நான் கண்ட சிஷெல்ஸ் – 3.வரலாறு

This entry is part [part not set] of 34 in the series 20051223_Issue

வே.சபாநாயகம்


கி.பி 1770ஆம் ஆண்டுவரை இத்தீவை மனிதர்கள் மிதித்ததில்லை. ஆங்கிலேயர்கள்

கண்ணில் படாத பூமி ஏதாவது உண்டா ? இந்தியாவைப் போலவே காலனி ஆதிக்கத்திற்கு

அடிமைப்பட்டுக் கிடந்திருக்கிறது சிஷெல்ஸ். சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்

புதுச்சேரிக்கும் இந்தத் தீவுக்கூட்டத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருந்திருக்கிறது.

பிரஞ்சுக்காரர்கள் புதுவையில் கப்பல் கட்டும் தொழிலை ஆரம்பித்து விட்டு, அதற்கான

மரங்களைத் தேடி சிஷெல்ஸ் வந்திருக்கிறார்கள். அங்கிருந்து மரங்களைக்அ கொண்டு வந்த வேலையைச் செய்தவர்களில் தமிழர்களும் உண்டு. முதலில் தொழில்ரீதியாக வந்து

போன தமிழர்கள் 1770ஆம் ஆண்டில்தான் முதன்முறையாக அங்கு குடியேறி

இருக்கிறார்கள். தமிழ்நாட்டிலிருந்து வந்த முதல் கப்பலில், எந்த ஆண்டு, யார் யார் எந்த ஊரிலிருந்து வந்தார்கள் என்ற தகவலை நாட்டின் ஆவணக்காப்பகத்தில் பார்க்கலாம்.

இந்நாடு முதலில் பிரஞ்சுக் கட்டுப்பாட்டிலும் பின்னர் ஆங்கிலேயர் கட்டுப்பாட்டிலும் இருந்தது. ஒரு சிலகாலம் மொரீஷியஸுடன் இணைந்த ஆட்சியிலிருந்து, 1903ல் ஆங்கிலேயரின் நேரடி ஆட்சியின் கீழ் வந்தது. 1976ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றது.

1977ஆம் ஆண்டு ஜேம்ஸ் மான்கம் என்பவர் முதல் அதிபரானார். 1977ல் அவர் வெளிநாடு சென்றிருந்தபோது அவரின் கீழ் பொறுப்பில் இருந்த ஆல்பர்ட் ரெனே என்பவர்

பாகிஸ்தான் முஷாரப் போல அதிரடிப் புரட்சி செய்து ஆட்சியைப் பிடித்தார். அதுமுதல் தனிக்கட்சி ஆட்சி நாடாக இருந்தது – 1993ல் பலகட்சி நாடாக மாறி, மக்கள் கருத்துக் கணிப்பின்படி புதிய அரசியல் சட்டம் வகுக்கப்பட்டு பொதுத் தேர்தலுக்குப் பின்

மக்களாட்சி அமுலுக்கு வந்திருக்கிறது.

போர்ச்சுகல் நாட்டுக் கடலோடிகளே முதலில் இத் தீவுக்கூட்டத்தைக் கண்டறிந்

தார்களாம். கேரள மாநிலத்தின் குஞ்சலியும் கடலாடிகளும் இந்துமாக் கடலில் ஐரோப்பியப் படைகளையும் கடற்கொள்ளையரையும் தாக்கியபோது, கடற்கொள்ளையர் இங்கு வந்து தமது விலையுயர்ந்த பொருட்களைப் புதைத்தமை அண்மைக்கால அகழ்வாராய்ச்சிகள் மூலம் தெரிகிறது.

1770ல் பதிவான முதற் குடியேற்றத்தின் போது 15 வெள்ளையர்கள், 7 கருப்பின அடிமைகள், 5 தமிழர்கள் மாஹே தீவுக்கு வந்தனர். அவர்களின் வழித்தொன்றல்களே

தற்போதைய ‘சிஷெல்வா ‘ என்றழைக்கப்படும் சிஷெல்ஸ் குடிமக்கள்.

இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன் ‘கோண்டுவானா ‘ என்ற கண்டம் இருந்ததாக

வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். இக்கண்டம் ஆப்பிரிக்காவிலிருந்து பெர்சியா,

இந்தியா, கீழே ஆஸ்திரேலியா உள்ளடக்கியதாக இந்தியப் பெருங்கடல் முழுதுமாகப் பரந்திருந்திருக்கிறது. பின்னர் அவை துண்டு துண்டாக உடைந்து பிரிந்து இன்றுள்ள நிலையில் அமைந்தன. 10000 ஆண்டுகளுக்கு முன் சிஷெல்ஸ் தீவுகள் இந்தியா, ஆப்ரிக்கா விலிருந்து துண்டுகளாகி ஒரு கூட்டமாய் அமைந்தன. இது- இந்தியா, ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாட்களில் காணப்படும் தாவரங்கள் கிரானைட், மற்றும் பவழப் பாறைகள், சில விலங்குகள், பறவைகள் சீஷெல்ஸிலும் இன்று காணப் படுவதிலிருந்து நிரூபணமாகிறது. நான் சீஷெல்ஸ் வந்த மறுநாளே நடைப் பயிற்சிக்காக மகள் வீட்டிலிருந்து காலையில் அருகில் இருந்த கடற்கரைக்குச் சென்றபோது வழியில் தென்பட்ட தாவரங்கள், நாய்கள், பூனைகள், சேவல்கள், மணிபுறாக்காள், தேன்சிட்டுகள் தமிழ் நாட்டில் இருப்பதே போன்ற உணர்வை ஏற்படுத்தின. அதிகாலை கொக்கரக்கோ என உரத்துக் கூவி எழுப்பிய சேவலும், வீட்டுக்கு வெளியே தத்திப் பறந்து இரை பொறுக்கிய மணிப் புறாக்களும், பூச்செடிகளில் தேன் உறிஞ்சிய தேன் சிட்டுகளும் வேற்று நாட்டுக்கு வந்திருக்கிறோம் என்பதை நம்பவிடாதபடி செய்தன. இங்கு என் வீட்டில் உள்ள அத்தனை குரோட்டன்களும். செம்பருத்திச் செடிகளும், கரிசிலாங் கண்ணி, கீழானெல்லி, அம்மாம்பச்சரிசிப் பச்சிலை – எல்லாம் பாதையின் இரண்டு பக்கமும் தென்பட்டன. சாலை ஓரம் வேப்ப மரங்களும் கொய்யா மற்றும் மாமரங்களும் இங்குள்ளவை போலவே இருந்தது வியப்பளித்தது. வழியில் மண்ணில் புதைந்து துருத்திக் கொண்டிருந்த நத்தை ஓடுகளும் கிளிஞ்சல்களும் கூட இங்குள்ளவை போலவே இருந்தன.

300 ஆண்டுகளுக்குமுன் கண்டறியப்பட்டு, 180 ஆண்டுகளுக்கு முன்தான் மனிதக்

குடியேற்றம் நிகழ்ந்திரூக்கிறதே – ஏன் இத்தனை தாமதம் ? ஏன் இன்னும் முன்னதாகவே

இத்தீவுகள் கண்டுபிடிக்கப் படவில்லை ? ஏனென்றால் அருகே 1000 மைல்களுக்கு நிலம் ஏதுமில்லாததும் அதிவேக எந்திரப் படகும் ஆப்ரிக்காவிலிருந்து அங்கு போக 3 நாட்கள் பிடிக்கும் என்பதாலும் அவ்வளவு தொலைவிலிருந்தவை கண்களில் படவில்லை.

இத்தீவுகள் பிரிட்டிஷாரின் வசம் இருந்தபோது பதினான்காம் லூயி காலத்தில்

பிரிட்டனின் நிதிமந்திரியாக இருந்தவர் Viscount Jeen Moreen de Seychelles என்பவர். அவரை கெளரவிப்பதற்காக அவரது பெயரை இத் தீவுகளுக்கு வைத்தார்களாம்.

(தொடரும்)

saba1935@sancharnet.in

Series Navigation

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்