கரை தேடும் ஓடங்கள் – வித்தியாசமான களம்

This entry is part [part not set] of 35 in the series 20100121_Issue

நேசமுடன் வெங்கடேஷ்


ராமசந்திரனின் உஷாவின் முதல் நாவல். இணையத்தில் எழுதுபவர்களுக்கு, படிப்பவர்களுக்கு உஷாவை நிச்சயம் தெரிந்திருக்கும். நுனிப்புல் என்றொரு வலைப்பதிவு வைத்திருக்கிறார் உஷா.

இந்த நாவல் என்னை மூன்று அம்சங்களில் மிகவும் கவர்ந்தது. ஒன்று இதன் உள்ளடக்கம். புதிய களம். துபாய் வந்துவிட்டு, துன்பப்பட்டு, திண்டாடி மீளும் இரண்டு பெண்கள்; இன்னொரு பெண் அங்கே வேலை செய்து சம்பாதித்து குடும்பத்தைக் காப்பாற்றியவர், ஊர் திரும்புகிறார். துபாய் பற்றியும் அரபு தேசங்கள் பற்றியும் நம்மிடம் இருக்கும் மனச்சித்திரங்களை இந்த கதைத் தொடக்கமே மாற்றி அமைத்துவிடுகிறது. சிறையில் இருந்து ஒரு பெண் மீண்டும் இந்தியா திரும்ப அனுப்பப்படுகிறார். இன்னொரு பெண், ஏஜெண்டால் ஏமாற்றப்பட்டு, பின் தப்பித்து, இந்தியா மீளுகிறாள். இதுவரை சொல்லப்படாத கதை. அதனாலே படிக்கத் தூண்டுவதாக இருக்கிறது.

இரண்டு, நாவலை துபாய் ஏர்போர்ட்டில் தொடங்குபவர் அப்படியே இந்தியா வந்து அப்பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளைத் தொடர்ந்து எழுதிச் செல்கிறார். சட்டென பழைய நினைவுகளுக்குப் போய், பிளாஷ்பேக்கில் கதை சொல்ல ஆரம்பித்துவிடுவாரோ என்று லேசாக பயந்தேன். பழைய சம்பவங்கள் கதையில் வராமல் இல்லை. ஆனால், அதை கதையின் ஓட்டத்தோடு மிக லாகவமாக இணைத்திருக்கிறார் உஷா.

மூன்றாவது, இஸ்லாமியத் தமிழைக் கையாண்டிருக்கும் திறன். முன்னுரையில் நாகூர் ரூமி, உஷாவின் மொழிப் பயன்பாட்டைப் பாராட்டியிருக்கிறார். அப்படியென்றால், மொழிப் பயன்பாடு சரியாக வந்திருக்கிறது என்றே அர்த்தம்.

என்னை மிகவும் கவந்த ஒரு அம்சம், கதையின் தொடக்கம்தான். கதை தொடங்கப்படும் இடம் பளிச்சென்று இருக்கவேண்டும். கட்டிப்போடுவது போல் இருக்கவேண்டும். நாவலுக்குள் இழுத்துப் போடுவதாக இருக்கவேண்டும். உஷா அதைச் சரியாகப் புரிந்துகொண்டு இருக்கிறார். பிரச்னையின் மையத்தில் இருந்து நாவலைத் தொடங்கியிருக்கிறார். கவனத்தைக் கவரும் இடம் அது.

குறைகள் இல்லையா? இருக்கின்றன. முதல் நாவல் எழுதியிருக்கிறார். பாராட்டுவது மட்டுமே நம் வேலை. ஏற்கெனவே கலைமகள், இந்த நாவலைப் பாராட்டி இருக்கிறது. இந்த நாவல், கலைமகள் கி.வா.ஜ. நூற்றாண்டு விழா நாவல் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றிருக்கிறது. தகுதியான பாராட்டு.

கரைதேடும் ஓடங்கள் – உஷா ராமசந்திரன் – சந்தியா பதிப்பகம், எண்.57 – 63ஆவது தெரு, 9வது அவென்யூ, அசோக் நகர், சென்னை 600083. விலை ரூ.50

Series Navigation

நேசமுடன் வெங்கடேஷ்

நேசமுடன் வெங்கடேஷ்