கடிதம் செப்டம்பர் 23,2004 – ‘வாக்கிற்காக ஒரு வாக் ‘ கடிதத்திற்கான எதிர்வினை

This entry is part [part not set] of 39 in the series 20040923_Issue

பாண்டியராசன்


கடந்த வாரத் திண்ணையில் பிரசுரிக்கப்பட்ட இரவிசங்கர் என்பவரின் ‘வாக்கிற்காக ஒரு வாக் ‘ என்ற கடிதத்தில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப்

பொதுச்செயலாளர் வைகோ மீது வீசப்பட்டிருந்த விமர்சனங்கள் நியாயமற்றவை. அதுவும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களுக்காக, கடிதம் எழுதியவர் வேதனைப்பட்ட விதம் வேடிக்கையானதும் கூட.

நான் ம.தி.மு.க வைச்சேர்ந்த ஒரு தொண்டன் என்பதால், இம்மாதிரியான தவறான பிரச்சாரங்களுக்கு பதில் சொல்லவேண்டியது அவசியம் என்று கருதி இக்கடிதத்தை எழுதுகிறேன்.

அவர் எழுப்பியிருக்கும் விமர்சனங்கள்:

வைகோவின் நடைபயணம் எதற்காக ? அதனால் காவல்துறை மற்றும் போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்பட்டதுதான் மிச்சம்.

ஆகஸ்ட் 5 துவங்கி செப்டம்பர் 15 வரை 42 நாட்கள் வைகோவும் அவரது

தொண்டர்களும் நடைபயணம் மேற்கொண்டார்கள். அவர்கள் கடந்து வந்த தூரம் 1025 கி.மீ. தினமும் இரவு பொதுக்கூட்டத்தில் உரையாற்றியிருக்கிறார். வழியெங்கும் லட்சக்கணக்கான மக்களைச் சந்தித்திருக்கிறார். மக்களோடு மக்களாய் பழகியிருக்கிறார். எங்காவது சிறு அசம்பாவிதம் நடந்ததா ? பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டதா ? சென்ற இடமெல்லாம் மக்கள் கூட்டம் கூட்டமாய் கூடிநின்று வரவேற்றிருக்கிறார்கள். முதியோர்கள், தாய்மார்கள், இளைஞர்கள், மாணவர்கள் விவசாயிகள் மற்றும் அனைத்துத் தரப்பு மக்களும் மகிழ்ச்சியோடு வரவேற்று வாழ்த்தியனுப்பியிருக்கிறார்கள். பார்த்தவர்கள் போற்றும் வண்ணம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டரணி கட்டுக்கோப்புடன் சாலையோரங்களில் மூன்று பேர் வீதமாக தமிழ்நாடு முழுவதும் சுற்றிவந்திருக்கிறார்கள். சென்ற இடங்களில், தங்களால் இயன்ற அவசர உதவிகளைச் செய்திருக்கிறார்கள். வைகோ எந்த ஒரு இடத்திலும் ம.தி.மு.க வுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று கோரவில்லை. எங்களை ஆட்சிக் கட்டிலில் அமர்த்துங்கள் என்று யாசிக்கவில்லை. மாறாக மத நல்லிணக்கத்தை மக்களிடம் வலியுறுத்தியிருக்கிறார். சாதி மோதல்களைத் தவிர்க்கும்படி பிரச்சாரம் செய்திருக்கிறார். இளைஞர்களைத் தவறான பாதையில் போகாதீர்கள் என்று அறிவுருத்தியிருக்கிறார். இளைஞர்கள் பெற்றோரைப் புறக்கணிப்பதைப் பார்த்து வருத்தப்பட்டிருக்கிறார். ஒரு தொண்டு நிறுவனம் ஆற்றும் பணியை, அரசியல் இயக்கத்தின் தலைவர் தன் தொண்டர்களுடன் சேர்ந்து

தொண்டர்களுள் ஒருவனாய் செய்திருக்கிறார். தங்கள் சுயலாபத்திற்காக மதக்கலவரத்தைத் தூண்டி சமுகத்தில் பதட்டத்தை உருவாக்கி குளிர்காயும் அரசியல் கட்சிகளுக்கு மத்தியில் மதநல்லிணக்கத்திற்காகத் தெருத்தெருவாய் பிரச்சாரம்

செய்யும் வைகோவை கேலி செய்ய முயல்கிறார் இரவிசங்கர். சாதிய முகவரியுடன் அலையும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் சாதிமோதல்களைத் தவிருங்கள் என்று வைகோ செய்யும் பிரச்சாரம் இரவிசங்கர் போன்றோர்களுக்கு கேலியாய்த் தெரிகிறது.

உணவுக்குக்கூட வழியில்லாமல் எலிக்கறி உண்டானே காவிரி டெல்டா விவசாயி அவனுக்கு ஆறுதல்கூடச் சொல்லாமல், தொழில் பாதிக்கப்பட்டதால் ஒரு வேளை உணவுக்காக கஞ்சித்தொட்டி கஞ்சித்தொட்டியாய் அலைந்தானே ஏழை நெசவாளி அவன் துயர் போக்க முயலாமல், சொகுசாக மக்கள் சொத்தைச் சுரண்டி மேனி வளர்க்கும் அரசியல்வாதிகளுக்கு நடுவே, தன் மெய் வருத்தி வெய்யிலிலும், மழையிலும் மக்கள் குறைகேட்டு, அவர்களுக்கு ஆறுதலாக பிரச்சாரம் செய்த வைகோவை எள்ளி நகையாடப் பார்க்கிறார். ஆனால் மக்கள் உண்மை ஆறிவார்கள். இப்படி நியாயமற்ற குற்றச்சாட்டுக்கள் மக்கள் மன்றத்தில் எடுபடப்போவதில்லை.

இலங்கையிலிருந்து அகதிகளாய் தஞ்சம் புகுந்துள்ள தமிழர்களின் அவதிகள் இவர் கண்ணுக்கு புலப்படாததேன் ? – இது அவரது அடுத்த குற்றச்சாட்டு

சிறு பிள்ளைக்குகூடத் தெரியும் ம.தி.மு.க மட்டும்தான் இலங்கைத் தமிழர்களுக்காக உறுதியாகக் குரல் கொடுக்கும் ஒரே கட்சி என்று. அதற்காக வைகோ மற்றும் எண்மர் சிறைக்கொட்டடியில் அடைக்கப்பட கொடுமையைப் பார்த்து இந்த நாடே கண்வடித்தது. ஈழத்தில் தமிழருக்கான சுயநிர்ணயம் கிடைத்தால்தனே இங்குள்ள இலங்கைத் தமிழர்கள் தங்கள் சொந்த மண்ணுக்குத் திரும்பிப் போகமுடியும் ? அப்பொழுதுதானே அவர்களது துயரம் அகலும். ? அதற்காத்தானே ம.தி.மு.க தொடர்ந்து குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறது. இது இரவிசங்கருக்குத்

தெரியாதா ? அல்லது பக்கத்தை நிரப்புவதற்காக எதையாவது எழுதியிருக்கிறாரா ?

அவரது அடுத்த குற்றச்சாட்டு மிகவும் வேடிக்கையானது.

தி.மு.க வை ஆதரித்ததன் மூலம் வைகோ தன் கொள்கையை

விட்டுக்கொடுத்துவிட்டார். அப்படிப்பட்ட வைகோ தன் தொண்டர்களை ஏன் ஏமாற்றமாட்டார் ? – ம.தி.மு.க தொண்டர்கள் மீது அவருக்கேற்பட்ட கரிசனம்!

தி.மு.க வை எதிர்ப்பது ம.தி.மு.க வின் கொள்கை என்று இரவிசங்கருக்கு யார்

சொன்னார்கள் என்று தெரியவில்லை. ம.தி.மு.க வும் தி.மு.க வும் திராவிட இயக்க கருத்துக்களை உள்வாங்கிக்கொண்டு செயல்படுகின்ற வெவ்வேறு அரசியல் கட்சிகள். கருத்துக்களில் வேறுபாடு இருந்த போதிலும், தமிழர் நலனுக்கு பங்கம்

ஏற்படும்பொழுது, திராவிட இயக்கத்திற்கு ஊறு விளையும்பொழுது, தங்களிடையே உள்ள கருத்துவேறுபாடுகளைக் கூட புறந்தள்ளி, கொள்கைக்காக ஒன்றினைந்து

செயல்படுகிறோம். இதில் எங்கே வைகோ கொள்கையை விட்டுகொடுத்து விட்டார் என்று குற்றஞ்சாட்டமுடியும் ? அப்படிக் குற்றஞ்சாட்டினால், அது அறிவுப்பூர்வமான வாதமாக இருக்குமா ? மேலும் இரவிசங்கர் ம.தி.மு.க தொண்டர்களுக்காக வேதனைப்படுவது நகைப்புக்குரியது. நடைபயணத்தின் இறுதிக் கட்டங்கள் நாடறிந்தது. அடக்குமுறையை ஏவ நினைத்த ஆட்சியாளர்கள், வைகோ மற்றும் தொண்டர்களின் உறுதியைப் பார்த்து அடங்கிப்போனார்கள். ஏராளமான காவல் துறையைக் கொண்டு தீவுத் திடலுக்கு சில நூறு மீட்டர்களுக்கு முன்னால் கைது செய்ய முயன்ற காவல் துறையைப் பார்த்து வைகோ இப்படிச் சொன்னார்.

‘என்னை வேண்டுமானால் கைது செய்துகொள்ளுங்கள். என் தொண்டர்களில் ஒருவனைக்கூடத் தொட அனுமதிக்க மாட்டேன். மீறித் தொடுவீர்களானால், விளைவுகளுக்கு நீங்கள் பொறுப்பேற்க வேண்டி வரும் ‘

அவரது ஆவேசத்தைக் கண்ட காவல் துறை வைகோவை மட்டும் கைது

செய்துகொண்டு போனது. அவருக்கு உதவியாகச் சில தோழர்களும் கைதானார்கள்.

வைகோ தொண்டர்கள் பால் உள்ள அக்கறை இதன் மூலம் தெளிவாய் விளங்கும். ஒவ்வொரு ம.தி.மு.க தொண்டனுக்கும் தெரியும் தன் தலைவன் எப்படிப்பட்டவன் என்று. நாங்கள் சுயமரியாதை இயக்கத்தின் வழி வந்தவர்கள். பகுத்தறிவுச் சிந்தனையால் வார்க்கப்பட்டவர்கள். சுயமாய் சிந்திக்கத் தெரியும்.

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்

என்ற வள்ளுவன் வாக்கிற்கேற்ப, பொறுப்பை எங்கள் பொதுச் செயலாளரிடம் ஒப்படைத்து, அவர் வழியில் உறுதியுடன் தொடர்கிறோம். இரவிசங்கர் போன்றோர் ஓலக்குரல் எழுப்ப வேண்டியதில்லை.

பாண்டியராசன்

wizardspandi@yahoo.com

www.themdmk.org

Series Navigation

பாண்டியராசன்

பாண்டியராசன்