காதலர் தினம்

This entry is part [part not set] of 30 in the series 20080214_Issue

அப்துல் கையூம்


உலகெங்கும் இருக்கின்ற சின்னஞ் சிறுசுகள் அத்தனைப் பேர்களுடைய வயிற்றெரிச்சலையும் ஒட்டுமொத்தமா ஒரேநாளில் வாங்கி கொட்டிக் கொள்ள வேண்டுமென்றால் அதற்கு ஒரே ஒரு வழி.

வெரி சிம்பிள். “காதலர் தினம் ஒழிக”வென்று ஒரே ஒரு கூப்பாடு போட்டால் போதுமானது. இளசுகள் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து நம்மை மன்சூர் அலிகான் மாதிரி வில்லனாக்கி விடுவார்கள்.

“ஏன் அப்பு? இந்த மாதிரி பிரச்சாரம் பண்ணுறதுக்கு எத்தனை பேரு கும்பளா கெளம்பி இருக்கீகே?” என்று இவர்கள் கேட்பது நம் காதில் விழுகிறது.

“காதலர் தினம் வேண்டுமா..
என்று வாதாடவே உங்களுக்கே
இந்த தினம் தேவைப்படும்போது
என்னைப் போன்ற
உண்மைக் காதலர்கள்
கொண்டாடுவதில்தான்
என்னய்யா குற்றம்..?”

இது ஜீவா தம்பி எழுதிய கவிதை. தம்பிகளா! வருஷம் முழுக்க 365 நாளும் காதல் செய்யுங்க. லீப் வருஷமா இருந்தா 366 நாளும் காதலிலே திளையுங்க. யாரு வேணாம்னு சொன்னது?

இன்னும் சொல்லப் போனால் காதல் சமாச்சாரத்திலே நம்ம முன்னோர்கள் சங்க காலத்திலேயிருந்தே ரொம்ப விவரமான பேர்வழிகளாகத்தான் இருந்திருக்காங்க.

தொல்காப்பியம், திருக்குறள், குறுந்தொகை இதிலே எல்லாம் பார்த்தோம்னா காதல் சமாச்சாரத்திலே நம்ம ஆளுங்க சும்மா பூந்து விளையாடி இருப்பாங்க.

காதல் வேணாமுன்னோ, காதலிக்கிறது பாவமுன்னோ எந்த கலாச்சாரமும் சொல்லலீங்க. “அன்பு காட்டுங்கள்; பிறரிடம் பகிர்ந்துக் கொள்ளுங்கள்” அப்படித்தான் அனைத்து பண்பாடுகளும் அறிவுறுத்துது.

காதலர் தினம் கொண்டாடுறதுக்கு பல திசைகளிலிருந்தும் கடுமையான எதிர்ப்பு வருது. ஏன்னு யோசனை பண்ணிப் பார்த்தா அவுங்க சொல்லுறதுலேயும் நியாயம் இருக்கத்தான் செய்யுது.

“இது கலாச்சார சரிவு, மேலை நாட்டினருடைய வியாபார யுக்தி, இளைய சமுதாயத்தை சீரழிக்கிற செயல், நம் பண்பாட்டை பாழ்படுத்த வந்த சைத்தான்” அப்படின்னு சொல்லுறாங்க.

காதலர் தினம்ங்குற பேருல உலகம் பூரா நடக்குற ஓவர் ஆக்டிங் கூத்தை வச்சுத்தான் இதை தடை செய்யுங்கன்னு அவர்கள் போர்க்கொடி தூக்கி இருக்காங்க.

இதுபோன்ற கட்டாயாத் தடை விதிப்பதினாலே இந்த மோகம் சட்டுன்னு மறைஞ்சுடும்னு நெனக்கிறீங்களா? ஊஹும். அப்படி எந்த அற்புதமும் நடந்திடும்னு எனக்குத் தோணலே. நம்ம பசங்கக்கிட்ட “இத செய்யாதேடா தம்பி”ன்னு சொன்னா ஒண்ணுக்கு ரெண்டா செய்வானுங்க. இதுதான் இப்ப உள்ள மென்டாலிட்டி. பக்குவமா சொன்னா புரிஞ்சுக்குவாங்க.

இந்த நாளு வந்துடுச்சுன்னா பூ வியாபாரிங்க, உயர்தர உணவு விடுதிங்க, நட்சத்திர ஹோட்டலுங்க, கிரீட்டிங் கார்ட்ஸ் வியாபாரிங்க, நகைக்கடைக் காரங்க, எல்லாத்துக்கும் நரி முகத்துலே முழிச்ச மாதிரின்னு வச்சுக்குங்க. கல்லாப்பெட்டி நெரம்பி வழியும்.

ஒதுக்குப்புறத்தை தேடும் காதல் ஜோடிகள், ‘கேன்டி’களோடும், பூங்கொத்துகளோடும் அலையும் காதலர்கள், ‘கேன்டில் நைட் டின்னர்’ என்ற பெயரில் நெருக்கங்கள், இதெல்லாம்தான் இன்னிக்கு இவங்களோட முக்கிய குறிக்கோள்; பிரதான பொழுது போக்கு அம்சம் etc., etc.,

ரொம்பவும் அட்வைஸ் கொடுத்தால் நம்மையும் இவர்கள் அந்த பொல்லாத தாத்தாமார்கள் லிஸ்டிலே சேர்த்திடுவாங்களோங்குற பயம்தான். வேறென்ன?

பெருசுங்க அப்படி என்ன பொல்லாத காரியங்கள் பண்ணுனுச்சுன்னு கேக்குறீங்களா? அந்த கொடுமையை ஏன் கேக்குறீங்க? அதுக அடிச்ச லூட்டி ஒண்ணா ரெண்டா?

கொஞ்சம் ரீவைண்ட் பண்ணி பார்க்கிறேன். யப்பப்பா.. அதுங்க ஆடுன ஆட்டம் கொஞ்சமா நஞ்சமா? மைனர் செயினை மாட்டிக்கிட்டு; அதுலெ புலிநகத்தெ தொங்க விட்டிடுக்கிட்டு; மல்லுவெட்டி என்ன? சில்க் ஜிப்பா என்ன? ரேக்ளா இல்லேன்னா வில்லுவண்டி கட்டிகிட்டு கூத்தியாளு வீட்டுக்கு விசிட் அடிக்கறது என்ன? இதுக கெட்ட கேட்டுக்கு ஒண்ணுக்கு ரெண்டு சின்ன வீடுங்க – ஸ்டெப்னி – வேற?

அந்த காலத்துலே அப்பாக்காரரு வீட்டுக்குள்ளே வந்தாலே பூகம்பம் கெளம்பும். அம்மா அவுங்க காலை கழுவுறதுக்கு செம்புலே தண்ணியை தூக்கிக்கிட்டு ஓடுவாங்க. அவரு உள்ளே நுழையும் போதே எள்ளும் கொள்ளும் வெடிக்கும். வீண் ஜம்பத்துக்கும் அதட்டலுக்கும் குறைச்சலிருக்காது. கெடந்து வானத்துக்கும் பூமிக்குமாக குதி குதின்னு குதிப்பாரு.

இவ்வளவுக்கும் வயலிலே சும்மா வெட்டியா கயித்து கட்டில்லே ஜாலியா உக்காந்து நடவு நடுற பொம்பளைங்களை சைட் அடிச்சிட்டு வந்திருப்பாரு. அதுக்குப் போயி இவ்வளவு ஓவர் பந்தா பண்ணுவாரு. இவரு ஒரு பைசா சம்பாதிச்சிருக்க மாட்டாரு, அவரோட அப்பா சம்பாதிச்சு வச்சிட்டுப் போன சொத்தாக இருக்கும்.

இந்த ஜெனரேஷன்லே பொறந்த நாம சிக்கனமா பட்ஜெட் லைஃப் நடத்துறோம். புள்ளைங்களுக்கு பூரண சுதந்திரம் கொடுத்து வளர்க்குறோம். நம்மளோட கருத்தை அவங்கங்கிட்ட திணிக்கிறது கெடயாது. நல்லது கெட்டது பசங்களுக்கு நல்லாவே புரியுது.

இப்பல்லாம் புருஷன்மாருங்க மனைவிக்கு கிச்சன்லே ஹெல்ப் பண்ணுறாங்க. கால் கூட அமுக்கி விடறாங்க. பசங்களுக்கு ஹோம்வொர்க் சொல்லிக் கொடுக்குறாங்க, ஸ்கூல்லே போயி விட்டுட்டு வர்றாங்க. அப்பாவும் புள்ளையும் ஒண்ணா உக்காந்து டிவி பாக்குறாங்க. சல்மான்கான் கத்ரீனா கேஃப்பை பிரிஞ்சதுலேந்து, சஞ்சய் தத் வேற கல்யாணம் முடிச்சிக்கிட்ட விஷயம் வரைக்கும் ஓப்பனா டிஸ்கஸ் பண்ணுறாங்க.

நல்ல சமத்தான பொண்ணா பாத்து தேர்ந்தெடுத்து அப்பா அம்மா சம்மதத்தோட தாராளமா காதலிங்க. யாரும் வேணான்னு சொல்லலை. அவுங்களை கன்வின்ஸ் பண்ண வைக்கிறதுக்கும் ஒரு கெட்டிக்காரத்தனம் வேணும். பக்குவமா எடுத்துச் சொல்லணும். முதல்லே அம்மாக்கிட்ட சரண்டர் ஆயிடனும். அது ரொம்ப அவசியம். ஈஸியா கிரீன் லைட் விழுந்துடும்.

அதை விட்டுப்புட்டு “டார்லிங் ஐ லவ் யூ”ன்னு சொல்லி பத்திரிக்கை, ரேடியோ, டிவின்னு விளம்பரம் செஞ்சு தம்பட்டம் அடிக்கனுமாங்குறதுதான் என்னோட கேள்வி.

அந்த காலத்துலே, அப்பாவுக்கு முன்னாடி முகத்தை ஏறெடுத்து பார்த்து பேசக்கூட தைரியம் இருக்காது. தலையை குனிஞ்சுக்கிட்டேதான் பேசணும். தப்பித் தவறி தலையை தூக்குனா “என்னடா மருவாதி கெட்டத்தனமா முறைச்சு முறைச்சு பாக்குறே? முழியை பேத்துடுவேன்” அப்படின்னு எகிறுவாரு.

இப்பல்லாம் அப்பிடியா? அப்பாவும் மகனும் தோள்ளே கைபோட்டுக்கிட்டு ப்ரெண்ட்ஸ் மாதிரி பழகுறாங்க. பயந்து நடுங்க வேண்டிய தேவையே இல்லை. குடும்பத்துக்கு ஏத்த பொண்ணா தேர்ந்தெடுத்துட்டு வந்து “டாடி! இந்த பெண்ணைத்தான் நான் விரும்பறேன்” னு சொன்னா மாட்டேன்னா சொல்லப் போறாரு?

காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறதுக்காக இந்து முன்னணி காரங்க 500 மஞ்சக் கயிறு (நல்ல வேளை மாஞ்சாக் கயிறு கொடுக்கலே) வாங்கி வச்சிருக்காங்க. காதலருங்கக்கிட்ட கொடுத்து கட்டுங்கப்பா தாலி; கொட்டுங்கப்பா மேளம்ன்னு சொல்லப் போறாங்களாம்.

முன்னமாவது பசங்க ‘பொக்கே’யும் கையுமா அலைஞ்சானுங்க. இப்ப மஞ்சக் கயிறு அதுவுமால்லே அலைவானுங்க?

தடுப்பு ஊசி போடுறது கேள்விபட்டிருக்கோம். இவுங்க ‘காதலர் தினம் தடுப்பு கமிட்டி’ன்னு அமைச்சு, பொது இடங்கள்ளே அத்துமீறி நடக்கிற இளைஞர் இளைஞிகளை போலீசுலே புடிச்சு கொடுக்கப் போறாங்களாம். இதுவும் ஒரு விதத்துலே அத்து மீறல்தானுங்களே?

பொது இடத்துல நடக்குற அழிச்சாட்டியங்களை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும், சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும், காவல்துறையும் மாவட்ட அரசு அதிகாரிகளும் இருக்கறப்போ முன்னணி காரங்களும் பின்னணி காரங்களும் இப்படி செய்யுறது நல்லாவா இருக்கு?

இந்தக் கூட்டத்துக்குள்ளே சமுக விரோதிகளும் பூந்துக்கிட்டு போலீஸ்லே புடிச்சு கொடுக்கப்போறேன்னு இளம்ஜோடிகளை அலைக்கழிக்க இம்சை அரசனா மாறுனா என்னாங்க செய்யிறது?

ஒரு சில இடத்துலே திருடனுங்களை புடிக்கிறோமுன்னு சொல்லிப்புட்டு வெளியூர்லேந்து வந்த அப்பாவி பசங்களை திருடன்னு நெனச்சி அடிச்சே கொன்னுப்போட்ட சம்பவமெல்லாம் நடந்திருக்குதானே?

சரி. விஷயத்துக்கு வருவோம். லவ் பண்ணறதுக்கு நாள் நட்சத்திரம் பார்க்கணுமா? பிப்ரவரி 14 – காதல் பொறந்த தினமா என்ன? யாரோ ஒரு வெள்ளைக்காரன் சொல்லிட்டு போயிட்டான். அதுக்காக இந்த ஒரு நாளை புடிச்சு வச்சிக்கிட்டு ஜம்பம் அடிக்கிறது எனக்கு என்னவோ சரியா படலீங்க.

சமீபத்தில் நடந்த ஒரு கருத்துக் கணிப்பு இது. போன வருஷம் அமெரிக்காவிலிருந்து மட்டும் ஒரு பில்லியன் கிரீட்டிங் கார்ட்ஸ் இந்த மாசத்துலே சேல்ஸ் ஆனதாம். இதை வாங்குவது 85 சதவிகிதம் பொம்பளைங்கதானாம்.

புள்ளைகளா ! உங்களை வச்சு காசு பண்ணுறதுக்காக யாரோ செய்த வியாபார தந்திரம் இதுன்னு உங்களுக்கு தோணலியா?

1960-ஆம் ஆண்டுலே சுவீடன் நாட்டுலே இருக்குற ஒரு பூக்கள் உற்பத்தி
செய்யுற கம்பேனி ‘அனைத்து இதயங்கள் தினம்’ங்குற பேருலே இந்த நாளை பிரபலப்படுத்தி பெரிய அளவிலே காசு பண்ணுனுச்சு.

ஜப்பான், கொரியா நாட்டிலே சாக்லெட் வியாபாரம் நன்றாக சூடு பிடித்திருக்கிறதாம். இந்த நாளிலே பெண்கள் தங்களுடன் தொழிற்சாலையில் பணிபுரியும் ஆண்களுக்கு சாக்லெட் வாங்கி கொடுக்க வேண்டுமென்பது எழுதப் படாத சட்டமாக ஆகிவிட்டது. இதற்கு எசப்பாட்டு பாடும் விதமாக மார்ச் மாதம் 14-ஆம்தேதி ஆண்கள் வெள்ளை நிற சாக்லெட் வாங்கித் தர வேண்டும். இந்த நாளுக்கு ‘வெள்ளை தினம்’ என்று பெயர்.

டென்மார்க் மற்றும் நார்வே நாட்டுலே இதுக்கு பேரு Valentinsdag. அங்கே அவ்வளவு விமரிசையா கொண்டாடலேன்னாலும் ஜோடியா போயி ரொமாண்டிக் டின்னர் சாப்பிடறதுக்கும், பிரியாமனவர்களுக்கு சிவப்பு ரோஜா கொடுக்குறதுக்கும், ரகசிய காதலன்/காதலிக்கு வாழ்த்து அட்டைங்க கொடுக்கறதுக்குமாக இந்த நாளை ஒதுக்கி வச்சிருக்காங்க.

காதலர் தினம்ங்குற பேருல நடக்குற கூத்து, கும்மாளம், நம்ம நாட்டுக்கு ஒரு கலாச்சார சீரழிவுங்குறது உண்மைதானுங்களே? நியு இயர் கொண்டாட்டம்னு சொல்லி நட்சத்திர ஹோட்டலுக்கு முன்னாடி குடி போதையிலே நடந்த செக்ஸ் வக்கிர காட்சிகளையெல்லாம் இந்த டிவி காரங்க காட்டத்தானே செய்தாங்க.

அதே சமயம் தாக்கரே ஆளுங்க கிரீட்டிங்ஸ் கார்டு விக்கிற கடைக்குள்ளார புகுந்து சூறையாடுறதும் கலாட்டா பண்ணுறதும் பெரிய அநியாயமுங்க

அவருக்கு தாக்கரேன்னு பேரு வச்சது தப்பாப் போச்சுன்னு நெனக்கிறேன். (பால் தாக்கரே, ராஜ் தாக்கரே எல்லாரும் ஒரு குட்டையிலே ஊறுன மட்டைதானுங்களே?) அவங்க ஆளுங்களுக்கு சான்ஸ் கெடச்சா போதும்னு ‘உன்னை தாக்குறேன்; என்னை தாக்குறேன்’னு வரிஞ்சு கட்டிக்கிட்டு நிக்குறாங்க. இதுலே பாவம் நம்ம Big B வேற. இந்த ‘தாக்குற’ கோஷ்டிங்க கிட்ட மாட்டிக்கிட்டு ‘திரு-திரு’ன்னு முழிக்கிறாரு.

காதல் என்பது இரண்டு மனங்களோட சங்கமம். அந்த கெமிக்கல் ரியாக்ஷன் எல்லோர் முன்னாடியும் நடந்தா அது சங்கடம். சங்கடம் அவுங்களுக்கு மாத்திரம் இல்லே. அத பார்க்குற மத்தவங்களுக்கும் தர்ம சங்கடம்.

காதல் என்பது காதலன் காதலி மேலே வைக்கிற அன்புக்கு மாத்திரம் சொல்றதில்லே. அண்ணன் தங்கச்சி மேலே வச்சிருக்கிற பாசத்துக்கு பேரும் காதல்தான். அம்மா, அப்பா மேலே நாம வச்சிருக்கிற அன்புக்கு பேரும் காதல்தான்.

“Thinking of You”, “You Are Mine” “Forget me not” அப்பிடின்னு பத்திரிக்கையிலே விளம்பரம் பண்ணி நம்மோட காதலை ஊரறிய உலகறிய தம்பட்டம் அடிக்கனுமா என்ன? காதலென்ன பாக்கெட் ஷாம்பூவா. விளம்பரம் செய்வதற்கு?

எங்க அம்மாக்கிட்ட நான் போயி அம்மா ப்ளீஸ் “Forget-me-not” ன்னு சொன்னேன்னு வச்சுக்குங்க “அட கிறுக்குப்பய மவனே! இவ்ளோ நேரம் நல்லாத்தானே இருந்தே? திடீர்ன்னு உனக்கு என்னாச்சு?”ன்னு கேப்பாங்க.

தீபாவளி எதுக்கு கொண்டாடுறீங்கன்னு கேட்டா நீங்க டக்குன்னு சொல்லிடுவீங்க. பொங்கலு எதுக்கு கொண்டாடுறீங்கன்னு கேட்டா அதுக்கும் பதிலு சொல்லிடுவீங்க. வாலண்டைன் டே எதுக்கண்ணே கொண்டாடுறீங்கன்னு கேட்டா சரியான பதிலு வராது.

எதுக்காக கொண்டாடுறோம்னு தெரிஞ்சுக்காமலேயே, எல்லாரும் கொண்டாடுறாங்க அதுக்காக நாமளும் கொண்டாடுறோம்னு கொண்டாடுறது சரிதானான்னு சொல்லுங்க.

இந்த காதலர் தினம் பிஷப் புனித வாலண்டைன் ஞாபகார்த்தமா கொண்டாடுறாங்க. கிபி 269 ரோம் நாட்டிலே வீர மரணம் அடைஞ்சதா சொல்றாங்க. வாலன்டைன் பாதிரியார் பல காதலர்களுக்கு துணை நின்று அவர்களோட காதலை நிறைவேற்றி வச்சாராம். அவர் மறைந்த தினம் இதுதானாம்.

நம்ம ஊருலே கல்யாணம் நடத்தி வைக்கிற வைக்கிற டவுன் காஜி இப்ராஹிம் ஹாஜியாரோ அல்லது புரோகிதர் சேஷகோபாலன் சாஸ்திரியோ அல்லது திருமண பதிவாளர் ராமசாமியோ இறந்துட்டாருன்னு வச்சுக்குங்க. அந்த நாள்தான் காதலர் தினம்னு சொன்னா எப்படி இருக்கும்?

எந்த வாலண்டைன் பேருல இதை கொண்டாடுறாங்க என்பது இன்னும் சர்ச்சையாகவே இருக்குது. ஜாப்ரி சாஸர் காலத்துலே வாழ்ந்த வாலண்டைனா? ஆரோலியன் சக்கரவர்த்தி ஆட்சிகாலத்திலே வாழ்ந்த Valentine of Temi-யா? சரியாகத் தெரியாது.

இதே பிப்ரவரி 14 தேதியிலே ஆப்பிரிக்காவிலே இன்னொரு வாலண்டைன் பாதிரியார் தன் சகாக்களுடன் ஆப்ரிக்காவில் கொல்லப்பட்டார் என்கிற செய்தியை கத்தோலிக்க கலைக்களஞ்சியத்திலே காண முடியுது,

காதல் கதையோடு சம்பந்தப்பட்டது ரோம் நகரத்தை சேர்ந்த வாலண்டைன்தான்னு போலண்டிஸ்ட் என்கிற அறிஞர் அடிச்சு சொல்லுறாரு.

பறவைகள் தங்களுக்குள் காதலை அறிவிப்பதும் கல்யாணம் பண்ணிக் கொள்வதும் இந்த மாதத்தில்தான் என்று வேறு கதை கட்டி விட்டிருக்காங்க.

சித்திரைத் திருநாள், பொங்கல் இந்த கொண்டாட்டத்துக்கெல்லாம் ஒரு பின்னணி இருக்கு. யாரோ செய்கிறார்கள் என்பதற்காக கொண்டாடுவதில் அர்த்தமே இல்லை. ஒரே ஒரு நாள் மட்டும் புரிவதற்கல்ல காதல். காலம் முழுக்க புரிய வேண்டியது காதல்.

ஒரு விவரமான தம்பி இணயத்தில் எழுதியிருந்த கவிதையொன்று என்னை மிகவும் கவர்ந்தது.

காதலர் தினம்
பிப் 14
குழந்தைகள் தினம்
நவம்பர் 14
கூட்டி கழித்துப் பார்
கணக்கு சரியாய் வரும்!!!

தம்பி நன்றாக கணக்கு போட்டிருக்கிறது. Dating என்ற அம்சமும் இந்த நாளில் வைத்திருப்பது அதற்காகத்தானோ என்று புரியவில்லை.

இந்த காலத்து புள்ளைங்க படிச்சவங்க. படிச்சவங்க மாத்திரம் இல்லீங்க. உலகத்தை நல்லா புரிஞ்சவங்களாவும் இருக்காங்க. வாழ்க்கையிலே தடம் மாறுனா அதோட பாதிப்பு என்னவா இருக்கும்னு அவங்களுக்குத் தெரியும். எய்ட்ஸை பத்தி கேட்டா நமக்கு பாடம்கூட அவங்க நடத்துவாங்க.

இதைக் கொண்டாடுவதா; வேண்டாமா? நமது கலாச்சாரத்துக்கு இது ஏற்றதா; இல்லையா?

முடிவு எடுக்க வேண்டியது நீங்கதான் புள்ளைங்களா. The Ball is in your court.


vapuchi@hotmail.com

Series Navigation

அப்துல் கையூம்

அப்துல் கையூம்