இராமமூர்த்தியின் “தென் பெண்ணையாற்றுக்கரை கதைகள்”

This entry is part [part not set] of 35 in the series 20060922_Issue

வே.சபாநாயகம்


ஆற்றங்கரை நாகரீகம் எப்போதும் சிறப்பாகப் பேசப்படுவது. அது போலவே இப்போது ஆற்றங்கரைக் கதைகளும் பேசப்படுவனவாகிக் கொண்டிருக்கின்றன. மணிமுத்தாற்றங் கரையில் அந்தப் பிராந்திய வழக்குகளோடு கதைகள் அமைந்துள்ளது போல தென் பெண்ணையாற்றங்கரையிலும் வட தமிழ் மாவட்ட வட்டாரப் பின்னணியில் ரசமான சொல்லாட்சிகளுடன் கதைகள் – இராசேந்திரசோழனில் தொடங்கி இன்று இரா. இராமமூர்த்தியால் பெருமைப் படுத்தப் பட்டுள்ளதை அவரது முதல் கதைத் தொகுப்பான ‘கனவு துளிர்த்த கதை’ காட்டுகிறது.

இத் தொகுப்பில் உள்ள கதைகள் அனைத்துமே வாசகனுக்கு நெருக்கமாய், கதாபாத்திரங்கள் முன்பே பரிச்சயமானவர்களாக இருப்பதால் கதை லகுவாக தடையற்று அலுப்புத் தராமல் ஓடுகின்றன. ஆசிரியர் அடிப்படையில் கிராமத்து விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் அசலான கிராமத்து நடைமுறை வாழ்க்கை, பேச்சு எல்லாவற்றையும் வெகு நுட்பமாக உள்வாங்கி, தேனீ- மலர்களில் சேகரித்ததை திடமான சுவைமிக்க தேனாக மாற்றித் தருவது போல- தன் அநாயசமான நடை ஓட்டத்தால் ரசமான கதைகளாக ஆக்கி அளித்திருக்கிறார். கதைகள் எல்லாமே மனித நேயத்தைப் பேசுபவை. அதோடு மனித மனத்தின் ஆசாபாசங்களையும், அற்பத்தனங்களையும், அற்புதத்தையும் படம் பிடித்துக் காட்டுபவை. நாம் தினமும் பார்க்கிற மனிதர்களின் குண வேறுபாடுகளை, விசித்திரங்களை – ஆமாம் நாம் சொல்லியிருக்கலாமே என்று நினைக்கும்படியான நிகழ்வுகளை – அதாவது நித்திய யதர்த்தங்களை ஆரவாரமில்லாமல் அலங்கார ஜோடனையின்றி நாமே நேரில் நின்று காண்பது போலப் படைத்தளிப்பதில் வெற்றி கண்டிருக்கிறார்.

‘வாத்து’ கதையில் வாத்துமேய்க்கிற சிறுவன் அவைகளை வழி நடத்திச் செல்கிற உக்தியும் வாத்துக்களின் இயல்புகளும், வாத்துக்களுடன் நடந்து நடந்து அவனுக்கும் வாத்து நடை வந்துவிடுகிற யதார்த்தமும் – கதையோடு கதையாய் சொல்லப்படுவது கதாசிரியரின் கூர்ந்த நோக்குக்கும் நுட்பமான வெளிப்பாட்டுத் திறனுக்கும் உதாரணம்.

‘திருப்பதி சட்டை’ என்கிற கதை மேல்ஜாதியினரின் அற்பத்தனத்தில் பெண்களும் விதிவிலக்கல்ல என்பதைச் சொல்லுகிறது. வேலைக்காரியின் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதும், கொடுத்ததை விரும்பிச் சாப்பிடுவதும், சூட்டிகையாய்ப் பேசுவதும் – எல்லா வசதிகளும் கிடைத்தும் தன் பேரக் குழந்தை அப்படி இல்லாததை ஒப்பிட்டுப் பார்த்துப் பொறாமை கொள்ளும் எஜமானியம்மாள், மருமகள் தன் குழந்தையின் பயன்படுத்தாத சட்டையை வேலை செய்யும் பெண்ணின் குழந்தைக்குத் தந்திருப்பதைப் பொறுக்க முடியாது கழற்றித் துவைத்துத் தரச் சொல்கிற அற்பத்தனம் – ‘இப்படியுமா பெண்கள்?’ என்று முகம் சுளிக்கச் செய்கிறது?

‘நாற்றுகள்’ கதை இன்னொரு விதமான – வசதி படைத்தோரின் வக்கிரத்தைச் சொல்கிற கதை. வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்க அரசாங்கம் ஊக்குவிப்பதை மறுக்கும் விதமாக தன் மண்ணில் குடிசை போட்டிருக்கும் பணியாளின் மகன் நட்டு வத்திருக்கிற செடியைப் பிடுங்கி எறிந்து அதன் மூலம் அவன் தன் மண்ணில் சாந்தம் கொண்டாடு வதைத் தடுக்கிற நிலவுடைமை அதிகாரத்தின் சிறுமையை உளம் நெகிழ இக்கதை சொல்கிறது. ‘அண்ணா’வின் ‘செவ்வாழை’க் கதையின் சோகமும், பூர்ஷ¤வா அக்கிரமும் நினைவுக்கு வருகிறது.

தலைப்புக் கதையான ‘கனவு துளிர்த்த கதை’ அடிமட்ட மக்களின், எளிய கனவுகள் கூடப் பொய்த்துப் போவதும், பிறகு தன் வாரிசுக்கு அந்த வாய்ப்புக் கிட்டும் போது நிறை வேறாத தன்னுடைய கனவு மீண்டும் துளர்ப்பதில் பெருமிதம் கொள்வதுமான வாழ்வைப் படம் பிடித்துக் காட்டுகிறது.

ஒரு சின்னப் பூசல் என்றதும் நேர்மையைப் புறக்கணித்து விட்டு சாதிப்பற்று வெறிநாய் போலப் புகுந்து பிடுங்குகிற இன்றைய சாதீய வெறியின் கேவலத்தைப் பதிவு செய்துள்ளது – ‘ஒரு மனிதன் சோகப்படுகிறான்’ என்கிறகதை.

காந்தியடிகள் போராடிய ஹரிஜன ஆலயப்பிரவேசத்தை இன்னும் மேல் வர்ணத்தார் மனதார ஏற்காத நிஜத்தை ‘வர்ணம்’ என்கிற கதை காட்டுகிறது.

ஒடுக்கப்படுகிறவர்களும் ஒரு நாள் விழித்துக் கொள்வார்கள், அப்போது பழிதீர்க்கும் அவர்களது செயல் எவ்வளவு குரூரமாக அவர்களை இயக்கும் என்பதை ‘சேதி’ என்கிற கதை எச்சரிக்கிறது.

‘பஞ்சாயத்துக்காரன் அடியாளா மாறுனா நீதி செத்துப் போகும்’ என்று நியாயம் பேசும் நியாயவான்கள் ‘கட்டப் பஞ்சாயத்து’ மலிந்திருப்பதாய் நாம் கருதும் கிராமங்களில் இன்னும் இருக்கவே செய்கிறார்கள் என்று காட்சிப்படுத்தும் கதையான ‘நியாயம்’ ஒரு குறிப்பிடத்தக்க படைப்பு.

‘கண்ணாலம்’ கதை வரதட்சிணைக் கொடுமைக்கு எதிரான ஒரு கிராமத்துப் பெண்ணின் ஆவேசமான குரலைப் பதிவு செய்துள்ளது.

காலந்தோறும் எல்லா ஊர்களிலும் ‘சீசனு’க்குத் தக்கவாறு மக்கள் பிழைப்பை நாடி தூரப் பயணம் செய்வது இயல்பான காட்சிதான். ஆனால் தென்னார்க்காடு மக்களின் ‘மல்லாட்டை’ப் பொறுக்கச் செல்பவர்களது கோராமையை அம்மாவட்டத்தின் வடபகுதியான திண்டிவனம் – விழுப்புரம் பகுதியின் ரசமான வட்டார மொழிநயத்துடன் சொல்வதில் ‘கி.ரா’ போலவே இராமமூர்த்தி வெற்றி பெறுகிறார் – ‘மேற்கிலிருந்து ஒரு பயணம்’ என்கிற கதையில்.

‘வாய்ப் பேச்சு’ ஒரு ரசமான நையாண்டி கதை. ‘கூட்டத்தில் கூடி நின்று கூவ்¢ப் பிதற்றலின்றி நாட்டத்தில் கொள்ளாத’ வெட்டி மேடைப் பேச்சாளர்களைக் கேலி செய்கிறது கதை.

‘வெற்றிகள்’ இன்னொரு வித அரசியல் அங்கதக் கதை. அரசியல் கட்சிகளின் தலைவர்களது சுயநலமிக்க, காரியம் ஆனதும் கண்டு கொள்ளாத பாராமுகம் அவர்களைநம்பும் அப்பாவித் தொண்டர்க¨ளைச் சிறுமைப் படுத்துகிற அவலத்தை ஆதங்கத்தோடு சித்தரிக்கிறது இக்கதை.

கடைசிக் கதையான ‘பலி’ ஒரு நெடுங்கதை. பெண்ணையாற்றங்கரையில் மட்டுமே இன்னும் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும் தெருக்கூத்துக்கலை அதற்கு ஆதரவு காட்டுபவர்களாலேயே பலியாக்கப் படுகிற கொடுமையை உருக்கமாகக் சொல்லுகிறது. இளைத்தவர்களை இடைத் தரகர்கள் எப்படி ஆளாளுக்கு அடித்துப் பிடுங்குகிறார்கள் என்கிற சொல்லி அழ முடியாத சோகத்தைக் கதை காட்சிப் படுத்துகிறது.

எல்லாக் கதைளுக்குமே மனித நேயமே அடிநாதமாய் இருக்கிறது. தான் பார்க்கும் தன் மக்களின் அவல வாழ்வினை, அவர்களது பெருமைகளை, சிறுமைகளை ஆச்சரியத்தோடும் ஆதங்கத்தோடும் – வாசப்பவர் மனம் கொள்ளுமாறு கதையாக்கித் தருவதில் பெரும் வெற்ற்¢ கண்டிருக்கிறார் ஆசிரியர். பாத்திரப் படைப்புகள் அருமை. நாம் நேரில் பார்க்கிற மாதிரியான மயக்கம் தரும் வருணனைகள், வாக்கு சாதுரியங்கள், ரசமான சொல்லாட்சிகள், சொலவடைகள் என்று எல்லாவகையிலும் திரு. இராமமூர்த்தி தான் ஒரு தேர்ந்த கதாசிரியர் என்ற இத்தொகுப்பின் மூலம் மெய்ப்பித்திருக்கிறார். ‘கரிசல் காட்டுக் கதைகள்’ தொகுப்பு போல ‘ஆற்காட்டுக் கதைகள் ‘ என்று ஒன்று வெளி வருமானால் தவறாமல் இராமமூர்த்தியின் கதைகள் இடம் பெறும். பெண்னையாற்றங்கரைக்கு ஒரு புதிய வெளிச்சத்தை அவர் கொடுத்திருக்கிறார்.


v.sabanayagam@gmail.com

Series Navigation

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்