அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பரே…நண்பரே.. நண்பரே….! – 1

This entry is part [part not set] of 48 in the series 20060414_Issue

புதுவை ஞானம்


____

அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் !

இன்று விய ஆண்டு பிறக்கிறது.ஒவ்வொரு ஆண்டுக்கும் என்ன நிகழும் என்பது குறித்து ஒரு பாடலை

எழுதி வைத்திருக்கிறார்கள் முன்னோர்கள். இது தமிழில் எழுதப்பட்டு உள்ளதால் பண்டைத் தமிழர்கள் எழுதியதாக

நான் எடுத்துக் கொள்கிறேன். சீர் திருத்தத் தோழர்கள் பொறுத்துக் கொள்வார்களாக !

இந்த விய- ஆண்டுக்கான பாடல் கீழே தரப்பட்டுள்ளது :

‘ விய வருட மாரி விளைவுண்டாஞ் சீனம்

சுய வாழ்வுடனே சுகமாம் -உயர்வாம்

பதினெட்டு வித்தும் பதிவாய்ப் பலிக்கும்

சதிர் பெறுநல் லஃகமிகுந் தான். ‘

விய வருடம் நல்ல மழையும் ,அதன் விளைவாய் விளைச்சல் பெருக்கமும் ஏற்பட்டு மக்கள் தன்னிறைவுடன்

சுகமாக வாழ்வார்கள்.அனைத்து எண்ணெய் வித்துகளும் சிறப்பாக விளையும்.தென்னை போன்ற தோட்டப்

பயிர்கள் அதிகம் விளைந்து செல்வம் கொழிக்கும்.அனைவருக்கும் தன்னிறைவு ஏற்படும்.

அட போயா! பெற்றோல் விலை குறையுமா ? குரூட் ஆயில், கெரசின்,சமையல் வாயு விலை குறையுமா ?

என நீங்கள் அங்கலாய்ப்பது எனக்குத் தெரியும். நானும் உங்கள் கவலையைப் பகிர்ந்து கொள்கிறேன். ஆனால்

சோதிடர்கள், கணிணிகள்,செல்போன், ஸ்கூட்டர் சகிதம் உலகை வலம் வந்த போதிலும் தம் புரிதலில் நவீனம்

நுழைய அனுமதிப்பதில்லயே ? பகவான் அவர்களது ஞானக் கண்ணைத் திறப்பாரா ?

தமிழர்களின் கணக்கில் விய ஆண்டு மீண்டும் அய்ம்பத்து ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு வரும்

சுழன்றும் ஏற்பின்னது உலகம் – என்னும் போதே சுழற்சி பற்றிய ஒரு தெளிவான வானவியல் கண்ணோட்டம்

உருவாகி விட்டிருக்கும் போலிருக்கிறது. அறுபது ஆண்டுகளின் சுழற்சியைப் பெரியோர்கள் கணக்கிட்டு

வைத்திருந்தனர். இதுவே சீனர்கள் கணக்கில் அறுபத்து நான்கு ஆண்டுகளாக இருப்பது ஆய்வு செய்யப்பட

வேண்டிய விஷயம்.

தமிழர்கள் தத்தம் வசதிக்கேற்ப புத்தாடை,வடை, பாயசம்,குறிப்பாக வேப்பம்பூ பச்சடி இவற்றை இறைவனுக்குப்

படைத்து விட்டு சாப்பிடுவது வழக்கம். பருவ காலங்களைத் தமிழர்கள் இளவேணில் , முதுவேணில் ,கார்காலம்,

கூதிர் காலம், முன்பனிக்காலம் ,பின்பனிக்காலம் என பகுத்து வைத்திருந்தனர் . அதாவது சித்திரை-வைகாசி

,ஆனி-ஆடி, ஆவணி-புரட்டாசி, அய்ப்பசி-கார்திகை, மார்கழி-தை ,மாசி-பங்குனி என்ற இரு இரு மாதங்கள்

கொண்டன இப்பருவ காலங்கள்.

இப்படி பருவங்கள்மாறும் போது தட்ப-வெப்ப நிலை மாறுவதால் குறிப்பாக குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும்,

பொதுவாக அனைவருக்கும் நோய்கள் ஏற்படும் சாத்தியம் உண்டு .எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக

அந்தந்த பருவகாலத்துக்கேற்ற உணவு வகைகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும்.

இளவேணிற்காலம் தொடங்கும்போது திடாரென வெப்பம் அதிகரிப்பதனால் குழந்தைகளுக்கு தட்டம்மை,சின்னம்மை,

வேணற்கட்டிகள்தோன்றக் கூடும். இந்த அம்மைக்கான நோய்க்கிருமிகளைத் தடுக்கத்தான் வெப்பம் பூ பச்சடி

சாப்பிடுவது தமிழர் வழமை. இப்போது வேப்ப மரத்துக்கு அமெரிக்கா காப்புரிமை கொண்டாடுவதாக யாரோ

சொன்னார்கள். எனக்குப் புரியும் படி யாரேனும் எழுதினால் நன்றியுடையவனாய் இருப்பேன்.

‘நம்முடைய பசிக்கும் ருசிக்கும் நாம் எது எதையோ சாப்பிடுகிறோம்_நாம் சாப்பிடும் ஒவ்வொன்றும் நம்மைச்

சாப்பிடுகின்றன ‘ – என்று அமரர் கரிச்சான் குஞ்சு தனது ‘பசித்த மானிடத்தில் ‘ எழுதினார். நான் சாப்பிட்ட குடித்த

அத்தனையும் சர்க்கரை நோயாக என்னை அரித்துத் தின்று கொண்டிருக்கிறது. ‘அனுபவம் என்பது ஒரு

தலைவாரும் சீப்பு போன்றது, அந்த சீப்பைப் பயன் படுத்த முடிவெடுத்த போது தலை வழுக்கையாய்ப் போய்

விட்டது ‘என்று ஒரு மேற்கோளினை மகான் அரவிந்தரின் ஆசிரமத்தில் படித்தேன். ஒருவரது அனுபவம்

மற்றவருக்கேனும் பயன் படாதா என்ற ஆவேசத்தில் தான் எழுதத் தெரியாமல் எழுதி உங்களது பொன்னான

காலத்தைப் பாழாக்கிக் கொண்டு இருக்கிறேன்.

பருவ காலங்கள் பற்றித் தெளிவாகவும் வரிசைக் கிரமமாகவும் தெரியாமல் போனதால் அகராதிகளைப் புரட்டி

அபிதான சிந்தாமணியில் இந்த ஆறு பருவங்களைக் கண்டு பிடித்தேன்.

முதலில் க்ரியாவின் ‘தற்காலத் தமிழ் அகராதி ‘-யில் தான் தேடினேன். ‘பகர-ரகர ‘ வரிசையில் பருவக்காற்று,

பருவதம்,பருவம்,பருவமழை,பருவமுறை,பருவமெய்து,பருவெட்டுஆகிய தலைச் சொற்கள் காணப்படினும் (பக்.689)

‘பருவகாலங்கள் ‘ என்ற தலைச்சொல் காணப்படவில்லை.

‘பருவம் (பெ)1:seson,…._hood என்ற ஆங்கில மொழிக் கண்ணோட்டத்தில்/வரையரைக்குள்(ஒருவர் அல்லது

ஒன்று)தோன்றியதிலிருந்து கடந்து வருகின்ற வளர்ச்சி நிலை 2:(பெண்) இல்லற வாழ்க்கையில் பங்கேற்பதற்கு

உரிய முதிர்ச்சி (of woman) puberty,comming of age.பருவத்துக்கு வந்த பெண்/பருவப்பெண் 3:(விவசாயத்தில்)

குறிப்பிட்ட தொழிலுக்கான காலம்:(தட்ப வெப்ப நிலையில்)குறிப்பிட்ட நிலைக்கான காலம்; (of agriculture,

climate )season. சம்பாப் பருவம்/தென்மேற்குப் பருவம் ‘ என்பதாக ‘பருவம் ‘ என்ற தலைச்சொல்லின் கீழ்

மேற்சொன்ன விளக்கங்கள் தரப்பட்டுள்ளன.

‘ பருவம் ‘ என்கிற தலைச்சொல்லை ஊன்றிப் படித்தால் மக்கள் வழக்காற்றில் இச்சொல் ‘பவுர்ணமி ‘ ‘ எனும்

முழுநிலவையும் அது தோன்றும் நாளையும் குறிக்கப் பயன் படுத்தப் படுவது தெரிய வரும்.பருவம் தாண்டி

முகூர்த்தம் வைப்பது தேய்பிறை ஆகிவிடும் என்பது மக்களின் பேச்சு வழக்கு.

.அபிதான சிந்தாமணி (பக்கம்1047)பார்த்தால் பருவம்_(எ) பேதை,பெதும்பை,மங்கை,மடந்தை,அரிவை,தெரிவை

,பேரிளம்பெண். இவர்க்கு முறையே வயதெல்லை அய்ந்து முதல் ஏழளவும்பேதை. எட்டு முதல்பதினொன்று அளவும் பெதும்பை.பன்னிரண்டு முதல்

பதின் மூன்றுஅளவும் மங்கை. பதினான்கு முதல்பத்தொன்பது அளவும் மடந்தை.இருபது முதல் இருபத்துஐந்து

அளவும் அரிவை.இருபத்தாறு முதல் முப்பத்தொன்றளவும் தெரிவை.முபத்திரண்டு முதல் நாற்பது அளவும்

பேரிளம்பெண்.(2)வாலை,தருணி,பிரவிடை,விருத்தை(3)கார்,கூதிர்,முன்பனி,பின்பனி ,இளவேனில்,முதுவேனில்.

இவை ஆவணி முதலிரண்டு மாதங்களாகக் கணக்கிடப்படும். ‘ பேசுகிறது.

அபிதான சிந்தாமணியில் குறிப்பிட்ட பருவ காலங்களைக் குறிப்பிடுவதால் மரபு அழியாமல் பாதுகாக்கப்படும்.

மொழியின் மீதான புரிதலும் ஆளுமையும் மேம்படும் என்பதாக அடியேனுக்குத் தோன்றுகிறது .இப்படி அகராதி

படிப்பது மிகவும் இனிமையான பொழுது போக்கு. எடுத்துக்காட்டாக சொல்லப்போனால்….

A Dictionary of Tamil and English (Revised and Enlarged)1897.

Published by The Madras school Book and Literature society, Mount Road,Madras.என்கிற ஒரு அரசு

வெளியீடு.செல்லரித்து அப்பளமாய் நொறுங்கும் நிலையிலும் நிறைய பக்கங்கள் காணாமலும் பிரதி எடுக்க

முடியாத நிலையில் நான் கண்ணுற்ற அது இப்போது ASIAN EDUCATIONAL SOCIETY,CHENNAI-இல்

கிடைப்பதாக அறிந்து களிபேருவகை அடைந்தேன்.ஒரு நூற்றாண்டு கடந்து வாழும் அற்புதமான படைப்பு அது.

V. Viswanatha pillai,Late Translator Educational Department என்று அதைத் தொகுத்து எழுதிய ஆசிரியர் பெயர்

என்பதாகக் குறிப்பிடப்படுகிறது….

நீங்கள் இதில் குறிப்பாகக் கவனிக்க வேண்டியது என்னவெனில் திரு,விஸ்வநாத பிள்ளை அவர்களது பெயருக்கு

முன்னும் பின்னும் எந்த ஒரு பல்கலைக்கழக பட்டமும் இல்லை என்பதாகும்.

அதே சமயம்,மாக்மில்லன் அண்டு கம்பெனி லிமிடெட்,மதராஸ்,பம்பாய்,கல்கத்தா,லண்டன் 1925-ல்

வெளியிட்ட ‘தற்காலத் தமிழ்ச் சொல்லகராதி ‘ -இல் அதன் ஆசிரியர் பெயர் : திவான் பகதூர்

ச,பவானந்தம் பிள்ளை அவர்கள், ISO,FRHS(LONDON), MRS (LONDON) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

திரு.விஸ்வநாத பிள்ளை எழுதித் தொகுத்து அரசு வெளியிட்ட அந்த அகராதியில் ; பகர ருகர

அதாவது ‘பரு ‘ எனத் தொடங்கும் தலைச்சொற்கள் இருபத்து இரண்டு (22) காணக்கிடைக்கின்றன.

பரு, சிலந்தி நோய்,a pimple,blotch,pustule,imposthume 2)பருவென்னேவல்,imp.become large,thick, bulky,

plump,increase in size,grow up,become seriousbe aggravated.

பருகல் : உண்டல்,taking food,eating,(2)குடித்தல்,drinking,imbibing.

பருகுதல் :see பருகல் 1,2.

பருக்கை :பருக்கைக்கல் smallpebbles,gravel 2)பளிங்கு, crystal.

பருணிதர் :(prop.பரிணிதர்)புலவர், mature persons-poets literati.

பருத்தல் :,பருமையாதல்,becoming large,thick,bulky,increasing in size.

பருத்தி :ஓர் செடி,cotton srub of different kinds – Gossypium herbaceum.

பருந்து :ஓர் பறவை,hawk, kite.

பருப்பதம் :மலை, hill,mountain

பருப்பதி :பார்வதி, the mountain-born parvati.

பருப்பு : see பருத்தல் 2)பருப்பு,soft or inner kernal of shelled seeds ,beans,peas etc.

பருப்பொருள் :பரும்படியான பொருள்,that which is crude,unrefined,unfinished,imperfect as a treatise

trnslation,discourse,&c,superficial knowledge.

பருமம் :கவசம், coat of mail 2)குதிரைக் கல்லணை a saddle,pillion 3)மூவாறு கோவை மணியணி

female waist band of beads ,gems, &c ,consisting of eighteen strings.

பருமித்தல் :சிரமஞ்செய்தல் fencing,paarrying,plaing at back – swords ,. 2)எக்களித்தல் being in high spirits

exulting,triumphing 3)அலங்கரித்தல் adorning,dressing.

பருவதம் :மலை,ahill,amountain.

பருவதாசயம் :மேகம், cloud

பருவதாசிரயம் :சரபப்பட்சி, a large fabulous bird with eight legs regarded as the foe of the lion,

and as inhabitating the snowing mountains.

பருவ நாடி ;அமாவாசி பவுர்னமி காலங்கள் time of conjunction or opposition of sun and moon.

பருவ முயற்சி :தகு கால முயற்சி ,application in due course.

பருவம் :அமாவாசியை, new moon 2)இளமை youthfulness , juvenility , the tender state of animals

vegitables &c 3)உயற்சி height,elevation,eminence 4)கணு knot joint in the body ,tree &c 5)காலம்

season, fit oppurtunity . 6)பொழுது time 7)பவுர்னமி full moon 8)நூற்கூறு section,book,chapter.

9)தகும் வயது proper age in life for any action or persuit.

பருவ யோனி :கரும்பு,sugar cane saccharumofficinarum.

அடுத்தாற்போல் ,மாக் மில்லன் அண்டு கம்பெனி லிமிடெட்,மதராஸ்-பம்பாய்-கல்கத்தா-லண்டன்

printed in Great Britain By LOWE AND BRYDONE (PRINTERS)LTD.LONDON,N.W.10

FIRST EDITION1925 Re-printed 1934,1938,1943,1952 வெளியிட்ட திவான் பகதூர் ச.பவானந்தம்

பிள்ளை அய்.எஸ்.ஓ ,எஃப்.ஆர்.எச்.எஸ்,(லண்டன்) ,எம்.ஆர்.ஏ.எஸ்(லண்டன்) அவர்களின்

அகராதியைப் பார்ப்போம்.

இந்த அகராதியில் ‘பரு ‘ தொடங்கி ‘பரூ உ ‘ வரைமொத்தம் முப்பத்தியிரண்டு தலைச் சொற்கள்

காணப்படுகின்றன.அவை பின் வருமாறு :

பரு :சிலந்தி, 2. பருமை

பருக :(வி) குடிக்க 2.புசிக்க,3.நுகர.

பருக்க : (வி) பெருக்க 2.வளர 3.கனக்க 4.பெருக 5.அதிகரிக்க.

பருக்கன் :பரும்படியானது,

பருக்கை :பளிங்கு 2.சோறு 3)பருக்கைக் கல்.

பருனிதர் :புலவர்.

பருத்தி :ஓர் செடி

பருத்தித் தூறு :வாய்க் கிரந்தி

பருந்து :ஓர் பறவை.

பரு பருக்கை :வேவாச் சோறு.

பருபாரித்தல் :(தொ.பெ)மிகப்பருத்தல்.

பருப்பதம் :மலை.

பருப்பதி :பார்வதி

பருப்பம் :பருமை. 2.பருத்தல். 3 .அளவு.

பருப்பிக்க :(வி) பருக்கச் செய்ய 2.பாரித்துரைக்க.

பருப்பு :வித்தினுட்பருப்பு.

பருமம் :மூவாறு கோவைமணியணி. 2.தடிப்பு.

பருமம் :கவசம். 2.குதிரைக்கல்லனை.

பருமல் :கப்பற்குறுக்கு மரம்.

பருமன் :பருத்தது.

பருமிக்க :(வி) சிலம்பம் செய்ய, 2.அலங்கரிக்க, 3.எக்களிக்க.

பருமிதம் :எக்களிப்பு, 2..மகிழ்ச்சி.

பருமை :பெருமை,2.பருப்பம், 3.பரும்படியான தன்மை.4.கனம்.

பரும்படி :உரப்பு, 2.செவ்வையின்மை.

பருவதம்}:மலை.

பர்வதம்}: ‘ ‘ .

பருவம் :காலம்,2.இருது 3.பவுர்னமி 4.இளமை 5.அமாவாசி 6.கணு 7.தக்க காலம் 8ஓர் நூற்கூறுபாடு.

பருவரல் :துன்பம்.

iஇந்த அகராதியின் தனிப் பெரும் சிறப்பு இதன் நேர்த்தியான கண்ணுக்கு இதமளிக்கும் அச்சுக்கோர்வை ஆகும்.

அடுத்தாற்போல், ‘கழகப் புலவர் குழுவினர் ‘ தொகுத்து அளித்த திருநெல்வேலித் தென்னிந்திய-சைவ சித்தாந்த

நூற்பதிப்புக் கழகத்தினரால் 1964-ல் வெளியிடப்பட்ட கழகத் தமிழ் அகராதியைப் பார்த்தால், ‘பரு ‘ தொடங்கி

‘பரூ உக்கை ‘வரையிலான இருபது தலைச் சொற்கள் காணப் படுகின்றன.

பரு – கடல்; கணு; குரு; சிலந்தி; பருமை; பருவென்னேவல்; மலை.

பருகுதல்-குடித்தல்; உண்ணுதல்; நுகர்தல்.

பருக்கை-உருண்டை; சோறு; பருக்கைக்கல்.

பருணன் – நிருவகிப்பவன்.

பருணிதர் – புலவர்.

பருதி – தேருருள்; வட்டம்; கதிரவன்.

பருத்திக்குண்டிகை – பருத்திப் பஞ்சடைத்த குடுவை.

பருத்திப்பெண்டு – பருத்தி நூற்க்கும் பெண்.

பருந்தலை – பெரிய தலை; பெருமையிற் சிறந்தோர்.

பருப்பதம் – மலை.

பருப்பம் – அளவு; பருத்தல்; பருமை.

பருப்பு – துவரை முதலியவற்றின் உள்ளீடு; பருமை.

பருப்பொருள் – நுண்மையற்ற பொருள். நூலின் பிண்டப் பொருள்;

சுவையற்ற விடயம்; பாட்டின்மேலெழுந்தவாரியான பொருள்.

பருமம் – கல்லணை; அரைப்பட்டிகை; யானைக் கழுத்திடு மெத்தை; ஓரு மேகலை; பருமை;

அங்கி; நிதம்பம்; பதினெட்டு வடம் கொண்ட அரைப்பட்டிகை; கவசம்;

எருத்து முதுகிலிடும் அலங்கார விரிப்பு

பருமிதம் – இறுமாப்பு.

பருமித்தல் – அலங்கரித்தல்; படைக்கலம் பயிலுதல்; இறுமாப்பாயிருத்தல்; வருத்துதல்.

பருமிப்பு – இருமாப்பு; சிலம்பம்.

பருவதம் – மலை; மீன்வகை.

பருவதாகாரம் – மலை போன்ற வடிவு.

பருவம் – அமாவாசி; இருது; இளமை; உயரம்; ஏது; கணு; காலம்; பகுதி ;பக்குவம்;பருவ காலம்; பிரமாணம்;

பூரணை; பெருநாள்; பொழுது; முளி; வயது; தக்க காலம்; மழைக் காலம்; பயிரிடுவதற்குரிய காலம்;

நிலைமை; உயர்ச்சி; அளவு.

பருவம்பார்த்தல் – ஆழம்பார்த்தல்; தக்க சமயம் பார்த்தல்.

பருவரல் – அருவருப்பு; துன்பம்.

பருவி – தில்லை; பருத்தி.

பரூஉ – பருமை.

பரூஉக்கை – வண்டியினோர் உறுப்பு.

அடுத்தாற்போல் பிங்கல முனிவர் அருளிச் செய்த பிங்கல நிகண்டு (இதுவும் கழக வெளியீடு 1968)

பருவம்: இருது – க

பருவமும் மிருதுவும்

பகரிலொன்றே (300)

பருவம்: பக்குவம், பொழுது – உ

பக்குவம் பொழுதும்

பருவமாகும் (3792) எனவிளக்குகிறது.

அடுத்தாற்போல் இன்னுமொரு கழக வெளியீடான ‘வடசொற்றமிழ் அகர வரிசை ‘ என்ற அகராதியைப் பார்ப்போம்.

மறைமலையடிகள்ின் புதல்வியாரும் சென்னை நார்த்விக் மகளிர் கல்லுரித் தலைமைத்தமிழாசியராயிருந்தவருமாகிய

திருமதி.தி.நீலாம்பிகையம்மையார் இயற்றியதாகும் இவ்வகராதி.

இதற்குள் நுழைந்தால் :

(1) பருவகாலம் – தக்க காலம்

(2) பருவத புத்திரி – மலைமகள்

(3) பருவதம்| மலை

பர்வதம் |

(4) பருவதாசயம் : முகில்

(5) பருவபேதம் : காலவேறுபாடு

(6) பருவம் : காலம், பொழுது, பதம்

ஆகிய ஆறு தலைச் சொற்கள் காணப்படுகின்றன.

இப்படிப் பலப்பல அகராதிகளையும் பொழுது போக்காகப் படித்தீர்களானால் சொல்லாட்சி மேம்படும்.திருவள்ளுவர்

சொன்னார்:

‘சொலல் வல்லன் சோர்விலன் அஞ்சான் – அவனை

இகல் வெல்லல் யார்க்கும் அரிது. ‘

‘Mighty in word,of unforgetful mind,of fear less speech,

it is hard for the hostile power such man to over reach. ‘

(Rev.G.U.POPE )

.

புதுவை ஞானம்.

Series Navigation

புதுவை ஞானம்

புதுவை ஞானம்