அரசியலும் ஆங்கில மொழியும்

This entry is part [part not set] of 50 in the series 20040715_Issue

ஜார்ஜ் ஆர்வெல்


( அரசியல் எப்படி மொழியின் துல்லியத்தைச் சிதைத்து நசிவடையச் செய்கிறது என்ற இந்தக் கட்டுரை , இன்று அரசியல் காரணங்களால் மலினமுற்ற எல்லா மொழிகளுக்கும் பொருந்தும் என்பதால் இங்கு மொழிபெயர்ப்பில் பிரசுரம் கொள்கிறது. ஜார்ஜ் ஆர்வெல் George Orwell(1903-1950) எரிக் ஆர்தர் ப்ளேர் Eric Arthur Blair என்ற பிரிட்டிஷ் நாவலாசிரியரின் புனைப் பெயர். ‘விலங்குப் பண்ணை ‘ , ‘1984 ‘ போன்ற எதேச்சாதிகார எதிர்ப்பு நாவல்களின் ஆசிரியர். 1946-ல் எழுதப்பட்டது இந்தக் கட்டுரை)

ஆங்கிலம் மிக மோசமான மொழியாகிவிட்டது என்பது எல்லோரும் அறிந்ததே. ஆனால் அது குறித்து நாம் ஒன்றும் செய்ய இயலாது என்பது ஒருமித்த கருத்து. நம் கலாசார நசிவின் ஒரு பகுதியே மொழி நசிவு என்பதாக ஒரு வாதம் முன்வைக்கப் படுகிறது. மொழியின் நசிவுக்கு எதிரான நம் போராட்டம் , ஏதோ மின்விசிறிகளுக்குப் பதிலாக கைவிசிறிகளை நாடிப் போவது போலத் தோன்றலாம். பின்னோக்கிச் செல்லும் ஒரு முயற்சியாய்த் தோன்றலாம். இந்த எண்ணத்தின் கீழ் இருக்கும் சிந்தனை , மொழி ஏதோ இயற்கையாய் வளரும் ஒரு வஸ்து போன்றது, நம் நோக்கங்களுக்காக நாம் செதுக்கும் ஒரு கருவி அல்ல என்பதாகும்.

மொழியின் நசிவு அரசியல் மற்றும் பொருளாதாரக் காரணங்கள் கொண்டது என்பது தெளிவு. ஏதோ குறிப்பிட்ட சில எழுத்தாளர்களின் பாதிப்பினால் இவ்வாறு மொழி நசிகிறது என்றும் சொல்லவியலாது. ஆனால் (மொழி நசிவு என்ற ) ஒரு விளைவே காரணமாக ஆகி, மூல காரணத்துக்கு மேலும் வலிமை கொடுப்பதாகவும் இன்னும் தீவிரமான முறையில் மொழி நசிவு என்ற விளைவை மீண்டும் ஏற்படுத்துவதாகவும் சுழலை உருவாக்கலாம். தன்னை எதற்கும் உதவாதவன், உதவாக்கரை என்று உணர்ந்தவன் , அதனால் குடிக்கலாம். பிறகு அவன் குடிப்பதாலேயே பலமடங்கு உதவாக்கரையாக ஆகலாம். ஆங்கில மொழிக்கு ஏறத்தாழ இதுதான் நடக்கிறது. நமது எண்ணங்கள் முட்டாள்தனமானவையாக இருப்பதால், நமது மொழியும் அசிங்கமானதாகவும், சரியானதாக இல்லாமலும் இருக்கிறது. ஆனால், நம் மொழியின் அசிங்கமும், குறைபாடுகளும் நமக்கு முட்டாள்தனமான கருத்துக்கள் தோன்ற எளிதாகப் பாதை அமைத்துத் தருகிறது. இந்த வழிமுறை தவிர்க்கமுடியாததாகவும் திருப்பி சரி செய்ய முடியாததாகவும் இருக்கிறது. காப்பி அடித்து உருவாக்கும் நமது நவீன ஆங்கிலம் மோசமான மொழிப்பழக்கங்களால் நிரம்பி வழிகிறது. ஒருவர் மிகவும் கஷ்டப்பட்டே அதன் குறைகளை நீக்கி எழுத மெனக்கெட வேண்டியிருக்கிறது. இந்த மோசமான மொழிப்பழக்கங்களை தவிர்த்தால் ஒருவர் மிகவும் தெளிவாகச் சிந்திக்கலாம். தெளிவாகச் சிந்திப்பதே நமது அரசியல் பூர்வமாக புத்துயிர் பெற முதல் படி. ஆகவே மோசமான ஆங்கிலத்துக்கு எதிரான போராட்டம் வெட்டிவேலை அல்ல. மோசமான மொழி வெறும் தொழில்முறை எழுத்தாளர்களின் பிரத்தியேகக் கவலை மட்டுமல்ல.

துல்லியமாய் எழுத முயலும் ஒவ்வொரு எழுத்தாளரும் , ஒவ்வொரு வாக்கியம் எழுதும் முன்னர் தன்னைத் தானே கேட்டுக் கொள்ள வேண்டிய நான்கு கேள்விகள் இவை :

1. நான் என்ன சொல்ல முயற்சி செய்கிறேன் ?

2. எந்த வார்த்தைகள் அதனை வெளிப்படுத்தும் ?

3.எந்தப் படிமம் அல்லது சொற்றொடர் அதைத் தெளிவுபடுத்தும் ?

4. இந்தப் படிமம் படித்தவர்கள் மனதில் பதியுமாறு , புதியதான ஒன்றாய் இருக்கிறதா ?

இதில்லாமல் மேலும் இரண்டு கேள்விகளும் தன்னையே அவன் கேட்டுக் கொள்வான்.

1. இன்னமும் சுருக்கமாக இதை ஆக்க இயலுமா ?

2. தவிர்க்கக் கூடிய மொழிக் கோளாறு ஏதாவது நான் எழுதிவிட்டேனா ?

இப்படியெல்லாம் சிரம மெடுத்துக்கொள்ளாமலும் எழுதலாம். ஆயத்தமாய் அணிவகுத்துவரும் சொற்றொடர்களைக் கொண்டு மனதைத் திறந்து வைத்தால். இதனால் இந்தச் சொற்றொடர்கள் உன்வார்த்தைகளை அமைக்கும் , உன் சிந்தனைகளையும் சிந்திக்கும். நீ சொல்லவிரும்பும் பொருளையும் மறைக்கும் – உன்னிடமிருந்தே கூட. அரசியலுக்கும் , மொழி நசிவிற்கும் இடையிலான சிறப்பான உறவு இப்படிப் பட்ட வாசகங்களைப் படிக்கும்போது தெளிவாகும்.

நம் காலத்தில் அரசியல் எழுத்து என்பது மிக மோசமான எழுத்தே. இதில் சிக்காதபோது, எழுத்தாளர் ஒரு வித்தியாசமான எழுத்தாளராய்க் காணப்படுவார். அவர் எழுத்து, கட்சிப் பிரசாரமாய் இல்லாமல் அவர் தனிப்பட்ட கருத்தாய் இருக்கக் காணலாம். சனாதனம் – அது எங்கேயிருந்து வந்தாலும் – உயிரற்ற, வெறும் பிரதி எடுக்கும் ஒரு நடையையே பாவிக்கிறது. பிரசாரத் துண்டுப் பிரசுரங்களில், உரைகளில் அறிக்கைகளில் காணப்படும் மொழி கட்சிக்குக் கட்சி வேறுபடலாம், ஆனால், புதிய சிந்தனை எதுவும் இருக்காது. மேடையில் முழங்கும் ஒரு ஆள் சாவி கொடுத்த கணக்கில் – அநீதி, அக்கிரமம், எதேச்சாதிகாரம், இரும்புக் கரம், உலக மக்களே ஒன்று சேருங்கள் – என்று அடுக்கும் போது ஏதோ ஒரு பொம்மையைக் கேட்கிற உணர்வு வருகிறது. பேச்சாளரின் கண்கள் வெறுமையேறிக் கிடக்கின்றன. இது வியப்பல்ல. தன்னை இயந்திரமாய் ஆக்கிக் கொள்ள அவர் செய்த முயற்சியின் விளைவே அது. மூளைக்கு வேலையே இல்லாத ஒரு இயந்திரத் தனமான தொகுப்பு முயற்சி அது. பேசும் உணர்வே இல்லாமல், திரும்பத் திரும்பச் சொல்லும் பயிற்சியால் விளைந்தது இது. கிருஸ்துவ தேவாலயத்தில் மக்கள் பாதிரியாருக்குப் பதில் சொல்லிக் கத்தும் குரல் போன்றது இது. இந்த உணர்வு குறைந்த நிலை, அரசியல் இணக்கத்திற்கு மிகவும் தேவைப் படுகிற ஒன்று.

—-

Series Navigation

ஜார்ஜ் ஆர்வெல்

ஜார்ஜ் ஆர்வெல்