மார்க்ஸ், டார்வின் மற்றும் பிரச்சாரம்

This entry is part [part not set] of 44 in the series 20041230_Issue

எஸ்.அரவிந்தன் நீலகண்டன்


கடந்த திண்ணை இதழில் திரு.ரவி ஸ்ரீனிவாஸ் மற்றும் அம்மணி ராதாராமசாமி ஆகியோர் எழுதிய இரண்டு கடிதங்கள் வெளியாயிருந்தன. திரு.ரவி ஸ்ரீனிவாஸ் மார்க்ஸுக்கு டார்வின் எழுதிய கடிதத்தையும் இது குறித்து திரு.ப.அனந்த கிருஷ்ணன் எழுதிய மின்னஞ்சலின் சிலபகுதிகளையும் முன்வைத்து, ‘எனவே டார்வினையும், மார்க்ஸையும் எதிரிகள் போல் சித்தரிப்பதும், மார்க்ஸியமும், டார்வினின் பரிணாம வாதமும் முற்றிலும் ஒன்றிற்கொன்று எதிரானவை என்பதும் கட்டுக்கதை. ‘ எனக் கூறியிருந்தார்<<1>>. ராதா ராமசாமி அம்மையார் சிறிதே உணர்ச்சிவசப்பட்டு ஒரு கடிதத்தில் ஏறக்குறைய ஒன்பது இடங்களில் நான் பொய்களை எழுதுகிறேன் என்றும் என்னை பொய்யன் என்றும் கூறியிருந்தார்<<2>>. இருவர் கூறுவதும் ஒரே விஷயத்தைக் குறித்ததுதான். நான் திரு.குமரி.மைந்தன் எழுதிய ஒரு கடிதத்தை விமர்சித்திருந்தேன். குமரி மைந்தன் குமரிக்கண்டம் எனும் கருத்தாக்கத்தையும் அதில் ஒரு உயர்-தொழில்நுட்ப சமுதாயம் இருந்ததையும் நம்புகிறவர். அவர் மார்க்ஸியவாதியும் கூட. தமது மார்க்ஸியத்திற்கும் குமரிக்கண்ட கருத்தாக்கத்துக்கும் முடிச்சுபோட்டு திரு.ஜெயமோகனின் அறிவியல் புனைவை மார்க்சிய நீதிபோதனைக் கதை போல மாற்றுவதை நான் விமர்சித்திருந்தேன். அப்போது, ‘ஒரு கொசுறு: தன்னை சமூகவியலின் டார்வினாக கற்பனை செய்து கொண்டவர் மார்க்ஸ். எனவே தமது ‘மூலதனத்தை ‘ டார்வினுக்கு சமர்ப்பிக்கவும் முனைந்தார். டார்வின் மிகத்தெளிவாக அதை அனுமதிக்க மறுத்துவிட்டார். பின்னாளில் மார்க்சியம் டார்வினிய பரிணாமத்தின் மீதும் மரபணுவியல் மீதும் தொடுத்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு கட்டியம் கூறிய நிகழ்ச்சி இது. ‘ எனக் கூறியிருந்தேன்<<3>>. இதில் மூன்று விஷயங்கள் உள்ளன.

1. மார்க்ஸ் தம்மை சமூகவியலின் டார்வினாகப் பாவித்தவர்.

2. மார்க்ஸ் டார்வினுக்கு மூலதனத்தை சமர்ப்பிக்க விரும்பினார். அதனை டார்வின் மறுத்துவிட்டார்.

3. மார்க்ஸ் காலம் முதலே டார்வினியமும் மார்க்ஸியமும் ஒன்றுடனொன்று முரண்படுகின்றன. அதன் உச்சக்கட்டமாகவே சோவியத் யூனியனிலும், சீனாவிலும் நியோ-டார்வினியத்திற்கு எதிராக நடந்த கொடுங்கோன்மைகளை காண வேண்டும்.

1, மார்க்ஸை சமூகவியலின் டார்வின் என அழைக்கும் மார்க்ஸியப் போக்கு ப்ரடெரிக் ஏங்கல்ஸிலேயே தொடங்கியுள்ளது. ஏங்கல்ஸ் கூறுகிறார் ‘டார்வினின் உயிரினங்களின் வளர்ச்சியின் விதியைக் கண்டுபிடித்தது போலவே மார்க்ஸும் மானுட வரலாற்றின் விதியைக் கண்டுபிடித்தார். ‘<<4>>

2. 1930களில் ஸ்டாலினிய சோவியத்தில் பேராசிரியர். எர்னஸ்ட் கோல்மான் என்பவர் மார்க்ஸின் வரலாறு குறித்து ஆராய்கையில் மார்க்ஸின் கடிதங்கள் மற்றும் மற்ற தாள்களுக்கிடையே சார்லஸ் டார்வின் எழுதியக் கடிதத்தை கண்டெடுக்கிறார். அக்கடிதம் பின்வருமாறு:

Dear Sir:

I am much obliged for your kind letter & the Enclosure.- The publication in any form of your remarks on my writing really requires no consent on my part, & it would be ridiculous in me to give consent to what requires none. I shd prefer the Part or Volume not to be dedicated to me (though I thank you for the intended honour) as this implies to a certain extent my approval of the general publication, about which I know nothing.- Moreover though I am a strong advocate for free thought on all subjects, yet it appears to me (whether rightly or wrongly) that direct arguments against christianity and theism produce hardly any effect on the public; & freedom of thought is best promoted by the gradual illumination of men ‘s minds, which follow from the advance of science. It has, therefore, always been my object to avoid writing on religion, & I have confined myself to science. I may, however, have been unduly biased by the pain which it would give some members of my family , if I aided in any way direct attacks on religion.- I am sorry to refuse you any request, but I am old & have very little strength, and looking over proof-sheets (as I know by present experience) fatigues me much.

I remain Dear Sir,

Yours faithfully,

Ch. Darwin

இக்கடிதத்தின் அடிப்படையில் மார்க்ஸுக்கும் டார்வினுக்கும் கடிதத்தொடர்பு இருந்ததாகவும் மார்க்ஸ் தம் நூலையே டார்வினுக்கு சமர்ப்பிக்க விரும்பியதாகவும் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி பத்திரிகைகளுள் ஒன்றான ‘Under the Banner of Marxism ‘ என்பதன் ஜனவரி-பிப்ரவரி (1931)இல் எழுதுகிறார். இது பிற்காலத்தில் இடதுசாரிகளாலும் படைப்புவாதிகளாலும் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. பல அரசியல் சார்பற்ற நூல்களிலும் கூட இந்த தகவல் வெளிவந்துள்ளது. ஆனால் 1976 இல் இத்தகவல் பிழையானது என்பது நிரூபிக்கப்பட்டது.<<5>> இந்தக்குழப்பத்தின் மூலவேர் மார்க்ஸின் மகளின் காதலனான எட்வர்ட் அவ்லெங் 1895 இல் மார்க்ஸின் தாள்களையும் கடிதங்களையும் ஒழுங்குபடுத்திய போது தமக்கு டார்வின் எழுதியக் கடிதத்தை மார்க்ஸின் தாள்களுடன் வைத்ததுடன், மார்க்ஸும் டார்வினும் கடிதத்தொடர்பு கொண்டிருந்ததாக 1897 இல் தாம் எழுதியக் கட்டுரையிலும் குறிப்பிட்டுருந்தார்.<<6>> இந்தக் கடிதத்தை அவர் தவறுதலாக வைத்தாரா அல்லது வேண்டுமென்றே அவர் செய்த மோசடிவேலையா என்பது நம்மால் அறியப்படமுடியாத விஷயம். ஆனால் டார்வினிடமிருந்த அவ்லெங் எழுதிய கடிதம் ஆய்வாளர்களுக்கு கிடைக்காமல் போயிருந்தால், மேற்கூறிய கடிதம் டார்வின் மார்க்ஸுக்கு எழுதப்பட்டதாகவே கருத இன்றும் இடம் இருந்திருக்கக் கூடும்..

ஆக, அம்மணியும் திருவாளர் ரவி ஸ்ரீனிவாஸும் கூறியது உண்மைதான். அது மார்க்ஸுக்கு டார்வின் எழுதிய கடிதம் அல்ல. எனில் நான் அதைக் குறிப்பிட்டது தவறல்லவா ? தவறுதான். இந்த தவறுக்குப் பெயர் தகவல் பிழையா அல்லது பொய்யா ? இதனைப் பொறுத்தவரை அம்மையார் தெளிவாக கூறியுள்ளார், ‘ பொய் மனமறிந்து கூறிய பொய் ‘ என்றெல்லாம். ததாஸ்து.

இடதுசாரிகளில் முக்கியமான அறிவுஜீவி கிளைவ் ப்ராட்லி. ஸ்டாலினிஸத்தை ஏற்காத இடதுசாரி. முக்கியமாக, புகழ்பெற்ற Workers ‘ Liberty பத்திரிகையில் அறிவியலின் தத்துவம் தத்துவ தாக்கம் இத்யாதிகளைக் குறித்து ஆழமான கட்டுரைகளை எழுதும் அறிவுஜீவி. நிச்சயமாக மார்க்ஸிய எதிர்ப்பாளரோ அல்லது என்னைப் போன்ற அரை வேக்காடோ அல்ல. இவர் 1999 இல் டாவ்கின்ஸை தாக்கி எழுதிய நூல் விமர்சனத்தை பின்வருமாறு ஆரம்பிக்கிறார், ‘ Marx wanted to dedicate Capital to Charles Darwin, a fact sometimes constructed by Marxologists to suggest that the founder of ‘scientific socialism ‘ saw a crude parallel between his theory of social development and Darwin ‘s theory of evolution. ‘ <<7>> இந்த இடதுசாரி விமர்சனத்தை எதிர்கொள்கையில்தான் அம்மையார் தலையும் இல்லாமல் வாலுமில்லாமல் மேற்கோள் காட்டியிருக்கும் டாவ்கின்ஸ் மேற்கோள் வருகிறது. (அவர் அவ்வாறு மேற்கோள் காட்டியதை நான் தவறெனக் கூறவில்லை.)

ஆனால், மார்க்ஸ் டார்வினுக்கு தமது நூலை சமர்ப்பிக்க விரும்பினார் என்றும் அதனை டார்வின் மறுத்தார் என்பதுமான இத்தகவல் 1976 இல் தவறெனக் காட்டப்பட்டபின்பும் பல அரசியல் சார்பற்ற முழுமையான கல்விப்பிரசுரங்கள் கூட இத்தகவல் பிழையைப் பிரசுரித்தன. உதாரணமாக, ‘Dictionary of History of Ideas ‘ இல் பீட்டர் வார்ஸிம்மரால் எழுதப்பட்ட ‘பான்ஜெனிஸிஸ் மூலமான மரபுக்கடத்தல் ‘ எனும் தலைப்பில் இத்தகவல் பிழையைப் பார்க்கலாம்.<<8>>

இப்போது எனது தகவல் பிழையை ஒத்துக்கொள்ளும் நான் அப்பிழையைச் சுட்டிக்காட்டிய திரு. ரவிஸ்ரீனிவாஸ் அவர்களுக்கும், அம்மணி ராதா ராமசாமிக்கும், அத்துடன் மின்னஞ்சல் மூலம் இதனை திரு.ரவிஸ்ரீனிவாஸின் கவனத்திற்கு எடுத்துச்சென்று, தமது மின்னஞ்சலைத் தெளிவாக திண்ணையில் வெளியிட அனுமதியும் அளித்த திரு.ப.அனந்த கிருஷ்ணன் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எனினும் இந்த பெரியமனிதர்கள் ‘கட்டுக்கதை ‘ ‘பொய்யன் ‘ என்றெல்லாம் எனக்கு வாரி வழங்கியுள்ள மகத்தான பட்ட மணி மகுடங்களை அரவிந்தன் நீலகண்டன் மட்டும்தான் சுமக்க வேண்டுமா ? அல்லது மார்க்ஸின் மருமகன் எட்வர்ட் அவ்லெங்க் (1897) தொடங்கி எர்னஸ்ட் கோல்மான் (1931) ஊடாக, பல்வேறு இடதுசாரி பிரச்சார பிரசுரங்கள் ஊடாக 1999 இல் கிளைவ் ப்ராட்லி வரையிலாக என்னைக்காட்டிலும் இந்த தகவல் பிழையை எளிதாகக் கண்டுபிடிக்கக் கூடிய இடத்தில் இருந்தும் இத்தகவல் பிழையை பரப்பிய இவர்களும் தாங்கள் வள்ளல் தன்மையுடன் வாரி வழங்கியுள்ள இந்த பட்ட மணிமகுடத்திற்கு பங்குதாரர்களா அல்லவா என்பதை தெளிவாக்குமாறு தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறேன். இந்தப் பொய்யினை ‘சிருஷ்டித்த ‘ பெருமை என்னைச் சாராது. மதிப்பிற்குரிய உங்கள் மார்க்ஸிய சித்தாந்த மூதாதைகளையே சாரும். ஆனால் நான் இந்த தகவல் பிழையை நம்பி ஏமாந்ததற்கு அதுவும் உங்கள் இடதுசாரி பிரச்சார மாயையில் ஏமாந்ததற்கு என்னை ஏமாந்த சோணகிரி என்று உங்கள் மனமாறக் கூறிச் சிரிக்கலாம் ஆனால் பொய்யன் என்று கூறினால் அந்த தகுதியை மார்க்ஸ் தொடங்கி வாழையடி வாழையென வரும் மார்க்ஸிய வாதிகளுக்கே அளிக்க வேண்டியுள்ளது.

3. மார்க்ஸ் காலம் முதலே டார்வினியமும் மார்க்ஸியமும் ஒன்றுடனொன்று முரண்படுகின்றன. அதன் உச்சக்கட்டமாகவே சோவியத் யூனியனிலும், சீனாவிலும் நியோ-டார்வினியத்திற்கு எதிராக நடந்த கொடுங்கோன்மைகளை காண வேண்டும். இதனையே நான் ‘பின்னாளில்

மார்க்சியம் டார்வினிய பரிணாமத்தின் மீதும் மரபணுவியல் மீதும் தொடுத்த காட்டுமிராண்டித் தனமான தாக்குதலுக்கு கட்டியம் கூறிய நிகழ்ச்சி இது. ‘ எனக் கூறியிருந்தேன். மேற்கண்ட மார்க்சியப் பிரச்சாரத்தால் எழுந்த தகவல்பிழையைத் தவிர்த்துப்பார்த்தால் கூட மார்க்ஸின் காலத்திலேயே மார்க்ஸ் டார்வினியத்தை சித்தாந்த ரீதியில் விமர்சிக்க ஆரம்பித்துவிட்டது தெரியவரும். மார்க்ஸின் 1861 ஆம் ஆண்டு பார்வையில் டார்வினின் நூல் முக்கியமானது. ஏன் ? ஏனென்றால் அது வரலாற்றின் வர்க்கப் போராட்டத்திற்கு ஒரு அறிவியல் அடிப்படையை அளிக்கிறதாம்.<<9>> ஆக டார்வினியம் உயிரினங்களின் உதயத்தின் உண்மையை வெளிக்கொணர்வதல்ல மார்க்ஸுக்கு டார்வினியத்திடம் உள்ள ஈர்ப்பு. அவரது அரசியல் சித்தாந்தத்திற்கு அது அறிவியல் அடிப்படையை அளிப்பதுதான். ஆனால் பாவம் மார்க்ஸ். 1862 இலேயே மார்க்ஸுக்கு டார்வின் தமது புரட்சிகர அரசியல் சித்தாந்தத்திற்கு சரிப்பட்டு வரமாட்டார் என்பது தெரிந்துவிடுகிறது. டார்வினை அவர் மீண்டும் படித்துப்பார்க்கையில் மால்தூஸிய கோட்பாட்டினை விலங்குகளிடமும் தாவரங்களிடமும் காண்பது அவருக்கு விசித்திரமாக இருக்கிறது. டார்வின் இங்கிலாந்தின் அன்றைய சமுதாய அமைப்பினை உயிரினங்களிடம் மீண்டும் கண்டடைவதாக மார்க்ஸ் காண்கிறார்<<10>>. 1866 இல் டார்வினிய பரிணாம அறிவியலில் முழுமையான ஏமாற்றம் அடையும் மார்க்ஸ் தமது சித்தாந்தத்திற்கு ஏற்றவாறு மற்றொரு ஆசாமியை டார்வினை மிஞ்சும் பரிணாமவாதியாக அறிமுகப்படுத்துகிறார். டார்வினின் பரிணாம பார்வையில் முன்னேற்றம் வெறும் விபத்துகளின் விளைவாக இருப்பது போல் இல்லாமல் இந்த ஆசாமி முன்னேற்றத்தை ஒரு பூமியின் வெவ்வேறு கட்டங்களின் முக்கிய தவிர்க்கவியலாத அடிப்படையாக காட்டுகிறாராம். இன்றைக்கு பெயர் தெரியாமல் போய்விட்ட இந்த ஆசாமியைத்தான் டார்வினை மிஞ்சிய பரிணாமவாதியாக காட்டுகிறார் மார்க்ஸ்.<<11>> ஏன் ? ஏனெனில் மார்க்ஸிய சித்தாந்தத்திற்கு டார்வினை விட அவரது கருதுகோள் அதிக ஆதரவாக விளங்குவதால். மார்க்ஸின் இந்த செயல்முறைதான் பிற்காலத்தில் லெனின்-ஸ்டாலின் காலங்களில் மிச்சூரியன்களையும் லைஸென்கோகளையும், நியோ-டார்வினியத்திற்கு எதிராக உருவாக்கியது. இன்றைக்கு செந்நிற பொன்னுலகில் டாவ்கின்ஸுகளின் நிலை என்ன என்பதை இடதுசாரி ஏடுகளில் டாவ்கின்ஸுக்கு எதிராகக் கக்கப்படும் ஆத்திர வார்த்தைகளிலேயே அறிந்து கொள்ளலாமே.

-எஸ். அரவிந்தன் நீலகண்டன்.

<<1>> www.thinnai.com/le12230411.html

<<2>> www.thinnai.com/le1223041.html

<<3>> www.thinnai.com/le1216044.html

<<4>> ஏங்கல்ஸ் மார்க்ஸின் கல்லறையில் நிகழ்த்திய அஞ்சலி உரை

<<5>>ரால்ப் கால்ப், ‘Darwin ‘s Complaint ‘, The Newyork Review of Books Vol.24 No.17, October 27,1977, available online at: www.nybooks.com/articles/8356

<<6>> ‘Marx of Respect ‘ – www.gruts.com/darwin/articles/2000/marx/

டார்வினின் நண்பர்கள் எனும் இணையத்தளத்தில் மேற்கண்ட இணையமுகவரியில் உள்ள கட்டுரை ‘Marx of Respect ‘. இக்கட்டுரை மார்க்ஸ் டாஸ் காபிடலை டார்வினுக்கு அனுப்பிய போது, அதற்கு ஒரு மரியாதைக்காக டார்வின் அனுப்பிய கடிதத்தை மார்க்ஸ் டார்வின் தமது கருத்தை அங்கீகரித்ததாக கூறப் பயன்படுத்தினார் எனக் கூறுகிறது. ( ‘Darwin ‘s letter of acknowledgment (quoted above) delighted Marx, who used it as proof that the great scientist appreciated his work. In fact, Darwin, ever the gentleman (and no German scholar), was merely being polite: he never read Marx ‘s book, the vast majority of whose pages remained uncut in his library. ‘)

<<7>>கிளைவ் ப்ராட்லி, ‘There ‘s more to life than genes ‘, Workers ‘ Liberty, #59, டிசம்பர் 1999, URL: http://archive.workersliberty.org/wlmags/wl59/clive.htm

<<8>>Dictionary of the History of Ideas, ‘Inheritance Through Pangenesis ‘ பீட்டர் வோர்ஸிம்மர், (That Karl Marx, the first of a now-century-old line of such interpreters, should have written Darwin asking his permission to dedicate Das Kapital to him is at least understandable, albeit a bit ludicrous. (Darwin graciously refused on the grounds of being unable to see any connection between their subjects.- Vol.2 Page:626)

URL: http://etext.lib.virginia.edu/cgi-local/DHI/dhi.cgi ?id=dv2-69

<<9>>16 ஜனவரி, 1861, தேதியிட்டு மார்க்ஸ் லஸ்ஸாலேக்கு எழுதிய கடிதம்: ‘Darwin ‘s book is very important and serves me as a natural scientific basis for the class struggle in history. One has to put up with the crude English method of development, of course. Despite all deficiencies, not only is the death-blow dealt here for the first time to ‘teleology ‘ in the natural sciences but its rational meaning is empirically explained. ‘

<<10>> மார்க்ஸின் 18 ஜூன் 1862 தேதியிட்டக் கடிதம்: ‘I ‘m amused that Darwin, at whom I ‘ve been taking another look, should say that he also applies the ‘Malthusian ‘ theory to plants and animals, as though in Mr Malthus ‘s case the whole thing didn ‘t lie in its not being applied to plants and animals, but only – with its geometric progression – to humans as against plants and animals. It is remarkable how Darwin rediscovers, among the beasts and plants, the society of England with its division of labour, competition, opening up of new markets, ‘inventions ‘ and Malthusian ‘struggle for existence ‘. ‘

<<11>> மார்க்ஸின் 7 ஆகஸ்ட் 1866 தேதியிட்டக் கடிதம்: ‘very important work which I shall send on to you (but on condition that you send it back, as it is not my property) as soon as I have made the necessary notes, is: ‘P. . Trளூmaux, Origine et Transformations de l ‘Homme et des autres டிtres, Paris 1865. In spite of all the shortcomings that I have noted, it represents a very significant advance over Darwin…. Progress, which Darwin regards as purely accidental, is essential here on the basis of the stages of the earth ‘s development, dளூgளூnளூrescence, which Darwin cannot explain, is straightforward here.”

[பி.கு. இதற்கு பதிலளிக்கும் முகமாக மேதாவித்தனமாக ராபர்ட் யங்கின் மார்க்சிய வக்காலத்துக் கட்டுரைகளின் urlகளைக் கொடுத்தோ அல்லது இன்னபிற மார்க்சிய வக்காலத்துவாதிகளை மேற்கோள் காட்டியோ பதில் எழுதப்படுவதற்கு முன் ஒரு வார்த்தை: இந்த வக்காலத்துக்கள் அனைத்துமே டார்வினிய எதிர்ப்பை தனிப்பட்ட ஸ்டாலினிய அழிவுகளாக காட்டுவன. மாறாக, நான் ஸ்டாலினின் அட்டூழியங்களை இன்னமும் அலசவேயில்லை. மார்க்ஸின் டார்வினிய அறிவியல் குறித்த கண்ணோட்டம் எவ்வளவு சித்தாந்த சார்புடையதாகவே வளர்ந்தது என்பதனைக் காட்டியுள்ளேன்.- இது ஒரு தெளிவுக்காக.]

II

துயரச்சம்பவங்களுக்குப் பலியானோருக்கு கண்ணீரஞ்சலியை தெரிவித்து கொள்கிறேன். பொதுவாக நம் நாட்டில் கட்சி வித்தியாசமின்றி எந்த அரசு அமைப்பும் பூதாகரமான இயற்கை அழிவுகளின் முன் ஸ்தம்பித்து செயலிழந்து இருப்பதையே காண முடிகிறது. மந்தத்தனத்துடன் அரசு இயந்திரம் இயங்குகிறது. இதற்காக அவர்களை குறை சொல்லிக் கொண்டிருக்கவோ அல்லது குற்றம் சாட்டும் கைகளை அங்குமிங்கும் நீட்டிக் கொண்டிருக்கவோ இது நேரமில்லை. மக்களை கடலுக்கு செல்ல முயல்வதிலிருந்து காப்பாற்ற முயன்ற காவல்துறையினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மிகச்சிறந்த முறையில் மீட்புச்சேவைகளை செய்யும் கத்தோலிக்க திருச்சபையினருக்கும், ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தினருக்கும், இஸ்லாமிய இளைஞர் அமைப்புகளுக்கும், இரவு பகலாக பணி புரியும் அனைவருக்கும் நன்றியும் சிரம் தாழ்ந்த வணக்கங்கங்களும். 27-12-2004 அன்று கிராமப்புற முகாம்களுக்கு நடமாடும் மருத்துவ சேவைக் குழு சேவாபாரதியின் சார்பில் சென்று மருத்துவ கடமைகளையாற்றினர். டாக்டர்.ஸ்ரீநிவாஸ கண்ணன், டாக்டர்.தாணு மற்றும் டாக்டர்.எஸ்.லெனின் ஆகியோரும் சேவாபாரதி பெருமாளுடனான குழுவினரும் மருத்துவ செவிலியரும் தென்தாமரைக்குளம் பனிமய மாதா தேவாலயத்தில் இருந்த பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் மற்றும் மருங்கூர் தேவாலயத்தில் இருந்தவர்களுக்கும் மருத்துவ உதவிகள் புரிந்தனர். குமரி மாவட்ட கிழக்குப்பகுதியில் மிகவும் கொடூரமாக பாதித்து அழிக்கப்பட்ட கீழமணக்குடி கடலோர ஊர்மக்கள் வைக்கப்பட்டுள்ளனர். நகர்ப்புற பகுதி மக்களின் கவனங்களுக்கும் உதவிக்கும் நகரின் நடுவில் தங்கியுள்ள மக்களின் தேவைகள் அளவுக்கு இந்த மக்களின் தேவைகள், அவதிகள் தெரியவரவில்லை. மிக அவசரத் தேவையாக இங்கு உருவாகிவருவது மருத்துவ மற்றும் உளவியல் பிரச்சனைகள். குழந்தைகள் பலருக்கு இருமல் சளி ஆகியன அதிகரித்து வருகின்றன. பெண்கள் பலர் இரத்த அழுத்தத்தால் அவதியுறுகின்றனர். வயதானோர் பலர் தாம் உட்கொண்டு வரும் மருந்து மாத்திரைகளையும் அது குறித்த மருத்துவ குறிப்புகளையும் இழந்து விட்டனர். உடல்களை அப்புறப்படுத்தவும் மருத்துவ சேவைகளை அளிப்பதிலும் தற்போது அடுத்த தொடர் நடவடிக்கையைத் தொடர வேண்டும்.

-எஸ்.அரவிந்தன் நீலகண்டன்.

Series Navigation

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்