மொழிவன சில

This entry is part [part not set] of 42 in the series 20031030_Issue

பரிமளம்


தமிழ் விரைவில் அழிந்துவிடும் என்பது உண்மையல்ல. தமிழ் ஏற்கனவே செத்துவிட்டது.

ஆங்கிலம் தெரியாத ஒரே காரணத்தால்தான் தமிழ்நாட்டில் உள்ளவர்கள் தமிழ் போன்ற ஒரு மொழியில் பேசுகிறார்கள். ஆங்கிலப் புழக்கம் ஓரளவு கூடிய பிறகு அவர்கள் ஆங்கிலம் போன்ற ஒரு மொழியில் பேசுவார்கள்.

நல்ல ஆங்கிலம் தமிழகத்தில் பரவலாகக் காலூன்றும் என்பது ஐயமே.

***

நர்சரிப் பள்ளிகளை நடத்துவது லாபமரமானது என்பதை நாம் அறிவோம். இந்தச் சந்தையில் நுழைந்து இன்னும் அதிக லாபமீட்ட என்னிடம் ஒரு (அற்புதமான) திட்டம் உள்ளது.

நான் நடத்தப்போகும் ஒரு (உண்மையான) மழலையர் பள்ளியில் இன்னும் பேச ஆரம்பிக்காத குழந்தைகள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளிலிருந்து வரவழைக்கப்பட்ட இளம் வெள்ளைக்காரப் பெண்கள் இந்தக் குழந்தைகளைப் பகலில் கவனித்துக் கொள்வார்கள். நான்காண்டுகள் இப்படிக் கவனித்தால் போதும், குழந்தைகள் ஆங்கிலத்தில் வெளுத்துக்கட்டுவார்கள். இக்குழந்தைகளின் ஆங்கில உச்சரிப்பில் இந்தியச் சாயல் இராது என்பது கூடுதல் அனுகூலம்.

பிறகென்ன… என் கூரையைப் பிய்த்துக்கொண்டு…..

***

நவீன அறிவியல் தொழில்நுட்பங்களை வளர்த்த நாடுகள் தத்தம் நாட்டு மொழிகளைக் கல்விமொழிகளாகக் கொண்டிருப்பதில் பாதகம் இல்லை; அது இயல்பானது. ஏனென்றால் அவை அனைத்துமே அறிவியல் மொழிகள். மேலை அறிவியலை உள்வாங்கிக் கொண்டு விரைவில் வளர்ந்த நாடுகள் (ஜப்பான், கொரியா போன்றவை) தத்தம் தாய்மொழிகளையே கல்வி மொழியாகக் கொண்டிருக்கின்றன. இவற்றுக்கும் அவ்வளவு பாதகமில்லை.

வளர்ந்த நாடுகளானாலும் ஆங்கிலப் புழக்கமற்ற நாடுகளனைத்தும் ஆங்கிலத்தின் முக்கியத்துவத்தை இப்போது உணரத் தலைப்பட்டு விட்டன. தொடக்கம் முதலே ஆங்கிலத்தைக் கல்விமொழியாகக் கொண்டிருக்கும் சிங்கப்பூர் ஒரு நல்ல இடத்தில் உள்ளது.

சொந்தத் தொழில்நுட்ப அறிவியல் வளர்ச்சியோ அல்லது அவற்றை உள்வாங்கும் திறனோ இன்றி மற்ற நாடுகளின் அறிவியல் தொழில்நுட்பங்களை இறக்குமதி செய்துகொண்டிருக்கும் இந்தியா போன்ற நாடுகளில் தாய்மொழிக் கல்வி ஒரு பயனையும் தரவில்லை; தரவும் இயலாது. எனவே இங்கு ஆங்கிலத்தைக் கல்வி மொழியாக்குவதே அனைவருக்கும் நல்லது. சீனா அளவுக்கு மக்கள் தொகை உடையதாயினும் இந்தியா பல்வேறு மொழிகள் கொண்ட நாடு. ஆதலால் ஆங்கிலம் கல்விமொழியாக இருப்பதோடு பொதுமொழியாகவும் இருப்பது இன்னும் நல்லது.

சிந்தனையாற்றலைத் தாய்மொழி மூலமே வளர்க்க இயலும் என்னும் ஒரு பேச்சு உண்டு. சொந்தமாகச் சிந்திப்பவர்களுக்குத்தான் அது பொருந்தும். தொழில் நுட்பங்களைக் காப்பியடிக்கும் இந்தியர்களுக்கு இது தேவையில்லை. காப்பியடிக்கத் தேவையானது ஆங்கிலம்.

இந்திய மைய, மாநில அரசுகளின் கல்விக் கொள்கை(கள்) குழப்பம் நிறந்தது/வை. (இந்த வாக்கியம் எவ்வளவோ பரவாயில்லை). மத, இன, மொழி, மாநில, பாரதப் பெருமைகளை மாணவர்களின் மூளையில் திணிப்பதில் காட்டும் ஆர்வத்தில் ஒரு சிறு அளவையேனும் கல்விமுறைகளில் உள்ள குழப்பங்களைத் தீர்ப்பதில் காட்டலாம். (கல்வியில் சிறந்து விளங்கும் அமெரிக்காவில் கல்விக்கென்று தனி அமைச்சரோ அமைச்சகமோ இல்லை)

***

தமிழகத்திலிருந்து வட இந்தியாவுக்கு வேலைக்குச் செல்லும் தமிழக இளைஞர்கள் தங்களுக்கு இந்தி தெரியாததால் ஏற்படும் இடர்களைப் பற்றிப் புலம்புவதைக் கேட்கிறோம். தமிழர்களின் வேலை வாய்ப்புகள் பறிபோகின்றன என்று திராவிடக் கட்சிகளின் இந்தி எதிர்ப்பைக் குறை கூற பலருக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக இருந்துவருகிறது.

தமிழகத்திலிருந்து மேல் நாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் தமிழக இளைஞர்கள் தங்களுக்கு ஆங்கிலம் தெரிந்திருப்பதால் ஏற்படும் அனுகூலங்களைப் பற்றிப் பெருமைப்படுவதைக் கேட்கிறோம். தமிழர்கள் மேல் நாடுகளில் வேலை பெறுவதற்குத் திராவிடக் கட்சிகளின் ஆங்கிலக் கல்வித் திட்டமே காரணம் என்று புகழ்பவர்கள் யாருமுண்டா ?

எதிர்காலத்தில் இப்படியும் வரலாறு எழுதப்படலாம்:

தமிழைச் சொல்லி ஆட்சிக்கு வந்தாலும் அண்ணாவின் தலைமையில் ஆட்சிப் பொறுப்பேற்ற தி.மு.க வினர் கண்மூடித்தனமாகத் தமிழ்வழிக் கல்வியைத் திணிக்கவில்லை. தமிழர்கள் வேலை தேடி மேல்நாடுகளுக்குச் செல்ல வேண்டிய காலம் ஒன்று வரும் என்னும் தீர்க்க தரிசனம் அவர்களிடம் இருந்திருக்கிறது. அதனாலேயே அவர்கள் ஆங்கிலக் கல்வி காலூன்றுவதற்குச் சாதகமான ஏற்பாடுகளைச் செய்தனர். இதற்காக அவர்களைப் பாராட்ட வேண்டும்.

***

ஆங்கிலப் புழக்கம் அதிகமானால் விளையக்கூடிய சில நன்மைகள்.

எழுத்தாளர்கள் ஆங்கிலத்தில் எழுதுவதால் சந்தை விரிவடையும். விரைவில் புத்தகங்களை விற்றுவிடலாம்.

தமிழ்ச் சினிமாவிலிருந்தும் சின்னத்திரைகளின் மெகாத் தொடர்களிலிருந்தும் ஒரு கணிசமான அளவினராவது வெளிவந்து நல்ல ஆங்கில(பிறமொழி)ப் படங்களையும் தொடர்களைப் பார்க்கும் ரசனையை வளர்த்துக்கொள்வார்கள்.

மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு (ஒரு வேளை) அதிகரிக்கலாம்.

எவரும் தமிழில் எழுத மாட்டார்கள் என்பதால் பிறமொழிச் சொற்களும் பிழைகளும் மலிந்த தமிழைப் படித்துத் தமிழன்பர்கள் மனம் நோகவேண்டியிருக்காது. இந்த நோக்காடு ஆங்கில அன்பர்களுக்கு உரித்தாகிவிடும்.

மொழிபெயர்க்க வேண்டிய தேவையில்லாமல் எட்டுத் திக்குச் செல்வங்களும் நமக்குச் சொந்தமாகும்.

janaparimalam@yahoo.com

Series Navigation

பரிமளம்

பரிமளம்