அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ! நண்பரே….நண்பரே ….நண்பரே…! – 2

This entry is part [part not set] of 48 in the series 20060414_Issue

புதுவை ஞானம்.


____

13 ,ஏப்ரல்,1743.

திரு.தாமஸ் ஜெபர்சன் என்ற அரசியல் வாதியின் பிறந்த நாள் இது.அமெரிக்காவின் மூன்றாவது குடியரசுத் தலைவராகிய இவர்,அமெரிக்க

சுதந்திரப் பிரகடனத்தை முதலில் எழுதியவர் ஆவார். Demacratic party எனப்படும் ஜனநாயக கட்சியின் நிறுவணத்தலைவரும் இவர் தான்.அவரது சீரிய கருத்துக்களில் சில பின் வருமாறு இருந்தன :

‘கடவுள் தான் உச்ச நீதிபதி என்பதையும்

எனது நாடு செய்யும் பாவச்செயல்களை

எண்ணிப் பார்க்கும் போதும் உண்மையிலேயே

நடுங்கிறது எனது நெஞ்சு. ‘

‘கருத்துக்களில் ஏற்படும் தவறுகளைப்

பொறுத்துக் கொள்ளலாம்….

தவறுகளை எதிர்த்துப் போராட

உரிமை உள்ளவரை. ‘

‘வரண்ட நீதி நெறிகளையும் தெய்வீகத்தைப் பற்றியும்

எழுதப்பட்ட ஆயிரக்கணக்கான நூல்களைப்

படிப்பதை விட,க்ஷேக்ஸ்பியர் எழுதிய காவியமான

KING LEAR என்ற ஒரேயொரு நூலைப் படிப்பதன்

மூலம் மகன் தந்தைக்காற்றும் உதவி யாதென்பதை

உயிர்ப்போடும் நிலைப்போடும் உணர்ந்து கொள்ளலாம். ‘

____

1919 ஆம் ஆண்டு ஏப்ரல்,13 அன்று தான் ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்தது.டயர் என்ற ஆங்கில அதிகாரி நிராயுத

பாணியான மக்களைச் சுட்டுக் கொன்று குவித்தான்.இந்தியாவிலும் சரி உலக அளவிலும் சரி ‘தவறுகளை எதிர்த்துப்

போராட உரிமை ‘ கேட்டால், ஜாலியன் வாலாபாக் – வெவ்வேறு வடிவங்களிலும் அளவுகளிலும் இன்றும் நிகழ்த்தப் படத்தான்

செய்கின்றன.யாரோ சிலர் மட்டும் ராஜகுரு சுகதேவ் பகத்சிங் போன்ற போராளிகளை நினைவு கூறுகின்றனர் . இந்தியாவின்

ஒற்றுமை பற்றிப் பேசுபவர்களுக்கு என்ன பட்டம் தெரியுமா ? ‘ஏக இந்திய பஜனைக் கோஷ்டி ‘ பட்டம் வழங்கும் இணை

வேந்தர் -துணைவேந்தர் கோஷ்டி யார் தெரியுமா ? ஏற்கனவே சர்வதேச பஜனை பாடிய கோஷ்டி தான்.காற்று திசை மாறி

அடிக்கிறது அல்லவா.ஒரு ஜான் வயிறே இல்லாட்டா உலகத்தில் ஏது கலாட்டா ? இதுபற்றி ஒரு தனிக் கட்டுரை வரும்.

கூழுக்குப் பாடிய அவ்வை பாடினார் :

ஒரு நாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்

இரு நாள் உணவை ஏலென்றால் ஏலாய்

இடும்பை கூர் வயிறே ….

உன்னோடு வாழ்தல் அரிதே !

ஒரு வியத்நாமியக் கவிதை நினைவுக்கு வருகிறது !

‘ தொல்லையாய் இரைகின்றன

ஆலை இயந்திரங்கள் –

அந்நியமாய் இசைக்கின்றன

ஆலய மணிகள் –

மிரட்டலாய் முழங்குகின்றன

சிறைச் சாலைச் சேகண்டிகள் –

வாழ்க்கையின் பொருள்

மூன்றே ஓசைகளில் !

ஒவ்வொரு ஓசையும்

அதனதன் நயத்தில்

ஒவ்வொரு நியாயமும்

அதனதன் சொற்களில் !

ஆணையிடுகின்றன ஆலை இயந்திரங்கள்

இரத்த வியர்வை சிந்து இன்றேல்

கொப்பரையாய்க் கொப்பளிக்கும்

உன் கண்ணீர்த் துளிகள் !

ஓய்ந்து போகும் உன் கால் கைகள்

ஓய்ந்து போனால் எனக்கென்ன ?

உழை…உழை…உழைத்துக் கொண்டே இரு !

இசைக்கிறது ஆலய மணி தேன் கலந்த வாசகத்தால்

குழந்தாய் ஏற்றுக்கொள் சுளிப்பின்றி

வாழ்வின் துயரங்களை ! அதனால் உன்

ஆத்மா விடு படும் சாந்தி அடையும் !

பற்றறுத்தலில் தான் சொர்க்கம் இருக்கிறது !

இன்றேல் நரகம் செல்வாய் ! அந்தத்

தொடுவானம் நோக்கித் தொழுது கொண்டேயிரு !

மிரட்டி முழங்குகிறது சிறைச்சாலைச் சேகண்டி

பணிந்து கிட ! தலை தாழ்த்திச் சரணடை !

பார் இந்தச் சிறையின் பலத்த கதவுகளை

உயர்ந்த மதிற்சுவரை — விலங்குகளைத் தளையை

துப்பாக்கி முனையை – வாட்களின் கூர்மையை

வாழ்வதற்கு உரிமை கேட்டால் சாகடிக்கப் படுவாய் !

மிரட்டி முழங்குகிறது சிறைச்சாலைச் சேகண்டி

தொல்லையாய் இரைகின்றன ஆலை இயந்திரங்கள்

அந்நியமாய் இசைக்கின்றன ஆலய மனிகள்

வாழ்க்கையின் பொருள் மூன்றே ஓசைகளில் ! ‘

மூலம்:TOO HUU

____

14,ஏப்ரல்,1865

அமெரிக்காவின் அடிமைச் சமூக முறையை ஒழிக்க முயன்ற ஆப்ரஹாம் லிங்கன் ,ஃபோர்ட் நாடக அரங்கில்

நமது அமெரிக்க சகோதரர்கள்- என்ற நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த போது ஜான் வில்கிஸ் பூத் என்ற

பார்வையாளனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சுடுவது சுலபம்….

இதயத்தைக் குறி பார்த்து

சுடுவது சுலபம் .

துளைப்பது சுலபம் இதயத்தைத்

தோட்டாவால் ,வார்த்தைகளால்

ஆழமான அன்பினால் அல்லது

கண்ணீர்த் துளிகளால் ….

இதயம் நசித்துப் போகும்

இருபத்து நான்கு மணி நேரத்துக்கோ

நிரந்தரமாகவோ .

தாக்குவதற்கென்று விதிகள் உண்டு

விதிகள் பற்றி நூல்கள் உண்டு

ஆனால்….

அறிவைக் குறி பார்த்து சுடுவது கடினம்

தீர்க்கதரிசிகளின் அறிவைக்

குறி பார்த்து சுடுவது கடினம்.

ஏனெனில்….அது….

மேகங்களுக்கு மேலாகப் பறந்து செல்லும்

நிலவுடனும் தாரகைகளுடனும்.

அதற்கென்று ஒரு ….

சுழற்சிப் பாதை இல்லை

ஏமாற்றப் பாதை இல்லை

டாம்பீகப் பாதை இல்லை -அது

பாதைகள் இன்றியே பறந்து செல்கிறது -எல்லா

ஆர்கிமிடாசுகளின் உற்சாகத்துடன் – எல்லா

ரசவாதிகளின் வெறித்தேடலுடன் -எல்லா

கொலம்பஸ்களின் வெற்றிப் பெருமிதத்துடன்

அல்லது….

மாரிக்கால அரண்மனை

மேல் குண்டுமாரி பொழிந்த

கடற்படைச் சிப்பாய்களின்

உணர்ச்சிப் பெருக்குடன் !

மற்றெல்லா மனிதருக்கும்

கண்டு கொண்ட _காண வேண்டிய

கிரகமாய் ஆகும் வரை ! -.

என்று பாடினான் DIMITRY DOBLEV என்ற பல்கேரியக் கவிஞன்.எல்லாம் பழங்கதையாய் ஆனதுவே போனதுவே.

.

puthuvai_gnanam@rediffmail.com

(புதுவை அஞ்ஞானம்)

____

Series Navigation

புதுவை ஞானம்

புதுவை ஞானம்