இறைவனின் தமிழ்ப் பேச்சு

This entry is part [part not set] of 34 in the series 20100206_Issue

முனைவர் மு. பழனியப்பன்



இறைவன் மொழி கடந்தவன். எல்லை கடந்தவன். முடிவும் முதலும் அற்றவன். முதலும் முடிவும் பெற்ற இறையடியார்கள் தமது கால, நில எல்லைக்குள் நின்று, தாமறிந்த மொழியிலேயே அவனைத் துதித்துப் போற்றுகின்றனர். அனைத்தும் கடந்த இறைவனை, அனைத்தையும் கடக்க வேண்டி, அனைத்தையும் கடக்காத இறையடியார்கள் பாடும் அனுபவப்பாடல்களே பக்திப்பாடல்கள் ஆகின்றன.

பல்வேறு மொழிகளில், பல்வேறு கால எல்லைகளில் பாடப்பெற்ற இறையடியாரின் பாடல்களை இறைவன் அவ்வவ் மொழியிலேயே அறிந்து அவரவர்க்கு அருள் செய்கிறான். இறைவன் அனைத்து மொழிகளையும் தோற்றுவித்தான் என்ற புராணக் கருத்து இந்நிலைக்கு வலுவூட்டும். அவனே தோற்றிய மொழிகளில் அவனைப் பற்றிய இறையடியாரின் பாடல்களை அவனே கேட்டு ரசிக்கும் மிகச் சிறந்த ரசிகனாகவும் இறைவன் விளங்குகின்றான்.

பக்தி இலக்கியங்களுக்குள் இறைவன் பாத்திரமாக வருவது என்பது தவிர்க்க முடியாததாகி விடுகின்றது. பெரியபுராணத்துள் பல இடங்களில் சொல்லாகவும், பொருளாகவும், தானகவும், மாற்றாகவும், வேடம் புனைந்தும், வேடமின்றியும், கனவிலும், நனவிலும் இறைவனின் தனித்த வருகை அல்லது சக்தியுடனான வருகை அல்லது சக்தியும் மழலையும் கூடிய வருகை பதிவு செய்யப் பெற்றுள்ளது. இவ்விடங்களில் இறைவன் பேசிய மொழி தமிழாகவே இருந்திருக்கிறது என்பது தெள்ளத் தெளிவு.

கண்ணப்ப நாயனார் புராணத்தில் தமிழ் மொழியில் இறைவன் கனவில் நீண்ட உரையாடலையே சிவகோசரியாரிடம் நிகழ்த்துவதாக சேக்கிழார் படைத்துள்ளார். இது போன்ற நீண்ட உரையாடல் பெரிய புராணத்துள் இல்லை என்று சொல்லுமளவிற்கே இது அமைந்துள்ளது.

சிவகோசரியார் மறை அறிந்தவர். வேத மொழியான வடநூல் தெளிந்தவர். ஆகமம் அறிந்தவர். `மறை மொழியாலே துதி செய்து ‘ கண்ணப்பநாயனார் புராணம்(140) என்ற அடி வழியாக சிவகோசரியார் வடமொழி அறிந்து அவற்றில் வல்லமை பெற்று வணங்கும் திறம் வாய்க்கப் பெற்றவர் என்பது தெரியவருகிறது.

திண்ணனோ தமிழ் மட்டுமே அறிந்த பக்தன். ஆகமம் அறியாதவன். மறையும் அறியாதவன். சொல் வழியால் பூசனை முறை அறிந்து பூசிக்க முன்வந்தவன். ஆனால் இரும்பு பொன் ஆனாற் போல் யாக்கையை திருக்காளாத்திநாதரின் அருள்நோக்கால் பெற்றவன். மலம் முன்றும் அற்று அன்பின் பிழம்பாய்க் காட்சி தருபவன்.

அவனின் அன்புத்திறத்தை இறைவன் சிவகோசரியாருக்கு கனவில் உரைக்கின்றான். ” மவுலி வேதியர் முன் எழுந்தருளி, வன் திறல் வேடுவன் என்று மற்றவனை நீ நினையேல், நன்று அவன் தன் செயல் தன்னை நாம் உரைப்பக் கேள்” (156)என்ற முன்னுரையுடன் இறைவனின் உரை தொடங்குகிறது.

இது முதல் ஐந்து பாடல்கள் இறைவனின் திருப்பேச்சை உரைப்பனவாக சேக்கிழாரால் செய்யப் பெற்றுள்ளன. ஆனால் இப்பாடல்கள் பல காரணங்களால் பிற்சேர்க்கை என்றும், இடைச்செருகல் என்றும் பல பெரியபுராணப் பதிப்பாசிரியர்களால் விலக்கும் தன்மைக்கும் ஆளாகியுள்ளது.

இவ்விலக்கலுக்குக் காரணம் என்னவாயிருக்க முடியும் என்று சிந்திப்பதும் வேண்டும். தமிழில் இறைவன் பேசினான் எனில் அது தமிழுக்கும் இறைவனுக்கும் இடையேயான உறவை மேம்படுத்தி விடும் என்ற தமிழ் அர்ச்சனை அரசியலின் எதிரொலி கூட இவ்விலக்கலுக்குக் காரணமாக இருந்திருக்க முடியும்.

இவ்வைந்துப் பாடல்களிலும் தமிழ்மரபும் வேதமரபும் ஒப்பு நோக்கப்படுகின்றன. திண்ணனாரின் `வடிவு, அறிவு, செயல் எல்லாம் நமக்கு இனிய’ (157) என்று இறைவன் திருவாய் மலர்ந்தருளுகிறார். மேலும் திண்ணனாரின் செருப்படி முருகவேளின் அடிச் சிறப்பிற்கு ஈடானது.(158) திண்ணனின் அபிடேக நீரான வாய் உமிழ்நீர் கங்கையை விடப் புனிதமானது. (159) திண்ணனின் தலையில் இருந்து இறைவன்மீது விழுந்த மலர்கள் நான்முகன், திருமால் முதலான மறைவவல்ல தேவர்கள் சூட்டும் மலர்களிலும் சிறந்தது. (160) திண்ணன் தான் உண்டு தந்த உணவு ` மறை வேள்வியோர் முன்பு தரும் திருந்து அவியில் எய்யும் வரிச் சிலையவன்தான் இட்ட ஊன் எனக்கு இனிய(161)”. திண்ணன் இறைவன் முன் பேசும் அன்புப் பேச்சுக்கள் மந்திரங்கள், தோத்திரங்கள் இவற்றை விடச் சிறப்புடையன (162) என்று திண்ணனாரின் அன்புச் செயல்களைச் சிறப்பித்து இறைவன் தமிழில் பேசுவதாகச் சேக்கிழார் அமைக்கிறார்.

இப்பகுதிகளில் மந்திரங்கள், வேள்வியில் தரப்படும் அவியுணவு, பிரம்மன் திருமால் சூட்டும் மலர்கள், கங்கை, கந்தன் போன்ற வேதமரபுகள் தமிழ் மரபு சார்ந்த திண்ணனின் செயல்களோடு ஒப்பு நோக்கிப் பார்க்கப்பெற்றுள்ளன. சுட்டப் பெற்ற ஐந்துப்பாடல்களிலும் சரிக்குச் சமமாக வேதமரபும் தமிழ் மரபும் ஒப்பு நோக்கப் பெற்று மறைவல்ல சிவகோசரியாரிடம் தமிழ்மரபின் அன்புப்பெருமை உணர்த்தப்படுகிறது.

நிறைவில் கண்ணப்பபராகக் கண்ணிழந்து அப்பும் பொழுது,
“கானவர் பெருமானார்தம் கண் இடந்து அப்பும்போதும்
ஊன் அமுது உகந்த ஐயர் உற்று முன் பிடிக்கும் போதும்
ஞானமா முனிவர் கண்டார் நான்முகன் முதலாய் உள்ள
வானவர் வளர் பூமாரி பொழிந்தனர் மறைகள் ஆர்ப்ப” (184)
என்ற இப்பாடலில் ஞானமாமுனிவர் கண்ணப்பருக்குக் கிடைத்த அருள் பேற்றைக் கண்டு கொண்ட நிலையையும், நான்முகன் முதலான தேவர்கள் மறைகளுடன் பூமாரி பொழிந்ததையும் சேக்கிழார் குறிப்பிடுகின்றார். இதுவரை ஈடாகவே கூறப்பட்டு வந்த இரு மரபுகளுள் ஒன்றான தமிழ் மரபு நிறைநிலையில் வெற்றி பெறுகிறது. மறைமரபு அதனைக் கண்டு கொண்டு நிற்கிறது. பெரியபுராணச் சால்பின் வழியாக இவ்வாறு தமிழ்மரபு தழைத்தோங்கி நின்றுள்ளது. இம்முறை என்றும் தொடரும். தொடரவேண்டும்.

muppalam2006@gmail.com

முனைவர் மு. பழனியப்பன்
இணைப் பேராசிரியர், மா. மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

Series Navigation

முனைவர் மு. பழனியப்பன்

முனைவர் மு. பழனியப்பன்