கலாமோகனின் கதைகள் குறித்து… ஒரு முன்குறிப்பு

This entry is part [part not set] of 45 in the series 20071227_Issue

சு. குணேஸ்வரன்



க. கலாமோகன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். புலம்பெயர்ந்த ஈழத்தமிழ்ப் படைப்பாளிகளில் ஒருவராக அறியப்பட்டவர். பிரெஞ்சு மொழியிலும் எழுதி வருபவர். 1983 இல் இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து தற்போது பிரான்சில் வாழ்ந்து வருகின்றார்.

1999 இல் பிரான்சில் இருந்து எக்ஸில் வெளியீடாக வந்த ‘நிஷ்டை’ சிறுகதைத் தொகுப்பின் மூலம் தமிழ் இலக்கிய உலகின் கவனிப்பைப் பெற்றவர். இதன் பின்னர் 2003 இல் அவுஸ்திரேலியாவில் இருந்து மித்ர வெளியீடாக ‘ஜெயந்தீசன் கதைகள்’ தொகுப்பும் வெளிவந்துள்ளது. இவை தவிர ‘வீடும் வீதியும்’ என்ற நாடக நூலும், பிரெஞ்சு மொழியில் கலாமோகனால் படைக்கப்பட்ட ‘Et damain’ (நாளையும்) கவிதைத் தொகுப்புமாக இதுவரை நான்கு நூல்கள் வெளியாகியுள்ளன. கலாமோகனின் பிரெஞ்சுக் கவிதைத் தொகுப்பை பேராசிரியை கிறிஸ்டின் மார்ஸ்ரண்ட் ‘Og I Morgen’ என்ற நூலாக டெனிஸ் மொழியில் மொழிமாற்றமும் செய்திருக்கின்றார்.

நவீன தமிழ் இலக்கியத்தின் வீச்சான எல்லைகளைத் தொட்டுவிட முனையும் கலாமோகனின் படைப்புக்களில் நிஷ்டை, ஜெயந்தீசன் கதைகள் என்ற இரண்டு தொகுப்புக்களையும் முன்வைத்தே இக்குறிப்பு வரையப்படுகிறது.

நிஷ்டை தொகுப்பில் உள்ள 12 சிறுகதைகளும் உதிரியாக வெளிவந்த புகார், பாம்பு, குளிர், 20 ஈரோ, ஆகியனவும் நவீன தமிழ்ச் சிறுகதை வடிவத்தின் சாத்தியப்பாடுகளை உள்வாங்கிய கதைகள். மறுபுறம் ‘ஜெயந்தீசன் கதைகள்’ என்ற தொகுப்பு, 67 குறுங்கதைகளைக் கொண்டமைந்தவை. இக்கதைகளை Satire (கேலி, வசை) வகைக் கதைகள் என எஸ். பொ குறிப்பிடுகிறார். இவை சிறுகதைகள் என்ற சட்டகத்துள் அமையாதவை. ஈழத்தில் காசி ஆனந்தன், செம்பியன் செல்வன் ஆகியோர் எழுதியுள்ள சில குறுங்கதைகளின் அமைப்பில் உள்ளன. ஆனால் கலாமோகன் இக்கதைகளில் சுட்டும் பொருட்பரப்பு வித்தியாசமானது. சமூகத்துள் உள்ளமுங்கியிருக்கும் பல விடயங்களை வெளிக் கொண்டு வருவதும் அவற்றை ஏளனம் செய்வதுமே ஜெயந்தீசன் கதைகளின் முதன்மையான நோக்கமாயுள்ளது.

இந்த வகையில் கலாமோகனின் அக்கறைகள் அதிகமும் புலம்பெயர்ந்து வாழ்கின்ற ஈழத்தமிழர்கள் மீதாகவும், தவிர்க்க முடியாத வகையில் அவர்களின் தற்கால வாழ்வியல் மீதான விமர்சனமாகவும் எடுத்துக் கொள்வதற்குரிய சாத்தியம் அதிகமாயுள்ளது.

இளமைப் பருவம், தாயக நினைவு, அகதி வாழ்வு, அகதி அந்தஸ்து பெறுவதற்கான அவலம், தொழிற்தளம், தனிமை வாழ்வு, ஒழுக்கம் தவறல், மணப்பெண் தேடல், மணப்பெண் இறக்குமதி, சீதனம், சாதி, இளைஞர் நிலை, குடும்ப உறவுநிலை, குடும்ப உறவுமுறையின் குழப்பங்கள், அமைப்புக்களின் பிரச்சனைகள், ஏமாற்றங்கள், பகட்டு வாழ்வு, பிரபல்ய முயற்சிகள் ஆகிய விடயங்களை கலாமோகன் தனது கதைகளுக்கு கருவாகக் கொள்கிறார்.

ஒருமித்த பார்வையில் கலாமோகனின் சிறுகதைகளும் சரி, குறுங்கதைகளும் சரி, பின்வருவனவற்றை உள்ளடக்கமாகக் கொண்டுள்ளதை அவதானிக்கலாம்.

1. ஆண் பெண் ஒழுக்கவியல் மரபினைக் கேள்விக்கு உட்படுத்துதல்.
2. குடும்ப உறவுநிலையில் ஏற்படும் சிக்கல்களை உணர்த்துதல்.
3. குருட்டு நம்பிக்கையும், பிரபல்யத் தேடலும் வளர்ந்து வருவதை ஏளனஞ் செய்தல்.
4. சூழலின் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளல்.

தமிழ்ப் பண்பாட்டால் கட்டமைக்கப்பட்ட மாந்தர்கள் முற்றிலும் வித்தியாசமான அந்நிய கலாசார சூழலிலே வாழ நேரிடுகின்றபோது அவர்தம் சுய அடையாளத்துடனான பண்பாட்டுப் பெறுமானங்கள் உடைந்து போகின்றன. ஒரு வகையில் முதலாளி;த்துவ உலகும், பல்கலாசாரச் சூழலும் ஏற்படுத்தும் தாக்கத்தினால் இந்த மாற்றங்கள் ஏற்படுகின்றன. இது தமிழ்ப் பண்பாட்டின் ஒழுக்கவியல் மரபிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. இளைஞர்களாகவும் குடும்பமாகவும் புலம்பெயர்ந்துள்ள ஈழத்தமிழர்கள் வாழ்வை தாயகத்து சூழலிலிருந்து நோக்கும்போது இவ்வாறான கேள்வியே மிஞ்சுகிறது.

நிஷ்டை தொகுப்பில் உள்ள இரா, கனி, இழப்பு, ஈரம், தெரு, மற்றும் உதிரியாக வெளிவந்த புகார், பாம்பு, 20 ஈரோ, ஆகிய சிறுகதைகளும் மேற்குறிப்பிட்ட ஒழுக்கவியல் மரபின் மீதான கேள்விகளையே முன்வைக்கின்றன.

“கலாமோகனின் கதைகள் பாலியல் சார்ந்த குழப்பங்களுக்கு இலக்காவதுண்டு. அவரின் பெரும்பாலான கதைகள் ஆண் பெண் உறவுநிலைகளை எந்தச் சட்டகங்களுக்குள்ளும் நில்லாமல் வெளிப்படையாக, இயல்பாகப் பேசிவிடுகிறது….சிலவேளை கலாமோகன் சமூகத்துள் மறைந்து கிடக்கின்ற, நிகழ்கின்ற கள்ள உறவுகளை எந்;தப் பூச்சுகளுமின்றி சொல்ல வந்திருக்கிறார் என்று கருதவும் இடமுண்டு. எல்லாம் பிரதி மீதான வாசிப்பில்தான் உள்ளது.”(எம். கே. எம். ஷாகிப், சரிநிகர், 6-19 ஜூலை 2000, ப.15)

கந்தபுராண கலாசார மற்றும் சாதிய வர்க்க சிந்தனைகளாலும் கட்டமைக்கப்பட்ட ஈழத்தமிழர் வாழ்வு அதற்குள்ளேயே ஒழுக்கவியலையும் எழுதாத விதியாக வரித்துக் கொண்டது. இதனை இன்னமும் ஆழமாக நோக்கின் பல விவாதங்களை ஏற்படுத்தும். எதிர்மாறான விடைகளையும் தரக்கூடும்.

இளைஞர்களாகச் சென்றவர்களுக்கு ஏற்றுமதியாகும் மணப்பெண்களும், அங்கு குடும்ப வாழ்வில் புகுந்து கொண்டவர்களும் பல சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். சந்தேகம், விவாகரத்து, தனித்து வாழ்தல், மணப்பெண் மாறுதல், திருப்பி அனுப்பப்படல் என்றவாறு பல்வேறு வடிவப் பரிணாமங்களை இந்தப் பந்தம் ஏற்படுத்துகின்றது.

பாரம்பரியமாக வாழ்ந்த தமிழ்ப் பிரதேசங்களில் குடும்ப உறவுகளை அனுசரித்தும், வாழ்வின் சுகதுக்கங்களில் இணைந்தும் தம் வாழ்வை அமைத்த தமிழர் சமுகம்@ இன்று இயந்திர வாழ்வுக்குள் அந்நியப்பட்டுப் போன பின்பு அவசர அவசரமாக தமது அடையாளங்கள் எனக் கருதி வாழ்வுச் சூழலின் வசதியிலே குருட்டு நம்பிக்கையுடனும் பெரும் எடுப்பிலும் வீட்டு விசேடங்களை நிகழ்த்திக் காட்டலும், பிரபல்யப் பெருமை பேசுவதற்காக எதுவும் செய்யத் தயாராய் இருப்பதுவும் ஜெயந்தீசன் கதைகளின் குறுங்கதைகள் புலப்படுத்துகின்றன.

தற்கால வாழ்வின் அவசரக் கோலத்தில் உண்மைகளும் அர்ப்பணிப்புக்களும் தேவைகளும் பின்தள்ளப்பட்டு பொய்யும் பிரபலமும் பகட்டும் முன் நிறுத்தப்படுகின்றது. இவை தனியே புலம்பெயர் சூழல்தான் என்றில்லாமல் எங்கும் யதார்த்தமாகிப் போனதும் வேடிக்கையானதே.

சூழலின் யதார்த்தைப் புரிந்து கொண்டதான பல சிறுகதைகள் கலாமோகனிடம் வலுவாக உள்ளன. அது புகலடைந்த நாட்டு வாழ்வனுபவங்கள் ஊடாகப் புலப்படுத்தப்படுகின்றது. தொழிற்தளத்தை மையப்படுத்திய ‘உருக்கம்’ என்ற சிறுகதை மிகச் சிறந்த ஓர் அப்பாவித் தனமான சித்தரிப்பாக அமைந்துள்ளது.

‘என்ர பத்திரோன் (முதலாளி) நல்லவர். அவர் மட்டுமே, அவற்றை மனிசி, மகன், மகள், நாய்க்குட்டி, பூனைக்குட்டி எல்லாந்தான். பிரெஞ்சு ஒழுங்காகப் பேசமாட்டன் எண்டதாலை, எங்க என்னை நிப்பாட்டிப் போடுவாரோண்டு வேலைக்குப் போய்ச்சேர்ந்த காலத்தில எனக்கு அவரிலை பொல்லாத பயம். அவர் கதைக்கிறது எனக்கு வடிவா விளங்குறதில்லை. நான் கதைக்கிறதெல்லாம் தனக்கு வடிவாக விளங்குதெண்டு – என்னைப்போலை கையையும் தலையையுமாட்டிச் சொல்லிறவர். இங்கிலீஸிலை பேச வெளிக்கிட்டாலும் அவரோ, நீ உன்ரை பிரஞ்சிலை பேசு, அது தனக்கு நல்லா விளங்குமெண்டிறவர். நல்ல பத்திரோன். அவர் எங்கட சனங்களைப் போலயில்லை. சனங்கள் எப்ப பார்த்தாலும், நான் முவா துவா (நான், நீ) எண்டுதான் பிரெஞ்சு பேசுறன் எண்டு சொல்லி என்னை நக்கலடிக்குங்கள். அதுகளுக்குப் பொய்தான் பேசத்தெரியும். பத்திரோன் மட்டும் தான் உண்மை பேசுறவர். நல்ல பத்திரோன். என்னோடை நல்ல நேசம். நான் கோப்பையள் கழுவிக் கொண்டிருக்கேக்கை – குசினீக்கை வந்தாரெண்டா என்ரை முதுகிலை தட்டிச் சிரிக்காமல் போக மாட்டார். நல்ல பத்திரோன்.’(‘உருக்கம்’, நிஷ்டை தொகுப்பு, ப. 37)

இதுபோன்ற பல கதைகளை புகலிடத்தில் எழுத்துப் பயணத்தை ஆரம்பித்த இளைய பரம்பரை எழுத்தாளர்கள் பலரிடம் அவதானிக்க முடிகின்றது. அகதியாகிப் போன பரதேசி வாழ்வைப் புலப்படுத்தும் வகையில் அமைந்த ‘மூன்று நகரங்களின் கதை’, ‘எனது தேசம்’@ தனிமைத் துயரையும் ஆழ்மன விசாரணையையும் வெளிப்படுத்தும் ‘நிஷ்டை’, ‘நிழல்’ ஆகிய சிறுகதைகளும் சூழலின் யதார்த்தத்தைப் புரிந்து கொண்டமைக்கு நல்ல உதாரணங்கள் ஆகும்.

தமிழில் ஏற்கனவே இருந்தான வடிவத்தை அனுசரித்துச் செல்கின்ற கலாமோகன் புனைவின் தருக்கத்திற்கு ஏற்ப புதிய வடிவங்களையும் கையாள்;கின்றார். ‘ஈரம், இழப்பு’ இரண்டு சிறுகதைகளும் துண்டுதுண்டான கதை சொல்லலும், சாத்தியமானதை ஏற்றுக்கொள்ளலும் சாத்தியமற்றதை விலக்கலுமான வகையில் அமைந்துள்ளன. இது இன்றைய புனைவின் புதிய உத்தியாகவும், பின்நவீனத்துவக் கோட்பாட்டை அனுசரித்து மரபுவழிப்பட்டதை மறுப்பதுமாக அமைகின்றது. அவை கதைகளின் உள்ளடக்கத்தில் மட்டுமல்லாது உருவத்திலும் மாற்றத்தை வேண்டி நிற்கின்றன. புகலிடத்தில் ஏற்கனவே வெளிவந்த ஷோபாசக்தியின் தேசத்துரோகி சிறுகதைத் தொகுப்பில் உள்ள சில சிறுகதைகளில் இப்பண்பை அவதானிக்க முடியும்.

போதனையாகவோ சீர்திருத்தமாகவோ அமையாமல்@ உள்ளதை உள்ளபடி எல்லோரிடமும் கொண்டு செல்லக்கூடிய ஒரு உத்தியாக ‘ஜெயந்தீசன் கதைகள்’ அமைந்துள்ளன. அவை வெகுஜன இதழியலுக்குரிய வடிவத்தையும் கொண்டுள்ளன. இத்தொகுப்பிலுள்ள குறுங்கதைகளில் சில@ தமிழ்ப் போராளி அமைப்புக்கள் சார்ந்த விமர்சனத்தை முன்வைப்பனவாகவும் உள்ளன. புலம்பெயர் படைப்பாளிகள் சிலரிடம் இருக்கும் மாற்றுக்கருத்து சார்ந்த நிலைப்பாடாக இதனைக்கருதலாம். ஆனாலும் அவற்றில் இருக்கும் மிகைப்படுத்தப்பட்ட கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது.

நிஷ்டை சிறுகதைகளின் உருவ உள்ளடக்கம் அவரின் குறுங்கதைகளில் இல்லாதபோதும் இரண்டுமே சொல்லவிழையும் செய்திகளில் ஒன்றுபடுவதை அவதானிக்க முடிகின்றது. அத்தோடு கலாமோகன் கதைகளின் நடையும் (ளவலடந) கவனத்திற்கு உட்படுத்த வேண்டியவை. மேலே எடுத்துக் காட்டப்பட்ட ‘உருக்கம்’ கதையில் வரும் எளிமையான நடைக்கும் இவரின் ‘கனி’ கதையில்வரும் பைபிள்சார் நடைக்கும் இடையில் பெருத்த வி;த்தியாசத்தைக் கண்டு கொள்ள முடியும். ஏனைய கதைகள் இன்னோர் விதமானவை. இந்த ஏனையவை என்பவற்றுக்குள் வரும் கதைகளின் நடையே கலாமோகனின் அதிகமான கதைகளின் நடையாக உள்ளது. ‘மூன்று நகரங்களின் கதை’யில் வரும் ஒரு பகுதி

‘உடல். எனது உடல். காசினால் காக்கப்பட்ட உடல். எனது உடல் கடல் கடந்து அகதியாகிவிட்ட உடல். மூன்றாவது நகரில் நான் இப்போது அகதி. முதலாவது நகரிலோ அகதிப் பெருமை கிட்டாமல் எத்தனையோ உடல்கள் மண்ணிடை மண்ணாய்ப் புதைந்த வண்ணம். தப்புதல் கருத்துடனோ கட்சியுடனோ கடவுளுடனோ சம்பந்தப்;பட்ட விஷயமல்ல. காசுடன் சம்பந்தப்பட்டது என்பதை மூன்றாவது நகரில் காலடி எடுத்து வைத்த முதல் நாளிலேயே புரிந்து கொண்டேன். எனது மூன்றாவது நகரம் பாரிஸ்’ (‘மூன்று நகரங்களின் கதை’, நிஷ்டை தொகுப்பு ப.34)

என்றவாறு அமைவதனை உதாரணத்திற்காகக் குறிப்பிடலாம். இறுக்கமான கதைகளாயினும் சிக்கலற்ற மொழிக்கையாளுகை கதைகளில் வாசகனுக்கு ஏற்படும் ஈர்ப்பை அதிகரிக்கவே செய்கின்றன. கலாமோகனின் பின்நவீனத்துவ கதைகளுக்கும் இது பொருந்தக்கூடியது. முடிவாக@ கதைகளின் உள்ளடக்கத்தில், அவற்றின் உருவத்தில், அவற்றின் நடையில், வித்தியாசங்களை முன் நிறுத்துவதாக கலாமோகனின் படைப்புலகம் அமைந்துள்ளது.

இவ்வகையில் கலாமோகனின் இரண்டு தொகுப்புக்களும் மூன்று வகையான வடிவப் பிரக்ஞையை வேண்டி நிற்கின்ற அதேவேளை உள்ளடக்க ரீதியில் இரண்டுமே முக்கியமானவையும்கூட. ஒருபுறம் தமிழ்ப் பண்பாட்டு ஒழுக்கவியலை கேள்விக்கு உட்படுத்தலும் மறுபுறம் மிக வேடிக்கையான தமிழர் தம் வாழ்வியற் செயற்பாடுகளும் குறிப்பாக ஈழத்தமிழ்ப் பண்பாட்டு மனங்களின் படிப்படியான சரிவினையே புலப்படுத்தி நிற்கின்றன. இதனை உறுதிப்படுத்துவனவாகவே கலாமோகனின் இரண்டு தொகுப்புக்களும் அமைந்துள்ளன.


mskwaran@yahoo.com

Series Navigation

சு. குணேஸ்வரன்

சு. குணேஸ்வரன்