீரைக் காட்டிலும் திடமானதுதானே. ஜவஹர் லால் எனக்கு அப்படியொரு அந்தஸ்தைக் கொடுப்பாரேயானால் அதற்கு நான் எதுவும் கூறுவதற்கு இல்லை. அவர் என் நண்பர். ஆனால் அவரது நட்பிற்காக, கடந்த பதினேழு ஆண்டுகளாக என்னோடு துன்பம் அனுபவித்த லட்சக் கணக்கான என் நாட்டவருக்கு என்னால் துரோகமிழைக்க இயலாது. எனது நாட்டின் நலனை அவரது நட்பிற்காக விட்டுக் கொடுக்கவும் என்னால் முடியாது. நான் அப்படிப் பட்டவன் அல்ல (காஷ்மீரின் நலன் கருதி ஒருவேளை அதனை பாகிஸ்தானுடன் இணைக்கவோ சுதந்திர ராஜ்ஜியமாக இருக்கச் செய்யவோ முடிவெடுக்க நேர்ந்தால் அதற்கு நேருவுடனான தமது நட்பு குறுக்கிடாது என்பதையே இவ்வாறு குறிப்பிடுகிறார்).
“சச்சரவு எப்படித் தொடங்கியது என்பதை நான் விவரித்து வந்தேன். பாகிஸ்தான் வலுக்கட்டாயமாக எங்களை அடிமை கொள்ள முற்பட்டது. எங்கள் விடுதலை பற்றி பாகிஸ்தானுக்கு அக்கறை ஏதும் இல்லை. பாகிஸ்தான் எங்கள் விடுதலை இயக்கத்தை எதிர்க்காமலிருந்திருக்கலாம். ஆயிரக் கணக்கில் என் நாட்டவர் சிறையிலிடப்பட்டபோதும் சுட்டுத் தள்ளப் பட்டபோதும் எங்களை அது ஆதரித்திருக்கலாம். ஆனால் அப்படிச் செய்யவில்லை. மாறாக, பாகிஸ்தான் தலைவர்களும் பாகிஸ்தான் இதழ்களும் துன்புற்றுக் கொண்டிருந்த எங்கள் மக்களைத் தூற்றிக் கொண்டிருந்தார்கள் (காஷ்மீரின் வெளியுலகத் தொடர்பு பாகிஸ்தானாகி விட்டிருந்த பகுதியின் வழியாக இருந்ததால் அதைக் காரணம் காட்டி மன்னர் ஹரி சிங்குடனும் பாகிஸ்தான் பேரம் பேசிக் கொண்டிருந்ததால் அச்சமயம் அப்துல்லாவை பாகிஸ்தான் ஆதரிக்கவில்லை ).
“இப்பொழுது திடீரெனப் பாகிஸ்தான் பிரதிநிதி இந்தக் கவுன்சில் முன்பு வந்து நின்றுகொண்டு, ஜம்மு காஷ்மீர் மக்களின் சுதந்திரம் பற்றிப் பேசுகிறார். உலகம் இதை நம்பலாம். ஆனால் எனக்கு அதை நம்புவது மிகவும் சிரமம்.
“பாகிஸ்தானின் பலவந்தம் செய்கிற தந்திரத்திற்கு அடிபணிய நாங்கள் மறுத்து விடவே அது முழு அளவிலான ஆக்கிரமிப்பை மேற்கொண்டது (பாகிஸ்தான் சாலைப் போக்குவரத்தை மறித்து, பொருளாதாரத் தடை விதித்ததைக் குறிப்பிடுகிறார்). வனவாசிகள் எங்கள் பகுதிக்குள் புகுந்து விருப்பம் போல அட்டகாசம் செய்ய அது ஊக்குவித்தது. பாகிஸ்தானின் ஊக்குவிப்பு இல்லாமல் அவர்களால் எங்கள் பகுதிக்குள் நுழையவே முடியாது. ஏனெனில் எங்கள் பகுதிக்குள் அவர்கள் நுழைய வேண்டுமானால் பாகிஸ்தானைத் தாண்டிக்கொண்டு தான் வர முடியும். நூற்றுக் கணக்கான டிரக்குகள், ஆயிரமாயிரம் கேலன் பெட்ரோல், ஆயிரக் கணக்கான துப்பாக்கிகள், குண்டுகள், என ஒரு பட்டாளத்திற்குத் தேவையான எல்லாவிதமான உதவிகளும் அவர்களுக்கு அளிக்கப் பட்டன. எங்களுக்கு அது தெரியும். ஏனென்றால் அது எங்களுக்குப் பழக்கமான பிரதேசம். பொருளாதரத் தடை மூலம் தன்னால் சாதிக்க முடியாததை முழு அளவிலான ஆக்கிரமிப்பு மூலம் சாதித்துக் கொள்ள பாகிஸ்தான் விரும்பியது.
“இன்று எங்கள் வேண்டுகோள் என்ன? பாதுகாப்பு கவுன்சில் தன் உறிப்பினர்கள் சிலரை அந்தப் பகுதிக்கு அனுப்பிவைத்து அங்கு என்ன நடக்கிறது என்பதை அவர்களே தெரிந்து கொள்ளட்டும் என்பதுதான்.
பாகிஸ்தான் சுய முடிவெடுக்க விடாது
“இந்தியாவுடன் ஜம்மு காஷ்மீர் இணைந்தது சட்டப்படியானதா என்பதுதான் எங்கள் கேள்வி என்று பாகிஸ்தான் முன் வந்து கூறுமானால், அது பற்றி விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன். எனினும் இப்பொழுது அவர்கள் (பாகிஸ்தான்) என்ன சொல்கிறார்கள் என்றால் “காஷ்மீர் மக்களுக்கு சுய நிர்ணயம் அளிக்கப் பட வேண்டும் என நாங்கள் வேண்டுகிறோம்’ என்கிறார்கள். எதனுடன் இணைய வேண்டும் என்று சுதந்திரமாக முடிவு செய்யும் உரிமை காஷ்மீர் மக்களுக்கு அளிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு இன்னாருடன்தான் இணைய வேண்டும் என்கிற நிர்பந்தம் இருக்கக் கூடாது என்கிறார்கள்.
“இன்று பாகிஸ்தான் இப்படிச் சொல்வதற்குப் பல காலம் முன்பே அதை இந்தியாவின் பிரதமர் நேரு சொல்லிவிட்டார். அதிலும் காஷ்மீர் மிகவும் சங்கடமான நிலையில் இருந்த போது அவ்வாறு சொல்ல வேண்டிய அவசியம் இன்றியே அவர் அவ்வாறு சொன்னார் (பாகிஸ்தானின் மோசமான ஆக்கிரமிப்பைக் குறிப்பிடுகிறார்).
“பாகிஸ்தான் எங்களை சுயமான முடிவு எடுக்க ஒருபோதும் அனுமதிக்காது என்பதை நாங்கள் உணர்ந்தோம். வாளாவிருந்தால் முசபராபாத், பராமுல்லா, ஸ்ரீநகர் ஆகிய இடங்களிலும் அவற்றை ஒட்டிய கிராமங்கள், நகர்ப்புறங்களில் உள்ள எங்கள் சகோதர மக்களுக்கு பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பால் நேர்ந்த கதியைத்தான் நாங்களும் அனுபவிக்க நேரிடும்; வெளியில் உள்ள ஓர் அதிகார சக்தியின் உதவியைப் பெறுவதுதான் அத்தகைய நிலைமை ஏற்படாமல் இருப்பதற்கு உள்ள ஒரே வழி என அறிந்தோம்.
“இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மன்னரும் மக்களும் சேர்ந்தே இந்தியாவுடனான எங்கள் இணைப்பை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று இந்திய அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுத்தோம். இந்திய அரசாங்கம் எளிதில் எவ்விதப் பேச்சும் இன்றி இணைப்பை ஏற்றுக் கொண்டிருக்கலாம். “சரி, உங்கள் இணைப்புக் கோரிக்கையை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். அதற்கிணங்க உங்களுக்கு உதவி செய்கிறோம்’ என்று இந்திய அரசாங்கம் சொல்லியிருக்கலாம். ஆனால் இந்தியாவின் பிரதம மந்திரி எவ்வித அவசியமும் இன்றியே, “காஷ்மீர் ஒரு சங்கடமான நிலையில் இருக்கும்போது அதைப் பயன்படுத்தி அதன் இணைப்புக் கோரிக்கையை ஏற்பது சரியல்ல. எனினும், காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாவது இந்த இணைப்பின் மூலம் சாத்தியப்படுவதால் அதன் அடிப்படையில்தான் அதற்கு ராணுவ உதவியினை அளிக்க இயலும் என்ற நிலைமையை உத்தேசித்து, இணைப்பை ஏற்கிறோம். கொலைகாரர்களும், கொள்ளைக்காரகளுமான ஆக்கிரமிப் பாளர்களிடமிருந்து மீட்கப்பட்ட பிறகு, இந்த இணைப்பிற்கு ஜம்மு காஷ்மீர் மக்களின் அங்கீகாரத்தைப் பெறுவோம்’ என்று இந்தியாவின் பிரதம மந்திரி சொன்னார்.
“இணைப்பு குறித்துத் தங்களுக்குச் சுய நிர்ணய உரிமை வேண்டுமென்று பாகிஸ்தானிடம் காஷ்மீர் மக்களாகிய நாங்கள் சொன்னோம். ஆனால் ஆக்கிரமிப்புச் செய்த ஒரே வாரத்தில் ஜம்மு காஷ்மீர் முழுவதையும் வெற்றிகொண்டு விடலாம் என்றும் அதனையே ஓர் முடிந்து போன விவகாரமாக உலகின் முன் சாதித்துவிடலாம் என்றும் பாகிஸ்தான் கருதிவிட்டது. சிறிது காலத்திற்கு முன் ஐரோப்பாவில் இப்படித்தான் நடந்தது. அதே சூழ்ச்சி இங்கும் பின்பற்றப் பட்டது(ஹிட்லரின் ஜெர்மனியானது ஆஸ்திரியா, ஹங்கேரி, போலந்து எனக் கைப்பற்றிக் கொண்டே வந்ததைக் குறிப்பிடுகிறார்).
“ஆனால் அந்தச் சூழ்ச்சி தோல்வியுற்றதால் பாகிஸ்தான் உலகின் வழக்காடு மன்றமான இங்கு வந்து, “எங்களுக்கு ஒன்றும் வேண்டாம். தங்கள் விதியை நிர்ணயம் செய்துகொள்ள காஷ்மீர் மக்கள் சுதந்திரமாக இயங்க வழி செய்ய வேண்டும் என்று மட்டுமே நாங்கள் வேண்டுகிறோம். இதன் பொருட்டு அவர்களுக்குச் சுய நிர்ணய உரிமை அளிக்கப் பட வேண்டும்’ என்று சொல்கிறது (காஷ்மீர் மக்களை அவர்களில் பெரும்பாலானவர்கள் முகமதியர் என்பதை வைத்து மத அடிப்படையில் அவர்களைத் தங்கள் மக்கள் என்று பாகிஸ்தான் சொல்லத் தொடங்கி விட்டதைக் குறிப்பிடுகிறார்).
பொருளற்ற பொது நிர்வாகம்
“அதன் பிறகு பாகிஸ்தான் தொடர்ந்து கூறுவது என்னவென்றால், “சுய நிர்ணயத்திற்கான ஏற்பாட்டை ஒரு பொதுவான நிர்வாகத்தின் பொறுப்பில் செய்தால்தான் அது நடுநிலையாகவும் நேர்மையாகவும் நடைபெற முடியும்’ என்பதுதான். “பொதுவான நிர்வாகம் என்று சொல்வதன் மூலம் அவர்கள் என்ன குறிப்பிடுகிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. பொது நிர்வாகம் என்றால் என்ன அர்த்தம்?
“ஷேக் அப்துல்லா ஜவஹர் லால் நேருவின் நண்பர். அதனால் அவருக்கு காங்கிரஸ் மகாசபையின் மீது அனுதாபம் இருக்கும். அவர் இந்தியாவுடன் இணைந்து விட்டமைக்கு ஆதரவான கருத்தையும் தெரிவித்து விட்டார். மேலும், ஜம்மு காஷ்மீரின் அவசர கால நிர்வாகியாகவும் நியமிக்கப் பட்டிருக்கிறார். எனவே அவர் போய் விட வேண்டும்’ என்று பாகிஸ்தான் பிரதிநிதி கூறுகிறார்.
“அவர் விரும்புகிற மாதிரி ஷேக் அப்துல்லா போய் விடுவதாக வைத்துக் கொள்வோம். அதன் பிறகு அவருடைய இடத்திற்கு யார் வருவார்கள்? ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் நாற்பது லட்சம் மக்களிலிருந்து ஒருவர்தான் அந்த இடத்திற்கு வந்தாக வேண்டும். அவர் ஒரு நடுநிலையாளராக, இரு தரப்பிற்கும் பொதுவானவராக இருப்பார் என்று எப்படிக் கூற முடியும்? நாங்கள் மரக் கட்டைகளோ பொம்மைகளோ அல்ல. ஏதேனும் ஒரு கருத்தைக் கொண்டவர்களாக அவர்கள் இருந்தாக வேண்டும். இந்தியாவுக்கோ அல்லது பாகிஸ்தானுக்கோ ஆதரவு காட்டுபவர்களாகக் காஷ்மீரின் மக்கள் இருந்தாக வேண்டும்.
“ஆக, நடு நிலை நிர்வாகம் என்றால் காஷ்மீர் மக்கள் தங்கள் மாநில நிர்வாகத்தின் மீது எவ்வித உரிமையும் இல்லாதவர்களாக இருந்தாக வேண்டும் என்று சொல்கிற நிலைப்பாட்டிற்குப் பாகிஸ்தான் வந்தடைகிறது. வேறு எவரோ அந்த இடத்திற்கு வர வேண்டும். இது நியாயம்தானா? காஷ்மீர் மக்கள் தமது சொந்த மாநிலத்தை நிர்வகிக்கும் அதிகாரத்தை இழந்து நிற்பதைத்தான் பாதுகாப்பு கவுன்சில் விரும்புகிறதா?
“சரி, விவாதத்திற்காக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் நாற்பது லட்சம் மக்கள் தங்கள் தேசத்தின் நிர்வாகத்தில் தங்களுக்கு எவ்வித அதிகாரமும் வேண்டாம் என்று ஒப்புக் கொள்வதாகவே வைத்துக் கொள்வோம். அப்போது நிர்வாகப் பொறுப்பை யாரிடம் விடுவது? இந்தியா விடமா? இல்லை பாகிஸ்தானிடமா? உலகின் வேறு எந்த தேசத்திடமாவதா? அல்லது கடவுளிடமே காஷ்மீரின் இடைக் கால கட்ட நிர்வாகப் பொறுப்பை ஏற்குமாறு பாதுகாப்பு கவுன்சில் கேட்டுக் கொண்டாலும் அவராலும் கூட பட்சபாதமின்றி செயல்பட முடியாது. ஏதேனும் ஒரு தரப்பிற்குச் சாதகமாக அமையும்படியாகத்தான் அவரது முடிவு இருக்கும்.
“தற்சமயம் தொழிற் கட்சி அரசு அதிகாரத்தில் உள்ள பிரிட்டனில் நாளைக்கே பொதுத் தேர்தல்வருவதாக வைத்துக் கொள்வோம். பிரதமாராக உள்ள அட்லியிடம் நீங்கள் தொழிற் கட்சிக்காரராக இருப்பதால் அதற்குச் சாதகமாகத்தான் நடந்து கொள்வீர்கள். அதனால் பதவியிலிருந்து விலகிக் கொள்ளுங்கள். தேர்தல் நடந்து முடிகிற வரை வேறு ஒரு பொதுவான நபர் பிரதமராக இருக்கட்டும் என்று சொல்வது சரியாக இருக்குமா?
“எனினும் ஷேக் அப்துல்லா இந்தியாவுக்கு ஆதரவான கருத்தைத் தெரிவித்துவிட்டதால் அவர் இருக்கக் கூடாது. ஏனென்றால் அவரால் நடுநிலையுடன் வாக்கெடுப்பை நடத்த முடியாது என்று பாகிஸ்தான் சொல்லுமானால் இன்று காஷ்மீரின் நிர்வாகப் பொறுப்பில் ஷேக் அப்துல்லா இருப்பதற்குக் காரணம் அது மக்களின் விருப்பம் என்பதுதான். அவர்கள் விரும்பும் வரை நான் பொறுப்பில் இருப்பேன்.
“சுய நிர்ணய வாக்கெடுப்பு நடக்குமானால் அது சுதந்திரமான முறையில் நடைபெறும் என்று நாங்கள் அறிவித்துள்ளோம். யார் வேண்டுமானாலும், இந்தியா அளித்த புகாரின் பேரில் அமைந்த பாதுகாப்பு கவுன்சில் ஆணைக்குழுவே ஆயினும் அதனை மேற்பார்வை செய்யட்டும். வாக்கெடுப்பை எவ்வாறு நடத்த வேண்டும் என்று அது சொல்லட்டும். எப்படி நடத்தினால் வாக்கெடுப்பு நடுநிலை பிறழாமல் நடக்கும் என்று ஆலோசனை சொல்லட்டும். எனது நிர்வாகம் இம்மியளவும் பிசகாமல் அதற்கு இணங்க சுய நிர்ணய வாக்கெடுப்பை நடத்தி வைக்கும்.
இந்திய ராணுவம் விலகினால் ஆபத்து
“இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீரில் இருக்கும் வரை அங்கு சுதந்திரமான சுய நிர்ணய வாக்குப் பதிவு நடைபெறுவது சாத்தியமில்லை’ என்று பாகிஸ்தான் கூறுகிறது. இந்நிலையில் எனது நாட்டில் என்ன நடக்கிறது என்பதை முழுமையாக விவரிப்பது எனக்கு மிகவும் சிரமமாக உள்ளது. அங்கு ஒரு பகுதி முற்றிலும் நாசமடைந்துள்ளது. சண்டை இன்னமும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆயிரக் கணக்கான வனவாசிகள் ஜம்மு காஷ்மீரில் நிர்வாகம் எந்த விதத்திலாவது பலவீனப்பட்டால் அதனைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளத் தயாராக உள்ளனர்.
“இன்று அத்து மீறும் கொடிய ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து காஷ்மீரைப் பாதுகாக்க இந்திய ராணுவம் மட்டுமே உள்ளது. அது வெளியேறிவிட்டால் காஷ்மீர் மாநிலம் முற்றிலும் அழிந்து போவதற்குத்தான் இடமளிப்பதாகிவிடும்.
“இந்திய ராணுவத்தை விலகிப் போகும்படி நான் கூறினால் கொலையும் கொள்ளையும் பெண் களைக் கடத்திச் செல்வதுமாக அட்டூழியம் செய்யும் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து எமது மக்களை என்னால் எவ்வாறு காப்பாற்ற இயலும்? அத்தகைய ஒரு கொடுமைக்குத்தானே கடந்த பல மாதங்களாக அவர்கள் இலக்காகி வந்திருக்கிறார்கள்? சுய நிர்ணய உரிமைக்கான வாக்கெடுப்பு கிராமந்தோறும் நடக்கையில் அதில் இந்திய ராணுவம் தலையிடுவது சாத்தியமில்லை. அது எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் பணியில்தான் ஈடுபட்டுள்ளது. எங்கேயாவது ஊடுருவல் இருப்பதாக அழைப்பு வந்தால் அதனைத் தடுக்கும் பொருட்டு அங்கு மட்டுமே அது செல்கிறது.
“நிலைமையைக் கட்டுபாட்டில் வைத்திருக்க பாகிஸ்தானும் இந்தியாவும் அவரவர் ராணுவத்தைக் கொண்டு கூட்டாக பந்தோபஸ்து செய்யலாம் அல்லவா’ என்று கேட்கப் படுகிறது. அது காஷ்மீருக்குள் நேர் வழியில் வர இயலாத பாகிஸ்தான் கொல்லைப் புற வழியாக நுழைவதற்குத்தான் வழி செய்வதாகும். காஷ்மீருக்குள் தனது ராணுவத்தைப் புகுத்தும் ராணுவம், இந்திய ராணுவத்துடன் போரிடத் தொடங்கும். ஆகவே அது இயலாத காரியம்.
“பாதுகாப்பு கவுன்சில் முன் உள்ள விவகாரம் ஜம்மு காஷ்மீர் மன்னருக்கு ராஜ்ஜியம் எப்படிக் கிடைத்தது என்பதோ, அந்த ராஜ்ஜியத்தை இந்தியாவுடன் இணைக்க அவருக்கு அதிகாரம் உள்ளதா என்பதோ அல்ல. அப்படியொரு வாதத்தை பாகிஸ்தான் பாதுகாப்பு கவுன்சில் முன் வைக்கிறது. ஆனால் அது மாதிரி விவாதிப்பதற்காகப் பாதுகாப்பு கவுன்சில் முன்னால் நாம் வரவில்லை. அவ்வாறாயின் காஷ்மீர் மன்னரும் மக்களும் சட்டப்படியும் அரசியல் சாசன ரீதியாகவும் இந்தியாவுடன் இணைந்துவிட்டோம்; அதைப் பற்றிக் கேட்க பாகிஸ்தானுக்கு உரிமை இல்லை என்பதைப் பாதுகாப்பு கவுன்சில் முன் நிரூபணம் செய்வது எங்கள் பணியாக இருக்கும். ஆனால் பாதுகாப்பு கவுன்சில் முன் நடைபெறும் விவாதம் அது பற்றியதல்ல.
“ஆக்கிரமிப்புச் செய்துள்ள வனவாசிகளைச் சமாளித்து, காஷ்மீர் மக்களுடன் ஒரு புரிந்துணர்வுக்கு வந்து அங்கு ஒரு ஜனநாயக அமைப்பை நிறுவ இந்திய ராணுவமும் காஷ்மீர் ராணுவமும் இணைந்து செயல் படுவது சாத்தியம். அதை எங்களால் பார்த்துக் கொள்ள முடியும். அதற்கு பாகிஸ்தானின் உதவி எங்களுக்குத் தேவையில்லை. உள்நாட்டு எதிர்ப்பைச் சமாளிக்கவோ, வெளியிலிருந்து நுழைந்த ஆக்கிரமிப்பாளர்களை விரட்டி யடிக்கவோ எங்களுக்குப் பாகிஸ்தானின் ஆதரவு தேவையில்லை. எனினும் பாகிஸ்தான் எங்களின் அண்டை நாடாக இருப்பதால் அதனுடன் நட்பாக இருக்கவே நாங்கள் விரும்புகிறோம். ஆனால் எங்களுக்கு ஏற்பட்டுள்ள குழப்பத்தில் நேரடியாகவோ மறைமுகமாகவோ தலையிடவேண்டாம் என்று அதனிடம் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். “இந்தக் குழப்பத்தில் எங்கள் தலையீடு இல்லை என்று பாகிஸ்தான் இங்கு கூறுகிறது. அதன் தலையீடு உள்ளதா அல்லவா என்பதைநேரில் கண்டறிய பாதுகாப்பு கவுன்சிலை அழைக்கிறோம். அதன் தலையீடு இருக்குமானால் அதனைக் கைவிடுமாறு பாதுகாப்பு கவுன்சில் பாகிஸ்தானுக்கு அறிவுறுத்த வேண்டும். தலையீடு இல்லை எனில் அது பாகிஸ்தானால் நிரூபணம் செய்யப் பட வேண்டும்.
“எந்தத் தரப்பின் தலையீடும் இன்றி சுதந்திரமான சுய நிர்ணய வாக்கெடுப்பு நடத்தி அதன் மூலம் காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தமைக்கு மக்களின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்ற கருத்தில் எமக்கு வேறுபாடு இல்லை. ஆனால் அதற்காகக் காஷ்மீரின் தற்போதைய நிர்வாகிகளை மாற்றிவிட்டுத்தான் வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று சொன்னால் அதனை ஒப்புக்கொள்ள முடியாது.
“எதிர் காலத்தில் என்னென்ன நிகழுமோ எனக்குத் தெரியாது. ஆனால் பாதுகாப்பு கவுன்சிலிடம் ஒன்றை மட்டும் என்னால் உறுதியளிக்க முடியும். முற்றிலும் எவ்விதப் பார பட்சமும் இல்லாத நிர்வாகத்தை நான் நடத்திச் செல்வேன். தற்சமயம் மாற்று முகாமில் உள்ள என் சகோதரர்களிடம் நான் கேட்பது இதுதான்: வந்து எனக்கு ஆதரவு தாருங்கள். இது என்னுடைய நாடு. உங்களுடையதும்தான். மாநிலத்தை நிர்வாகம் செய்யுமாறு நான் கோரப்பட்டுள்ளேன். எனக்கு உங்களுடைய ஆதரவினைத் தர மாட்டீர்களா? மாநிலத்தின் நிர்வாகத்தை வெற்றிகரமாகவும் சார்பு இன்றியும் நடத்திச் செல்லக் கடமைப் பட்டுள்ளேன். “இல்லை, சார்பற்ற நிர்வாகத்தை நாங்கள்தான் தருவோம்’ என்று பாகிஸ்தான் சொன்னால், அதனை ஏற்க நான் மறுக்கிறேன். ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்குப் பங்களிக்க நான் மறுக்கிறேன். காஷ்மீர் மக்களிடம் இப்படிச் செய், அப்படிச் செய் என்று சொல்ல பாகிஸ்தானுக்கு உரிமை இல்லை. பாகிஸ்தானின் போக்கைப் போதுமான அளவுக்கு நாங்கள் பார்த்தாயிற்று. முசபராபாத், பராமுல்லா, மேலும் அவை சார்ந்த நூற்றுக் கணக்கான கிராமங்கள் பாகிஸ்தானின் கதையை ஜம்மு காஷ்மீர் மக்களிடம் நன்றாகவே எடுத்துக் கூறியுள்ளன. அத்தகைய அனுபவம் இனியும் எங்களுக்கு வேண்டாம்.
வேண்டாத விஷயங்கள்
“முடிவாக நான் கூறுவது என்னவென்றால், காஷ்மீர் விவகாரத்தைத் தீர்த்து வைக்க வேண்டும் என்பதற்காகப் பாதுகாப்பு கவுன்சில் விஷயத்தைக் குழப்பிவிடலாகாது என்று கேட்டுக் கொள்கிறேன். வேண்டாத விஷயங்களையெல்லாம் இங்கு ஆராய இடமளிக்கத் தேவையில்லை. பாகிஸ்தானின் பிரதிநிதி விவகாரத்திற்கு அப்பாற்பட்ட ஜம்மு காஷ்மீரின் வரலாற்றையெல்லாம் இங்கு எடுத்துரைத்தார். இந்தியாவின் வைசிராய்கள் காஷ்மீர் மன்னருக்கு ஒழுங்காக நடந்து கொள்ளுமாறும் அறிவுரைகள் கூறுவதாகவும் சில கடிதங்களை அவர் படித்துக் காட்டினார். இந்தியாவில் தோற்றுவிக்கப்பட்ட சமஸ்தானங்கள் பலவும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் படைப்புகள்தாம். கடந்த 150 ஆண்டுகளாக அவற்றின் முறை கேடான ஆட்சியை ஆதரித்து வந்ததுதானே அது? காஷ்மீர் மன்னர் சட்டபூர்வமாகத்தான் அரசுரிமையைப் பெற்றாரா என்பது பற்றியெல்லாம் விவாதிப்பதற்காக நாம் இங்கு கூடவில்லை. அதெல்லாம் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியக் கோட்பாட்டின் சதியாட்டம். எப்படியோ காஷ்மீரின் நிர்வாகம் இன்று நம் கைக்கு வந்துள்ளது. மன்னராட்சியின் போது காஷ்மீரில் நிர்வாகம் சீராக நடைபெற்றதா அல்லவா, இந்தியாவுடன் தனது சமஸ்தானத்தை இணைக்க மன்னருக்கு அதிகாரம் உண்டா இல்லையா என்பதெல்லாம் இங்கு பிரச்சினை இல்லை. பாகிஸ்தான் சர்வ தேச நியமங்களை அனுசரிக்க வேண்டும் என்றும் காஷ்மீரில் ஆக்கிரமிப்பாளர்களை ஆதரிக்கலாகாது என்றும் பாதுகாப்பு கவுன்சில் பாகிஸ்தானுக்கு அறிவுறுத்த வேண்டும் என்பதுதான் இங்கு வழக்கு.
“காஷ்மீருக்குள் நிர்வகத்திற்கு எதிராக நடைபெறும் உட்பூசலையும் பாகிஸ்தான் ஆதரிக்கலாகாது. தான் ஆதரிக்கவில்லை என்று அது கூறுகிறது. அது சரி பார்க்கப் பட வேண்டும். பாதுகாப்பு கவுன்சில் ஒரு குழுவை அனுப்பி எமது குற்றச் சாட்டு நியாயமானதா அல்லவா என்று பார்க்கச் செய்ய வேண்டும். குற்றச் சாட்டு நியாயமானதுதான் என்று தெரிய வருமானால் பாகிஸ்தான் அவ்வாறான குற்றத்தைச் செய்யாமலிருக்குமாறு பாதுகாப்பு கவுன்சில் பாகிஸ்தானிடம் கூற வேண்டும். இல்லையேல் இந்தியா தனக்குள்ள சாத்தியக் கூறுகளைப்பயன் படுத்தி பாகிஸ்தான் பக்கம்தான் குற்றம் உள்ளது என்கிற முடிவுக்கு ஏற்ப பாதுகாப்பு கவுன்சில் நடவடிக்கை எடுக்க அனுமதிக்கப் பட வேண்டும்.
“இந்தியாவின் சார்பில் நான் பேசுவதானால், ராணுவ உதவி எதையும் அது பாகிஸ்தானிடம் கோரவில்லை (காஷ்மீரில் நிலைமையைச் சீராக்குவதற்காக ). பாகிஸ்தான் அத்துமீறிய ஆகிரமிப்பாளர்களுக்குத் தனது இடத்தில் முகாம்களை அமைத்துக் கொடுக்கலாகாது என்றுதான் இந்தியா கோருகிறது. எல்லையை ஒட்டியுள்ள பாகிஸ்தான் முழுவதும் ஏராளமான ஆக்கிரமிப்பாளர் முகாம்கள் நிரம்பியுள்ளன. அவர்கள் பாகிஸ்தானின் பிரஜைகள்தாம். அவர்களைத் தனது பகுதியில் அனுமதிக்க வேண்டாம் என்றுதான் நாங்கள் பாகிஸ்தானிடம் கேட்டுக் கொள்கிறோம்.
“எல்லையில் முகாமிட்டுள்ள வனவாசிகளுக்கோ காஷ்மீருக்குள்ளேயோ சண்டை செய்துகொண்டிருக்கும் வனவாசிகளுக்கோ ஆயுதங்களையும் வெடி மருந்துகளையும் கொடுத்து உதவும் காரியத்தை பாகிஸ்தான் செய்யக் கூடாது. இவையெல்லாம் சர்வ தேச நெறிமுறைகளுக்கு முரணானவையாகும். அவ்வளவுதான்.

Series Navigation

மலர் மன்னன்

மலர் மன்னன்

காஷ்மீர்: குழியும் பறிக்கும் குதிரைகள் – 4

This entry is part [part not set] of 29 in the series 20081002_Issue

மலர்மன்னன்


பாகிஸ்தான் உதவி வேண்டாம்
“எங்களுக்குப் பாகிஸ்தானிடமிருந்து ஆயுத உதவி எதுவும் தேவையில்லை. உள்ளே புகுந்துள்ள ஆக்கிரமிப்பளர்களான வனவாசிகளை விரட்ட இந்திய ராணுவமே போதுமானது. பாகிஸ்தான் எங்கள் விஷயத்தில் தலையிடாமலிருந்தாலே போதும். மன்னருடனான எங்கள் சச்சரவை நாங்களே தீர்த்துக் கொள்வோம். இப்போது நடக்கும் அதிகாரப் பூர்வமற்ற சண்டை நீடிக்கும் வரை எதுவும் செய்வது மிகவும் சிரமமாக இருக்கும். எமது கைகள் கட்டப் பட்டுள்ளன.
“இப்பொழுது நடப்பது என்ன? எல்லைக்கு அப்பால் வனவாசிகள் பெருமளவில் குவிந்துள்ளனர். நான்காயிரம், ஐந்தாயிரம் என அவர்கள் உள்ளனர். எமது கிராமங்களுக்குள் புகுந்து அவற்றைத் தீக்கிரையாக்குகிறார்கள். பெண்களைக் கடத்திச் செல்கிறார்கள். எமது ராணுவம் அவர்களைக் கைப்பற்றச் செல்லும் போது, எல்லையைத் தாண்டித் தப்பிச் சென்று விடுகிறார்கள். அவர்கள் மீது சுட்டால் அது இரு நாடுகளுக்கிடையான பெரும் மோதலாகி விடும்.
“இந்திய ராணுவத்தால் வெகு எளிதாக எல்லையைக் கடந்து சென்று ஆக்கிரமிப்புச் செய்பவர்களின் முகாம்களைத் தாக்கி அழித்து விடமுடியும். ஆனால் அவை யாவும் பாகிஸ்தானின் பகுதியிலுள்ளன. ஆகவே அதனைச் செய்வதில்லை. பாதுகாப்பு கவுன்சிலுக்கு இதுபற்றிப் புகார் செய்வதுதான் முறை என்று நாங்கள் கருதுகிறோம்.
“இவ்வாறு புகார் தெரிவிக்கும்போது பாகிஸ்தானின் பிரதிநிதி அடாவடியாக அதனை மறுப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆக்கிரமிப்பாளர்களுக்கு பாகிஸ்தான் எல்லாவிதமான உதவிகளையும் அளிக்கிறது. வெளியிலிருந்து ஊடுருவும் ஆகிரமிப்பாளர்களுக்கும் காஷ்மீரில் உள்ளேயிருந்து தொல்லை கொடுப்பவர்களுக்கும் பாகிஸ்தான் உதவி வருவது அனைவருக்கும் தெரியும். எனினும் பாகிஸ்தான் இதனை தைரியமாக மறுக்கிறது.
“இந்நிலையில் நான் என்ன செய்ய முடியும்? காஷ்மீர் மாநிலம் முழுவதும் உள்ள நிலைமையையோ, பாகிஸ்தான் எல்லை நெடுகிலும் ஆக்கிரமிப்பாளர்கள் குவிக்கப்பட்டிருப்பதையோ பாதுகாப்பு கவுன்சிலுக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட என்னிடம் மாய விளக்கு எதுவும் இல்லை. எனவே பாதுகாப்பு கவுன்சில் உறுபினர்களே நேரில் சம்பவ இடத்திற்கு வந்து, யார் சண்டை செய்கிறார்கள், யார் அமைதியாக இருக்கிறர்கள் என்பதைக் காண வேண்டுகிறேன். அப்போது பாதுகாப்பு கவுன்சில் முன் நாங்கள் கொண்டு வந்த புகார் வார்த்தைக்கு வார்த்தை உண்மை என்பதை எங்களால் நிரூபிக்க இயலும்.’
இவ்வாறாகத் தனது நீண்ட உரையைப் பாதுகாப்பு கவுன்சிலில் நிகழ்த்தி முடித்தார், அப்துல்லா.
ஆக்கிரமிப்பாளர்கள் பற்றித் தொடக்க முதலே அப்துல்லா பதிவு செய்து வந்ததோடு, ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஹிந்துஸ்தானத்துடன் இணைந்தது காஷ்மீர் மக்களும் சேர்ந்துஎடுத்த முடிவுதான் என்றும் அது முடிந்து போன சமாசாரம் என்றும் வலியுறுத்தி வரவும் தவற வில்லை. இது பற்றியும் சில பதிவுகளைத் தருகிறேன்:
1947 நவம்பர் 16 அன்று ஷேக் அப்துல்லா வெளியிட்ட தகவல்:
இந்த திடீர்த் தாக்குதல் நடத்தும் கொள்ளையர்கள் நமது நாட்டுக்குள் புகுந்து ஆயிரக் கணக்கான பெண்களைக் கவர்ந்து சென்றனர். அனைவரையும் அனைத்தையும் சூறையாடினர். இந்நிலையில் பாகிஸ்தான் திடீர் என்று உலகின் முன் தோன்றி, தன்னை காஷ்மீர் மக்களின் விடுதலைக்காக முன்னிற்பது போலக் காண்பித்துக் கொள்கிறது. உலகம் ஹிட்லரையும் கோயபல்ஸையும் கழித்துக் கட்டியாயிற்று. அனால் எனது நாட்டில் என்ன நடந்தது, இன்னமும் நடந்துகொண்டிருக்கிறது என்பதைப் பார்க்கிறபோது, அவர்களின் ஆவிகள் பாகிஸ்தானுக்கு இடம் பெயர்ந்துவிட்டதாகவே நான் நம்புகிறேன்.
1947 நவம்பர் 19 அன்று அவர் சொன்னது:
இந்திய யூனியனுடன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இணைப்பது அரசியல், பொருளாதாரம் ஆகிய இரு வழிகளிலும் மாநிலத்திற்குப் பயன் தருவதாக இருக்கும். பொருளாதார ரீதியில் காஷ்மீர் தனது சந்தைக்குப் பாகிஸ்தானைக் காட்டிலும் இந்தியாவைக் கூடுதலாகச் சார்ந்துள்ளது. அரசியல் ரீதியாக இந்தியா பாகிஸ்தானைவிட முற்போக்கானது. எனவே காஷ்மீர் தனது சுயமான மதி நுட்பத்துடன் சுதந்திரமாக வளர்ச்சி பெற வேண்டுமானால் இந்திய யூனியனுடன் தன்னை இணைத்துக் கொள்வதன் மூலமாகவே அது கூடுதலான வாய்ப்பைப் பெற முடியும்.

1948 ஃபிப்ரவரி 5 அன்று சொன்னது:

நாங்கள் இந்தியாவுடன் இணந்தே பணியாற்றுவது, அதனுடன் சேர்ந்தே சாவது என்று முடிவு செய்துவிட்டோம். இந்த முடிவைக் கடந்த 1947 அக்டோபரில் அல்ல, 1944 லில் ஜின்னா எங்கள் நாட்டின் மீது கண் வைத்து முன்னேற முற்பட்ட போதே அதை நாங்கள் தடுத்து நிறுத்தி, இம்முடிவுக்கு வந்துவிட்டோம். அது முதலே எமது தேசிய மாநாடு ஜின்னாவின் (ஹிந்து முஸ்லிம் என்னும்)இரு தேசியக் கோட்பாட்டிலிருந்து விலகியே இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளது.

1948 அக்டோபர் 27 அன்று தெரிவித்தது:

திடீர்ப் படையெடுப்பாளர்கள் எம் பெண்டிரைக் கவர்ந்தனர். குழந்தைகளைப் படுகொலை செய்தனர். அனைவரையும் அனைத்தையும் கொள்ளை கொண்டனர். மசூதிகளை விபசார விடுதிகளாக மாற்றினர். இன்று ஒவ்வொரு காஷ்மீரியும் படையெடுத்து வரும் வனவாசிகளையும் அவர்களைத் தூண்டிவிட்டு அனுப்புபவர்களையும் வெறுக்கிறான். முஸல்மான்களே மிகப் பெரும்பான்மையினராக உள்ள எமது நாட்டில் இவ்வாறான பயங்கரங்கள் நிகழ்வதற்கு ப் பொறுப்பாளிகள் அவர்களே.

புது தில்லியில் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசியது (ஸ்டேட்ஸ்மன் மார்ச் 07, 1948):

காஷ்மீர் மீது அத்துமீறி ஆக்கிரமிப்புச் செய்த பாகிஸ்தானுக்குக் காஷ்மீர் மக்கள் சுய நிர்ணய உரிமை பெற வேண்டும் என்று கோர எவ்வித அதிகாரமும் இல்லை. காஷ்மீரை ஆக்கிரமிப்புச் செய்ததன் மூலம் பாகிஸ்தான் ஓர் ஆக்கிரமிப்பாளர் என்கிற பெயரை நிரந்தரமாகச் சம்பாதித்துக் கொண்டு விட்டது. அதனோடு எங்களுக்கு எவ்வித உறவும் இல்லை. நாங்கள் எங்கள் தலைவிதியை இந்தியாவுடன் பிணைத்துக் கொண்டு விட்டோம். இனி எங்களை எதனாலும் பிரிக்க இயலாது.

ஸ்ரீநகர் பொதுக் கூட்டத்தில் பேசியது (ஹிந்துஸ்தான் டைம்ஸ் மே 26, 1948):

காஷ்மீர் கால காலத்திற்கும் இந்தியாவுடன்தான் இருக்கும். அதற்காக எத்தகைய தியாகம்செய்யவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். நாம் அனைவரும் இந்தியர்கள். இந்தியாவே நமது தாயகம்.

ஸ்ரீநகர் பத்திரிகையாளர் கூட்டம் (ஹிந்துஸ்தான் டைம்ஸ் மே 29, 1948):

ஜம்மு காஷ்மீர் மாநில மக்களாகிய நாங்கள் எங்கள் விதியை இந்திய மக்களுடன் பிணைத்துக் கொண்டது ஏதேனும் உணர்ச்சி வேகத்திலோ, கையறு நிலையிலோ அல்ல, பகிரங்கமான விருப்பத் தேர்வின் மூலமாகத்தான். சுதந்திரத்திற்கான பொது நோக்கிலும் கூட்டாக அனுபவித்த கொடுமைகளின் காரணமாகவும் நாங்கள் ஒன்றாகியுள்ளோம். இந்தியா மதச் சார்பற்ற தன்மையைக் கடைப் பிடிப்பதாக உறுதி பூண்டுள்ளது. நாங்களும் அதே கொள்கையைப் பின்பற்ற முனைந்துள்ளோம்.

செய்தியாளருக்கு அளித்த நேர்காணல் (நேஷனல் ஹெரால்டு, ஜூன் 19, 1948):

எங்கள் படகுகளையெல்லாம் நாங்கள் கொளுத்திப் போட்டு விட்டோம் (எங்கள் தனித் தன்மை என்பதையெல்லாம் கைவிட்டு விட்டோம் என்பது பொருள்). (பாகிஸ்தானைப் போன்ற) ஒரு எதேச்சாதிகார அமைப்புக்குக் காஷ்மீரில் இடமில்லை. இந்தியாவின் கவுரவத்திற்குக் காஷ்மீரால் இழுக்கு நேரும்படியாக எவர் கையிலும் ஒரு விளையாட்டுப் பொருளாக நாங்கள் இருக்க மாட்டோம்.

புது தில்லி பத்திரிகையாளர் சந்திப்பு (செப்டம்பர் 29, 1948):

இந்தியாவும் பாகிஸ்தானும் எதிர் எதிரான இருவேறு கொள்கைகளைக் கடைப் பிடிப்பவை.
அவ்விரண்டில் எதைத்தேர்ந்துகொள்வது என்கிற பிரச்சின எங்கள் முன் வந்தபோது, காஷ்மீரின் அரசியல், பொருளாதாரம், வளங்கள், கலாசாரம் ஆகிய அனைத்தும் வளர்ச்சி பெற வேண்டுமானால் இந்தியாவுடன் இணைந்திருந்தால் மட்டுமே அது சாத்தியம் என நானும் எனது சகாக்களும் எமது கட்சியின் செயற் குழுவில் முடிவு செய்தோம் (ஜம்மு காஷ்மீர் அனைத்துத் தரப்புப் பிரதிநிதிகளின் விசேஷக் கூட்டம் நடைபெற்று முடிந்தபின் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டி).

செய்தியாளர்களிடம் பேசுகையில் (அக்டோபர் 14, 1948 தி ஹிந்து )

காஷ்மீர் இந்தியாவின் ஓர் அங்கமாக இருக்கும் என்று கடந்த ஆண்டு திரு. நேருவிடம் கூறியது இப்போது ஒரு நிரந்தரப் பிணைப்பாகவே ஆகிவிட்டது. இந்திய ராணுவமும், இந்திய மக்களும் நாங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பெரும் சங்கடத்தில் சிக்கியபொழுது எங்களுக்கு அளித்த உதவியை என்றென்றும் எங்களால் மறக்கவே முடியாது. காஷ்மீர் மக்கள் பசி பட்டினியால் வாடிய போது இந்திய ராணுவ வீரர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பங்கீட்டு (ரேஷன்) உணவையே கொடுத்து அவர்களைக் காப்பாற்றினார்கள். இந்தியாவின் போக்கு எவ்வாறு உள்ளது என்பதை ஒரு வருட காலம் பார்த்த பிறகே எமது எதிர் கால சந்ததியரும் ஏற்கத் தக்க வகையில் நிரந்தரமாக இந்தியாவில் இணைந்திருப்பது என நாங்கள் முடிவெடுத்தோம். இந்தியாவின் கொள்கையும் செயல் திட்டமும் எமது கொள்கை, செயல் திட்டங்களை ஒத்திருப்பதன் அடிப்படையிலேதான் இந்தியாவுடன் இணைவது என்ற முடிவுக்கு நாங்கள் வந்தோம் (பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு என்கிற சங்கடத்திலேயிருந்துது தப்பிக்க வேண்டும் என்பதற்காக அல்ல).

ஸ்ரீநகர் ஈத் பெரு நாள் கூட்டத்தில் ஷேக் அப்துல்லா (அக்டோபர் 16, 1948)

அண்மையில் ஸ்ரீநகரில் நடைபெற்ற மாநாட்டின் போது, காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்து விட்டதில் தமக்கு உள்ள நம்பிக்கையினை ஜம்மு காஷ்மீர் மக்கள் உறுதி செய்தனர். அவர்களின் உறுதிப்பாட்டிற்கு இதற்கு மேலும் ஆதாரம் வேண்டுமா?

ஸ்ரீநகர் செய்தியாளர் கூட்டம் (மே 18, 1949)

காஷ்மீர் மக்கள் யாருடன் இணைவது என்பது பற்றி(மன்னராட்சி அகன்று மக்களாட்சி அமைந்தபின் ) சுதந்திரமாக முடிவு செய்யட்டும் என நட்பு ரீதியில் நாங்கள் எடுத்துக் கூறியபோது பாகிஸ்தான் அதனை ஏற்கவில்லை. எனவே திடீர்த் தக்குதல்காரர்கள் விரட்டப்பட்டபின்னராவது காஷ்மீர் மக்களுக்கு சுய நிர்ணய உரிமை அளிக்கப்பட வேண்டும் எனக் கோருவதற்கு பாகிஸ்தானுக்கு உரிமை இல்லை.

நியூஸ் க்ராணிக்கிள் (மே 26, 1949):

பாகிஸ்தானிலிருந்து வந்த “இஸ்லாமிய விடுதலை வீரர்கள்’ (முஜாஹிதீன்கள்) நிராயுதபாணிகளான காஷ்மீர் மக்கள் மீது நடத்திய கொடும் தாக்குதல், இஸ்லாமின் நற்பெயருக்கு நிரந்தரமாக இழைக்கப்பட்ட களங்கம் ஆகும். இந்த அத்துமீறிய அட்டூழியங்களை இஸ்லாமின் பெயராலும் அதன் புகழுக்காகவும் நடைபெறுவதாகக் கூறிக்கொள்வது கண்டிக்கப் பட வேண்டும்.

செய்தியாளர் கூட்டம் (நவம்பர் 5, 1949)

காஷ்மீரின் தலைவிதியை இந்தியாவுடன் பிணைத்துக் கொள்ளும் எங்கள் முடிவு பண்டித ஜவஹர்லால் நேரு தனிப்பட்ட முறையில் என் நண்பர் என்பதால் அல்ல, காஷ்மீரும் இந்தியாவும் ஒன்றே, ஒரே தன்மையவே என்பதால்தான் எடுக்கப்பட்டது. வகுப்புவாத உணர்வைக் களைவதற்கு எல்லாவிதமான முயற்சிகளையும் இந்தியா மேற்கொண்டு வருகையில், வகுப்பு வாத அடிப்படையிலேயே பாகிஸ்தான் உருவாகியிருப்பதால் பாகிஸ்தானுடன் ஏதேனும் ஒருவகையில் உறவு வைத்துக் கொள்வதைக் கூட காஷ்மீரால் நினைத்துப் பார்க்கவும் முடியாது.

ஸ்ரீநகர் ஜி.எம். கல்லூரியில் பேசியது, ட்ரிப்யூனில் வெளி வந்தவாறு (டிசம்பர் 4, 1949):

காஷ்மீர் மாநிலத்தில் ஏறத் தாழ பாதிப் பகுதியைத் தன்வசம் தனது ராணுவத்தின் கீழ் வைத்திருக்கும் பாகிஸ்தான் காஷ்மீர் மக்களுக்கு சுய நிர்ணய உரிமை தர வேண்டும் என்பது ஹிட்லரின் தந்திரப் பேச்சுக்கு ஒப்பானதாகும்.

சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசியது (ஃபிப்ரவரி 12, 1950)

நான் முன்னரே சொன்னதற்கு இணங்க, இணைப்பு சம்பந்தமாக மாற்று யோசனை எதையும் காஷ்மீர் யோசிப்பதாகக் கூறுவது அபத்தமாகும். எங்கள் மக்கள் அமைதியான வாழ்வும் வளமும் பெற வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். சுதந்திரம் என்பது கவர்ச்சியான கோட்பாடுதான். ஆனால் நான் ஏற்கனவே கேட்டதுபோல அது நடைமுறைக்கு சாத்தியமானதாக இருக்குமா? காஷ்மீரைப் போல ஜீவாதாரங்கள் குறிப்பிட்ட அளவில் மட்டுமே உள்ள ஒரு சின்னஞ் சிறு பிரதேசம் தன்னைத் தானே கவனித்துக் கொள்வது சாத்தியமா? அதற்கான வாய்ப்புகளும் உத்தரவாதங்களும் உள்ளனவா?அல்லது காஷ்மீர் சம்பந்தப்பட்ட இரு நாடுகளின் (இந்தியா, பாகிஸ்தான்) இன்றைய அரசியல் சூழலில் காஷ்மீர் ஒரு சுதந்திர நாடாக இருப்பதற்கு அவை அனுமதிக்குமா? நாங்கள் தனி சுதந்திர நாடாக இருப்போம் என்று சம்பிரதாயமாக அறிவித்து, அதன் விளைவாகப் பழி பாவத்திற்கு அஞ்சாத வலிமை வாய்ந்த ஒரு நாட்டிற்கு உடனடியாக இரையாகிவிடும் கதி காஷ்மீருக்கு நேருமாறு செய்துவிடலாமா? எந்தக் குறிக்கோளுக்காக இத்தனை ஆண்டுகள் பாடு பட்டோமோ அதற்கு துரோகம் இழைப்பதாகவே அது இருக்கும். சொற்பொழிவு, ஏட்டளவிலான ஆய்வு ஆகியவற்றின் மாற்று ஏற்பாடாக சுதந்திரத்தை முன் வைக்கலாமேயன்றி அது அர்த்தமற்றதாகவே இருக்கும். இதுபற்றி நான் பலமுறை பல பத்திரிகையாளர்களுடன் பேசியாகிவிட்டது. அவற்றின் அடிப்படையில் இந்த (தனி நாடு என்கிற) விஷயத்தைப் படிக்கவோ புரிந்துகொள்ளவோ வேண்டும்.

பத்திரிகைகளுக்கு அளித்த தன்னிலை விளக்க அறிக்கை (மே 2, 1950):

காஷ்மீரைச் சேர்ந்த முஸ்லிம்களால், அவர்களுக்கு நண்பர்கள் இல்லாத நிலையில் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பைத் (தங்களின் சுய பலத்தின் மூலம் ) தடுத்து நிறுத்தியிருக்க முடியாதபோது அந்த ஆக்கிரமிப்பை எதிர்த்து இந்தியா அவர்களுக்கு உதவி செய்ததோடு, கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆள் பலம், நிதி உதவி, தார்மிக ஆதரவு அளித்துவரும் நிலையில், காஷ்மீர் மக்களின் மனதில் ஏதேனும் மாற்றத்தை இந்தியாவில் எவர்தான் எதிர்பார்க்க முடியும்? இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் மக்கள் காஷ்மீருக்கு முழு அளவிலான உதவிகளை அளித்திருப்பதோடு, காஷ்மீர் மண்ணில் தங்கள் ரத்தத்தையும் சிந்தியிருப்பதால் காஷ்மீருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பிணைப்பு இறுக்க மாகிவிடவில்லையா? மனிதப் பிறவிகள் அந்த அளவுக்கு நன்றி கெட்டவர்களாக இருப்பார்கள் என எவரும் கருதலாகாது. நாங்கள் என்றென்றும் இந்தியாவுடன்தான் இருப்போமேயன்றி ஒருபோதும் பாகிஸ்தானுடன் இருக்க மாட்டோம்.

ரேடியோ காஷ்மீர் இரண்டாவது ஆண்டு நிறைவுக் கூட்டம் (மே 2, 1950):

காஷ்மீரையும் இந்தியாவையும் பிணைக்கும் இணைப்பு, சட்டரீதியானது மட்டுமல்ல, மக்கள் சுதந்திரமாக எடுத்த முடிவுக்கு இணங்க மேற்கொள்ளப்பட்டதும் ஆகும். தங்கள் விருப்பம், அபிலாஷை ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் உண்மையான வடிவமாக இந்தியா இருப்பதாலேயே அவர்கள் இந்தியாவுடன் இணையும் முடிவை எடுத்தார்கள். இந்திய மக்கள், காஷ்மீர் மக்கள் இருவருக்குமான மனப்பூர்வமான, ஆத்மார்த்தப் பிணைப்பு எக்காலத்தும் அறுபடவே செய்யாது.

காஷ்மீர் மாநிலம் டீட்வாலில் நடந்த கூட்டத்தில் (மே 24, 1950):

இந்திய மக்களுடன் தங்களைப் பிணைத்துக் கொண்டு, இருவருக்கும் உள்ள லட்சியங்கள் ஒன்று போல இருப்பதால் அவர்களுடன் சேர்ந்தே அவற்றை எய்துவதென காஷ்மீர் மக்கள் தாமாக முன் வந்து முடிவெடுத்துள்ளனர். அவர்களைக் கட்டுப்படுத்தும் இந்த ரத்த பந்தம் எல்லைக் கோடுகளால் நிர்ணயிக்கப்பட்ட இணைப்புகள், வர்த்தக ஆதாயங்கள் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டு, கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக எந்தக் கோட்பாட்டிற்காகக் காஷ்மீர் மக்களும், கோடிக் கணக்கான இந்தியர்களும் போராடி வந்தார்களோ அதன் பொருட்டு உருவாகியுள்ளது. நமக்கிடையே உள்ள உறவு, ஆண்டான் அடிமை இடையே உள்ளது போன்றதல்ல. சுதந்திரமாக இரு பங்காளிகள் இருவர் நலனுக்கும் உகந்தத வகையில் சரிசமமான பலன் தரும் ஒரு கூட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

தியாகிகள் தினக் கூட்டம் (ஹிந்துஸ்தான் ஸ்டான்டர்டு, ஜூலை 15, 1952)

ஆஜாத் காஷ்மீர் படை என்று சொல்லப் படுபவர்கள் கலைக்கப்படு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பி லுள்ள காஷ்மீரின் பகுதி மீண்டும் காஷ்மீருடன் சேர்க்கப்பட்டு ஆக்கிரமிப்புப் பகுதியில் பாகிஸ்தான் படையும் பாகிஸ்தான் குடி மக்களும் முற்றிலும் வெளியேற்றப்பட்டுவிட்ட பிறகே ஜம்மு காஷ்மீர் மாநிலம் சுய நிர்ணயம் பற்றி முடிவு செய்ய முடியும். இந்திய மக்களிடமிருந்து தங்கு தடையின்றியும், முணுமுணுப்பு ஒருசிறிதும் இன்றியும் சகலவிதமான உதவிகளும் கிடைக்கப் பெற்றிருக்காவிட்டால் காஷ்மீரில் இந்த அளவுக்கு எங்களால் எதுவும் சாதித்திருக்க இயலாது. இந்திய அரசாங்கம் நியாயமான நிலையில் நின்று, தானாகவே ஆட்களையும் பொருள்களையும் கொடுத்து உதவியதால்தான் எங்களால் மிகச் சிறந்த பாதுகாப்பை அமைத்துக் கொள்ள முடிந்தது. இந்திய ராணுவம் மட்டும் உரிய நேரத்தில் வந்திருக்காவிட்டால் எங்கள் கதி என்ன ஆகியிருக்கும் என்பது எனது கற்பனைக்கும் அப்பாற்பட்டதாகும்.

மத்திய அரசின் சட்ட அமைச்சகம் காஷ்மீர் இணைப்பு தொடர்பாகப் பிறப்பித்த ஆணையில், அதற்கு முகாந்தரமான நிலவரம் குறித்து ஷேக் அப்துல்லா அளித்த அறிக்கை (ஆணை எண் ஸி ஓ 44, நாள் நவம்பர் 15, 1952)

அத்துமீறி உள்ளே நுழைந்தவர்கள் மின்னல் வேகத்தில் தாக்கினார்கள். எங்கள் நிலத்தைத் தீயிட்டுக் கொளுத்தினார்கள். எமது வீடுகளை இடித்தார்கள். நூற்றுக் கணக்கான கிராமங்களை அழித்தார்கள். பெண்களை மான பங்கம் செய்தார்கள். சுறுசுறுப்பாக இயங்கும் நகரங்களான முசபராபாத், ஊரி, பராமுல்லா, பாட்டன் ஆகியவையும் எமது தலைநகரை நோக்கிச் செல்லும் பெருவழிச் சாலைகளில் உள்ள வணிக மையங்களும், வெறும் புகை மண்டலங்களாகக் காணப்பட்டன். அவற்றில் எதுவும் மிஞ்சவில்லை. அவர்கள் (ஆக்கிரமிப்புச் செய்த திடீர்த் தாக்குதல்காரர்கள்)இஸ்லாமின் துரோகிகள்.

இவ்வாறாக, ஷேக் அப்துல்லா, ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஹிந்துஸ்தானத்துடன் இணைந்தது மன்னர் மட்டுமின்றி மக்களும் சேர்ந்தே எடுத்த முடிவு, அதில் மாற்றமில்லை, அது முடிந்து போன விஷயம் என்பதைப் பலவாறு உறுதி செய்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பிரதமராக அப்துல்லா நியமனம் பெற்றபின், சிறுகச் சிறுக, மாநிலத்தைத் தமது பரம்பரைச் சொத்தாக பாவிக்கலானார். ஜம்மு காஷ்மீர் வளர்ச்சிக்காக மத்திய அரசு ஆண்டு தோறும் கோடிக் கணக்காகக் கொட்டிக் கொடுக்கும் ரூபாய்களைத் தமது விருப்பம் போலச் செலவிடலானார். மாநிலத்திற்கு வழங்கப் பட்ட தனி அந்தஸ்தைத் தனக்குரிய அதிகாரமாகப் பயன் படுத்திக் கொள்ளலானார். மத்திய அரசு இது பற்றிக் கேள்வி கேட்க ஆரம்பித்ததும், அவரது சுபாவம் மாறலாயிற்று. இதை அறிந்த பாகிஸ்தான், அவருக்கு வலை வீசத் தொடங்கியது. பாகிஸ்தான் தலைவர்களுடன் ரகசிய உறவு வைத்துக் கொள்ளத் தொடங்கிய ஷேக் அப்துல்லாவைப் பதவியிலிருந்து இறக்க வேண்டியதயிற்று. ஆயினும் அதற்காக முன்னர் தாம் சொன்ன ஆணித் தரமான வாதங்களை அவரால் மறுக்க இயலவில்லை.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் எல்லை தாண்டி வரும் பயங்கர வாதிகளால் மட்டுமின்றி, பாகிஸ்தான் ராணுவத்தாலும் திடீர்த் தக்குதல்களுக்கு உள்ளாவதும் இளம் இந்திய ராணுவ வீரன் அத் தாக்குதலிலிருந்து காஷ்மீர் மக்களைக் காக்கும் பொருட்டுத் தனது ரத்தத்தைச் சிந்துவதும், உறுப்புகளை இழந்து நிரந்தரமாக ஊனமடைவதும், உயிரையும் இழப்பதும், சமயங்களில் பாகிஸ்தான் ராணுவத்தினரால் கடத்தப்பட்டுக் கொடூரமான சித்திர வதைகளுக்கு உள்ளாகிக் குரூரமாகக் கொல்லப்பட்டு, சிதைந்து போன சடலமாக வீசி எறியப்படுவதும் இன்றளவும் தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றன.

ஜம்மு காஷ்மீர் பகுதியில் ரோந்துப் பணியிலும் காவல் பணியிலும் அமர்த்தப்படும் ராணுவ வீரர்கள் பெரும்பாலும் தமிழ் நாட்டையும் தென் மாநிலங்களையும் சேர்ந்தவர்களாவார்கள். காஷ்மீரின் தனித் தன்மை வாய்ந்த வீரியமான குளிர் அவர்களுக்குப் பழக்கமில்லை. ஆனாலும் அதனைப் பொறுத்துக் கொண்டு , ஈவிரக்கமற்ற பகைவனையும் தனது பாதுகாப்பி லுள்ள மாநிலத்தில் இருக்கும் துரோக சிந்தனையுள்ள மத வெறியர்களையும் சகித்துக் கொண்டு தமது கடமையைச் செய்து வருகின்றனர், ஹிந்துஸ்தானத்தின் தீரமிக்க ராணுவ வீரர்கள்.

எனது பேச்சை நான் இவ்வாறு முடித்த போது, கேட்டுக் கொண்டிருந்த இளைஞர்கள் அனைவரும் மிகுந்த உணர்ச்சி வசப்பட்டு, தங்கள் படிப்பு முடிந்தவுடன் ஹிந்துஸ் தானத்தின் ராணுவத்தில் சேரப் போவதாக சபதம் செய்தனர்.

+++++

Series Navigation

மலர் மன்னன்

மலர் மன்னன்

காஷ்மீர்: குழியும் பறிக்கும் குதிரைகள் – 1

This entry is part [part not set] of 37 in the series 20080925_Issue

மலர்மன்னன்


ஹிந்துக்களுக்கு மதம் என்பது ஆன்மிக முன்னேற்றத்திற்கான படிக்கட்டு. ஆபிரகாமிய மதங்களான கிறிஸ்தவம், முகமதியம் ஆகியவற்றைப் பின்பற்றுபவர்களுக்கோ, மதம் என்பது உலகம் முழுவதையும் வசப்படுத்திக் கொள்வதற்கான ஓர் அரசியல் கோட்பாடு. எங்கெல்லாம் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையும் முகமதியரின் எண்ணிக்கையும் கூடுதலாகின்றனவோ அங்கெல்லாம் நாட்டைப் பிளவு படுத்தும் தேசத் துரோகம் வலுப்பெறுவதன் காரணம் இதுதான். ஹிந்துஸ்தானத்தின் வட கிழக்கு மாநிலங்களில் கிறிஸ்தவர் எண்ணிக்கை கூடுதலாகிவிட்டதால் அங்கு மிஷனரிகளின் பக்க பலத்துடன் பிரிவினை கோஷம் உரத்துக் கேட்கிறது. பொது இடங்களில் குண்டுகள் வெடித்து உயிர்ச் சேதமும் பொருட் சேதமும் விளைகின்றன. வட மேற்கு எல்லைப் புற மாகாணம், மேற்கு பஞ்சாப், ஸிந்து மாநிலம், கிழக்கு வங்காளம் ஆகிய இடங்களில் முகமதியர் எண்ணிக்கை அதிகரித்ததால்தான் பாகிஸ்தான் பிரிவினை நிகழ்ந்தது. இன்று ஹிந்துஸ்தானம் முழுவதிலுமே தங்களின் எண்ணிக்கையைப் பெருக்கிக் கொண்டு ஹிந்துஸ்தானத்தை “இஸ்லாமியக் குடியரசாக’ மாற்றிவிட வேண்டும் என முகமதிய பயங்கர வாத இயக்கங்களும், “கிறிஸ்தவக் குடியரசாக’ மாற்றியமைக்க வேண்டும் என்று கிறிஸ்தவ “நற்செய்தி’ இயக்கங்களும் நாடு முழுவதும் ஒன்றோடொன்று போட்டி போட்டு வேலை செய்து கொண்டிருக்கின்றன. இந்த நடப்பு நிலவரத்தை உணராமல் ஹிந்துக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கிக் கிடப்பதும், தமக்குள் சச்சரவிட்டுக் கொள்வதும், தாராள மனம் உள்ளவர்கள் என்று பெயர் எடுத்துப் பலன் பெற வேண்டும் என்ற அற்ப ஆசையில் முகமதிய, கிறிஸ்தவ இயக்கங்கங்களுக்குப் பரிந்து பேசுவதுமாகக் காலங் கடத்தி வருகிறார்கள். இந்த அடிப்படை உண்மையை மனதில் பதிய வைத்துக் கொண்டு காஷ்மீர் பிரச்சினையைப் புரிந்து கொள்ள வேண்டும்.சி

சில தினங்களுக்கு முன் செங்கல்பட்டுக்கு வருமாறு சிலரிடமிருந்து அழைப்பு வந்தது. காஷ்மீர் விவகாரம் பற்றி ஒரு சிறு கூட்டத்தில் பேச நான் வர வேண்டும், அதிக பட்சம் நூறு பேர் கூடுவார்கள். ஆனால் அனைவரும் இளைஞர்களாக இருப்பார்கள். காஷ்மீர் விவகாரம் பற்றி உண்மையான கோணத்தை அறிய விரும்புகிறவர்களாக இருப்பர்கள் என்று சொன்னார்கள். திண்ணை டாட் காம் இணைய இதழில் வந்த எனது காஷ்மீர் தொடர்பான கட்டுரைகளையும் அனேகமாக “ஜடாயு’ ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்த தருண் விஜய் கட்டுரையினையும் படித்துவிட்டுத்தான் இந்த விஷயத்தில் அவர்களுக்கு ஆர்வம் ஏற்பட்டிருந்ததை அறிந்துகொண்டேன். மேலும் அவர்களுக்கு ஒரு தூண்டுதல் ஏற்பட இன்னொரு விஷயமும் காரணமாக இருந்திருக்கிறது. அது செங்கற்பட்டுக்குப் போன பிறகுதான் தெரிய வந்தது.

“மக்கள் ஜன நாயகம்’

செங்கற்பட்டு நகரில் மக்கள் அதிக அளவில் நடமாடும் பகுதிகளில் எல்லாம் சிவப்பு நிறச் சுவரொட்டி ஒன்று ஒட்டப்பட்டிருப்பதைக் கண்டேன். “இந்திய இளைஞர் மக்கள் ஜனநாயகக் கழகம்’ என்ற பெயரில் வெளியிடப்பட்டிருந்த அந்தச் சுவரொட்டியில் காணப்பட்ட வாசகங்கள் கண்களை மிகவும் உறுத்தின. ஜன நாயகம் என்றாலே அது மக்களுக்குப் பிரதிநிதித்துவம் அளிப்பதுதான். மக்கள் ஜனநாயகம் என்ற பாகுபாடு விசித்திரமாக இருந்தது. ஒருவேளை அரசியல் கட்சிகளின் அடாவடி ஜன நாயகம், சிறுபான்மையினரை வாக்கு வங்கிகளாக நடத்தும் ஜனநாயகம் என்றெல்லாம் பாகுபாடுகள் இருப்பதால் “மக்கள் ஜனநாயகம்’ என்பதாக அடையாளப் படுத்தத் தோன்றியிருக்கலாம்.

இந்திய ராணுவம் காஷ்மீரிலிருந்து வெளியேற வேண்டும் என்றும், பாகிஸ்தான் அரசு, காஷ்மீர் விவகாரத்தில் தலையிடலாகாது என்றும் இந்திய அரசு, தனி தேசியமான கஷ்மீர் மக்களின் தனிநாடு கோரிக்கைக்கு அங்கீகாரம் வழங்குமாறும் அந்தச் சுவரொட்டி வலியுறுத்தியது.

இடதுசாரிகள் எப்போதுமே தேசத் துரோகத்தில் முன்னிற்பவர்கள் என்பது தெரிந்த விஷயம்தான் என்றாõலும் இந்த அளவுக்கு பகிரங்கமான தேச விரோதப் பேச்சுக்குத் துணிவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. முக்கியமாக அந்தச் சுவரொட்டியைப் பார்த்துவிட்டுத்தான் என்னை அழைத்துப் பேச வைக்கும் எண்ணம் இளம் ஆர்வலர்களுக்கு ஏற்பட்டிருப்பதைப் புரிந்துகொண்டேன். இதில் குறிபிடத்தக்க அம்சம், என்னை அழைத்த இளஞர்களில் எவரும் எந்த ஹிந்து இயக்கத்தோடும் தொடர்புள்ளவர்கள் அல்ல. பல்வேறு கல்லூரிகளில் படித்து வரும், தகவல் அறியும் நாட்டம் உள்ள மாணவர்களேயன்றி, எந்தவொரு இயக்கம் சார்ந்த உணர்வுகளையும் முன்கூட்டியே உள்ளத்தில் பதிய வைத்துக்கொண்டவர்கள் அல்ல. நானும் அத்தகையவனே என்பதால் என்னை அழைத்துப் பேச வைக்க அவர்கள் விரும்பியிருக்கிறார்கள்.

பேச்சைக் கேட்க வந்தவர்களின் எண்ணிக்கை அறுபது, அறுபத்தைந்து இருக்கும். எனது அறிமுகத்தை முதலில் அளித்து அதன் பின் அவர்களின் சுய அறிமுகத்திற்குச் சிறிது நேரம் ஒதுக்கினேன். கூட்டம் ஒரு இளைஞர் வீட்டின் விசாலமான மொட்டை மாடியில் நடந்தது.
மேஜை, நாற்காலி என்றெல்லாம் போட்டிருந்ததை ஓரம் கட்டச் சொல்லிவிட்டு, வந்தவர் களை ஒருவர் பின் ஒருவராய் வட்டமாக உட்காரச் செய்து, முதல் வட்டத்தில் நானும் ஒருவனாக அமர்ந்துகொண்டு ஒரு கலந்துரையாடலாகவே எனது பேச்சைத் தொடங்கினேன். பொழுது போவதே தெரியாமல் பேச்சு தொடர்ந்தது. இரவு பனிரண்டு மணிக்கு ஆறிப்போன இட்டலிகளைத் தின்றுவிட்டு, அந்த மொட்டை மாடியிலேயே இரவு படுத்துக் கிடந்துவிட்டு அதிகாலையில் சென்னை திரும்பினேன்.

அழிக்க முடியாத ஹிந்து அடையாளம்

கலந்துரையாடலில் நான் பேசியதையும் இடையிடையே கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அளித்த பதில்களையும் தொகுத்து ஒரு கட்டுரையாக இங்கு வழங்குகிறேன்:

காஷ்மீர் என்கிற பெயர் வரக் காரணமே கச்யப முனிவரின் தலமாக அது இருந்ததுதான்.
பல அழிப்பு முயற்சிகளுக்குப் பிறகும் தனது புராதன ஹிந்து அடையாளங்களை அது தக்க வைத்துக் கொண்டுள்ளது. அதன் தலை நகரம் உள்ளிட்ட ஊர்கள் பலவும் இன்றளவும்
தமது பூர்விக ஹிந்துப் பெயர்களால்தான் அழைக்கப்படுகின்றன. ஆதி சங்கரர் காலடி பட்டு சங்கராசாரியார் குன்று என்று அழைக்கப்படும் குன்றும், பனி லிங்க வடிவில் தரிசனம் தரும் அமர நாதரும், அவர் குடிகொண்டுள்ள குகையையொட்டி அமைந்துள்ள தலங்களும், வைஷ்ணோதேவியும் காஷ்மீர் ஒரு ஹிந்து பூமி என்பதைப் பறை சாற்றுகின்றன. சைவம், சாக்தம் ஆகிய வழிபாடுகளின் ஊற்றுக் கண்ணான காஷ்மீர் பின்னர், ஹிந்து ஞான மரபிலிருந்தே கிளைத்த பௌத்தமும் தழைக்கும் தலமாகவும் விளங்கியது.

ஹிந்துஸ்தானத்தின் மண்ணிலிருந்து முளைத்தெழாமல் வேறு எங்கிருந்தாவது வந்து சேர்ந்த மாற்று சமயம் மத மாற்ற முயற்சிகளில் முனைந்து அதன் விளைவாக அது பரவுமானால் காலப் போக்கில் அவ்வாறு பரவி வேரூன்றும் பகுதி ஹிந்துஸ்தானத்திலிருந்து பிரிந்து சென்றுவிடும் என்கிற உண்மையைக் கடந்த கால வராலாறு நெடுகிலும் பார்த்து வருகிறோம். ஒரு காலத்தில் ஹிந்துஸ்தானத்தின் ஓர் அங்கமாகவே இருந்த ஆஃகானிஸ்தானம், ஹிந்துக்களும் பவுத்தர்களுமாக வாழ்ந்த மக்கள் முகமதியர்களாக மாற்றப் பட்டதன் விளைவாக, ஒரு தனிதேசமாகப் பிரிந்து போனது. பஞ்ச நதிகள் பாய்ந்து வளம் செய்த பஞ்சாப் மாகாணத்தின் மேற்குப் பகுதி நெடுகிலும் ஹிந்துக்களாக வாழ்ந்த மக்கள் முகமதியர்களாக மாறியதன் விளைவு, அது பாகிஸ்தானாக மாறிப்போனது. ஹிந்துஸ்தானத்திற்கே பெருமை தந்த சிந்து மாகாணத்தில், முகமதியராக மாறிய மக்களின் எண்ணிக்கை மிகுந்ததால் அதுவும் ஹிந்துஸ்தானத்திலிருந்து துண்டிக்கப்பட்டது. கிழக்கே வங்காளமும் இதே காரணத்தால் சிதைக்கப் பட்டது. வட கிழக்கு மாநிலங்களில் இன்று பிரிவினைக் கோரிக்கை வலுத்து வருகின்றது என்றால் அதற்குத் தூண்டுகோலாக இருப்பது கிறிஸ்தவ மிஷனரிகளே என்பதும், அங்கெல்லாம் மத மாற்றப் பணி முழு மூச்சாகத் தொடர்ந்து, கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை கூடுதலாகி வருவதும்தான் என்பது நிரூபணமாகிவிட்டது.

ஆக, ஹிந்துக்களை மதம் மாறச் செய்து அதன் அடிப்படையில் ஹிந்துஸ்தானத்தைத் துண்டு போடுவது ஒரு தேர்ந்த ராஜ தந்திரத் திட்டமாகச் செயல் பட்டு வருகிறது. எப்படியாவது பெரும்பான்மை மக்களை மதம் மாற்ற வேண்டும், மாற மறுத்துத் தாய் மதத்திலேயே உறுதியுடன் நிற்பவர்களை அடித்து விரட்டிவிட்டு, “எங்கள் வழி தனி வழி, ஹிந்துக்களுடன் எங்களுக்கு ஒட்டோ உறவோ இல்லை. நாங்கள் ஒரு தனி தேசியம். சுதந்திர நாடாக நாங்கள் இயங்குவோம்; அல்லது அண்டையில் உள்ள எங்கள் சமயத்தாரின் தேசத்தோடு இணைந்து கொள்வோம்’ என்று பேசத் தொடங்குவது இத்திட்டதின் முதல் படி. இன்று காஷ்மீரில் நடப்பது இதுதானே யன்றி வேறென்ன?

குப்புறத் தள்ளியது போதாதென்று குழியும் பறிக்கும் சங்கதி இது!

முழுக்க முழுக்க ஹிந்துக்களும் பவுத்தர்களுமாக இருந்த கச்யபரின், கவுதமரின் காச்மீரத்தில் முகமதியர் பெரும்பான்மையினராகிவிட்டதன் மர்மம் என்ன? சைவம், சாக்தம், பவுத்தம் ஆகியவற்றையெல்லாம்விட முகமதியம் உன்னதம் வாய்ந்தது என்கிற விழிப்புணர்வு அங்குள்ள பாமர மக்களுக்குத் திடீரென ஏற்பட்டு விட்டதா? அவ்வளவு விவேகம் உள்ளவர்கள் இன்றளவும் ஏழ்மையில் உழல்வதாகச் சொல்லும் வயணம் என்ன? அங்கு எஞ்சியிருந்த ஹிந்துக்களான பண்டிட்டுகள் காணாமற் போனதன் காரணம் என்ன? அவர்களைக் காணாமலடித்துவிட்டு, எங்கள் பகுதி முழுக்க முழுக்க இஸ்லாமியரே வாழும் பகுதி, அண்டையிலிருக்கிற இஸ்லாமிய நாடான பாகிஸ்தானுடன் இணைவதுதான் எங்களுக்கு இயல்பாக இருக்க முடியும்’ என்று பாகிஸ்தான் கொடிகளுடன் திரியும் பகிரங்க தேசத் துரோகத்தின் பின்னணி என்ன?

முற்போக்கு முத்திரைக்காக…

ஜம்முகாஷ்மீர் மாநிலத்தின் அண்மைக் கால வரலாறுகூடத் தெரியாமலும் தெரிந்துகொள்ள விரும்பாமலும், “முற்போக்கு, மதச் சார்பின்மை’ முதலான முத்திரைகளைக் குத்திக்கொள்வதற்காகக் காஷ்மீர் விவகாரம் பற்றி மனம் போன போக்கில் பேசிவரும் எழுத்தாளர்கள், இதழாளர்கள், ஊடகத்தார்களின் எண்ணிக்கை ஹிந்துஸ்தானம் முழுவதும் பரவலாக அதிகரித்து வருகிறது. இதில் மிகவும் பரவலாக அறியப்பட்ட, பிரபலமான பெயர்களும் அடக்கம். அவர்களைப் பின்பற்றிப் பெயர் பிரபலமடையும் ஆசையில் அதிகம் அறியப்படாதவர்களும் காஷ்மீர் மக்களின் விருப்பத்தை அறிந்து, அந்த விருப்பத்திற்கு இணக்கமான முடிவை எடுப்பதுதான் ஜனநயகப் பண்பு என்று புத்தி சொல்லத் தொடங்கி யிருக்கிறார்கள்.

கருத்துக் கூறுவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டுதான். ஆனால் அந்த உரிமையைப் பயன்படுத்தி தேச நலனுக்கு விரோதமான கருத்துகளைப் பரப்புவது எந்த வகையில் நியாயம் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

“காஷ்மீர் மக்கள் ஹிந்துஸ்தானத்தின் ஒரு பகுதியாகத் தமது மாநிலம் இருக்க விரும்பவில்லை என்றால் அவர்கள் பிரிந்துபோக அனுமதிப்பதுதான் சரி. மக்களின் விருப்பத்திற்கு மாறாக நடப்பது ஜனநாயகத்திற்கே விரோதம்’ என்று பேசும்போது, காஷ்மீர் மக்கள் எனப்படுவோர் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள முகமதியர் மாத்திரமல்ல என்பதை நினைவு படுத்திக்கொள்ள வேண்டும். காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து திட்டமிட்டு விரட்டப்பட்ட பண்டிட் பிரிவைச் சேர்ந்த லட்சக் கணக்கான ஹிந்துக்கள், காஷ்மீர் பள்ளத்தாக்கிலேயே ஓரப்பகுதிகளில் எஞ்சியிருக்கும் பண்டிட்கள், பள்ளத்தாக்கில் உள்ள டோக்ரா, குஜ்ஜார் வகுப்பு ஹிந்துக்கள்,வேலை, வியாபாரம் என ஹிந்துஸ்தானத்தின் பிற பகுதிகளில் மட்டுமின்றி உலகம் முழுவதும் பரவியுள்ள காஷ்மீர ஹிந்துக்கள், ஜம்முவில் உள்ள ஹிந்துக்கள், லதாக்கில் உள்ள பௌத்தர்கள் ஆகியோரும் காஷ்மீரிகள்தான்! முகமதியர் பெரும்பான்மையினராக உள்ள காஷ்மீர் பள்ளத்தாக்கை மட்டும் அங்குள்ள முகமதியர் விருப்பத்திற்கு இணங்கப் பாகிஸ்தானுடன் இணைவதற்கோ தனித்து இயங்குவதற்கோ அனுமதிக்கலாம் என்றால் அடுத்து இங்கே இருக்கிற கேரளத்தின் மலப்புரம் மாவட்டமும் அதே அடிப்படையில் உரிமைகோரத் தொடங்கும். முகமதியர் என்கிற சிறுபான்மையினருக்கு மட்டும் இவ்வாறு சலுகை அளிப்பது ஓர வஞ்சனை. எங்களுக்கும் அந்தச் சலுகை வேண்டும் என்று பிற சிறுபான்மையினரும் அவரவர் மத அடிப்படையில் வேறு எந்த நாட்டுடனாவது இணைவதற்கோ தனித்து இயங்குவதற்கோ உரிமை கோரக்கூடும்! மண்டைக்காடு சம்பவத்தின்போது சில அதி மேதாவி கிறிஸ்தவர்கள் அமெரிக்காவே, எங்களை ஏற்றுக்கொள் என்று குரல் கொடுத்தார்கள்! லதாக்கிலும், ஹிமாசல பிரதேசதின் சில மாவட்டங்களிலும் உள்ள பௌத்தர்கள் தங்களை ஸ்ரீலங்காவுடன் இணைத்துக் கொள்ள இயக்கம் தொடங்கலாம். மலப்புரம் எங்கே, பாகிஸ்தான் எங்கே, லதாக் எங்கே, ஸ்ரீலங்கா எங்கே , இதெல்லாம் வெறும் விதண்டா வாதம் என்று எண்ணிவிட வேண்டாம். ஒரு காலத்தில் இங்கிலாந்து, பிரான்ஸ, ஹாலந்து போர்ச்சுகல் முதலான ஐரோப்பிய நாடுகள் உலகின் மூலை முடுக்குகளில் எல்லாம் தமது கொடியை நாட்டி, அங்குள்ள நிலப் பரப்பைத் தங்கள் தேசத்தின் நீட்சியாகவும், மக்களைத் தம் பிரஜைகளாகவும் அங்கீகரித்துக் கொள்ளவில்லையா?

காஷ்மீரிகள் அல்ல, முகமதியர்கள்

காஷ்மீர் பள்ளத்தாக்கி லுள்ள ஹுரியத் கூட்டமைப்புக் கட்சிகளில் ஒன்றின் தலைவர் கிலானி நாங்கள் காஷ்மீரிகள் என்று சொல்வதைக் கைவிட்டுத் தங்களை மத அடிப்படை
யில் முகமதியராக அடையாளப் படுத்திக்கொண்டு, அதன் அடிப்படையில் காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும் என்று வற்புறுத்தத் தொடங்கியிருக்கிறார்.

கிலானியைப் படத்தில் பார்க்கும்போது அறுபது ஆண்டுகளுக்கு முன் அவர் ஒரு விவரம் அறியாத சிறுவனாகவாவது இருக்கக் கூடும் என்று நினைக்கத் தோன்றியது. அவருக்கு நேரடி அனுபவம் இல்லாவிடினும் உற்றார், உறவினர், பெற்றோர் வழியாக அறுபது ஆண்டுகளுக்கு முன் என்ன நடந்தது என்று தெரியாமலா இருக்கும்? இருந்துமா பாகிஸ்தானுடன் இணைய வேண்டும் என்று பகிரங்கமாக அறிவிக்கிறார்? அவ்வாறு அறிவிப்பதற்குக் காரணம் என்னவாக இருக்க முடியும்? அவ்வாறு அறிவிப்பதற்காக அவருக்கு அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் என்னவாக இருக்கும்? பிற்கால ஷேக் அதுல்லாவுக்கு அளிக்கப்பட்டதுபோல ஏதேனும் இருக்கலாம்; யார் கண்டது?

காஷ்மீரில் விடுதலை முழக்கமும் பாகிஸ்தானுடன் இணைய வேண்டும் என்கிற குரலும் ஒலிக்கிறதென்றால் அதற்கு ஹிந்துஸ்தானத்தின் மெத்தனம்தான் காரணம். மத்திய அரசு கடந்த அறுபது ஆண்டுகளாக ஜம்முகாஷ்மீர் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்காகவும் மக்கள் நலப் பணிகளுக்காகவும் பல்லாயிரம் கோடி ரூபாய்களை அள்ளிக் கொடுத்து வருகிறது. இதில் பெரும் பகுதி காஷ்மீர் பள்ளத்தாக்கிற்குத்தான் ஒதுக்கப்படுக்கிறது. ஜம்மு, லதாக் பகுதிகளுக்கான ஒதுக்கீடு குறைவுதான். இவ்வளவுக்கும் பரப்பளவில் காஷ்மீர் பள்ளத்தாக்கை விட ஜம்மு பெரியது! மக்கள் தொகையும் ஜம்முவில்தான் அதிகம். இருப்பினும் காஷ்மீர் பள்ளத் தாக்கிகிற்குத்தான் நிதி ஒதுக்கீடுகள் கூடுதல். வளர்ச்சிப் பணிகளும் காஷ்மீரில்தான் அதிகம்.

ஹிந்துஸ்தானத்தின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் திரட்டப்படும் வரிப்பணத்திலிருந்துதான் ஜம்முகாஷ்மீர் மாநிலத்திற்குப் பலவகைகளிலும் நிதி ஒதுக்கீடுகள் வழங்கப் படுகின்றன. இதற்குக் காரணம், அதுவும் ஹிந்துஸ்தானத்தின் ஒரு மாநிலம் என்பதோடு, அது ஹிந்துஸ்
தானத்தை விரோதியாகப் பாவிக்கும் அண்டை நாட்டால் மிகுந்த தொல்லைகளை அனுப
வித்துவரும் எல்லைப் புறப் பிரதேசம் என்பதாலும்தான்.

நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடி, புல்லுக்கும் ஆங்கே புசிக்குமாம் என்பதற்கு மாறாகப் புல்லுக்கே இறைக்கப்பட்டு, நெல்லுக்குப் பெயரளவுக்கே போய்ச் சேருவது எல்லா மாநிலங்களிலும் உள்ளதுதான் என்றாலும் ஜம்முகாஷ்மீரில் இது மிகவும் கூடுதல். கடந்த அறுபது ஆண்டுகளில் ஒரு சில குடும்பங்களும் அவற்றின் சொந்த பந்தங்களும் உண்டு கொழுப்பதற்கே மத்திய அரசின் நிதி ஒதுக்கீடுகள் பயன்பட்டிருகின்றன!

மற்ற மாநிலங்களுக்கு இல்லாத விசேஷச் சலுகைகள் ஜம்முகாஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டுவிட்டதால் தட்டிக் கேட்க ஆளில்லாத அரசாங்கமே அங்கு இருந்து வருகிறது.

ஒரு சிங்கம் நரியானது

முக்கியமாக மன்னராட்சிக்கு எதிராக மக்களைத் திரட்டி மக்களாட்சியை நிறுவிய முகமது
அப்துல்லா, ஆட்சிப் பொறுப்பை வசப்படுத்திக்கொண்டு, காலப் போக்கில் தாமே ஒரு குறு நில மன்னராக மாறிவிட்டார். “ஷேக்’ என்பது பிற்காலத்தில் அவரது பெயருக்கு முன் ஒட்டிக் கொண்டதுதான். அதன் பிறகு “காஷ்மீர் சிங்கம்’ என்கிற பட்டமும் சூட்டப்பெற்ற அவர், காலப் போக்கில் தாம் ஒரு நரியே என்பதை நிரூபித்தார்.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து ஹிந்துஸ்தானம் முழுவதும் விடுதலைப் போராட்டம் தீவிர கதியில் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் அதன் தாக்கம் சுயேற்சை மன்னர்களின் சமஸ்தானங்களிலும் இயல்பாகவே ஏற்படலாயிற்று. விடுதலை இயக்கத்தை முன்னின்று நடத்திய காங்கிரஸ் தலைவர்கள் பலருக்கு சமஸ்தானங்கள் பலவற்றிலும் உள்ளே நுழைவதற்குத் தடையே இருந்ததுண்டு. தடையை மீறி காங்கிரஸ் தலைவர்கள் நுழைந்து
கைதானதும் உண்டு. சமஸ்தான மன்னர்கள் அனைவரும் சுக வாசிகளாக இருந்த போதிலும் அவர்கள் அனைவரும் கொடுங்கோலர்களாக இருந்தனர் என்று கூற இயலாது. இருந்த போதிலும், மன்னராட்சிக்கு மாற்றாக மக்களாட்சி வர வேண்டும் என்கிற விழைவு எல்லா சமஸ்தானங்களிலும் இருந்தது. சில சமஸ்தானங்களில் உள்ளூர் அரசியல் வாதிகள் அதிகாரம் தங்கள் கைக்கு வர வேண்டும் என்பதற்காகவே மக்களிடையே அப்படியொரு எண்ணத்தைத் தூண்டிவிட்டதும் உண்டு.

சோஷலிசத் தாக்கத்தின் விளைவாக “முதலாளி, ‘ “செல்வந்தர்’ என்றெல்லாம் குறிப்பிட்டவுடன் ஒரு விரோத மனப்பான்மையும் பரிவற்ற அபிப்பிராயமும் வளர்ந்ததுபோல மன்னர்கள் என்றாலே அனுதாபமற்ற கண்ணோட்டம் தோன்றிவிட்ட காலகட்டம் அது. மன்னர்களாக அரியணையில் அமர்ந்தவர்களும் அரச குல அந்தஸ்தை வெளிப்படுத்திக் கொள்வதற்காக மிகவும் ஆடம்பர மான வாழ்க்கை வழ்ந்தது முதலில் பிரமிப்பாக இருந்த நிலை மாறி வெறுப்பு தோன்றிவிட்டிருந்தது (இன்று பிரபல திரைப்பட நட்சத்திர நாயகர்கள் ராஜ போக மமதையுடன் நடந்துகொள்வதைப் பார்க்கிறோம். ஆனால் அவர்கள் மீது வெறுப்பு வளர்வதற்குப் பதிலாக பிரமிப்பு மிகுந்து அதன் விளைவாக ரசிகர் மன்றங்கள்தாம் வளர்ந்து வருகின்றன! இந்த வளர்ச்சி, திரைப் படக் கவர்ச்சியை முதலாக வைத்து, தனிக் கட்சி தொடங்கி, அரசியலில் இறங்கி, ஆட்சியைக் கைப்பற்றி அதிகாரம் செலுத்த வேண்டும் என்னும் ஆவலையும் தூண்டி வருகிறது!).

இன்று திரையுலக நட்சத்திரங்களே தங்கள் அந்தஸ்தைக் காப்பாற்றிக் கொள்ள மக்களிடமிருந்து விலகி, ஆடம்பரமான வாழ்க்கையை நடத்திக் கொண்டிருகையில் சமஸ்தான மன்னர்கள் அவ்வாறு வாழ்ந்ததில் வியப்பென்ன? பொன்னும் மணியுமாக மகுடம் தரித்துக் காட்சியளித்த மன்னர்கள் மீது மக்களிடையே எதிர்ப்புணர்ச்சியைத் தூண்டுவது அன்றைய சமஸ்தானங்களில் எளிதாகவே இருந்தது.

காஷ்மீரிலும் இதுதான் நடந்தது.

மதவாதத் தாக்கம்

முஸ்லிம் மாநாடு என்கிற பெயரில் ஒரு கட்சியை ஆரம்பித்து, “முகமதியரான நாம் ஓர் ஹிந்து அரசனுக்குக் கீழே கட்டுண்டு கிடப்பதா’ என்று மத வாத அடிப்படையில் மக்களைத் தூண்டிக் கிளர்ச்சி செய்யத் தொடங்கினார் முகமது அப்துல்லா. நம் ஊரில் வெகு சுலபமாகப் பலர் மாவீரர்களாகவும், அஞ்சா நெஞ்சர்களாகவும் ஆகிவிடுவதில்லையா, அதுபோல முகமது அப்துல்லாவும் விரைவில் மகத்தான விடுதலைப் போராளியாகிவிட்டார்! ஜன நாயக விரும்பியான நேரு, காஷ்மீர் பிரியராகவும் இருந்தமையால் அப்துல்லாவுக்கு ஆதரவு அளிப்பதில் அதிக அர்வம் காட்டலானார். “முஸ்லிம் மாநாடு’ என்று பெயர் வைத்திருப்பது உங்கள் கட்சி ஒரு குறிப்பிட்ட சாராருக்கு மட்டுமே பிரதிநிதி என்பதுபோன்று எண்ண வைக்கிறது. அது உங்கள் கோரிக்கையைப் பலவீனப் படுத்தும். முழு சமஸ்தான மக்களுக்கும் பொதுவாக தேசிய மாநாடு என்று கட்சிக்குப் பெயர் மாற்றம் செய்யுங்கள் என்று நேரு ஆலோசனை சொல்லவும், அதுவும் சரிதான் என்று அவ்வாறே பெயரை மாற்றி வைத்தார் , முகமது அப்துல்லா. பாவம், நேரு , அவர் சொன்ன தேசியம் பிறகு “காஷ்மீரி’ தேசியமாக வர்ணிக்கப்படும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார் (பின்னர் காஷ்மீரின் வடக்குப் பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்துக் கொண்டு அங்கு ஒரு பொம்மை அரசாங்கத்தை நிறுவியபோது, அப்துல்லாவின் ‘முஸ்லிம் மாநாடு’ அங்கு புத்துயிர் பெற்றது! காஷ்மீரிலேயே கூட தேசிய மாநாடு என்ற பெயர் மாறத்தை ஒப்புக் கொள்ளாமல் ஒரு பிரிவு தொடர்ந்து முஸ்லிம் மாநாடு என்ற பெயரிலேயே தொடர்ந்து நீடித்தது)!

அந்தக் கால கட்டத்தில்தான் பாகிஸ்தான் கோரிக்கை வலுத்து, ஜின்னாவின் விருப்பப்படியே முகமதியர் எண்ணிக்கை கூடுதலாக உள்ள மேற்கு பஞ்சாப், சிந்து மாகாணம், கிழக்கு வங்காளம் ஆகியவை ஒன்று திரட்டப் பட்டு, செயற்கையாக ஒரு தனி நாடு உருவாக்கப்பட்டது. இதுதான் உண்மையேயன்றி, இன்றளவும் பாகிஸ்தான் என்பதாக ஒரு தனி தேசியம் இல்லை! இதை நிரூபணம் செய்வது போலத் தான் பாகிஸ்தான் பிறந்து இருபத்து நான்கே ஆண்டுகளுக்குள் பாகிஸ்தானிலிருந்து கிழக்கு வங்கம் பிய்த்துக்
கொண்டு போயிற்று. பன்ங்களா தேஷ் என்ற தனிநாடாக அது இன்று இயங்கி வருகிறது.
கிழக்கு வங்காள மக்களைப் பாகிஸ்தானின் கொடுங்கோல் ஆட்சியிலிருந்து ஹிந்துஸ்தானம்தான் மீட்டது. அவர்கள் சுதந்திரமாக இயங்கத் துøணை நின்றது. ஆனால் அந்த நன்றி விசுவாசம் சிறிதும் இன்றி பண்ங்களா தேஷ் இன்று ஹ்கிந்துஸ்தானத்திற்கு எல்லாவிதமான இடையூறுகளையும் விளைவித்துக் கொண்டிருக்கிறது! காரணம் அங்கு பெரும்பான்மையினராக இருப்பவர்கள் வங்காள மொழி பேசுபவர்களாக இருப்பினும் முகமதியர்களாக இருப்பதுதான்! மதம் அவர்களின் கண்களை மறைப்பதால் தமது உண்மையான தேசியம் ஹிந்து தேசியமே எனபதை அவர்கள் காண மறுக்கிறார்கள்!

Series Navigation

மலர் மன்னன்

மலர் மன்னன்