குறைபட்ட என் பதில்கள்

This entry is part [part not set] of 41 in the series 20060901_Issue

சின்னக்கருப்பன்


கோவை குண்டுவெடிப்பு குற்றவாளிகளைப் பற்றி நான் எழுதியதற்கும், இஸ்ரேல் பற்றிய எனது எண்ணத்துக்கும் பலரிடமிருந்து வந்திருந்த வினோதமான எதிர்விளைவுகள் ஆச்சரியப்படுத்துகின்றன. சென்றவாரத்திலேயே அந்த எதிர்வினைகள் பற்றிய என் கருத்துக்களை எழுதியிருக்க வேண்டும். மன்னிக்க வேண்டுகிறேன்.

முதலில் ஆதரவாக எழுதிய திரு. இப்னு பஷீர் அவர்களுக்கும், திரு நாகூர் ரூமி அவர்களுக்கும் நன்றி.

எனக்கு வந்த எதிர்வினைகளைப் படித்துவிட்டு, அந்த எதிர்வினைகளைத் தூண்டிய என் பதிலை (ஆச்சரியத்துடன்!) படித்துப்பார்த்தேன். இப்படி உணர்ச்சிவயப்படுவதற்கு அதில் என்ன இருக்கிறது என்றுதான் தெரியவில்லை.

மதிப்புக்குறிய மலர்மன்னன் என்னை “மரியாதைக்குரிய சிந்தனையாளர்” என்றெல்லாம் எழுதிவிட்டார். நான் என்ன செய்வது?

இஸ்ரேல் பற்றியும் அதன் வரலாறு பற்றியும் வஜ்ரா ஷங்கர், மலர்மன்னனும், அனல் தூங்கும் கண்ணனும், நேசக்குமாரும் குறிப்பிட்டிருந்தார்கள்.

இஸ்ரேல் தன்னை எப்படி காத்துக்கொள்கிறது என்பது அதன் பிரச்னை. அதன் பிரச்னையும் நம் பிரச்னையும் ஒன்றல்ல. அது ஒரே பிரச்னையாக இருந்தாலும், அதனை எப்படி சரியான முறையில் எதிர்கொள்வது என்பதும் ஒன்றல்ல. இஸ்ரேலுக்கு என்று ஒரு பாரம்பரியம் இருக்கிறது. அதற்கென வரலாறு இருப்பது போன்றே, இந்தியாவுக்கும் ஒரு பாரம்பரியம் இருக்கிறது. இந்தியாவிற்கும் ஒரு வரலாறு இருக்கிறது.

உலகெங்கும் இருந்த வண்ணமயமான மாலை போன்ற பாகன் கலாச்சாரங்களை அழித்து அதன் மீது மோனோகல்ச்சர் (Monoculture – ஒற்றைப்பயிர் ) போன்று எல்லாவற்றையும் ஒன்றே மாதிரியான உருவாக்க முனைந்த கொள்கையும் அதன் வழித்தோன்றல்களும் உருவான விளைநிலம் அது. அது தான் உருவாக்கிய பூதங்களை தானே எதிர்கொள்கிறது. தன் தீக்கனவுகளை தானே எதிர்கொள்ளவேண்டும் அது. ஆனால், தானே ஒரு தீக்கனவில் மாட்டியிருக்கிறோம் என்பதைக்கூட புரிந்துகொள்ளாத அளவுக்கு அதில் மூழ்கி தனக்குத்தானே போரிட்டுக்கொண்டிருக்கிறது.

இந்தியா ஒரு மலர்த்தோட்டம். இங்கு மா பலா கொய்யா போன்ற மனிதனுக்கு உபயோகமான தாவரங்கள் மட்டுமின்றி, தாவரம் என்ற பெயர் கொண்ட எதுவும் தழைக்கும் நிலம். இது இப்படித்தான் இருக்க வேண்டும். இதுதான் இதன் வளமை. இதுதான் இதன் வலிமை. இங்கு எது சரி எது தவறு என்பது என்பது ஒழுக்க ரீதியான அமைப்பல்ல. இது எது தர்மம் எது அதர்மம் என்பதுதான் முக்கியம். தர்மம் என்பது எது இந்த மலர்த்தோட்டத்தை வாழ வைக்குமோ அது. அதர்மம் என்பது எது இந்த மலர்த்தோட்டத்தை அழிக்குமோ அது. இங்கிருந்து புறப்படும் மகரந்தங்கள் உலகெங்கும் விழுந்து அங்குமொரு தோட்டத்தை உருவாக்கும். ஆம் இந்தியா உலகுக்களிக்கும்.

இஸ்ரேல் செய்வது யுகதர்மமா அல்லவா என்பது அவர்கள் முடிவு செய்துகொள்ள வேண்டியது. நான் அதில் எந்த நிலைப்பாடு எடுப்பதும் முன்னரே குறிப்பிட்டதுபோல யாருக்கும் பயனற்றது. இருப்பினும், நான் எழுதுவது என் பெரும்பாலான இந்து நண்பர்களின் நிலைப்பாடுதான். நான் ஒரு சாதாரண இந்து மனத்தினை பிரதிநிதித்துவப்படுத்த விரும்புகிறேன். என் கருத்து பெரும்பாலும் ஒரு சாதாரண இந்து மனத்தின் உடனடி கருத்துத்தானே தவிர, அரசியல் ரீதியில், ராஜதந்திரரீதியில், நான் சார்ந்த அரசியல் கட்சியின் கணிப்பில், நான் சார்ந்த நாட்டின் கணிப்பில், என் நண்பன் யார் என் எதிரி யார், என் எதிரிக்கு எதிரி என் நண்பன் என்ற கணிதத்துக்குள் எல்லாம் சென்று என் உள்ளுணர்வையும், என் தார்மீக உணர்வையும் மழுங்கடித்து எழுதுவதில்லை.

வரலாறு இஸ்ரேலுக்கு இந்த கடினமான அணுகுமுறையைக் கொடுத்திருக்கலாம். ஆனாலும், அது செய்வது தவறுதான். வரலாற்றிலிருந்து இரண்டுவிதமான பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். ஒன்று தன் கடந்த கால எதிரி உருவானதன் காரணத்தைப் புரிந்துகொள்வது. மற்றொன்று. அதன் மூலம் அப்படிப்பட்ட எதிரி எதிர்காலத்தில் உருவாகாமல் அவனை நண்பனாக்கிக்கொள்ள முனைவது.

இஸ்ரேலின் கணிப்பில் இன்றை வரைக்கும் உயிரோடு இருப்பதற்கு அதன் கடினமான அணுகுமுறை காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் அதே கடினமான அணுகுமுறையைத் தொடர்வது, அது தொடர்ந்து உயிரோடு இருப்பதற்குக்கூட ஆபத்தானதாக இருக்கும். அதனை அவர்களும் புரிந்துகொள்ள வேண்டும். அதன் இந்திய ஆதரவாளர்களும் புரிந்துகொள்ள வேண்டும்.

பாகிஸ்தான் என்ற நாட்டின் மீது எனக்கு எல்லையற்ற அனுதாபமே இருக்கிறது. அவர்களும் நம்மக்கள். காலனியாதிக்கத்தின் சதியால், இந்த இந்திய துணைக்கண்டத்தில் நிரந்தர சகோதரக்கொலைகளை நிறுவனப்படுத்துவதற்கு தோற்றுவிக்கப்பட்ட நாடு அது. தனக்குள்ளே கூட அமைதியாக வாழ வழியற்ற நாடு. இப்போது, அதன் மூன்றாவது மாபெரும் தவற்றை செய்திருக்கிறது. முதலாவது ஷேக் முஜிபுர் ரஹ்மானை ஆட்சியில் அமர்த்த மறுத்து பங்களாதேசத்தினை தோற்றுவித்தது. இரண்டாவது சிந்தி மக்களின் பிரியத்துக்குரிய புட்டோவை தூக்கிலிட்டு சிந்தி மக்களிடம் தீராத வடுவை ஏற்படுத்திக்கொண்டது. இன்று நவாப் அக்பர் கான் பக்தியை கொலை செய்து பலூச்சிஸ்தானத்து மக்களிடம் பாகிஸ்தானுக்கு எதிரான உணர்வை கொழுந்துவிட்டெரிய வழி செய்துகொண்டுள்ளது.

பாகிஸ்தான் தனது பிரச்சாரத்தினால், பல இந்திய முஸ்லீம்களிடம் ஒரு அனுதாபத்தைப் பெற்றிருக்கிறது என்பதை மறுக்கவில்லை. பாகிஸ்தானிலிருந்து “இஸ்லாமியப் பிரச்சாரகர்கள்” என்ற பெயரில் உலகெங்கும் உலவும் முல்லாக்கள் தீவிரவாதத்தினை பிரச்சாரம் செய்கிறார்கள் என்பதையும் மறுக்கவில்லை. பிரசாரத்தைப் பிரசாரத்தினால் தான் எதிர்கொள்ள வேண்டும்.

மூன்றாவதாக, கோவை குண்டுவெடிப்பு குற்றவாளிகள் என குற்றம்சாட்டப்பட்டவர்கள் உடனே விசாரணை செய்து தண்டனை வழங்கப்படவேண்டும், குற்றமற்றவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று எழுதியிருக்கிறேன். இதிலென்ன தவறு? நான் என்ன அவர்களை தமிழ்நாட்டின் தலை சிறந்த சிந்தனாவாதிகள் போல ஜாமீனில் விடுதலை செய்யப்படவேண்டுமென்றா எழுதினேன்? அல்லது அவர்களுக்கு மட்டன் பிரியாணி போட்டு ஆயுர்வேத மசாஜ் செய்துவிடுவது சரியென்றா எழுதினேன்?

உள்ளே இருக்கும் ஒரு குற்றமற்றவர் தொடர்ந்து சிறையில் வாடுவது அவரை தீவிரவாதத்துக்கே இழுத்துச் செல்லும். குற்றமுள்ளவர் தொடர்ந்து விசாரணை இல்லாமல் குற்றம் நிரூபிக்கப்படாமல் விசாரணைக் கைதியாகவே நீடிப்பது அவர் மேல் மக்களுக்கு அனுதாபத்தையே விளைவிக்கும். இரண்டுமே தேவையற்றது. குற்றம் நிரூபிக்கப்படாமல் வெளியே செல்பவர்கள் குற்றம் புரிவார்கள் என்று கருத எந்த நியாயமும் இல்லை.

யுகதர்மம் என்ற பெயரில் அநியாயத்துக்கும், அநீதிக்கும் வக்காலத்து வாங்கமுடியாது. அநியாயத்தை ஆட்சியில் ஏற்றவும் முடியாது.
முடிவு முக்கியம்தான் ஆனால் போகும் வழி அதனை விட முக்கியம். எந்த லட்சியத்தை நோக்கிச் செல்கிறோம் என்பதனை மனத்தில் கொள்ளும்போதுதான், போகும் வழியில் சிறு சிறு தவறுகள் நேர்ந்தாலும், சில ஓடைகளை தாண்டிச் செல்வதாக இருந்தாலும், வழியல்லாத காடுகளினுள்ளே புகுந்து சென்றாலும் அது தர்மமாக இருக்கும். வாலியை ராமன் கொன்றதும், துரியோதனனை கொல்ல வீமனுக்கு கண்ணன் உபாயம் சொன்னதும் இது போலத்தான். ஆனால், வழி முழுவதும் நான் அநியாயத்துக்கே துணை போவேன் என்பதும், என் பக்கம் என்று நான் வரித்துக்கொண்டவர்கள் என்ன அநியாயம் செய்தாலும் நான் சமாளிப்பு அளிப்பேன் என்பதும், நமது லட்சியத்தையும் கேள்விக்குள்ளாக்கிவிடும்.

நட்புடன்
சின்னக்கருப்பன்


karuppanchinna@yahoo.com

Series Navigation

சின்னக்கருப்பன்

சின்னக்கருப்பன்