ஷரியா அடிப்படை நீதி என்ற பெயரில் பெண்களைக் கல்லால் அடித்துக் கொல்வதற்கு எதிராக ஜெர்மனி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்

This entry is part [part not set] of 57 in the series 20050106_Issue

ஆசாரகீனன்


நவம்பர் 11, 2004 திண்ணையில் இரான் மற்றும் நைஜீரியா போன்ற தீவிர இஸ்லாமிய சட்டங்களைக் கடைபிடிக்கும் நாடுகளில் முறை தவறிய உறவு வைத்துக் கொண்டதாகக் குற்றம் சாட்டப்படும் பெண்கள் ஷரியா அடிப்படை நீதி என்ற பெயரில் கல்லால் அடித்துக் கொல்லப்படுவதை நிறுத்த உதவ வேண்டி ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தேன்.

இதே போன்ற அறிவிப்புகள் பல நாடுகளிலும், பல மொழிகளிலும் வெளியிடப்பட்டன. பெரும்பாலான இடதுசாரி அமைப்புகளும், பத்திரிகைகளும் தங்கள் வழக்கப்படி இதைக் கண்டுகொள்ளாமல் இருந்தன. பன்முகப் பண்பாட்டு வாதம் என்ற பெயரில் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை ஆதரிக்கும் சிலர் இத்தகைய வேண்டுகோள்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் எதிர்த்தனர்.

எனினும், டிசம்பர் மாத இறுதியில் பெர்லின் நகரில் இருக்கும் இரானிய தூதரகத்தின் முன் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில், ஜெர்மனி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் கலந்து கொண்டுள்ளனர் என்பது ஆறுதல் தரும் செய்தியாக இருக்கிறது. ஜெர்மன் சுதந்திர ஜனநாயகக் கட்சியை சார்ந்த அலக்ஸாண்டர் அல்வரோ, ஹோல்கர் க்ராமர், அலக்ஸாண்டர் லாம்ப்ஸ்டார்ஃப் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களும், இரானிலிருந்து தப்பி ஓடிவந்து ஜெர்மனியில் தஞ்சம் புகுந்த பலரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

இரான் இழைக்கும் இத்தகைய கொடுமைகளை ஐரோப்பிய ஒன்றியம் கண்டு கொள்வதில்லை என்றும், கல்லால் அடித்துக் கொல்வது உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் அனைத்தையும் கைவிடும் வரை இரானுடன் எந்த வித பேச்சு வார்த்தைகளையும் ஐரோப்பிய ஒன்றியம் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் ஆர்ப்பாட்டத்தில் பங்கு பெற்றவர்கள் வலியுறுத்தினர்.

கல்லால் அடித்துக் கொல்லும் காட்டுமிராண்டித் தனத்துக்கு இரானிய அரசு அங்கீகாரம் அளிப்பதை வன்மையாகக் கண்டிக்கும் கடிதம் ஒன்றை இரானிய தூதரிடம் கொடுத்ததாக லாம்ப்ஸ்டார்ஃப் தெரிவித்தார். (பார்க்க: Iran Focus

இஸ்லாமிய அடிப்படைவாதம் பற்றிய செய்திகளை மறைக்கும் அல்லது திரிக்கும் ‘மவுண்ட் ரோடு மாஒ ‘வின் வழியை தினத்தந்தி பத்திரிகையும் பின்பற்றத் தொடங்கியிருக்கிறது. கல்லால் அடித்துக் கொல்லுதல் என்பதை மறைத்து ‘திருமணம் ஆகாமல் தாம்பத்ய உறவு கொண்ட பெண்ணுக்கு தூக்கு தண்டனை ‘ என்ற ரீதியில் திரிக்கப்பட்ட செய்தியை தினத்தந்தி அண்மையில் வெளியிட்டுள்ளது. தினத்தந்தியின் இத்தகைய போக்கை வன்மையாகக் கண்டிக்குமாறு திண்ணை வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறேன். தினத்தந்தியின் மின்னஞ்சல் முகவரி: manager-ms@dt.co.in

aacharakeen@yahoo.com

Series Navigation

ஆசாரகீனன்

ஆசாரகீனன்