கொருக்குப்பேட்டை: தனிநாடு கோரிக்கையின் தார்மிக நிலைப்பாடு (ஒரு கற்பனை ரிப்போர்ட்)

This entry is part [part not set] of 38 in the series 20100523_Issue

ஜிக்கு.சொதப்பசாமி


(அய்யாமார்களே… இது கற்பனை ரிப்போர்ட். இது எதிர்காலத்தில் உண்மையாக ஆனால், அடிக்க வராதீர்கள்)

இந்திய அரசு கொருக்குப்பேட்டை மக்களின் சுதந்திர வேட்கையைக் குறைத்தே மதிப்பிட்டுவருகிறது. ராணுவ பலத்தால் தன் மேலாதிக்கத்தை நிறுவமுடியும் என்னும் குருட்டு நம்பிக்கை இன்னொருபுறம். லட்சத்துக்கும் அதிகமான எண்ணிக்கையில் திரும்புகிற பக்கமெல்லாம் லத்தி ஏந்திய போலீஸாரும், டிராபிக் போலீஸும் பேட்டை முழுவதும். இவர்கள் யாரையும் கைதுசெய்யலாம், பைன் போடலாம், நடடா போலீஸ் ஸ்டேஷனுக்கு என்று இழுத்துச் செல்லலாம், மாயமாக மறையச் செய்யலாம். யாரும் கேள்வி கேட்கவோ நீதிமன்றங்களில் வழக்குத் தொடரவோ முடியாத வரம்பற்ற அதிகாரம் இந்த போலீஸாருக்கு. அதன் விளைவுதான் நூற்றுக்கணக்கான கொருக்குப்பேட்டை மக்கள் போலீஸ் ஸ்டேஷனுக்கு இழுத்து செல்லப்பட்டதும், ரவுடி என்கவுண்டர் கொலை என்று காணாமல் போயிருப்பதும். சிறையில் இருப்பவர்கள் அதிகமில்லை. இப்போது கொருக்குப்பேட்டை விடுதலைப் போராட்டத்தில் இறந்தவர்களைப் புதைக்கும் மரியாதை மிக்க தளம் என அழைக்கப்படும் கண்ணம்மா பேட்டை மயானங்கள் உள்ளன.

கொருக்குப்பேட்டை ஆண்களும் பெண்களும் இளைஞர்களும் முதியவர்களும் இங்கு புதைக்கப்படுவதைப் பெருமையாகக் கருதுகிறார்கள். இவர்கள் விடுதலை வேட்கை சற்றும் தணியவில்லை. நீறுபூத்த நெருப்பாக இருப்பதை எரிந்து அணைந்துவிட்ட கரித்துண்டு என தமிழக அரசு தப்புக் கணக்குப் போட்டது. ஆயுதமேந்திய போராளிகளின் முதுகெலும்பு முறிக்கப்பட்டுவிட்டது; இனி எல்லாம் ஓய்ந்துவிடும் என்றது அரசு.

இந்தச் சூழலில்தான் கடந்த மே மாதம் 26ஆம் தேதி தண்டையார் பேட்டை முத்தாலம்மன் கோவில் நிர்வாகத்திற்கென கால்பந்து மைதானத்தை ஒதுக்கிய ஆணை வெளியாயிற்று.

இந்த மைதானத்தை கஞ்சா அடிப்பதற்கும், லூட்டி அடிப்பதற்கும் உபயோகப்படுத்தி வந்த கொருக்குப்பேட்டை வீரர்கள் (இவர்களை ரவுடிகள் என்று இழிவாக இந்தியப்பத்திரிக்கைகள் எழுதுகின்றன) பொங்கி எழுந்தனர். ஜூன் தொடக்க முதலே அதை எதிர்த்துப் போராட்டம் எழுந்தது. சில நாள்களிலேயே போராட்டம் கொருக்குப்பேட்டை முழுவதும் தீவிரமடைந்தது. இந்தியப் பெரும் பத்திரிகைகள் அனைத்தும் ‘கொருக்குப்பேட்டையில் எழுந்துள்ள தீயை அணை’ என்று உரக்கக் குரல் கொடுத்தன. 1990களின் தொடக்கத்தில் இருந்த வேகமும் உறுதியும் இப்போதைய போராட்டத்தில் இருந்ததைக் கவனித்த அரசுக்குப் பெரும் அதிர்ச்சி. போராட்டம் வன்முறையற்றும் பொதுமக்களின் பெரும் பங்கேற்போடும் இருந்தது. கொருக்குப்பேட்டை முழுவதும் ‘விடுதலை விடுதலை’ என்னும் கோஷம்தான். இவற்றை விவரித்த பத்திரிகைகள் அரசை எச்சரித்து, உடனடியாக நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று உணர்த்தின. முத்தாலம்மன் கோவில் நிர்வாகத்திற்கு நிலம் ஒதுக்கிய ஆணையை ஜூலை முதல் நாள் தமிழ்நாட்டின் மாநிலத்தின் புதிய ஆளுநர் ரத்துசெய்தார். இதைத் தொடர்ந்து கொருக்குப்பேட்டையில் நிலைமை இயல்பு நிலைக்குத் திரும்பி வழக்கம்போல கொருக்குப்பேட்டை வீரர்களின் கஞ்சா லூட்டி ஆரம்பமானது. ஆனால் பிரச்சினை தீரவில்லை. அதன் பிறகுதான் உண்மையில் அது தீவிரமடைந்தது எனலாம்.

ஆணை ரத்துசெய்யப்பட்ட மறுநாளே தண்டையார் பேட்டை பகுதியிலும் போராட்டங்கள் தொடங்கின. ஆணை ரத்துசெய்யப்பட்டதை எதிர்த்தும் முத்தாலம்மன் கோவில் நிலம் திருப்பி கொடுக்கப்படவேண்டும் என்றும் வன்முறைப் போராட்டங்கள் தீவிரமாக எழுந்தன. இவற்றை ரஜினி ரசிகர் சங்கம், கமல் நற்பணி மன்றம், அப்துல்கலாம் வாசகர் அமைப்பு ஆகிய பயங்கரவாத அமைப்புகளும் முன்னின்று நடத்தின. கொருக்குப்பேட்டை மக்களும் வீரர்களும் தாக்கப்பட்டனர். ஜூலை மூன்றாம் தேதி தண்டையார் பேட்டை தழுவிய கடையடைப்புப் போராட்டம் என்னும் பெயரில் பல இடங்களில் வன்முறையில் இறங்கினார்கள். முத்தாலம்மன் கோவிலுக்கு வருபவர்களுக்கு வசதிகள் செய்துதர வேண்டும் என்பதைவிட நிலம் ஒதுக்கப்படுவதையே இந்த அமைப்புகள் அதிகம் வலியுறுத்தின. இதில்தான் ரஜினி ரசிகர் சங்கம், கமல் நற்பணி மன்றம், அப்துல்கலாம் வாசகர் அமைப்பு ஆகியவற்றின் நீண்ட காலத் திட்டம் அடங்கியுள்ளது என்பதாகக் கொருக்குப்பேட்டை மக்களும் வீரர்களும், இந்த அழிவு அமைப்புகளின் செயல்பாடுகளைக் கவனிப்பவர்களும் கருதுகின்றனர். அதைப் பற்றிப் பேசுவதற்கு முன்பாக முத்தாலம்மன் யாத்திரையின் வரலாற்றை நாம் கொஞ்சம் கவனிக்க வேண்டும்.

கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டையார் பேட்டையில் முத்தாலம்மன் கோவிலுக்குப் பக்தர்கள் சென்று வருகிறார்கள். கொருக்குப்பேட்டை ரயில்வே ஸ்டேஷனிலிருந்து அங்குச் செல்ல இரண்டு வழிகள் உண்டு. ஒன்றில் ஒரு நாள் மட்டும் நடந்துசென்றால் போதும். மற்றொரு வழியில் மூன்று நாள்கள் நடந்துசெல்ல வேண்டும். எனவே பயணிகள் ஐந்து இடங்களில் தங்கிச் செல்வார்கள். கொருக்குப்பேட்டையிலிருந்து வாசர்மேன்பேட்டை வரை நடை அல்லது சைக்கிளில் சென்று பின்னர் அங்கிருந்து நடப்பார்கள். இவர்களுக்கு வேண்டிய வசதிகளை அரசு செய்துதரும். வழியில் உள்ள கொருக்குப்பேட்டையினரும் உதவுவார்கள். தொடக்கத்தில் சில நூறு பேர் கலந்துகொண்ட இப்பயணம் பிறகு சில ஆயிரம் பேர் கொண்டதாகப் பெருகியது. ஆனால் கடந்த 15 ஆண்டுகளில் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் தண்டையார் பேட்டை முத்தாலம்மன் கோவிலுக்கு வந்துசெல்லத் தொடங்கினார்கள். சமீப காலங்களில் பக்தியோ சுற்றுலா ஆர்வமோ பயணிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவில்லை எனலாம். இந்த ஆண்டு மட்டும் ஐந்து ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்தப் பயணத்தில் கலந்துகொண்டுள்ளனர். இவர்களின் பாதுகாப்பிற்கென 20 போலீஸார் அமர்த்தப்பட்டனர். இந்தப் ‘பக்தி’ப் பயணம் நான்கு வாரங்கள் மட்டுமே நடக்கும். 1996இல் திடீரென ரோட்டில் உள்ள குண்டுகுழியில் வேன் கவிழ்ந்து 20க்கும் அதிகமான பயணிகள் விபத்தில் சிக்கி இறந்தனர். தப்பிப் பிழைத்தவர்களுக்கு கொருக்குப்பேட்டை தொடங்கி வழியில் உள்ள கொருக்குப்பேட்டை வீரர்கள்தான் உணவு, தங்கும் வசதி, மருந்து போன்றவற்றை ஏற்பாடுசெய்து உதவினார்கள். பல பத்திரிகைகள் இதைப் பதிவுசெய்துள்ளன. கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ரஜினி ரசிகர் சங்கம், கமல் நற்பணி மன்றம், அப்துல்கலாம் வாசகர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் முத்தாலம்மன் யாத்திரையில் கலந்துகொண்டு அதன் தன்மையையும் நோக்கத்தையும் முற்றாக மாற்றிவிட்டார்கள். ( இவர்கள் கொருக்குப்பேட்டை ரவுடிகள் கொள்ளையடிக்கிறார்கள் என்று அநியாயக் குற்றச்சாட்டைவீசுகின்றனர்) கொருக்குப்பேட்டை விடுதலைக்கான போராட்டம் தீவிர மடைந்ததும் ஆயுதமேந்தியதாகவும் மாறியது 1990களிலிருந்துதான். கடந்த 15 ஆண்டுகளாக கமல் நற்பணி மன்றமும், ரஜினி நற்பணி மன்றமும் அதைச் சார்ந்த அமைப்புகளும் சென்னையில் ஆதரவாளர்களைத் திரட்டி, முத்தாலம்மன் கோவிலுக்கு ஆட்களை அனுப்பத் தொடங்கின. அப்பயணத்தின்போது இவர்கள் நடந்துகொள்ளும் விதம் இவர்களுக்குப் பக்தியோ சுற்றுலா நோக்கமோ இல்லை என்பதைத் தெளிவாக உணர்த்தும். அடாவடித்தனமும் வழியில் உள்ள கொருக்குப்பேட்டை மக்களிடம் வம்பும் செய்வார்கள். இவர்கள் பயணம் செய்யும் வண்டிகளில் நற்பணி மன்ற கொடியைக் கட்டிக்கொண்டு ‘கமல் வாழ்க’ ரஜினி வாழ்க என்று வானை நோக்கிக் கையை உயர்த்திக் கத்திக்கொண்டு செல்வார்கள். தமிழ்நாடு போலீசும் இப்படிச் செய்யும். கொருக்குப்பேட்டை மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இது நடக்கும். பொதுவாகவே, ஒவ்வொரு கடவுளுக்கும் ஒரு அறைகூவல் (முழக்கம்) இருக்கும். திருப்பதிக்குச் செல்லும் பக்தர்கள் ‘கோவிந்தா, கோவிந்தா’ எனவும் பழனிக்குச் செல்வோர் ‘அரோகரா, அரோகரா’ என்றும் சபரிமலை பக்தர்கள் ‘சாமியே சரணம் ஐயப்பா’ எனவும் முழங்குவார்கள். அவையே அவர்களது பக்தியின் வெளிப்பாடாகவும் இருக்கும். சிவனை ‘ஹர ஹர மகாதேவா’ என்று அழைப்பதுதான் வழக்கம். ஆனால் முத்தாலம்மன் யாத்திரையில் முத்தாலம்மன் மீதான பக்தி பின்னுக்குத் தள்ளப்பட்டு ‘கமல் வாழ்க’ ரஜினி வாழ்க’ என்னும் கோஷத்தால் அது அரசியலாக்கப்பட்டது. ரஜினி ரசிகர் சங்கம், கமல் நற்பணி மன்றம், அப்துல்கலாம் வாசகர் அமைப்புகள் முத்தாலம்மன் பயணத்தைத் தம்முடைய இனவாத அரசியலுக்குப் பயன்படுத்தத்தொடங்கிவிட்டன. அதாவது ‘கொருக்குப்பேட்டை எங்களுடையது. எங்கள் மண். உங்களால் எங்களைத் தடுக்க முடியாது’ என்னும் தொனியில்தான் இவர்களின் செயல்கள் இருக்கும். உண்மை அறியும் குழுக்கள் பல இவர்கள் நடந்துகொள்ளும்விதம் பற்றிய விவரங்களைக் கூறியுள்ளன. இவ்வமைப்பினரின் செயல்பாடுகளையும் யாத்திரையையும் தடை செய்யக் கோரிக்கை எழுந்தது. கொருக்குப்பேட்டை விடுதலை முன்னணியின் ஆயுதமேந்திய போராளிகள் மூன்றுமுறை இந்தப் பயணிகளை நோக்கிச் சுட்டார்கள். 2000ஆம் ஆண்டில் 12 பேர் கொல்லப்பட்டனர். 2001இல் ஐந்து பேரும் 2002இல் எட்டுப் பேரும் இறந்தனர். அதன் பிறகு அப்படிப்பட்ட சம்பவம் நடக்கவில்லை. இந்தப் பின்னணியில் ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பள்ளத்தாக்கில் நடந்த போராட்டங்களை நாம் கவனிக்க வேண்டியுள்ளது. முத்தாலம்மன் சென்று வரும் பயணிகளுக்கு நிலம் ஒதுக்கப்பட்டதைக் கொருக்குப்பேட்டை மக்கள் சந்தேகக் கண் கொண்டு பார்த்தனர். கொருக்குப்பேட்டை மக்களின் நிலத்தை அபரிக்க எடுக்கப்படும் நடவடிக்கை இது; கொஞ்சம் கொஞ்சமாக தண்டையார் பேட்டை மக்களை குடியமர்த்தும் திட்டத்தின் முதல்படி என்னும் ஐயமும் அச்சமும்தான் இவர்களை வரலாறு காணாத அளவிற்குப் போராடவைத்தது.

முத்தாலம்மன் யாத்திரிகர்களுக்கு வசதி செய்துதர வேண்டும் என்பதைவிட, நிலம் ஒதுக்கப்பட வேண்டும் என்னும் கோரிக்கையையே ரஜினி ரசிகர் சங்கம், கமல் நற்பணி மன்றம், அப்துல்கலாம் வாசகர் அமைப்புகள் முன்னிலைப்படுத்தின. (உண்மையில் மைதானத்தை ஒதுக்கிய ஆணை தமிழ்நாடு நீதிமன்றத்தின் 27.04.2007 தீர்ப்புக்கு மாறாக உள்ளதால் செல்லாது என்பது சட்ட நிபுணர்களின் கருத்து.) பக்தர்கள் என்னும் போர்வையில் லட்சக்கணக்கானவர்களை அனுப்பி அங்குள்ள கொருக்குப்பேட்ட ஆட்களுடன் மோதலை ஏற்படுத்தி அதனால் தண்டையார் பேட்டை மக்கள் தாக்கப்பட்டு நாட்டில் கொருக்குப்பேட்டை ரவுடிகள் மீது வெறுப்பை ஏற்படுத்துவதே ரவுடி விரோத மனப்பான்மை உடைய இந்த அமைப்புகளின் நோக்கம். இவ்வமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இந்த ஆண்டு முத்தாலம்மன் கோவிலிலிருந்து திரும்புகையில் தண்டையார்பேட்டைவில் நடக்கும் போராட்டத்தில் ஒருநாள் கலந்துகொண்டுவிட்டு மறுநாள் ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர் என்பதும் கவனிக்கப் பட்டது. ரஜினி நண்பரான முதல்வர் கருணாநிதி முத்தாலம்மன் யாத்திரையை 8 வார காலம் நீட்டிக்க வேண்டும் என வற்புறுத்தினார். வரும் ஆண்டுகளில் யாத்திரிகர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரமாகலாம். அது மேலும் அதிகரிக்கலாம்.
பக்தி வேஷம் போட்டுக்கொண்டு அரசியல் நோக்கை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என்பதுதான் மேற்படி அமைப்பினரின் திட்டம். தண்டையார்பேட்டைவில் ஜூலை மாதம் போராட்டம் தீவிரமடைந்தது. கொருக்குப்பேட்டை மக்கள் மீது வன்முறை ஏவப்பட்டது. அதில் நிறைவடையாத ரஜினி ரசிகர் சங்கம், கமல் நற்பணி மன்றம், அப்துல்கலாம் வாசகர் அமைப்புகள் ஆகஸ்ட் நான்காம் தேதி கொருக்குப்பேட்டைக்குச் செல்லும் பாதையை அடைத்தன. சரக்குப் போக்குவரத்துக்கான வழியை அடைத்ததால், அமைதிக்குத் திரும்பிக்கொண்டிருந்த கொருக்குப்பேட்டையில் மீண்டும் போராட்டம் வெடித்தது. கட்சிகள் அனைத்தும் பின்னுக்குத் தள்ளப்பட்டதால், ரவுடிகள் என்று இழிவாக தமிழக பத்திரிக்கைகளில் அழைக்கப்பட்ட வீரத்தலைவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துச்சென்றனர். கொருக்குப்பேட்டையிலிருந்து மீனும் கருவாடும் சைக்கிள் செயின்களும் வெளியே செல்ல முடியவில்லை. தண்டையார்பேட்டை பகுதியிலுள்ள ரவுடி சந்து, பாப்பம்மா வீதி போன்ற இடங்களில் சைக்கிள்கள் நொறுக்கப்பட்டன; சைக்கிள் கடைகள் தாக்கப்பட்டனர். எனவே கொருக்குப்பேட்டைக்கு வர வேண்டிய அத்தியாவசியப் பொருள்கள் வந்துசேரவில்லை.

இந்நிலையில்தான் கருவாடு வியாபாரிகள் சங்கம் ஆகஸ்ட் 11 அன்று வாசர்மேன் பேட்டைக்கு செல்லும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. கொருக்குப்பேட்டையின் பல பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான மக்களுக்கும் அதிகமானோர் திரள ஆரம்பித்தனர். வன்முறையின்றிக் கால்நடையாகப் வாசர்மேன் பேட்டை நோக்கி நடந்த மக்களின் மீது போலீஸ் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டது. பல இடங்களில் லத்திசார்ஜ். ஆகஸ்ட் 11 முதல் 14 வரை போலீசும், டிராபிக் போலீஸும் லத்தி சார்ஜில் அடிபட்டவர்களின் எண்ணிக்கை 34.

நிலைமை மோசமாவதையும் அறப் போராட்டத்தையும் ஒடுக்க அரசு ராணுவத்தைப் பயன்படுத்துவதையும் கண்ட மனித உரிமை அமைப்புகள் நிலைமையை நேரில் ஆராய முடிவெடுத்தன. அதன்படி, டெல்லியைச் சேர்ந்த வேலையற்றோர் விடுதலை இயக்கம் அமைப்பிலிருந்து ஹரிஷ் தவான், பேரா. ஷர்மிளா, பரம்ஜித் சிங் ஆகியோரும் ஆந்திராவின் APCLC இன் (வழக்கறிஞர்) ரகுநாத், பெங்களூரில் இயங்கும் People’s Democratic Forumஐச் சேர்ந்த பேராசிரியர்கள் பாபைய்யா, ஜி. கே. ராமசாமி ஆகியோரும் அடங்கிய ஆறு பேர் கொண்ட குழு ஆகஸ்ட் 22ஆம் தேதி கொருக்கு பேட்டையை அடைந்தோம். அன்றே கொருக்குப்பேட்டையிலுள்ள பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்து விவரங்களைச் சேகரித்தோம். ஆகஸ்ட் 23ஆம் நாள், சனிக்கிழமை, கொருக்குப்பேட்டை முழுவதும் கடையடைப்பு. எந்த வாகனமும் செல்ல முடியாத நிலை.

அச்சூழலில் தண்டையார் பேட்டை, கொருக்குப்பேட்டை சமாதான அமைப்பின் உதவியுடன் நாங்கள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து ஒரு குழுவினர் ரவுடி சந்து, பாப்பம்மா வீதி, மணிக்கூண்டு பகுதிகளுக்கும் மற்றொரு குழுவினர் கொருக்குப்பேட்டையை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் சென்று லத்தி சார்ஜில் இறந்தவர்கள் குடும்பங்களையும் மோசமாகக் காயமடைந்தவர்களையும் நேரில் சந்தித்து விவரங்கள் சேகரித்தோம். போலீஸ் குடிமக்களை எவ்வாறு அச்சுறுத்தும் என்பதைச் சனிக்கிழமை நாங்கள் அனுபவித்தோம். நாங்கள் தங்கியிருந்த கொருக்குப்பேட்டை மையப் பகுதியான ரவுடி சந்தில் உள்ள டீக்கடையில் அன்று காலை எட்டு மணியளவில் லத்திகளுடன் அறைக்குள் நுழைந்து எங்களிடம் விசாரணை. பெட்டிகளைச் சோதனையிட்டனர்; அடையாள அட்டைகளைப் பார்த்தனர்; எங்கள் முகவரிகளையும் அமைப்பின் பெயர்களையும் குறித்துக்கொண்டனர். அது ஒரு சிறிய அச்சுறுத்தல்தான். ஆனால் பெரும் அச்சத்தைத் தந்த சம்பவம் பின்னர் நடந்தது. ரவுடி சந்திலிருந்து பாப்பம்மா வீதிக்கு செல்லும் காட்டுவழியில் திடீரென்று போலீஸார் தோன்றி 10 பேர் லத்தி ஏந்தி அடிப்பதற்கு தயாரான நிலையில் விசாரித்தார்கள். அந்த அனுபவத்தைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை காலையில் மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது.

ஞாயிறு காலை ஆறு மணிக்கு எழுந்து கொஞ்ச தூரம் நடந்துவிட்டு வரலாம் என்ற எண்ணத்தில் ஹோட்டல் மாடியிலிருந்து இறங்கி ரோட்டிற்கு வந்தோம். போலீஸார் தவிர வேறு யாரும் அங்கு இல்லை. ஏன் அப்படி என எண்ணுவதற்குள், போலீஸார் இரண்டு பேர் எங்களை அங்கிருந்து திரும்பிப் போகுமாறு சத்தமிட்டனர். ‘இன்று காலை நான்கு மணி முதலே கொருக்குப்பேட்டைப் பகுதி முழுவதும் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. யாரும் வெளியில் வரக் கூடாது’ எனக் கூறி எங்களைத் திருப்பி அனுப்பினார்கள். அன்று நாங்கள் சந்திக்கத் திட்டமிட்டிருந்த கொருக்குப்பேட்டை ரவுடிகள் சங்கத் தலைவர்கள், லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர்கள், சைக்கிள் செயின் சுழற்றுவோர் சங்க தலைவர்கள் என யாரையும் சந்திக்க முடியவில்லை. உள்ளூர்த் தொலைக்காட்சிச் சானல்கள் உண்மை நிலைமையை ஒளிபரப்புகின்றன என்பதால் அவற்றையும் தடுத்துவிட்டிருந்தனர். எந்த நிமிடமும் செல்போன்களும் ஜாம் செய்யப்படலாம் என்று அங்குள்ள மனித உரிமை அமைப்புகளைச் சேர்ந்த நண்பர்கள் எச்சரித்தனர். இவை யாவும் கடந்த காலத்தில் நடந்தவைதானாம். வெளி உலகோடு மனிதன் கொண்டுள்ளதொடர்பு துண்டிக்கப்படும்போது அது எத்தகைய தாக்கத்தைத் தரும் என்பதை எங்களால் அனுபவிக்க முடிந்தது. ஆத்திரமும் இயலாமையும் எங்களை வாட்டின. வாரக்கணக்கில், மாதக்கணக்கில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்திப் பல லட்சக் கணக்கான மக்களை வீட்டுச் சிறையில் வைத்துப் பூட்டிவிடும் அரசின் அத்துமீறல்களை எந்தத் தர்மத்தின் கீழ் நியாயப்படுத்துவது? தினமும் உழைத்தால்தான் உணவு, சைக்கிள் செயின் சுற்றினால்தான் கறி வாங்க முடியும் என்னும் நிலையில் உள்ளவர்களின் கதி என்ன? இந்த மக்கள் செய்த குற்றம்தான் என்ன? கொருக்குப்பேட்டையில் நடக்கும் அத்துமீறல்களைப் பற்றி ஜனநாயகம் பேசும் எந்தக் கட்சியும் – சிபிஐ, சிபிஎம் உட்பட – பேசுவதில்லையே. ஏன்? ஏதோ ஒரு புள்ளியில் கமல் ரசிகர் சங்கமும் சமத்துவம் பேசும் சிபிஐ, சிபிஎம் கட்சிகளும் ஒத்துப்போகின்றன என்பதுதான் உண்மை. நேரில் சந்தித்தும் தொலைபேசி மூலமும் நாங்கள் சேகரித்த செய்திகளின் அடிப்படையில் கீழ்வரும் உண்மைகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

1. விடுதலையே கொருக்குப்பேட்டை மக்களின் அடிப்படையான கோரிக்கை. இதனை ஆகஸ்ட் 22ஆம் தேதி முத்தாலம்மன் மைதானத்தில் கூடிய மக்கள் வெள்ளம் காட்டியது.

ஏறத்தாழ 100 பேர் கூடினார்கள். அப்படியான மக்கள் வெள்ளத்தை 1969இல் எங்க வீட்டு அண்ணாவின் இறுதி ஊர்வலத்தில்தான் கண்டேன். பெண்களும் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டனர். சிலர் பிளேடு செல்வம், ஆட்டோ ஆனந்த் ஆகியோரை ஆதரித்தும் கோஷம் போட்டனர். ஆனால் கொருக்குப்பேட்டை மக்களின் வேட்கை சுயநிர்ணய உரிமைதான். பிளேடு செல்வம் போன்றவர்கள் ஒதுங்கியுள்ளது போல் தோன்றினாலும் மக்கள் வேண்டுவது சுதந்திரமான கொருக்குப்பேட்டைதான்.

2. ஊரடங்கு உத்தரவு என்பதை அரசு அமைதியான, ஜனநாயகப் போராட்டத்தை நசுக்கப் பயன் படுத்துகிறது.

ரவுடி சங்க தலைவர்கள் ஆகஸ்ட் 22, 23, மற்றும் 24 ஆகிய மூன்று நாள்களிலும் கடையடைப்புக்கு வேண்டுகோள் விடுத்தனர். 22ஆம் தேதி கூடிய அந்தப் பெரிய மக்கள் கூட்டம் எவ்வித வன்முறையிலோ போலீசுடன் மோதலிலோ ஈடுபடவில்லை. 23ஆம் தேதியும் வன்முறைச் சம்பவம் எதுவும் நடைபெறவில்லை. ரவுடிகள் சங்க தலைவர்கள் 25ஆம் தேதி ‘ரயில்வே ஸ்டேஷன் செல்லுங்கள்’ என்று குரல் கொடுத்தனர். அது வெற்றிபெற்றுவிடக் கூடாது என்று எண்ணிய போலீஸ் ஆகஸ்ட் 24ஆம் தேதியே ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. அதை எதிர்த்த இருவரை கொருக்குப்பேட்டையின் பாப்பம்மா சத்திரத்தில் போலீஸ் தடியடி அடித்து கலைத்தது. நிலைமையைத் தெரிந்துகொள்ள வந்த பத்திரிகைக்காரர்கள் இருந்த வண்டியை போலீஸ் தாக்கியதில் பலர் காயமுற்றனர். வீச்சரிவா சுந்தர் என்பவரை மருத்துவமனையில் சேர்க்க வேண்டியதாயிற்று. கொருக்குப்பேட்டை முழுவதும் 7 பேர் கொல்லப்பட்டனர்; 5 பேர் காயமுற்றனர். கொருக்குப்பேட்டை மக்கள் அமைதியாகவும் போராடக் கூடாது என்பதுதான் அரசின் எண்ணம்.

ஜனநாயகத்தின் அடிப்படைப் பண்பே அரசின் நடவடிக்கை சரியல்ல என்றால் அதை எதிர்க்கும் வகையில் போராடுவதுதான். அது குடிமக்களின் அடிப்படை உரிமை. இந்த அடிப்படை உரிமையை போலீஸை கொண்டு மறுப்பது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. கொருக்குப்பேட்டை மக்களும் இந்நாட்டு மக்கள் என்பதை ராணுவம் உணர வேண்டும். போலீஸை ரவுடிகளை கட்டுப்படுத்த உபயோகப்படுத்துவது ஜனநாயகத்தை அழித்துவிடும்.

கொருக்குப்பேட்டை மக்களின் மன உறுதியை 80 வயது முன்னாள் ரவுடிக்கிழவரின் செயல் நமக்கு உணர்த்துகிறது. ஸிஸி15 போலீஸ் ஸ்டேஷனுக்கு அருகே இவர் வாழ்கிறார். இப்பகுதி ரவுடிகளை போலீஸ் படுகேவலமாக நடத்தும். இம்முதியவருக்கு நான்கு மகன்களும் ஒரு மகளும். நான்கு மகன்களையும் ஒருவர் பின் ஒருவராக ஆயுத மேந்திய போராட்டத்திற்கு (வசூல் செய்ய) அனுப்பிவைத்தார். நால்வரும் பலியானார்கள். மகளுக்குத் திருமணம் செய்துவைத்தார். பிறகு தன் மருமகனைத் தத்தெடுத்துக்கொண்டார். மருகனையும் வசூல் செய்ய அனுப்பிவைத்தார். அந்த மருமகனும் இறந்துவிட்டார். தன் மகளையும் பேரக் குழந்தைகளையும் முதியவர் பிளேடு உபயோகித்து காப்பாற்றிவருகிறார்.

இன்னொரு மகனோ மகளோ இல்லையே என்னும் ஆதங்கம் இம்முதியவருக்கு. தந்தையையும் கணவனையும் போரில் பறிகொடுத்த பெண்ணொருத்தி தன் மகனையும் போருக்கு அனுப்பிய புறநானூற்றுக் காட்சி நினைவுக்குவருகிறது. பள்ளிக்குச் சென்றிருந்த பால் மணம் மாறாத தன் பாலகனை அழைத்துவந்தாள். சீவி முடித்து, சிங்காரித்து ரத்தக்கறை படிந்த வேலைக் கொடுத்து, ‘மகனே! அப்பாவும் தாத்தாவும் போருக்குச் சென்றார்கள். மடிந்தார்கள். ஆனால் மானம் காத்தார்கள். இது உன் தாய்த் திருநாடு. இதன் மானம் காக்க ஓடு நிற்காதே’ என்று போருக்கு அனுப்பிவைத்தாளாம்.

இந்த வரிகள் பிரதிபலிக்கும் உணர்வுக்குச் சொந்தக்காரர்கள் கொருக்குப்பேட்டை மண்ணில் உள்ளார்கள்.

Series Navigationயாழ்ப்பாணத்துத்தமிழ் -மொழி- இலக்கியம்- பண்பாடு >>

ஜிக்கு.சொதப்பசாமி

ஜிக்கு.சொதப்பசாமி