பேரறிஞரும், புரியாத விஷயங்களும்.

This entry is part [part not set] of 42 in the series 20031030_Issue

PS நரேந்திரன்


சிறிய வயதில் உங்கள் பெற்றோர் ஒரு சாதாரண கழுதையைக் காட்டி ‘இதுதான் பஞ்ச கல்யாணி ‘ என திரும்பத் திரும்ப சொன்னால், வளர வளர நீங்களூம் அதுதான் உண்மை என்று நினைப்பீர்கள். வெளியுலகம் பார்த்தறியாத உங்கள் பெற்றோர் மட்டுமல்ல, அவர்கள் வாழும் ஊரே அப்படித்தான் நம்பிக் கொண்டிருக்கும். அல்லது நம்ப வைக்கப் பட்டிருப்பார்கள்.

நீங்கள் கொஞ்சம் வளர்ந்த பின், ஏதாவது வெளியூர்ப் பக்கம் போக நேரிடும் போது, உண்மையான பஞ்ச கல்யாணியைப் பார்க்கும் சந்தர்ப்பம் ஏற்படலாம். இது என்ன மிருகம் ? மிக அழகாக இருக்கிறதே ? இதன் பெயர் என்ன ? எனக் கேட்டு, அந்த ஊர்க்காரர்கள் ‘பஞ்ச கல்யாணி ‘ எனப் பதில் அளித்தால், அவர்களுடன் சண்டைக்குப் போக நேர்ந்தாலும் நேரலாம். பின்னே, ‘பஞ்ச கல்யாணி ‘ இப்படியா இருக்கும் ? இது கனைக்கவல்லவா செய்கிறது ? அதுவும் மெதுவாக. நம் ஊர்க் கல்யாணிக்கு இணையாகுமா இது ? வாய் திறந்து ‘காள்! காள்! ‘ என்று கத்தினால் எட்டு ஊருக்கல்லவா கேட்கும் ? நாள் முழுக்க அல்லவா கேட்டுக் கொண்டிருக்கலாம் அந்த சங்கீதத்தை!

இப்படி நம் ஊர் பஞ்ச கல்யாணியின் ‘பராக்கிரமத்தை ‘ பக்கத்து ஊர்க்காரனிடம் வாதித்து, உண்மை புரிந்து, உதை வாங்கி, தலையைக் குனிந்து கொண்டு வரவேண்டிய சந்தர்ப்பம் உங்களூக்கு ஏற்பாட்டால் என்ன மனநிலமையில் இருப்பீர்களோ, அந்த மனநிலமையில் இருக்கிறேன் நான்.

அது போலவே, சில கேள்விகள் மிகவும் சாதாரணமானவை. ஆனால் பதில் கிடைக்கக் காத்திருக்க வேண்டும். நாட்கள், வாரங்கள், மாதங்கள் அல்ல. வருடக் கணக்காகக் கூட. அம்மாதிரியான காத்திருத்தலுக்குப் பிறகு கிடைக்கும் பதில், நாம் நினைத்தது போலிருந்தால் கிடைக்கும் சந்தோஷத்திற்கு அளவேயில்லை.

அப்படிப்பட்ட எனது ஒரு கேள்விக்கான பதில் சென்ற வாரம்தான் கிடைத்தது. வேறொன்றுமில்லை. தமிழ்நாட்டின் திராவிடக் கட்சிகள் தலை மேல் தூக்கி வைத்துக் கொண்டாடும் திரு. அண்ணாதுரை (பேரறிஞர் ?!) அதற்குத் தகுதியானவர்தானா ? என்பதுதான் என்னைத் துளைத்துக் கொண்டிருந்த கேள்வி. எனக்குத் தெரிந்த அத்தனை ‘பழம் பெருச்சாளி ‘களிடமும் கேட்டுப் பார்த்து விட்டேன். ஒருவரின் பதிலும் எனக்குத் திருப்தி அளித்ததில்லை.

‘எதற்காக அண்ணாதுரையைப் பேரறிஞர் என்று சொல்கிறீர்கள் ? ‘

‘ஆங்…அவர் எம்.ஏ. படித்திருக்கிறார் ‘

‘எம்.ஏ. படித்தவர்களெல்லாம் அறிஞர்களா ? அட ங்ஙொப்புரானே! ‘

‘தமிழிலிலும், ஆங்கிலத்திலும் புலமை உடையவர் அண்ணாதுரை தெரியுமோ ? ‘

‘தமிழ்நாட்டில் அவர் ஒரு மட்டும்தானா அப்படி ? வேறொருவர் கூட இல்லையா என்ன ? ‘

‘ரங்கோன் ராதா, வேலைக்காரி, ஓரிரவு போன்ற சினிமாப் படங்களுக்கு கதை எழுதி இருக்கிறார் ‘

‘அதனால் அவர் அறிஞர் ஆகிவிடுவாரா ? சினிமாவுக்குக் கதை எழுதுவது பெரிய விஷயமா ? ‘

‘இந்தியை எதிர்த்து போரிட்டு அதைத் தமிழ்நாட்டிற்குள் வராமல் தடுத்தவர் அண்ணாதுரை ‘

‘ஓஹோ….கத்தி, கபடாவெல்லாம் தூக்கி போரிட்டாரோ ? அதுதான் நாங்களெல்லாம் குண்டு சட்டியில் குதிரை ஓட்டிக் கொண்டிருக்கிறோமே… ‘

‘தென்னாட்டு காந்தி எங்கள் அண்ணா! ‘

‘அப்படியா! பிரிட்டிஷ்காரனை எதிர்த்து, உப்புச் சத்தியாகிரகம் செய்து, ஜெயிலுக்குப் போனவரோ அண்ணாதுரை ? எனக்குத் தெரியாதே… ‘

‘ஹி…ஹி….அப்படியெல்லாம் இல்லை. சும்மா ஒரு பேச்சுக்குத்தான்…. ‘

‘பாவம். காந்தியை எதற்கு இதில் இழுக்கிறீர்கள். விட்டு விடுங்கள் அவரை. பிழைத்துப் போகட்டும்… ‘

‘எழுத்தாளர் கல்கியே எங்கள் அண்ணாவை ‘தென்னாட்டு பெர்னார்ட் ஷா ‘ என்று புகழ்ந்திருக்கிறார் ‘

‘ஜெயகாந்தன் போட்டு உடைத்து இருக்கிறாரே. அது வஞ்சப் புகழ்ச்சி என்று…காதில் பூச் சுற்றுவதை நிறுத்துங்கள்… ‘

இது போன்ற பல கேள்விகள். கிடைத்ததென்னவோ நகைப்பூட்டும் பதில்கள்.

எனது காத்திருத்தல் வீண் போகவில்லை. என் கேள்விக்கான பதில் ஒரு வழியாக எனக்குக் கிடைத்து விட்டது (என்றே நம்புகிறேன்). ‘திண்ணை ‘யின் மூலமாக.

சென்ற வாரத் ‘திண்ணை ‘யில், திரு. அண்ணாதுரையின் மரண இரங்கற் கூட்டத்தில் எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்கள் பேசியதின் எழுத்து வடிவம் வெளியாகி இருந்தது (சிவகுமார் அவர்களூக்கு நன்றி). அதில் என் கேள்விக்கான பதில் இருந்தது. தெள்ளத் தெளிவாக.

‘திரு. அண்ணாதுரை, பேரறிஞர் என்ற பட்டத்திற்கும், புகழ்ச்சிகளூக்கும் எள்ளளவும் தகுதியில்லாதவர்! ‘

இந்த பதில் எனக்கு ஏற்கனவே ஓரளவு தெரிந்திருந்தாலும், இத்தனை நாட்களாக வெளியில் சொல்ல மிகவும் தயக்கமாக இருந்தது. கோவணம் கட்டாத ஊரில், கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன் என்பார்கள். அதுபோல, மிகப் பெரும்பான்மையான ஒரு சமூகம், எந்த எதிர்ப்பும் காட்டாமல், இத்தனை வருடங்களாக நம்பிக் கொண்டிருக்கும் ‘பேரறிஞர் ‘ பட்டத்தைத் தவறானது என்று நான் ஒருவன் மட்டும் சொல்வது எப்படி ஏற்றுக் கொள்ளப்படும் ? என்ற தயக்கம் என்னை மொளனியாக்கி வைத்திருந்தது. நான் தனி மரமல்ல என உணர்த்திய ஜெயகாந்தனுக்கு நன்றி.

*********

இறந்து போன ஒருவரைப் பற்றி இப்படியெல்லாம் எழுதலாமா ? என்று நீங்கள் நினைப்பது எனக்குப் புரிகிறது. இறந்து போன ஒருவரால் எனக்கோ அல்லது நான் சார்ந்த ஒரு சமுதாயத்திற்கோ எந்தவொரு பாதிப்பும் இல்லை என்றால் அவரைப் பற்றி நான் தவறாக எழுதுவது குற்றமே. என்னைப் பொருத்தவரை, தமிழ்நாட்டில் இன்று நடக்கும் கேவலங்களுக்கும், அலங்கோலங்களூக்கும் அஸ்திவாரமிட்டவர் திரு. அண்ணாதுரை என்பதை உறுதியாக நம்புகிறேன். எனவே, அதைப் பற்றி எழுதுவதும் தவறில்லை.

எனக்கும் திரு. அண்ணாதுரை அவர்களுக்கும் எந்தப் பகைமையும் இல்லை. அவர் என் பரம்பரை விரோதியுமல்லர். நான் பிராமணனும் இல்லை. பின் எதற்காக புற்று நோயால் துன்பப்பட்டு இறந்து போன ஒரு மனிதனைப் பற்றி, தமிழ்நாடே போற்றி வணங்கும்( ?!) ஒருவரைப் பற்றி இவ்வாறு எழுத வேண்டும் என நினைப்போர், பஞ்ச கல்யாணியைப் பற்றி மேலே எழுதியிருப்பதை மீண்டும் ஒருமுறை படித்துப் பார்க்கவும்

தகுதியில்லாதவர்களைத் தலை மேல் வைத்துக் கூத்தாடும் போக்கு தமிழ்நாட்டில் அதிகம் நடக்கிறது. அதை ஆரம்பித்து வைத்தவர்கள் திரு. அண்ணாதுரையும் அவரின் திராவிட முன்னேற்ற கட்சிக்காரர்களூம்தான் என்பது என் அசைக்க முடியாத எண்ணம். தமிழ்நாட்டின் கடந்த கால வரலாற்றைப் படித்தவர்களுக்குத் தெரியும் இதைப் பற்றி. பொய்யில் அஸ்திவாரமிட்டு, பொய்யிலே கட்டடம் கட்டி, பொய்யிலேயே வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் திராவிடக் கட்சிக்காரர்கள் என்றால் மிகையில்லை.

பேரறிஞர் (Genius) என்ற பட்டம் சாதாரணமான ஒன்றல்ல. அம்மாதிரியான ஒரு பட்டம் பெறத் தகுதிகளூம், அந்தத் தகுதியை அளக்கும் அளவுகோல்களும் மிகக் கடுமையானவை மேற்கத்திய நாடுகளில். திரு. அண்ணாதுரையின் தகுதிகளூம், அதை அளந்த அளவுகோல்களும் கேள்விக்குரியவை. கேலிக்குரியவை.

‘பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் அவர்தம்

கருமமே கட்டளைக் கல் ‘

என்கிறார் ‘அய்யன் ‘ திருவள்ளூவர். அந்த வகையில், திரு. அண்ணாதுரையின் ‘கருமம் ‘ பெருமைக்குரியதல்ல. மாறாக மறக்கப் பட வேண்டிய, தமிழ்நாட்டு வரலாற்றிலிருந்து முற்றிலும் அழிக்கப்பட வேண்டிய ஒன்று என்பதில் எனக்கு இரண்டாவது கருத்தில்லை. ரஷ்யாவில் லெனினுக்கு நேர்ந்த கதியை அனைவரும் அறிவார்கள். லெனினைக் கடவுளாக நினைத்தவர்கள் ரஷ்யர்கள். அதே ரஷ்யர்கள் சோவியத் யூனியன் சிதறுண்ட போது, லெனின் சிலைகள் உடைத்தெறிந்து உருத்தெரியாமல் உருக்கினார்கள். அசைக்க முடியாதவர் என்று பலராலும் அஞ்சப் பட்ட முன்னாள் ரஷ்ய அதிபர் ஸ்டாலினுக்கும் அதே கதிதான். பொய்மையும், புனை சுருட்டும் நீண்ட காலம் நிலைப்பது போலத் தோற்றமளித்தாலும், கடைசியில் காணாமல் போய்விடும் என்பது உலக வரலாற்றில் மீண்டும் மீண்டும் நிரூபிக்கப் பட்டிருக்கிறது.

இதை நான் எழுதுவதால் தமிழ் நாட்டில் ஒன்றும் மாறிவிடப் போவதில்லை என்பதை ஒத்துக் கொள்கிறேன். எதிர்ப்புக் குரல்கள் கூட எழக்கூடும். உண்மைதான். அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. உண்மை என நான் நம்புவதை எழுதி, அதை ஒன்றிரண்டு பேர் உணர்வதால் கிடைக்கும் ஆத்ம திருப்திதான் எனது குறிக்கோள். புரிந்து கொள்வதும் புரிந்து கொள்ளாததும் அவரவர் அறிவின் திறனைப் பொருத்தது.

திரு. அண்ணாதுரையுடன் பழகியவர்களில் மிக முக்கியமானவர் கவிஞர் கண்ணதாசன். அண்ணா இறந்த செய்தி கேட்டு அழுதார் கண்ணதாசன் என்கிறார் ஜெயகாந்தன். அந்த அளவிற்கு அந்நியோன்யமாக இருந்தவர். அப்படிப் பட்ட கண்ணதாசனே, திரு. அண்ணாதுரையைப் பற்றித் தன்னுடைய மனவாசம், வனவாசம் போன்ற புத்தகங்களில் எழுதி இருப்பதைப் படிப்பவர்களூக்கு அதிர்ச்சியளிக்கும்.

பெரியார் ஈ.வே.ரா.வின் பல கருத்துக்கள் பற்றி ஒப்புமையில்லாவிட்டாலும், அவர் ஒரு சிறந்த சிந்தனாவாதி என்பதைப் பெரும்பாலோர் ஒப்புக் கொள்வார்கள். குறைந்த பட்சம் அவர் தன்னுடைய எண்ணங்களை, கருத்துக்களை (அது சரியோ, தவறோ) கடைசி வரை மாற்றிக் கொள்ளவில்லை. திரு. அண்ணாதுரைக்கு அப்படிப் பட்ட நிரந்தர கொள்கையோ, கோட்பாடோ இருந்ததாகத் தெரியவில்லை.

இலக்கியத்திலும் அவர் செய்த சாதனைகள் கேள்விக்குரியவை. கம்ப இராமாயணத்தைக் கேலி செய்து திரு. அண்ணாதுரை எழுதிய புத்தகம் எதேச்சையாகப் படிக்கக் கிடைத்தது. ‘கொக்கோகப் புத்தகங்களை ‘ விடக் கீழ்த்தரமான புத்தகம் அது. மன அழுக்கு நிறைந்தவர்களால்தான் அப்படி எல்லாம் எழுத முடியும். அதன் பிறகு திரு. அண்ணாதுரை எழுதிய புத்தகங்கள் எதையும் படிக்கவில்லை. சந்தர்ப்பம் கிடைத்த போதும். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

நமது பண்டைய இலக்கியங்கள் திராவிட தலைவர்களால் சிதைக்கப் பட்டு ஏறக்குறைய அழிக்கப் பட்டுவிட்டன. முந்திய தலைமுறை எழுத்தாளர்கள் இதைத் தடுத்து நிறுத்த எந்தவிதமான முயற்சியும் செய்யவில்லை. இப்போது விமரிசிக்கும் ஜெயகாந்தன், சு.ரா., இந்திரா பார்த்தசாரதி போன்றோர் இதை எதிர்த்து தீவிரமாக எழுதவில்லை என்ற ஆதங்கம் எனக்கு உண்டு. எனக்கென்ன வந்தது ? என்ற மனநிலையில் இருந்திருப்பார்கள் என்றே நினைக்கிறேன்.

பாரம்பரியம் ஒரு பட்டுத் துணி என்றால், அதை பத்திரமாகப் பாதுகாத்து, அழகு படுத்தி தனக்கு அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்கும் பொறுப்பு ஒவ்வொரு தலைமுறை எழுத்தாளர்களுக்கும் உண்டு. அதை முந்திய தலைமுறை எழுத்தாளர்கள் செய்யவில்லை என்றே குற்றம் சாட்டுவேன். கடந்த முப்பத்தைந்து, நாற்பது ஆண்டுகளூக்கும் மேலாக திராவிடக் குரங்குகளிடம் சிக்கி நமது முன்னோர்கள் கட்டிக் காத்து வந்த பாரம்பரியம் கந்தல் துணியாகி விட்டது. இந்த தலைமுறை எழுத்தாளர்களோ, தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு, அந்தக் கந்தலையும் பஞ்சு பஞ்சாக்கிக் கொண்டிருக்கிறார்கள். நமது அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்ல எதுவுமே இல்லை என்ற நிலமைதான் இன்று இருக்கிறது. தமிழகத்து இலக்கியவாதிகள், கேரளத்து இலக்கியவாதிகளிடம் கட்டாயப் பாடம் எடுத்துக் கொள்ள வேண்டிய நிலைமையில் இருக்கிறார்கள்.

**********

கடற்கரைச் சமாதிகளைப் பார்க்கும் போது உண்மையிலேயே அருவருப்பாக இருக்கிறது. சாப்பிடும் இடத்திலேயே கக்கூஸ் கட்டிக் கொள்வது மாதிரி என்னய்யா அபத்தம் இது ? அநாதைப் பிணங்களைக் காட்டி காசு பார்க்கும் அயோக்கியர்களுக்கும், சமாதிகளைக் காட்டி பாமர மக்களை ஏமாற்றுவதற்கும் எந்த வித்தியாசமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இறந்து போனவர்களுக்கு இறக்கப் போகும் மனிதர்கள் தரும் மரியாதை, சாவிலாவது அவர்களை நிம்மதியாக இருக்க விடுவதுதான். காட்சிப் பொருளாக்கி காசு பார்ப்பதல்ல. அதை விட, இருக்கும் திராவிட புண்ணியகோடிகள், இறக்கும் திராவிடப் புண்ணியகோடிகளூக்கு, எதிர்காலத்தில் வரிசையாக ஆளூக்கொரு சமாதி என சமாதிகள் எழுப்பிக் கொண்டே போவார்களோ என்று அச்சமாக இருக்கிறது.

இப்படியே போனால், ‘சென்னைக் கடற்கரை ‘ என்ற பெயரை மாற்றி ‘வரிசையா சமாதி ‘ என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டிய காலம் வந்தாலும் வரலாம். நாளை நடப்பதை யாரறிவார் ?

திரு. அண்ணாதுரை தொடங்கிய தி.மு.க இப்போது திரு.மு.க என்றாகி விட்டது. அதையும் தாண்டி, The தி.மு.க. Private Ltd., என்னும் பெரிய business enterprise ஆக மாறிப் போய் விட்டது. அதன் இப்போதைய தலைவரான திரு. கருணாநிதிதான் அதன் CEO, CFO எல்லாம். கட்சி என்பது அவரைப் பொருத்தவரை, முதலீடில்லாமல் பணம் குவிக்கும் இயந்திரம் ( ‘கந்து வட்டிக்காரன் போல் வந்து, காசு பிடுங்குவார் கருணாநிதி ‘ என்பது சொலவடை). கட்சி அவரின் குடும்பச் சொத்து. அவருக்குப் பின் அவர் மகன்தான் CEO-ஆக வரமுடியும். வேறு யாராவது வர முயற்சித்தால், முயன்றவர் ‘இனத் துரோகி ‘யாகி விடுவார். பின்னே, முதலாளியின் மகன்தானே ஐயா முதலாளியாக முடியும் ? கண்டவனெல்லாம் ஆக முடியுமா ? (அல்லது ஆகத்தான் விட்டுவிடுவாரா திரு.மு.க ?).

வாழ்க ஜனநாயகக் காவலர்! வாழ்க தமிழினத் தலைவர்!

என்னைப் பொருத்தவரை, ‘அண்ணா ‘வுக்கும் ‘அணில் மார்க் ‘ சீயக்காய்த் தூளுக்கும் வித்தியாசமில்லை. இரண்டுமே ‘டிரேட் மார்க் ‘குகள். அதில் ஒரிஜினல் ‘அண்ணா மார்க் ‘ யாருடையது என்பதுதான் இன்றைக்கு திராவிடக் கட்சிகளூக்குள் இருந்துவரும் மிகப் பெரிய பிரச்சினை. எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். அதை விடக் கொடுமை, கண்டதெற்கெல்லாம் ‘அண்ணா ‘ பெயர் வைப்பது. அண்ணா நகர், அண்ணா சாலை, அண்ணா பேருந்து, அண்ணா சந்து, அண்ணா பொந்து…என்று கண்ணில் பட்டதெற்கெல்லாம் ‘அண்ணா ‘ பெயர் வைக்கும் கிறுக்குத்தனம் என்றைக்குதான் ஒழியுமோ ? பேசாமல் ‘தமிழ்நாடு ‘ என்பதை ‘அண்ணா நாடு ‘ என்று மாற்றி விடலாம்.

திராவிடக் கட்சிகள், மரத்திற்குக் கூட ‘அண்ணா ‘ பெயரிட்டு அழைப்பதை நிறுத்த வேண்டும். அதுதான் இறந்து போன ஒரு சாதாரண மனிதனுக்குத் தரும் மரியாதை.

முறையானதும் கூட.

**********

narenthiranps@yahoo.com

(ஒரு வார்த்தை மாற்றப் பட்டுள்ளது. – திண்ணை குழு)

Series Navigation

நரேந்திரன்

நரேந்திரன்