பாரதி இலக்கிய சங்கம் – நிகழ்ச்சி

This entry is part [part not set] of 55 in the series 20041104_Issue

திலகபாமா


சிவகாசி

நாள் ..31.10.04 ஞாயிற்ருக் கிழமை மாலை 6 மணி

31.10.04 ஞாயிற்றுக் கிழமை அன்று சிவகாசியில் மாலை 6 மணிக்கு பாரதி இலக்கிய சங்கமும், காவ்யா பதிப்பகத்தாரும் இணைந்து நடத்திய நூல் வெளியீட்டு விழா துவங்கியது.

இராசபாளையம் உமாசங்கரின் பாரதியின் “எத்தனை கோடி இன்பம் வைத்தாய்” பாடலுடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. சி. கனகசபாபதியின் பேத்தியான ஆலயாவின் வரவேற்புரையுடனும், சி. கனகசபாபதியின் மகளான சக்தியின் அறிமுக உரையையும் தொடர்ந்து சா. கந்தசாமி நனைந்த நதி சிறுகதைத் தொகுப்பை வெளியிட லஷ்மி கனகசபாபதி பெற்றுக் கொண்டார்.

“ எந்த ஆதிக்க மனோபங்களூக்குள்ளும் சிக்காமல் வாழ்க்கை அனுபவங்களிலிருந்து சிறுகதைகளை படைத்திருக்கின்றார் . அருமையாக வந்திருக்கின்றது. என புத்தகத்தை பெற்றுக் கொண்ட லட்சுமி கனகசபாபதி அவர்கள் பேசினார்கள்

சா. கந்தசாமியின் தலைமை உரையில்” எழுத்து என்பதில் என்றைக்கும் காலாவதி ஆகாமல் இருப்பது மனிதனின் மனம் பற்றிய விசயம் தான். மனித மனம் மட்டும் தான் காலம் எவ்வளவு மாறினாலும் மாறாத ஒன்று. இன்றும் சிலப்பதிகாரம் படிக்கப் படுகின்றது என்றால் எந்தப் பகுதி எழுதப் பட்டிருப்பது என்பதனால் அல்ல. எதைப் பற்றி சொல்லப் பட்டிருக்கிறது என்பதால் தான். திருவள்ளுவர் உலக இலக்கியம் படைப்பதற்காக எழுதவில்லை. உள்ளூர் இலக்கியம் படைக்கவே எழுதினார். “யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்று சொன்ன அந்த தமிழன் 50 அல்லது 60 கி.மீட்டருக்கு மேல் பயணம் செய்திருக்கவே முடியாது.”உலகம் யாவையும் தாமுளவாக்கலும்” என்று பாட முடிகின்றது. என்றால் பரந்து பட்ட பார்வையில் எழுத்துக்களை உருவாக்கியிருக்கிறார். நூல்களை எழுதுவதில் ஆண் எழுத்து என்றும் பெண் எழுத்து என்றும் இருப்பதாக சொல்வதற்கில்லை. நாம் ஆண்டாளையோ காரைக்கால் அம்மையாரையோ பெண் கவிஞர் என்று சொல்வதில்லை. கவிஞராகத்தான் பார்க்கின்றோம் பெண்களூடைய நலம் சார்ந்தும் நாம் சிந்திக்க வேண்டியிருக்கின்றது, எல்லா காலத்திலும் ஒரு சமுதாயத்தின் மேல் இன்னுமொரு சமுதாயம் ஆதிக்கம் செலுத்திய வண்ணமே இருக்கின்றது சரித்திரத்தை வைத்து பார்க்கின்ற போது பெண்ணுக்காக ஆண்கள் எப்போதும் போராடிக் கொண்டு வருகின்றார்கள் ஏனெனில் சமத்துவமும், சுதந்திரமும் இரண்டு பேரும் சேர்ந்து பெறக்கூடிய விசயம் . பெண் அடிமைப் பட்டுக் கிடக்கிற வரை ஆணும் சுதந்திரம் பெற முடியாது..

திலகபாமாவின் சிறுகதைகளை இந்த தொகுப்பில் தான் முதன் முதலாக வாசிக்கின்றேன் படித்த உடனேயே மகிழ்ச்சியுடன் கூட்டத்தில் கலந்து கொள்ள ஒப்புக் கொண்டேன் இந்த சிறுகதை தொகுப்பானது மிகவும் செம்மையான முறையில் ஒரு அக்கறையுடனும் ஈடுபாட்டுடனும் இலக்கியம் சார்ந்து எழுதப் பட்டுள்ளது. திலகபாமாவின் படைப்பு வாழ்க்கையை அனுபவிக்கும் விதமாக அறிந்து கொள்ளும் விதமாக எழுதியுள்ளார். எதைப் பற்றியோ அவர் எழுதவில்லை. வாழ்க்கையை பற்றித்தான் எழுதியுள்ளார். நேராக அவர் சொன்ன கதைகளூக்கு அப்பால் சொல்லப் படாத கதையும் அதனூடே சொல்லப் படுகின்றது காவியத்துடைய ஒரு வரலாறாக இருப்பது இந்த தொனி. சொன்னதிலிருந்து சொல்லப் படாத அம்சத்தை சொல்லாமலே புரிந்து கொள்வது . மனிதர்களைப் பற்றியே பேசுகின்றது. ஒரு கதாஆசிரியரைத் தவிர வேறு யாரும் அந்த கதையை சிறப்பாக சொல்லி விட முடியாது . அது அந்த படைப்புக்கு தீங்கிழைப்பதாக அமைந்து விடும். மனித உறவுகளைப் பற்றித்தான் தொகுப்பு நெடுகிலும் எழுதியிருக்கின்றார். விழிகள் என்ற கதையும், “பயணத்தின் பயணம்” எனும் கதையும் படிக்க வேண்டுமென்று சிபாரிசு செய்கின்றேன். என்று பேசினார்.

அதைத் தொடர்ந்து சிறப்புரையாற்றிய பொன்னீலன் அவர்கள், கவிதைகள் சிறுகதைகள் ஆகியவற்றுக்கென தனித்தன்மை ஒன்று உண்டு . சிறுகதைகளுக்கான அந்த தனித்தன்மைக்குரிய தன்மையை உதிர்த்திருக்கின்றன. ஆனால் சிறுகதைக்குரிய அடிப்படை அடையாளங்கள் தெளிவாக உள்ளன. மொத்தம் 12 கதைகள் முதல் 6 கதைகள் பரு உடல் கொண்டவையாகவும், மீதி 6 கதைகள் மனமே உடலாக கொண்டவையாகவும் உள்ளன. பெண் விடுதலை என்ற உணர்வில் உருவான யதார்த்தக் கதைகள். இந்தக் கதைகள் இரண்டு மண்ணை தளமாக கொண்டுள்ளன. ஒன்று மலை சார்ந்த பகுதி. திலகபாமாவின் இளமைக் கால வாழ்க்கை வழுக்கி ஓடிய பகுதி. மலை பெரிய மரங்கள் அருவி இரைச்சல் என்று மலை சார்ந்த பகுதி. இன்னொன்று சிவகாசி என்ற பாலை வனப் பகுதி. அந்த பாலை நிலத்தில் தான் வாகை தீ பூ உருவாகியிருக்கின்றது.. இளமை இளமை சார்ந்த வாழ்க்கை கனவுகள் கனவு மயமான சந்தோசம் என்று ஒரு பக்கமாகவும் அதிலிருந்து விடுபட்டு ஒரு ஜடமாகவும் யாருக்காகவோ தன் வாழ்க்கையை உணர்ச்சியை ஒடுக்கிக் கொண்டது போல சில இடங்களில் அழுந்துவது போலவும். சில இடங்களில் கொட்டித் தெறிப்பது போலவும் ஒரு கதையில் பல முகங்களாக சித்தரித்துள்ளார்.. விடுதலை என்ற உணர்வோடு எழுதபட்டிருக்கிறது “பயணத்தின் பயணம்.” வாழ்க்கையில் பெண்ணுக்கு ஆண் துணை தேவையா இல்லையா என்ற பெரும் கேள்வி இப்போது கேட்கப் படுகின்றது. ஆண் துணை பெண்ணுக்கு தேவை என்பதில் ஒரு அதிகாரம் உருவாகி விடுகின்றது. மற்றொன்று ஆண் துணை இல்லாது பெண் வாழலாம் என்பது. துணை இல்லாமால் வாழ முடியுமா முடியாதா என்ற கேள்வி எழுத்தாளரை குடைகிறது.. அதனுடைய வெளிப்பாடாக இந்த கதை உருவாகியிருக்கின்றது. இது யதார்த்தக் கதை.. “கல்லறையில் கல்பூ” , “காட்டு வழிக் காற்று” , “புதையும் விதைகள் “, வெற்றுத் தாள்களில் விளைந்த அச்சுக்கள்” ஆகியன உணர்வின் கதை வடிவங்கள் . இதில் “கல்லறையில் கல் பூ” தனித்து நிற்கின்றது. சமூகத்தின் கொடுமையால் கல்லாகி , கல்லறையில் இருந்து உணர்வு பெற்று பூக்கத் தொடங்குகின்றாள்

அகலிகை ஒரு காலத்தில் கெளதமனால் கல்லாக்கப் பட்டாள். இன்றைய அகலிகை இந்த சூழ்நிலையால் தன்னைத் தானே கல்லாக மாற்றிக் கொண்டாள். காலச் சுவடுகளினால் பின்பு தங்களை தாங்களாகவே மனுஷி ஆக்கிக் கொண்டு வாழ முயற்சி எடுக்கின்றன இவரது பாத்திரங்கள். இந்த படிமம் 12 கதைகளின் ஊடாகவும் நிறைய இடங்களில் சொல்லப் பட்டிருக்கின்றது. இதுதான் மையமான பிரச்சனையாக தோன்றுகின்றது. ஆண் ஆதிக்கம் பலாத்காரம் உதாசீனங்கள் அதிகார மனோபாவங்கள் வக்கிரங்கள் எனத் தனித்தனியாக அவற்றிற்கெதிரான மன உணர்வுகளை கதைகளைவிட கதைகளின் உணர்ச்சிகள் தெளிவாக பதிவாகியுள்ளன. இது நவீன கதை சொல்லும் உத்தி முறை .இதில் இவர் வெற்றி பெற்றுள்ளார். குடும்ப வாழ்க்கையை திலகபாமா போற்றுகிறார். அப்பா, அம்மா, உறவினர்கள் என குடும்ப வாழ்க்கையிலிருந்து அறுபட்டு விலகி விடாத மனம் கொண்டவர் திலகபாமா என்பதை அவர் கதைகளில் காணலாம். காதலும் சமூகமும் முரண் படும் போது காதலை, ஒரு மனம் சார்ந்த விசயமாக, ஒரு இனிய உறவாக, இனிமை பயத்துக் கொண்டிருக்கும் ஒரு உணர்வாக இந்த கதைகளில் பா ர்க்க முடியும். இந்த மனப் போக்கை அவர் கவிதைகளிலும் காண முடியும். “தீப்பூக்கும் வாகை” எனக்குப் பிடித்த சிறுகதை சித்தாளிடமிருந்து விடுதலை மனோபாவத்தை ஒரு குடும்பப் பெண் பெறுவதாக உள்ளது.

அடுத்து உள்ள “ விழிகள்” கதையில் தன் கணவன் வேலைக்காரியுடன் அம்மணமாகக் கிடந்த காட்சியைக் கண்டு அம்மணமாகிப் போன பைத்தியக் காரியின் காட்சியை சித்தரித்துள்ளார். “துடிப்புகள்” ஆண் பெண் சமத்துவத்தை வலியுறுத்தும் கதை

எந்தக் கதையும் எதையும் அட்வகேட் செய்யவில்லை. மனிதப் புரிதலை விசாலப் படுத்துகின்றது. 12 கதைகளின் ஊடாக நகலும் பாத்திரம் தீபாவும் குமாருமே. 12 கதைகளையும் 12 கதைகளாகவும் படிக்கலாம். 12 கதைகள் ஊடாக ஒரு கதையாகவும் வாசிக்கலாம். உள்ளடக்கம் உருவம் மொழி நுட்பம் எல்லாக் கதைகளிலும் தெளிவாக வந்திருப்பது அந்த தோற்றத்திற்கு காரணமாகவும் அமைகின்றது. இக்கதைகளின் உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகிப்பது கவிதை மொழி. பெண்ணியம் எனும் துறை கிளை விட்டு பரந்து விரிந்து கொண்டிருக்கின்ற வேளையில் வாழ்வை வாழ்வின் ஒருமையை ஒருமையின் சமத்துவத்தை கம்பீரத்தை குறைபாடுகளால் ஏற்படும் கோபத்தை தான் பார்த்த பார்வையை தெரிந்த விசயத்தை நேராகச் சொல்வதைக் காட்டிலும் தொனியாக ச் சொல்வதிலும் வெற்றியடைந்துள்ளார் என்று பேசினார்

தொடர்ந்து பேசிய வைகைசெல்வி சில புத்தகங்கள் சரியான நேரத்தில் வெளி வருகின்றன. பெண் மொழி பற்றி பல விவாதங்கள் நடந்து கொண்டிருக்கும் போது திலகபாமா முன் வைக்கின்ற விவாதங்களுக்கு வலுச்சேர்க்கும் படி இந்த சிறுகதை தொகுப்பு வந்திருக்கின்றது. என்றும்

தேவேந்திர பூபதி தன் பேச்சில் இன்று திலகபமா அவர்கள் புதிய பிறப்பு எடுத்துள்ளார்கள் சிறுகதை எழுத்தாளராக. அனைவருக்கும் வரக்கூடிய ஒரு கேள்வி

இத்தனை காலம் கவிதை எழுதியவர் ஏன் சிறுகதை எழுத வேண்டும் அவரே சொல்கிறார். கவிதையாகட்டும் சிறுகதையாகட்டும் தன்னை தானே அதுவே தீர்மானித்துக் கொள்கின்றது என்று. அந்த தீர்மானத்தின் வெளிப்பாடுதான் இந்த “நனைந்த நதி” சிறுகதை தொகுப்பு. இந்த 12 சிறுகதைகளும் ஒரு விதமான மன அழுத்தங்களை ஒரு கவிஞன் சாதாரண மனிதனைத் தாண்டி ஒரு மென்மையான உணவுர்களில் மூலமாக அடுத்தவர்களின் துன்பங்களை பிரச்சனைகளிலிருந்து பார்க்கக் கூடிய உன்னதமான நிலையை எழுதியிருக்கின்றார். இத்தொகுப்பில் ஒரு குறையாக நான் காண்பது அனைத்து கதைகளிலும் தீபாவும் குமாரும் வந்து கொண்டே இருக்கின்றார்கள்.

சிறுகதைக்கு உரிய வரையரைகளை மீறாமல் எழுதப் பட்டிருக்கின்றன. அது இயல்பாகவே நேர்ந்திருக்கின்றது.. சிறுகதையின் வடிவங்கள் உள்ளாக்கங்கள் தெளிவாக உள்ளது தேர்ந்த எழுத்தாளனின் முதிர்ச்சியை காண்பித்துள்ளார். ஒவ்வொரு கதைகளிலும் பேசக் கூடிய விசயங்கள் தெளிவாக இருக்கின்றது. விரும்பியோ விரும்பாமலோ பெண் கவிஞர்களை பற்றியோ பெண் கவிதைகளை பற்றியோ விவாதிக்கக் கூடிய அரங்காகவே இருந்து வருகின்றது. போன கூட்டத்த்திலும் பேசினேன். ஒரு பிரதி தனக்கு முரணான பிரதியாக இருக்கக் கூடாது என்று . அப்படியான முரணில்லாத பிரதியை என் அன்புத் தோழி தந்திருப்பதில் பெருமை கொள்கின்றேன்.

சிறுகதை வடிவமே இறக்குமதி செய்த சரக்குதான். அதிலும் மண்ணின் மணம் சார்ந்த கதைகள் இவை. “விழிகள்” கதை படித்தவுடன் அதிர்வை ஏற்படுத்தியது ஆன்டன் செக்காவின் வான்கா கதையில் வருகின்ற மன அதிர்வை இக்கதையும் ஏற்படுத்தியது.. இந்த சிறுகதைகளின் மிகச் சிறந்த அம்சம் இக்கதைகள் எதையுமே ஒரு சார்பாக முன்நிறுத்த முயலவில்லை. இலக்கியத் தரமான வார்த்தை பிரயோகத்தில் இயல்பாக நடக்கின்ற விசயங்களை பதிவு செய்திருக்கின்றார்

ஆரம்பத்திலிருந்தே ஒரு பெண்ணாக இல்லாமல் சமூகத்தி;ல் இருக்கக் கூடிய பிரச்சனைகளை ஒரு படைப்பாளியாகவே அணுகியிருக்கின்றார்.. ஒரு வினாடி நேரத்தில் நிகழக் கூடிய சீற்றல் இந்த கதைகளில் இருக்கின்றது. வலிந்து எழுதக் கூடிய எந்த வார்த்தை பிரயோகங்களும் இல்லாது சொல்ல வந்தவற்றை சொல்லியிருப்பது இந்த கதைகளுக்கு கிடைத்திருக்கக் கூடிய வெற்றி.

தான் பார்த்த பார்வையை வாசகன் புரிந்து கொள்வதற்காக உருவாக்கப் பட்ட வடிவம் சிறுகதை. அதையும் இந்த அத்தொகுப்பு நிறைவு செய்திருக்கின்றது. “பயணத்தின் பயணம்” ஒரு பெண் சூழ்நிலையால் எப்படி பாதிக்கப் படுகின்றாள் என்பதையும் தனக்கு கிடைத்த சூழ்நிலையை ஒரு பெண் எப்படி பயண் படுத்திக் கொள்கின்றாள் என்பதையும் கூர் கத்திமேல் நடக்கக் கூடிய லாவகத்தோடு சொல்கின்றது.. மார்க்சிம் கார்க்கி சொல்லுவான் படைப்பை விட படைப்பாளி ஒரு அங்குலமாவது உயரமாய் இருக்க வேண்டும். என்று அது மாதிரியான உண்மையான கலைஞரை, படைபாளியை கந்தக பூமி தந்திருக்கின்றது. அவருக்கு எனது வாழ்த்துக்கள் எனறு பேசினார்.

அதைத் தொடர்ந்து பேசிய பேராசிரியர் ஆனந்த குமார். பெண் கவிஞர்கள் பொதுவாக பார்க்கும் போது மிகக் குறைவு. 21ம் நூற்றாண்டில் புதிய பெண் கவிஞர்கள் மிக அதிகமாக வந்து கொண்டு இருக்கின்றார்கள். கவிதையிலிருந்து சிறுகதைக்கு மாறுவது ஒரு ரசவாதமுள்ல எளிமையான செயல். திலகபாமாவின் சிறுகதை கவிதையோடு நகர்கின்றதே தவிர வசனத்தோடு அல்ல.

மேலும் அவருடைய கதைகள் வாழ்க்கையிலிருந்து பெற்ற அனுபவமாகத்தான் இருக்கின்றது. திலகபாமா முதல் 3 கதைகளில் இயற்கையை வைத்து கதை சொல்லியிருக்கின்றார். “நனைந்த நதி “யில் நதியில் குளிக்க வந்த இரண்டு பெண்களூடைய வாழ்க்கையை பற்றிய உணர்வுகளை எடுத்துரைக்கிறது. மனித உணர்வுகளை மனிதனை நதியாக பார்க்கின்றார். நதி எல்லா நேரத்திலும் ஒரே மாதிரியாக இருக்காது. சில சமயம் கலங்களாகவும், ஆழமாகவும், தெளிவாகவும் ஆழமற்றதாகவும் குளிர்ச்சியாகவும் இருக்கும் இதே போல மனிதனும் பல வித மனோ பாவங்களை வத்திருப்பதாக நதியை மனிதனோடு ஒப்பிடுகிறார்கள் “புதையும் விதைகள்” கதையில் தீபச் சுடராக மாறி தீபா பேசுவது போல தேர்ச்சி பெற்ற நுணுக்கம் இந்தக் கதையில் ஆசிரியருக்கு கை வந்திருக்கின்றது. கல்லறையில் கல் பூ பெண்ணுடைய கற்பு சம்பந்தப்பட்ட உண்மை அதில் இருக்கின்றது. “காட்டு வழிக் காற்று” வில் பெண்ணின் உடல் சார்ந்த விசயம் பற்றி உள்ளது. ஆகவே பெண் என்பவள் உடல் சார்ந்தவளாக பார்க்காமல் மனம் சார்ந்த விசயமாக பார்க்க வேண்டும் பெண் என்பவள் காற்று போன்றவள் என முடிக்கின்றார்

தொடர்ந்து தன் ஏற்புரையில் திலகபாமா இந்த சிறுகதைகளை படைத்த படைப்பாளியாகவும், கதையை வாசிக்க நேர்ந்த வாசகனாகவும் இருவேறு மனநிலையிலிருக்கும் என் உணர்வுகளை இந்த தருணத்தில் பகிர்ந்து கொள்லலாம் என்று நினைக்கின்றேன்.

முதலில் படைப்பாளியாக சில கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய தேவை எனக்கிருக்கிறது.. சிறுகதை தொகுப்பு வெளியீடு என்றவுடன் இரண்டு கேள்விகள் என் முன் வைக்கப் பட்டன. கவிதையிலிருந்து சிறுகதைக்கு ஏன் மாறி விட்டார்கள் ? கவிதையில் சாதிக்க முடியாமல்தான் சிறுகதைக்கு வந்தீர்களா என்று ?

கவிதையை விட்டு விட்டேனா, தோற்று விட்டேனா என்பதற்கு தொடர்ந்து வரும் என் கவிதைகள் பதில் சொல்லி விடும். நான் கதைக்கு மாறவில்லை. எனக்குள் இருப்பது ஒரு படைப்பு மனநிலை மட்டுமே.. படைப்பு மனநிலைக்கு கவிதை கதை என்ற உருவ வித்தியாசங்கள் கிடையாது என்றே தோன்றுகின்றது. தனக்கான வடிவத்தை அந்த படைப்பு தானே தீர்மானித்துக் கொள்கின்றது கவிதைகள் உணர்வு ரீதியாக சில விசயங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கின்றது ஆனால் கதைகள் அந்த உணர்வுகளுக்கான சூழல்களை காரணங்களை , சமூகம் சார்ந்த வெளிப்பாடுகளை என பலவற்றையும் நம்மோடு பகிர்ந்து கொள்கின்றன் கதைகள்.. ஒரு படைப்பு மனிதனுக்குள்ளிருந்து பிரவாக மெடுத்து வருகின்ற விசயம்தான். ஆனால் அந்த பிரவாகம் சில இடங்களில் அருவியாகவும் நதியாகவும் மாறுகின்றது. அது போல படைப்பு தன் வடிவத்தை தானே தீர்மானித்துக் கொள்ளுகின்றது இன்றைக்கு வெளி வருகி ன்ற பல படைப்புகளை தீர்ந்து போன விசயமாக நாம் காண நேர்கின்றது அதற்குக் காரணம் படைப்புகள் பல இன்றைக்கான நவீனம் இது என்று தீர்மானிக்கப் பட்டு “செய்யப் பட்டு” வருவதே பல நச்சு இலக்கியங்கள் உருவாவதற்கு காரணம் ஆக ஒரு படைப்பு செய் முறை உத்தியை கையிலெடுத்துக் கொண்டு செய்யப் படு பொருளாக மாறக் கூடாது. அதனாலேயே என் படைப்பை அது அதன் வடிவத்தை தானே தீர்மானிக்க விட்டு விடுகின்றேன்

அந்த படைப்பை முடித்த பிறகு ஒரு வாசகனாய் நானும் அதை விமரிசிக்கிறேன் . அப்படியான என்னுடைய விமரிசனங்கள் என்ன வென்றால் இலக்கணங்களை வைத்துக் கொண்டு எந்த இலக்கியமும் படைக்கப் படுவதில்லை. புதிதாய் உருவெடுக்கின்ற படைப்பிலிருந்து புதிய இலக்கணங்கள் உருவெடுக்கின்றது. நண் பர் பூபதி கேட்டார் தீபா என்கின்ற பெயர் ஏன் திருப்பித் திருப்பி வருகிறது என்று. அதுவும் இயல்பாய் நேர்ந்ததுதான் இந்த பெயர் சூட்டலை நான் எப்படி அணுகினேன் என்றால்”சிறகுகளோடு அக்கினிப் பூக்களாய்” கவிதை தொகுப்பில் பாத்திரத்தின் பெயர் எந்த இடத்திலுமே சொல்லப் பட்டிருக்காது. அதற்காகத் தேவையே எழாமல் முழுக் கதையோட்டமும் அந்த கவிதையில் வந்திருக்கும் அதை என் விமரிசனப் பார்வையில் நான் “பெண் நிலை பாத்திரத்தை குறிக்கோள் நிலைக்கு எடுத்து ச் செல்லும் உத்தியாகத்தான் பார்க்கின்றேன்”. உதாரணமாக் சங்க இலக்கியங்களில் எந்த பா த்திரப் பெயர்களும் சுட்டிக் காட்டப் பெறாமல் தான் இடம் பெற்றிருக்கும். பாரதியின் பாஞ்சாலி சபதத்தில் பாஞ்சாலியின் பெயர் , பாரத மாதா எனும் குறிக்கோள் நிலைக்கு எடுத்துச் செல்லப் பட்டிருக்கும். பெயர் சொல்லாததன் மூலமும் , பொதுமை படுத்து வது நிகழ்ந்திருக்கிறது. பெயர் சொல்லுவதன் மூலமும் பொதுமை படுத்துவது நிகழ்ந்திருக்கிறது. அந்த வையான உத்தி இந்த சிறுகதைகளிலும் , அந்தந்த கதைக்கான தனித்த பாத்திர அடையாளமாக்காமல், தொடர்ந்து எல்லா கதைகளிலும் தீபாவின் பெயர் வந்திருப்பதன் மூலம் எல்லாக் கதைகளில் வரும் பெண் பாத்திரங்களையும் குறுக்கோள் நிலைக்கு பொதுமைப் படுத்தி பெண்ணுக்கான மனித இருப்பை எடுத்துச் சொல்லும் உத்தியாகத்தான் நான் காண்கின்றேன். . பெண்ணுக்குள்ளே இயல்பாக வெளிப்படும் விசயங்களை பெண் எப்படி உணர்ந்திருக்கிறாள். சமூகம் அவள் உணருதல்களை எப்படி பார்க்கின்றது எனபதை நோக்கி என் படைப்புகள் நகருகின்றன. இன்னுமொரு விசயம். அற்புதப் புனைவியலை எல்லா சம கால படைபாளிகளும் மிகப் பெரிய படைப்பாளிகளாக நாம் சிலாகிக்கின்ற படைப்பாளிகளும் கையாளுகின்றனர். ஆனால் படித்து முடித்தவுடன் அந்த படைப்பு என்ன தருகிறது என்றால் எதுவுமே என் கை சேராத வெறுமை நிலை தான் இருக்கின்றது. நம் வாழ்க்கைக்கு தேவையான நடப்பியல் அதில் இல்லாமலேயே போகின்றது. ஆனால் அற்புதப் புனைவியலிலும் நடப்ப்பியலை பேச முடியும் என நிரூபிக்கின்ற கதையாகத்தான் நான் காட்டு வழிக் காற்றைப் பார்க்கின்றேன். . நான் உணர்ந்த விசயங்களை இந்த சிறுகதை தொகுப்பு பதிவு செய்திருக்கின்றது.இந்த பதிவுகளை தொடர்ந்த விவாதங்களின் மூலம் நிறைய கற்றுக் கொண்டிருக்கின்றேன். தொடர்ந்து கற்றுக் கொள்ளவும் விரும்புகின்றேன்

என்று தனது ஏற்புரையில் பேசினார்

இந்த நிகழ்ச்சியை சி. கனகசபாபதியின் மகள் சக்தி தொகுத்து வழங்கினார்.

—-

mathibama@yahoo.com

Series Navigation

திலகபாமா

திலகபாமா