அவதார் – பழங்குடி மூதாதையர்களின் சொற்களும் அரசியலின் பிரமாண்டமும்

This entry is part [part not set] of 26 in the series 20100101_Issue

கே.பாலமுருகன்



“நிசத்தை நோக்கிய புனைவு ஆனால் லௌளதிக யதார்த்தங்களுக்கு அப்பாற்பட்டவை இந்த அவதார்” -ஜேம்ஸ் கேமருன்

அவதார் சினிமா ஜனரஞ்சகமான முறையில் தொழில்நுட்பத்தின் அத்துனை பிரமாண்டங்களையும் பிரயோகித்து எடுக்கப்பட்ட காத்திரமான அரசியல் விமர்சனங்களுடன் அதிகார சக்திகளுக்கு எதிரான சினிமா என அடையாளப்படுத்த முடிகிறது. படத்தில் இடம்பெறும் அறிவியல் அணுமானங்களும் பிரயோகங்களும் வியக்க வைப்பதோடு அறிவியல் யுகத்தின் மாற்று பரிணாமங்களையும் பரிந்துரைக்கிறது. 11க்கும் மேற்பட்ட ஆஸ்கார் விருதுகளை வென்ற டைட்டாணிக் சினிமாவின் இயக்குனர் ஜேம்ஸ் கேமருன் அவர்களின் இயக்கத்தில் அமெரிக்காவின் அறிவியல் புனைவு திரைப்படமாக வெளிந்திருக்கும் இப்படம் 1994 தொடங்கியே 114 பக்கங்களுக்கு திரைக்கதை எழுதப்பட்டு கற்பனை செய்யப்பட்டவையாகும்.

கற்பனை ஆளுமை தமிழ் சினிமாவில் வரண்டு வரும் காலக்கட்டத்தில், இந்துத்துவ சொல்லாடலை முன்வைத்து “அவதார்” என்கிற பெயருடன் மாற்று உலகத்தின் பிரமாண்டங்களை அதிசயத்தக்கும் வகையில் கற்பனையின் உச்சங்களுடன் படைத்திருப்பது ஜேம்ஸ் கேமருன் அவர்களின் 10 வருடத்திற்கும் மேலான ஆய்வின் வெற்றியைக் காட்டுகிறது. எந்தத் திரைப்படமாக இருந்தாலும் வரலாறு, பண்பாடு, கலாச்சாரம், பிராந்திய அரசியல் என்கிற ரீதியில் ஆய்வுச் செய்யப்பட்டு முழு தகவல்களையும் சேகரித்து எடுக்கப்படுபவையாக இருக்க வேண்டும்.

2154 ஆம் வருடத்தில் பண்டோரா எனும் நிலவு போல இருக்கும் கிரகத்தில் ஒரு மாபெரும் மரத்தில் வசிக்கும் நாவிஸ் எனும் பழங்குடியினரை அங்கிருந்து துரட்டியடித்து அந்த நிலத்தைக் கைப்பற்றுவதற்காக அறிவியல் தொழில்நுட்பங்களுடனும் இராணுவ படையுடனும் அங்கு நுழையும் மனித படைக்கும் அந்தப் பழங்குடிவாசிகளுக்கும் இடையே ஏற்படும் போராட்டம்தான் கதையின் மையம். அதிகார சக்திகள் தனது அரசியல் பின்புலத்தைப் பயன்படுத்தி எளிய மக்களின்/ பழங்குடி மக்களின் நிலத்தையும் உரிமையையும் பறிக்கும் செயலைக் கண்டிக்கும்/விமர்சிக்கும் வகையில் மாய யதார்த்த புனைவுடன் இப்படத்தின் கதை கையாளப்பட்டிருக்கிறது.

அந்தப் பழங்குடிவாசிகளுடன் பழகி அவர்களின் இருப்பையும் வாழ்வையும் புரிந்துகொண்டு அவர்களைக் கையாள்வதற்காக அவர்களைப் போலவே உருவம் கொண்ட (டி.என்.ஏ கலப்பின் மூலம்) தயாரிக்கப்பட்டு, இராணுவ வீரர்களின் மூளையின் செயல்பாடுகளை அந்த உடலுக்குள் செலுத்தி இயங்க வைக்கிறார்கள். நிச உடல் இங்கிருக்க மூளையின் செயல்பாடுகள் மற்றும் சக்தி தொழில்நுட்பத்தின் மூலம் இடம் மாற்றப்பட்டு, பழங்குடியைப் போல உருவம் கொண்ட நகலுக்குள் செலுத்தப்பட்டு, அந்தப் போலி பழங்குடிகளைப் பரிசோதனை முயற்சிக்காகப் பயன்படுத்துகிறார்கள்.

படத்தின் கதாநாயகன் கால் ஊனமுடையவன். அவனுடைய மூளை அவனது புதிய உடலான பழங்குடி உடலுக்கு மாற்றப்படும்போது, தனது கால்கள் வேகமாக இயங்குவதன் அதிசயத்தையும் அனுபவத்தையும் கண்டு வியந்து தூரமாக ஓடி தனது புதிய சக்தியைக் கொண்டாடுகிறான். பிறகு காட்டில் சிக்கிக் கொள்ளும் அவன் அங்குள்ள வித்தியாசமான மிருகங்களால் தாக்கப்படும்போது இன்னொரு நிசமான நாவிஸ் பழங்குடியைச் சேர்ந்த பெண் ஒருத்தியால் காப்பாற்றப்பட்டு, அவர்களின் ஒருவனாக மாறும்வரை பல சோதனைகளைக் கடந்து வருகிறான். இறுதியில் அந்தப் பழங்குடியின் நிலத்தைப் பறிக்கும் அதிகார சக்திகளுக்கு எதிராக இயங்குவதன் மூலம், அவர்களில் ஒருவனாக தன்னை அங்கீகரித்துக் கொள்கிறான். இதைக் கண்டறியும் இராணுவ படைத்தளபதி அவனை மீண்டும் தன்னுடைய நிச உடலுக்குக் கொண்டு வந்துவிடுகிறான். அதையும் முறியடித்துக் கொண்டு அவன் மீண்டும் பழங்குடியின் உடலுக்குள் நுழைந்து அவர்களின் உரிமைக்காக அவர்களின் நிலப்பரப்புக்காக போராடி நாவிஸ் பழங்குடியின் தளபதியாக இயங்கி, இறுதியில் நாவிஸ் பழங்குடியாகவே நிலைப்பதன் மூலம் அவனது உயிர் புதிய அவதாரத்தை அடைகிறது. இதுவே கதையின் மிக எளிமையான சுருக்கம்.

நாவிஸ் பழங்குடியின் புனித மரத்தைப் பற்றிய தகவல் மிக அழகாக உருவாக்கப்பட்டிருப்பது பாராட்டுதலுக்குரியது. ஒட்டுமொத்த பழங்குடியின் இயக்கமும் இருப்பும் அந்த மரத்தின் தேவியான ஈவா என்பவளாலே தீர்மானிக்கபடுவதாகும், ஈவாவின் கண்களின் வழியாக இந்தக் காட்டையும் இந்த இயற்கையையும் காண வேண்டும் தரிசிக்க வேண்டும், அப்பொழுதே உயிர்களின் மகத்துவத்தை அடைய முடியும் என்றும் கற்பிக்கப்படுகிறது. மேலும் அந்தப் பழங்குடியின் தலை முடியின் சடையை அந்தப் புனித மரத்தின் தொங்கும் வேர்களின் நுனியில் இணைப்பதன் மூலமே ஈவாளுடன் நாம் நமது வேண்டுதலை முன்வைக்க முடியும். புனித மரத்தின் ஒவ்வொரு வேர்களிலும் அந்தப் பழங்குடி மக்களின் மூதாதையர்களின் சொற்கள் குரல்கள் சேகரிக்கப்பட்டிருப்பதாகவும் அந்தக் குரல்கள் எப்பொழுதும் ஒலித்துக் கொண்டிருப்பதாகவும் அவர்கள் நம்புகிறார்கள்.

பழங்குடியின் காட்டை அழிக்க வரும் மனித படைகளைத் தகர்ப்பதற்காக ஈவாளின் ஆசியுடன் இயற்கையையும் இயற்க்கையின் வழி பெறப்பட்ட சக்தியையும் பயன்படுத்தி அவர்களைத் தோற்கடிப்பது மிகப் பிரமாண்டமான அரசியலை முன்வைத்து காட்டப்படும் புனைவாகவே பார்க்க முடிகிறது. தொழில்நுட்பத்திற்கும் மனித வேட்டைக்கும் இயற்க்கைக்கும் மத்தியில் நிகழும் இந்தப் போரின் அதிசயமே அவதார். இயற்கையின் மீது செலுத்தப்படும் அத்துமீறல்களையும் மனித அதிகாரத்தின் விரிவாக்க ஆக்கிரமிப்புகளையும் மிகவும் சாமர்த்தியமாக விமர்சிக்கும் அல்லது எதிர்க்கும் புனைவை ஜேம்ஸ் கேமருன் துணிச்சலான சினிமா என்கிற வகையில் தந்திருப்பது அமெரிக்கா திரைஉலகத்தின் கமர்சியல் கட்டுமானத்தைக் கட்டவிழ்ப்பதாக அமைந்திருக்கிறது.

அந்தப் பழங்குடி பெண் ஒரு கட்டத்தில் சொல்லும் ஒரு வரி இன்னமும் மனதை நம் யதார்த்தங்களுக்கு வெளியே வைத்து நெளிய விடுகிறது.

“இந்த உடல், உயிர் இயற்கையிலிருந்து பெறப்பட்ட சக்தி, மரணம் என்பது அதைத் திரும்பி இயற்கையிடமே ஒப்படைக்கும் ஒரு சடங்கு”

ஆக்கம்: கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா
http://bala-balamurugan.blogspot.com/
bala_barathi@hotmail.com

Series Navigation

கே.பாலமுருகன்

கே.பாலமுருகன்