மலேசிய அரசுக்குப் பரிந்து வரவேண்டிய கட்டாயம் என்ன?

This entry is part [part not set] of 33 in the series 20070802_Issue

மலர் மன்னன்


மலேசியாவில் ரேவதி என்கிற ஒரு ஹிந்து இளம் தாய், என் பெற்றோர்தான் தான் முகமதியராக இடைக்காலத்தில் மாறியிருக்கிறார்களேயன்றி தான் மதம் மாறவில்லை என்றும் ஹிந்துவாகவே தொடர்ந்து இருந்து வரும் தன்னை ஒரு ஹிந்துவாகவே அங்கீகரிக்க வேண்டும் என்றும் விண்ணப்பிக்கப் போக அதுவே அவருக்குப் பெரும் துன்பமாக முடிந்தது. பிற்காலத்தில் ஏதேனும் சட்டச் சிக்கல் வரலாம் என்பதற்காக ரேவதி இவ்வாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்ககூடும், அதன் விளைவு என்னவாக இருக்கும் என்பது தெரியாமல்.

பாவம், மலேசியா பெயரளவுக்குத்தான் ஒரு ஜனநாயக நாடு என்பதை ரேவதி அறிந்திருக்கவில்லை!

வெகு சமீபத்தில்தான் மலேசியாவி லுள்ள மதச் சிறுபான்மையினரும், இனச் சிறுபான்மையினரும் தமது நலன்கள் குறித்துத் தமக்குள் விவாதித்து முடிவு செய்ய முற்பட்டனர். ஆனால் அதுபற்றிக் கேள்வியுற்றதுமே, ம்சிறுபான்மையினர் இவ்வாறு தம்மை தனிமைப் படுத்த்திக்கொள்வது மலேசிய தேசிய நீரோட்டத்திலிருந்து தங்களை வேறுபடுத்திக் கொள்வதாகும்; அது நல்லதல்ல என்று மலேசியப் பிரதமர் மெனமையாக எச்சரிக்கை விடுத்து விட்டார்.

ரேவதி தன் பெற்றோர் இடைக்காலத்தில் முகமதியராக மாறிய போதிலும், தன் பாட்டியார் கூடவே வசித்து வரும் தான் மதம் மாறவில்லை என்றும், தாய் மதத்திலேயே தொடர்ந்து நீடித்து வருவதோடு ஒரு ஹிந்து இளைஞரை மணந்து ஒன்றரை வயதுக் குழந்தைக்கும் தாயாகியிருப்பதாகச் சொல்லியிருக்கிறார். நியாயப்படி இதனை ஒப்புக்கொண்டு மனுதாரரின் கோரிக்கையை ஏற்று நடப்பதுதான் ஒரு நாகரிகமான அரசின் அல்லது நியாய ஸ்தலத்தின் நடவடிக்கையாக இருக்க வேண்டும். வேண்டுமானால் மனுதாரர் சொல்வது எந்த அளவுக்குச் சரி என்று விசாரிக்க ஏற்பாடு செய்து அதன் பிறகே முடிவெடுக்கக் கருதியிருக்கலாம். ஆனால் ரேவதி ஏதோ முகமதியராக இருந்து அதன் பிறகு ஹிந்துவாக மாற விரும்புபவர் என்பதுபோல் அவரை முகமதிய சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி விட்டார்கள். அவர் ஒரு இளம்தாய் என்று கூடப் பார்க்காமல் குடும்பத்திலிருந்து பிரித்து முகமதிய சமயச் சீர்திருத்தப் பள்ளிக்கு அவரை அனுப்பியது குறித்து அங்கேயே மனித உரிமைக் குழுவினர், பெண்ணுரிமை இயக்கத்தினரிடமிருந்து எதிர்ப்பு வந்த போதிலும் அதை முகமதிய சமயத் தலைவர்களோ சமூகப் பொறுப்பாளர்களோ பொருட்படுத்தவில்லை.

பொதுவாக முகமதிய மதத்தைச் சார்ந்துள்ள ஒருவர் வேறு மதத்தில் சேர அனுமதிக்கப்படுவதில்லை. அது ஒரு வழிப் பாதைதான். மதம் மாற முற்பட்டால் மரண தண்டனையே கிடைக்கவும் வாய்ப்புண்டு. ஆனால் மலேசியா தனது ஜனநாயக நடைமுறைக்கு ஓர் உத்தரவாதம் தருவதுபோல முகமதியர் எவரேனும் வேறு மதத்தைத் தழுவ விரும்பினால் அதற்கான சாத்தியக்கூறுகளை அறிவதுபோல் ஒரு கண்துடைப்பு ஏற்பாட்டைக் கடைப்பிடித்து வருகிறது. இதற்கிணங்க, மதம் மாற விரும்பும் முகமதியர், முகமதிய சமயத் தலைவர்களும், சமூக த் தலைவர்களும் நடத்திவரும் அரசு அங்கீகாரம் பெற்ற சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்படுவார். அங்கு முகமதிய மதத்திலிருந்து வெளியேறும் எண்ணம் அந்த நபருக்கு எதனால் வந்தது என்று ஆராயப்படும். அந்த நபர் தமது மதம் மாறும் எண்ணத்தை மாற்றிக்கொள்ள எல்லாவிதமான வழிகளும் கையாளப்படும். சில அப்பாவிகள் மனநல விடுதிக்கு அனுப்பிவைக்கப்படும் துரதிர்ஷ்டத்திற்கும் ஆளாக நேரிடும். சீர்திருத்தம் அந்த அளவுக்குக் கடுமையாக இருக்கும்!

சமயச் சீர்திருத்தப்பள்ளி என்று சொன்னாலும் அது சிறைக்கூடம் போலத்தான். மூளைச் சலவைதான் அங்கு முக்கியமாக நடைபெறும். அங்குள்ள நடைமுறைகளே முகமதிய மதத்திலிரு ந்து வெளியேறும் துணிவை நீர்த்துப் போகச் செய்துவிடும்.

ரேவதி முகமதியராக இருந்து அதன் பிறகு அதிலிருந்து வெளியேறி ஹிந்துவாகத் தாய் மதம் திரும்ப முற்படவில்லை. தான் ஹிந்துவாகவே நீடித்து வருகையில் தன் பெற்றோர் ஹிந்து மதத்திலிருந்து என்ன காரணத்தாலோ வெளியேறி முகமதியராகியிருப்பதால் பிற்பாடு சொத்து வாரிசுரிமை மற்றும் சமூக ரீதியான சிக்கல் ஏதும் வரக்கூடாதே என்பதற்காகத் தன்னை ஒரு ஹிந்து என உறுதி செய்து அதற்கு அங்கீகாரம் கோரியிருக்கிறார். அவரை முகமதிய சீர்திருத்த்தப் பள்ளிக்கு அனுப்பியதே தவறு. பெற்றோர் மதம் மாறிவிட்டால் அது அவர்களின் குழந்தைகளையும் ஏன் கட்டுப்படுத்த வேண்டும்? சிறு குழந்தைகளாகவே இருப்பினும் விவரம் தெரிகிற வயது வரை அவர்களை சமயச் சார்பின்றி விட்டுவைப்பதுதான் சரியாக இருக்கும். ரேவதி விஷயத்தில் அவர் தொடக்க முதலே ஹிந்துவாக உள்ள தன் பாட்டியாருடன் வசித்துத் தானும் ஒரு ஹிந்துவாக வளர்ந்து வருகிறார். பருவம் வந்ததும் ஒரு ஹிந்துவை ஹிந்துமுறைப்படி மணந்து குடும்பம் நடத்தி வந்திருக்கிறார். விவகாரம் இவ்வளவு தெளிவாக இருந்தும் அவர் ஏன் தன் குழந்தையிடமிருந்தும் கணவரிடமிருந்தும் தனிமைப்படுத்தப்பட வேண்டும்? இது முகமதிய மேலாதிக்கமே யன்றி வேறென்ன வாக இருக்க முடியும்?

மலேசியா தன்னை முகமதிய தேசம் என்று சொல்லிக்கொண்டாலும் தனது சமூக அமைப்பை ஒரு பன்மையின கூட்டுச் சமூகம் எனப் பெருமை கொள்கிறது. ஆனால் முகமதியர் எவரேனும் மதம் மாற விரும்பினால் அதற்கு எளிதில் சம்மதிப்பதில்லை. பெரும்பாலும் சீர்திருத்துகிறோம் என்று சொல்லி அவர்களுக்கு மன உளைச்சல் கொடுத்து, முகமதிய மதத்திலிருந்து வெளியேறும் எண்ணத்தையே பிடுங்கி எறிந்து விடுகிறது. இது இயற்கை நீதிக்கே முரண் அல்லவா?

மலேசியாவில் ரேவதியின் விஷயம் ஒரு முகமதியர் மதம் மாற விரும்புவது போன்றதல்ல என்பதால்தான் அங்குள்ள சில அமைப்புகள் அவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப் பட்டதைக் கண்டித்தன. முகமதிய சீர்திருத்தப் பள்ளி நடைமுறையை அவை கண்டித்ததாகத் தெரியவில்லை.

சீர்திருத்தப் பள்ளியில் ரேவதி மன உளைச்சலுக்கு உள்ளாக்கப் படுவதற்குக் கண்டனம் வலுக்கவே அவரைப் பள்ளி நிர்வாகம் முகமதியரான பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டது. நியாயப்படி அவரது குடும்பத்திடமே அவரைஅனுப்பி வைத்திருக்க வேண்டும். ஆனால் ரேவதியை அவரது பெற்றோர் வழிக்குக் கொண்டு வரவேண்டும் என்கிற உத்தேசத்தில் இப்படி நடந்திருக்கிறது!

ரேவதி குழந்தையல்ல. அவருக்கே ஒரு குழந்தை இருக்கிறது. கணவனும் இருக்கிறார். தனது வாழ்க்கையை நிர்ணயித்துக் கொள்வதற்கான வயது எய்தியவர்தான் அவர். தனது நம்பிக்கையின் பிரகாரம் தான் எந்த மதத்தில் இருக்க வேண்டும் என்று முடிவு செய்யும் உரிமை அவருக்கு உள்ளது. மேலும் அவர் தான் இருக்கும் மதத்தைவிட்டு வெளியேறி மாற்று மதம் தழுவ விழைபவரல்ல.

கண்ணெதிரே இத்தனை உண்மைகள் தெரிந்தும் சேணம் பூட்டிய குதிரை மாதிரி அரசும் நிர்வாகமும் பொருத்தமில்லாத விதிமுறைகளைப் பிரயோகித்து ஒரு அப்பாவிப் பெண்ணைச் சங்கடப்படுத்துவதை நியாயப் படுத்துவதா? மலேசிய சட்ட திட்டங்கள் அப்படி த்தான். அதைப் பெரிது படுத்தக் கூடாது என்றெல்லாமா சமாதானம் சொல்வது?
எல்லாரும் சாப்பிடும் உணவைத்தான் அங்கு தருவார்கள். ஒரு தனி நபருக்காக விசேஷ உணவெல்லாம் தரவேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது என்று சொல்கிற அளவுக்குத் தனிநபரின் உணர்வுகளைத் துச்சமாக மதிப்பது எந்த அளவுக்கு மனிதாபிமானமாக இருக்கும்? முகமதியர் தமது உணவை உண்ண சிரமப்படக்கூடாது என்பதற்காக ஹலால் செய்யப்பட்ட இறைச்சி என்று ஹிந்துக்கள் உள்ளிட்ட பலரும் நடத்தும் உணவு விடுதிகளில் அறிவிப்புச் செய்யும் பலகைகள் தொங்கவிடுகிற அளவுக்கு நிலைமை முகமதியரிடம் மனிதாபிமானத்தோடு நடந்துகொள்வதாக இல்லையா? சிறைச்சாலையில் கைதியாக் இருப்பவரிடம் கூட இறைச்சி உண்பவரா எனக் கேட்டறிந்து அதற்கேற்ப உணவு தருவதில்லையா?

ரேவதிக்குப் பழக்கமிலாத உணவு அவருக்கு நிர்பந்திக்கப்பட்டது என்று ஒருவர் மனம் குமுறினால் அதிலுமா குற்றம் காண்பது?

தனி மனித உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவற்றுக்கு ஊறு நேராதவாறு பார்த்துக் கொள்வது இன்றைய நாகரிக சமுதாயங்களின் நடைமுறை. மலேசியாவில் இதற்கு சாத்தியமில்லையெனில், அது அங்குள்ள நடைமுறை; அதையெல்லாம் கண்டுகொள்ளக் கூடாது என்று சகஜமாகச் சொல்லிவிட்டுப் போவது முதிர்ச்சியுள்ளவர்களுக்கு அழகல்ல.


malarmannan79@rediffmail.com

Series Navigation

மலர் மன்னன்

மலர் மன்னன்