புனித முகமூடிகள்

This entry is part [part not set] of 46 in the series 20060217_Issue

சூபி முகம்மது


திண்ணை இதழில் வகாபிசம் குறித்த ஹெச்.ஜி.ரசூலின் கட்டுரையும், எதிர்வினைகளுக்கு அவர் எழுதிய விளக்கங்களையும் படித்தபோது எனது பல சந்தேகங்களுக்கு தெளிவு கிடைத்தது.

வகாபிய கருத்துக்களை பேசிக்கொண்டிருக்கும் நண்பர்கள் ஹெச்.ஜி.ரசூல் முன்வைத்த பல முக்கியமான விடயங்களுக்கு இன்னும் பதிலளிக்கவில்லை. இது குறித்து காத்திரமாக அவர்கள் சிந்திக்க வேண்டும்.

நவீன முதலாளித்துவத்தின் சமய வழிப்பட்ட பண்பாட்டுக்குரலாக இஸ்லாத்தினுள் வகாபிசக் கோட்பாடு உருவாகியுள்ளது என்ற தனது ஆய்வுநோக்கை நிறுவுவதற்கு ரசூல் எடுத்துக் கொண்டவை, பிரதேச தன்மைகளை அழித்து அரேபிய வகைப்பட்ட ஒற்றை சமய அடையாளம் பேசும் அறிவுவாதம், தனிநபர் மையவாதம், லாபக்கோட்பாடுசார்ந்த பொருளாதாரசார்பு போன்றவை ஆகும். இதனையே அவர் கட்டுரை முழுக்க வகாபிகளின் நடைமுறைசார்ந்து ஒப்பிட்டுக் காண்பிக்கிறார்.

தமிழுக்கு இவ்விடயங்கள் புதியது என்பதாலேயே வகாபி நண்பர்கள் இவை குறித்து புரிந்து கொள்ளவே சிரமப்படுவது தெரிகிறது. எனினும், அடிப்படையான இக்கேள்விகளை உணர்ந்து கொள்ளாததுபோல் பாவனை செய்து ரொம்பவும் சிறுபிள்ளைத்தனமாக தங்களது மனஅரிப்பை கொட்டித் தீர்த்துக் கொள்கிறார்கள்.

திண்ணையில் இடம் பெற்ற வகாபி என்பவரின் கடிதம் இதை உண்மையாக்கி காட்டுகிறது. அவர் சொல்லுகிறார்.

எவ்வித உழைப்புமின்றி முதலாளி ஆவதற்குத்தான் இந்தியா முழுவதும் சமாதிகள்

கந்தூரியில் கூட்டமில்லை, உண்டியல் நிறையவில்லை, மக்களை ஏய்த்து பிழைத்து வாங்கிய கார்களுக்கு பெட்ரோல்போடக்கூட காசு சேர்வதில்லை.

இப்படி பொத்தாம் பொதுவாக பேசத்துவங்கினால் வகாபிகளைப் பற்றி ஆதாரத்தோடு ஏராளம் பேசித்தீர்க்கலாம். ஒரு பள்ளி வாசலில் மிகக்குறைவான சம்பளத்தில் ஆலிமாக வேலை புரிந்து, வீடு வீடாகச் சென்று மெளலிது, பாத்திஹா ஓதிக் கொண்டிருந்த சாதாரண உலவி பட்டம் பெற்ற உலமா ஒருவர் வகாபிசம் பேசத் துவங்கியதும் பெரும் பணக்காரராகி விட்டதும் ஆடம்பரமாக வாழ்ந்து வருவதும் எப்படி என்ற கேள்வி முதலில் எழுகிறது.

எண்பதுகள் துவங்கி பல இயக்கங்களை நடத்தி பிறகு அவற்றை பிளவுபடுத்தி சிதைத்தும் கடைசியாக தெளகீத் அமைப்பு ஒன்றுக்கு தலைவராகி ஏசி டயோட்டா காரில் வலம் வருவது யார் ? ஜாக், அந்நஜாத் இயக்கங்களின் வழியாக அல்உம்மா உருவாகவும், தமிழக இளைஞர்களிடம் மதத்தின் பெயரால் வன்முறை உருவாகவும், இன்றும் ஏராளமான முஸ்லிம் இளைஞர்கள் சிறையில் வாடவும் காரணமானவா யார் ? தனது மனைவியின் பெயரில் பப்ளிகேசன்ஸ் புத்தக வெளியீட்டு நிறுவனம் அமைத்து, அதிக விலைக்கு பல்லாயிரக்கணக்கில் திருக்குர்ஆன் மற்றும் நூற்றுக்கணக்கான நூல்களை வெளியிட்டு விற்கும் புரோகித முதலாளியாய் மாறியது யார் ? துபாய் நிறுவனமொன்றில் சார்பில் வெளிவந்த இஸ்லாமிய பத்திரிகை ஒன்றை மெளனமாக கபளீகரம் செய்து, வேறோரு பெயர் சூட்டி தன் மகனை உரிமையாளராக்கி இப்பெயரிலே நடத்துவது யார் ? டிரஸ்ட் ஒன்றை கூட்டாக நிறுவி தினமும் தொலைக்காட்சி சமயத் தொடர்களை ஒளிபரப்பி விளம்பரங்கள் மூலம் சம்பாதிப்பதும் இஸ்லாமிய மேடை கழ்ச்சிகளில் கலந்து கொள்வதை ஒரு வணிக ரீதியான வியாபாரமாக்கியதும், அந்நிகழ்ச்சிகளின் வீடியோ, சி.டி., கேசட்டுகளை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் விற்பனை செய்தும், ராயல்டியின் மூலமாக கோடிக்கணக்கில் சம்பாதிப்பது யார் ? தமிழகத்தின் முக்கிய நகைக்கடைகளில் பங்குதாரர்களாக முதலீடு செய்திருப்பதும் பிரபலமான தொலைக்காட்சி சானலின் பங்குதாரராக தற்போது மாறி இருப்பதும், சுனாமி பெயரில் வசூலித்த கோடிக்கணக்கான உள்நாட்டு, வெளிநாட்டுப் பணத்தை தனிக்கணக்காக பராமரிக்காமல் தனது நிறுவனத்தின் ஜகாத் நிதி வங்கிக் கணக்கிலிட்டு நம்பிக்கை துரோகம் செய்ததும் யார் ? வளைகுடா நாடுகளில் ரத்த வியர்வை சிந்தி உழைத்து பிழைக்கும் எனது சகோதரர்களின் பணத்தையெல்லாம் ஏதேனும் ஒரு பெயரில் (பாபர் மசூதி மீட்பு நிதி / கோவை குண்டு வெடிப்பு நிவாரண நிதி / வாழ்வுரிமை நிதி / குஜராத் கலவர நிதி/ முஸ்லிம்களுக்கான தனி இடஒதுக்கீட்டு நிதி) வசூலித்து சொந்தப் பெயரிலும், டிரஸ்ட் அமைப்பின் பெயரிலும் சொத்து வாங்கி சுரண்டிக் கொழுத்திருப்பவர்கள் யார் ?

இந்த வகாபிகள் தான் வட்டியையும், சுரண்டலையும் எதிர்த்து போராடுபவர்களாம்… ?

வங்கிகள் வழங்கும் பெறும் பணப்பயன்பாட்டுக்கான நிதியான வட்டியைவிட இவர்கள் முதலீடு செய்த பணத்திலிருந்து உழைப்புச் சுரண்டலின் மூலம் வரும் லாபம் என்பது மிக மிக அபாயகரமானது. இவர்களது தொண்டர்கள் இந்த மறைக்கப்பட்ட செய்திகளை எல்லாம் இன்னும் அறிந்தவராயில்லை. என்றைக்குத்தான் இந்த அடிமட்டத் தொண்டர்கள் இந்த புரோகித முதலாளித்துவ வகாபிகளின் முகமூடிகளை கிழித்தெறியப் போகிறார்களோ ?

—-

tamilsufi@yahoo.com

Series Navigation

சூபிமுகம்மது

சூபிமுகம்மது