பாகவத மேளா

This entry is part [part not set] of 34 in the series 20070517_Issue

செல்வேந்திரன்


“விஜயநகரப்பேரரசின் வீழ்ச்சிக்குப்பின் அங்கிருந்து புலம்பெயர்ந்த பாகவதப்பிராமணர்களில் சிலர் தஞ்சாவூருக்கு அருகிலுள்ள மெலட்டூர் எனும் சிற்றூரில் குடியேறினர். அவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியிலும் தங்களது பாரம்பரிய கலையான ‘பாகவத மேளா’ என்னும் நாட்டிய நாடகக்கலை அழிந்துபோகாவண்ணம் நிகழ்த்திவந்தனர். அவர்களின் பிந்தைய தலைமுறையினர் வாழ்க்கை தேடல்களுக்காக தொழில், படிப்பு, இருப்பிடங்களை மாற்றினாலும் அக்கலையை புறக்கணிக்காது தங்களது அடையாளமாக தொடர்ந்தனர். மாறிவரும் வாழ்க்கை சூழலில் பெரிய கவனிப்பும், வரவேற்பும் பெறாதபோதிலும் தொடர்ந்து பல்லாண்டு காலமாக ஒவ்வொரு வருடமும் மே மாதத்தில் வரும் நரசிம்ம ஜெயந்தி அன்று ஆரம்பித்து பத்து நாட்கள் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

பக்த பிரகலாதன், வள்ளி திருமணம், சதி சாவித்ரி, ருக்மணி கல்யாணம் என பல்வேறு நாடகங்கள் நடந்தாலும், பக்த பிரகலாதன் சரித்திரமே மிகப்பிரசித்தம். மேளா நடக்கும் சமயம் ஊரிலுள்ளவர்கள் மட்டுமல்லாது, நாடகம் பார்க்க வருபவர்களுக்கும் நாடகத்தை நடத்துபவர்களின் வீட்டிலேயே உணவளிக்கப்பட்டு, தங்கும் வசதிகளும் ஏற்படுத்திக்கொடுக்கப்படும். வானமும், புரோகிதமும் பொய்த்துப்போன நிலையில் ‘பாகவத மேளா’ வை நடத்த வழியில்லாமல் போய்விடுமோ என்ற பயத்தில்தான் நான் தூபாய் சென்றேன். அங்கே கடுமையாக உழைத்து சம்பாதித்த பணத்தைக் கொண்டு வருடத்திற்கு ஒருமுறை நரசிம்ம ஜெயந்திக்கு மெலட்டூர் வந்து ‘ பாகவத மேளா’ வை நடத்திவிட்டு மீண்டும் துபாய் சென்று விடுவேன். எனது வீட்டில் ஏதாவது நற்காரியங்கள் செய்யவேண்டுமென்றால்கூட நான் பாகவதமேளாவிற்கு வரும் இந்த பதினைந்து நாட்களில்தான் நடத்திக்கொள்வார்கள். இடையில் நான் இந்தியா வருவதேயில்லை. நீங்களும் ஒருமுறை மெலட்டூர் வந்து அந்த அற்புத கலையை ரசியுங்கள்” என்று அந்த நடுத்தரவயதுக்காரர் பேசி அமர்ந்ததும் அரங்கம் அதிர்ந்தது. அவர் பெயர் மெலட்டூர் நடராஜன். பிரகலாத நாடகத்தில் ‘லீலாவதி’ எனும் கடினமான வேடத்தை அணிந்து நடிப்பதில் சுற்றுவட்டாரம் முழுக்க பெயர் பெற்ற அவர் அக்கலையை அழியாமல் காக்க வெளிநாட்டில் வேர்வை சிந்துகிறார். ஒரு பாரம்பரிய கலையைக் காப்பாற்ற ஒருவன் கடல்கடந்து போக வேண்டிய அவலத்தை உணர்ந்தபோது கட்டாயம் மெலட்டூர் போயாகவேண்டும் என்ற சங்கல்பம் எடுத்துக்கொண்டேன்.

மே தினம் அன்று நரசிம்ம ஜெயந்தி வருகிறது எனத்தெரிந்தவுடன் நானும், நண்பர் சிவசங்கரும் தஞ்சாவூர் கிளம்பினோம். கடைசிப்பேருந்தைப் பிடித்து மெலட்டூர் கிராமத்தில் இரங்கியபோது மணி பத்தரையை தாண்டியிருந்தது. பாகவதர்களும், மிருதங்க வித்வான்களும் சுருதி ஏற்றிக்கொண்டிருந்தது காற்றில் வந்தடைந்தது. ஹோட்டல்கள் ஏதுமில்லாத அக்கிராமத்துப் பெட்டிக்கடையில் பிஸ்கட் பாக்கட்டுகளை வாங்கிக்கொண்டு இசை வந்த திசை நோக்கி நடையை போட்டோம். எதிர்வந்த சைக்கிள்காரரிடம் ‘நடராஜ அய்யர்’ வீட்டுக்கு எப்படி போவது என விசாரித்தோம். “இந்தவாட்டி நடராஜ அய்யர் நாடகம் பத்துநாளு தாமதமாக நடக்க இருக்கிறது. கவலைப்படாதீங்க மாலி அய்யர் நாடகர் இன்னிக்குதான் ஆரம்பிக்குது… இந்த ஒத்தையடிபாதையில போங்க… நாடகம் ஆரம்பிக்க போவுது…” என்றார். இத்தனைச் சிறிய சிற்றூரில் இரண்டு பாகவதமேளாவா..?! ஆச்சரியம் மேலிட சைக்கிள்காரரிடம் கேட்டேன். “ஒன்னாத்தே இருந்தாக என்ன பிரச்சனையோ… என்னவோ… பத்துவருஷமா தனித்தனியாதேன் போடுறாக…” என்றபடி பதிலுக்கு காத்திராமல் கிளம்பினார். ஏதோ உள்ளூர் அரசியலில் கலைஞர்கள் இரண்டாய் பிளவுபட்டிருக்கிறார்கள் என்பது புரிந்தது. ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பார்கள். கூத்தாடிகள் இரண்டுபட்டால் யாருக்கு கொண்டாட்டம்…? சிந்தித்தபடியே ஒரு வயல்வெளியைக் கடந்து பொட்டலில் அமைக்கப்பட்ட பந்தலை வந்தடைந்தோம். மேடையில் உட்பக்கமாக ஒதுக்கப்பட்ட சிறிய உள்மேடையில் நான்கு பாகவதர்களும் (வாய்ப்பாட்டு) வயலின், மிருதங்க, புல்லாங்குழல், மோர்ஷிங், ஜால்ரா வாத்தியக்காரர்களும் இருந்தனர். மெலட்டூர் பாகவத மேளா நாட்டிய வித்யா சங்கம் எனும் தோய்ந்து சாயம்போன ஒரு தூணி பேனர் அரங்கின் தலையில் கட்டப்பட்டிருந்தது. ஒளி விளக்குகளில் காட்டுப்பூச்சிகள் ரீங்காரமிட்டுக்கொண்டிருந்தது. ஒரிரு உபயதாரர்களின் (நல்லி, பி.எஸ்.என்.எல்) பேனர்கள் அங்கங்கே இருந்தது.

மெலட்டூர் நரசிம்ம ஸ்வாமிகள் சுவாமிகள் ஆலயத்திலிருந்து நரசிம்ம அவதார முகமூடி (மாஸ்க்) ஒரு சப்பரத்தில் எடுத்துவரப்படுகிறது. அதற்கு சில பூஜைகள் செய்யப்படுகிறது. முறையான கர்நாடக சங்கீதத்தில் அமைந்த தெலுங்கு கீர்த்தனைகளைப் பாகவதர்கள் பாட, முறையாக பரதம் கற்றவர்கள் பாத்திரங்களாய் மாறி நடிக்கும் அந்த நாடகத்தில் எள்ளளவுகூட தழிழுக்கும், பெண்களுக்கும் இடமில்லை. ஆண்கள்தான் பெண் வேடமிடுகின்றனர். பாகவதர்கள் பாட ஆரம்பித்தனர். முதலில் விநாயகர் வழிபாடு முடிந்து பாத்திர பிரவேஷம் ஆரம்பித்தது. ஹிரண்யகசிபுவின் பிரதாபங்கள் தெலுங்கு கீர்த்தனைகளாக வெளிப்பட அவைக்கு வரும் ஹிரண்யகசிபுவின் வீரம், பராக்கிரமங்கள், திமிர், ஆணவம் அத்தனையும் நடனமொழியில், உருளும் பார்வையில் நம் கண்முன் விரிகிறது. அடுத்து லீலாவதியின் அறிமுகம்… அத்தனை அழகான பெண், அவளது குணம், திறமைகளை அடுத்து பிரகலாதனின் பண்பும் பக்தியும், தொடர்ந்து அசுரகுரு சுக்ராச்சாரியார் எனப்பாத்திரப்பிரவேஷம் முடிந்து கதைக்குள் நுழைந்தபோது நேரம் நள்ளிரவைத்தாண்டியது.

கணவனுக்கும் பிள்ளைக்கும் மத்தியில் சிக்குண்டு லீலாவதி நடத்தும் பாசப்போராட்டம், உலகிடம் ஜெயித்து மகனிடம் தோற்றுப்போகும் ஹிரண்யகசிபுவின் அவஸ்தை அதைதொடர்ந்து அவனுக்கு எழும் ஆத்திரம், பிரகலாதனின் பரிபூரண பக்தி என அத்தனையையும் எனது கேமராவில் சுழன்று, சுழன்று பதிவு செய்தேன். பாஷை புரியாதது… இசை புரியாதது… நிருத்தம், அடவு, பதம், ஜதி, பாவம், அபிநயம், கரணங்கள் என்ற நாட்டியக்கலையின் எந்த விஷயமும் தெரியாத எனக்கு பிரகலாத சரித்திரம் என் கண்முன்னே நிகழ்வதான உணர்வை அக்கலைஞர்கள் ஏற்படுத்திக்கொண்டிருந்தார்கள். பிரகலாதனிடம் நிகழ்த்தப்பட்ட கொடுமைகளுக்கு மவுனசாட்சியாக நான் நின்றுகொண்டிருப்பதாகத் தோன்றியது. ஹிரண்யனைக் கட்டுபடுத்தவும் முடியவில்லை, லீலாவதியின் கண்ணீரையும் நிறுத்தமுடியவில்லை கையறுநிலையில் நின்றிருந்தேன் நான். நாடகத்தின் உச்சகட்டமாக தூணிலிருந்து நரசிம்மஸ்வாமிகள் எழும் காட்சி நிகழும்போது கிழக்கில் சூரியன் எட்டிப்பார்க்க ஆரம்பித்தான். சுமார் 80 வயது மதிக்கத்தக்க ஒருவர் நரசிம்மஸ்வாமிகளின் முகமூடி அணிந்துகொண்டு அவதாரமெடுத்தார். பொங்கி.. ஆர்ப்பரித்து, திமிறி ஹிரண்யனின் நெஞ்சைக்கிழிக்க பரபரத்த அவரை இருக்கையோடு சேர்த்து இருக்கி கட்டியிருந்தனர். ஐந்து இளந்தாரிகள் அவரை இருக்கிப்பிடித்தும் அவரை ஒன்றும் செய்யமுடியவில்லை. ஆக்ரோஷமாய் உருமிக்கொண்டிருந்தார். ஹிரண்யகசிபு வேடமணிந்தவரை மேடையை விட்டு அகலச்சொல்லிவிட்டனர். சாந்தி.. சாந்தி எனப் பார்வையாளர்களும், நடிகர்களும் அவரிடம் கெஞ்ச ஆரம்பித்தனர். அவரது திமிறலை அவர்களால் அடக்க இயலவில்லை. பிரகலாதனை அவரது மடியில் அமரச்செய்தனர். பிரகலாதன் “ஆசிர்வாதம் பண்ணுங்கோ… சாந்தமூர்த்தி நீங்க.. அமைதி.. அனுக்கிரகம் பண்ணுங்க” என்று தமிழில் கெஞ்ச ஆரம்பித்தார். அவரது ஆவேசம் அடங்குவதாகத் தெரியவில்லை. அந்தப்பெரியவருக்கு ஏதாவது ஆகிவிடுமோ என நான் பயப்பட ஆரம்பித்தேன். எனது கால்கள் நடுங்கத்தொடங்கியது. அவரைப்பார்த்தால் உண்மையான ஹிரண்யகசிபையும் கொன்று ஒவ்வொருவனுக்குள்ளும் இருக்கும் ஹிரண்யகசிபுவையும் கொல்வார் என்று தோன்றியது. நான் செய்த குற்றங்கள் நிணைவுக்கு வந்தது. திமிறிக்கொண்டு வந்து என்னைக் கிழித்துபோட்டுவிடுவாரோ எனப்பயம் கொண்டேன். நரசிம்மஸ்வாமிகளுக்கு தீப ஆராதனைகள் காட்டப்பட்டபின் கொஞ்சம் ஆசுவாசமானார். பார்வையாளர்கள் அவரிடம் குங்குமபிரசாதம் வாங்கிக்கொண்டனர். எனக்கு அவர் அருகில் போகவே பயம். வாங்கவில்லை. நரசிம்மஸ்வாமிகளும், அவரது முகமூடியும் சிறிய சப்பரத்தில் மேளம் முழங்க கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டபின் நாங்கள் பேருந்து நிறுத்தத்தை நோக்கி மெதுவாக நடந்தோம்.
பெரியவரின் ஆவேசக்குரல் மனதின் அடியாளத்தில் ஓங்கி ஒலித்துக்கொண்டேயிருந்தது. “கலைஞன் முதிர்ச்சியடைய அடைய அவனது கலை இளமையாகிறது” என எங்கோ படித்தது நிணைவுக்கு வந்தது. லீலாவதியாக நடித்தவர் இரண்டு குழந்தைகளுக்கு தகப்பனாம். நம்பமுடியவில்லை. பிரகலாதன் அரிதாரம் கலைத்து எதிரே வந்துகொண்டிருந்தார். ஜீன்சும், டி-சர்ட்டும் அணிந்திருந்த அந்தச்சிறுவனா கால்மணி நேரத்துக்கு முன்புவரை கண்களில் பக்தியும், உடல் மொழியில் மிரட்சியும் காட்டிக்கொண்டிருந்த சிறுவன். ஆச்சரியம்.

ஊள்ளூர் அரசியல், உலகின் கேலி, பொருளாதார இழப்பு, அங்கீகாரமோ பாராட்டோ இல்லை என்றபோதும் இதுபோன்ற கலைகளைக் கற்றுக்கொள்ளவும், நடத்தவும் எது ஊந்துசக்தியாக இருக்கிறது? என்ற கேள்விக்கு என்னிடம் விடை இல்லை. “கலை எனும் போதை ஒருவனுக்கு ஏறிவிட்டால் சாமான்யத்தில் விடுவதில்லை” என்றுசிவசங்கர் சொன்னார் . பேருந்து நிறுத்தத்தை அடைந்தபோது எங்களுக்கு முன்னரே அங்கு காத்திருந்த ஒரு பெரியவர் எங்களிடம் “என்ன தம்பி நாடகம் பார்க்க வந்தீங்களா?” என்றார். லேசான சாராயமணம் வீசியது. அவரிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தேன். “தம்பி நானும் பிராமணந்தான்… பக்கத்துல ஊத்துக்காடு… ஒருகாலத்திலே நான் பாகவதமேளாவில் அசுரனாய், பிரகலாதனாய், ஹிரண்யனாய், லீலாவதியாய் அரிதாரம் பூசியவன்… இன்னிக்கு விவசாயம் இல்லாம எங்க ஊரே புகைஞ்சு போச்சு…. காவிரியும், மழையும் கையவிரிச்சதனால அக்கிரஹாரம் காலியாகி அமெரிக்கா, கனடான்னு அவனவன் காணாமபோயிட்டான். நரசுஸ் காபில மானேஜரா வேலை செஞ்சேன். எம்புள்ளைங்களும் சென்னை, கோவைன்னு செட்டிலாகிட்டாங்க… ஆடின காலும், பாடின வாயும் சும்மா இருக்கமுடியல… என்னோட நாடகநிணைவுகள் தாங்கமா வந்துட்டேன்…” என்றவர் கண்ணில் ஈரம் எட்டிப்பார்க்க ஆரம்பித்தது. அலைபாயுதே கண்ணா, ஆடாமல் அசங்காது என உலகப்புகழ்பெற்ற பாடல்களை இயற்றிய ஊத்துக்காடு வெங்கடசுப்பையரின் ஊரில் காலம்காலமாய் நிகழ்ந்த கலை ஒன்று காணாமல்போன வலி அவரைக் குடிக்கவைத்திருக்கிறது. மெலட்டூரிலும் ஓரே அக்ரஹாரம் இரண்டாகப்பிரிந்து துவேஷம் கொள்வது ஒருவர் நடத்தும் மேளாவிற்கு மற்றொருவர் போவதில்லை என்றும் அவர் வருத்தப்பட்டுக்கொண்டிருந்தபோது தஞ்சை செல்லும் முதல்பேருந்து அமைதியைக் கிழித்தபடி வந்தது. ஏறி அமர்ந்தபோது பேருந்தில் ஒலித்துக்கொண்டிருந்தது போக்கிரி பட பாடல்.

மொத்தபார்வையாளர்கள் சுமார் இருபது பேர். நாடகத்தில் நடித்தவர்களின் குடும்பத்தார் தவிர அங்கிருந்தவர்கள் ஒரிருவரில் முக்கியமானவர் கலாஷேத்ரா பவுண்டேசனின் டைரக்டரான ஷீலா. பரதம் என்ற விருது ஆண்டுதோறும் சிறப்பாக நடிக்கும் கலைஞருள் ஒருவருக்கு வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டு ஷீலா அவர்களின் கையால் விருதுபெற்றவர் ஹிரண்யகசிபுவாக நடித்த கோபி. சாவின் முதுகில் சவாரி செய்து வரும் இக்கலை மெலட்டூர் நடராஜன், மாலி அய்யர் போன்றவர்களால் மூச்சு விட்டுக்கொண்டிருக்கிறது. அவர்களின் பாதக்கமலங்களுக்கு எனது வணக்கங்கள்.மேளாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சிறந்தமுறையில் பதிவில் இணைக்கத் தெரியவில்லை. கூடுதல் படங்களுக்கு எனது புகைப்படங்கள் என்ற பதிவைப்பார்வையிடுங்கள்.
மிக்க அன்புடன்,
செல்வேந்திரன்.


selventhiran@rediffmail.com

Series Navigation

செல்வேந்திரன்

செல்வேந்திரன்