குறியும் குறியீடும்

This entry is part [part not set] of 49 in the series 20040212_Issue

சோதிப் பிரகாசம்


சொற்களைப் பற்றி நாம் கவலைப் படத் தேவை இல்லை என்று அஸ்வ கோஷ் கூறுகின்ற ஆறுதல் மொழிகள் நமது காதுகளில் விழாமல் இல்லை. எனினும், பொருள் அற்ற புலம்பல்களாக நமது கருத்துகள் மாறி விடக் கூடாது என்பதால் சொற்களைப் பற்றியும் அவை குறிக்கின்ற பொருள்களைப் பற்றியும் கவலைப் பட வேண்டிய தேவை நமக்கு இருக்கிறது. குறி—குறிபொருள்—குறியீடு என்னும் கருத்தமைவு இதற்கு ஓர் எடுத்துக் காட்டு எனலாம்.

அதே நேரத்தில், இந்தக் குறி—குறித்தல் என்னும் சொல்லை நாம் நினைத்த உடன் நமது நினைவுக்கு தமிழவன் வந்து விடுகிறார். சொற்களின் பொருள்கள் பற்றிய அவரது கருத்துகளை ஈண்டு நாம் சற்றுப் பார்ப்போம்.

மலர் ஒன்றினைப் பறித்து ஓர் இளைஞியிடம் அதனைக் கொடுத்துத் தன் காதலை ஓர் இளைஞன் வெளிப் படுத்துகின்ற பொழுது, அந்த மலரைக் குறிக்கின்ற சொல்லின் பொருளில் என்னென்னவோ மாற்றங்கள் ஏற்பட்டு விடுகின்றனவாம்; இந்த மாற்றங்களைக் கருத்தில் கொள்ளாத எந்த ஒரு மொழி இயல் ஆய்வும் இன்று செல்லுபடி ஆகிட முடியாதாம்; இந்த இயலின் பெயர்தான் குறி இயலாம்; இதன் துணை இருந்தால் மட்டும்தான் தொல் காப்பியம் முதலான அனைத்துத் தமிழ் இலக்கணங்களையும் வளமாக நாம் புரிந்து கொள்ளவும் முடியுமாம்!

நம்மைத் தமிழவன் மிரட்டுகிறாரா ? அல்லது ஊக்கிவிக்கிறாரா ? அல்லது, தமது மிரட்சியை இப்படி எல்லாம் வெளிப் படுத்திக் கொள்கிறாரா ? என்பதுதான் நமக்குப் புரிய வில்லை. எனினும், நமக்குப் புரிய வில்லை என்பது நமது குற்றம்தான் ஆகிட முடியுமே ஒழிய அவரது குற்றம் ஆகிட முடியாது என்றும் நாம் எடுத்துக் கொள்ளலாம்.

அதே நேரத்தில், மார்க்ஸ் முல்லரைக் கண்டு, மொழி ஞாயிறு தேவ நாயனார் கூட மிரண்டு போய் இருந்த உண்மை நமக்குத் தெரிய வந்து இருக்கின்ற பொழுது, சசூர், ஃபூக்கோ, முதலான ஈரோப்பியர்களைக் கண்டு நமது தமிழவனும் மிரண்டு விட்டு இருக்கலாமோ என்னும் ஐயமும் நமக்கு ஏற்பட்டு விடுகிறது.

ஏன், இந்தியத் தத்துங்களைப் பற்றி ஜெய மோகன் கூறுவது சரியாக இருக்குமா ? அல்லது பேராசிரியர் இராதாக் கிருஷ்ணன் கூறி இருந்தது சரியாக இருக்குமா ? என்னும் கேள்வி தமது உள்ளத்தில் எழுந்த பொழுது, பெருத்த பெயர் ஒன்றை மட்டும் அடிப்படையாகக் கொண்டு தத்துவப் பேராசிரியர் இராதாக் கிருஷ்ணன் கூறி இருந்ததுதான் சரியாக இருந்திட முடியும் என்று பொ. வேல்சாமி முடிவு எடுத்து விட வில்லையா ?

ஞாயம்தானே! அரியணையில் அமர்ந்து ஆட்சி புரிந்து கொண்டு வந்து இருந்த லெனினை விடவும் த்ரோத்ஸ்கியை விடவும் ஸ்தாலினை விடவும் மாவோவை விடவும் தெளிவாக மார்க்ஸியத்தை யார்தான் புரிந்து கொண்டு இருக்க முடியும் ? பொதுமைப் புரட்சிக் காரர்களே இப்படி என்றால் பொ. வேல்சாமி, பாவம், என்ன செய்வார் ?

இதனால்தான் மாக்ஸ் முல்லர் கூறினார் போலும்—பெருத்த பெயர்கள் அல்ல, ஆய்வின் ஆழம்தான் முக்கியம் என்று! எப்படியும், ஈரோப்பியர் அல்லவா அவர்! மெய்ப் பொருண்மைப் பேராசிரியர்கள் எல்லோரும் மெய்ப் பொருண்மை யாளர்களாக இருந்திட வில்லை என்று அவர் மகிழ்ந்திடவும் நேர்ந்து இருந்தது!

சரி, தமிழவனைப் பற்றிப் பேசுகின்ற நேரத்தில் நமக்கு எதற்கு மாக்ஸ் முல்லரின் கதை ? என்று யாராவது கேட்டால், சசூர், ஃபூக்கோ, தமிழவன், முதலானவர்களுக்கும் முந்திய மொழி ஆய்வாளர் அவர் என்பதனால்தான்! எனினும், தமிழவனின் குறி இயலுக்கு நாம் வருவோம். ( சசூரை நான் படித்தது இல்லை; சிவகாமி எனக்குத் தந்து இருந்த—ஃபூக்கோ பற்றிய குறிப்புகள் அடங்கிய நூலும் எனக்குப் போதுமானதாக இருக்க வில்லை.)

தனது காதலிக்கு தமிழவனின் காதலன் கொடுத்து இருந்த அந்த மலர், ஒரு குறிப்பான், அதாவது, ஒரு ‘குறி பொருள் ‘ ஆகி விகிறதாம்; கூடவே, காதலின் குறிப்பீடு, அதாவது, ‘குறியீடு ‘ ஒன்றும் உருவாகி, அந்த மலரை ஒரு ‘குறி ‘யாகவும் ஆக்கி விடுகிறதாம்!

மயிர் பிளக்கும் வாதம் என்பார்களே, அது என்ன வென்று தெரியாதவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஈரோப்பில் இருந்து தமிழவன் இறக்குமதி செய்து இருக்கின்ற ஒரு வாதம்தான் இது போலும்! தமிழகத்தின் அறிவாண்மைச் சந்தையில் நன்றாக இது விலை போயும் இருக்கிறது! எப்படியும், இந்தப் பதத்தை, அதாவது, ‘மயிர் பிளக்கும் வாதம் ‘ என்னும் பதத்தை முதலில் பயன் படுத்தத் தொடங்கி இருந்த அந்த மா மனிதருக்கு நாம் நன்றி சொல்லி ஆக வேண்டும்.

சரி, தமிழவனின் மலர்களுக்கு நாம் வருவோம்.

‘அந்தப் பூக்கள், காதலுக்கு அடையாளமாக ஒருவருக்குக் கொடுக்கப் படும் போது, அந்தப் பூங்கொத்து, ‘குறிப்பான் ‘ ஆகி விடுகிறது. அது போல், காதல் என்பது அந்தக் குறிப்பினால் அர்த்தப் படுத்தப் படும் ‘குறிப்பீடு ‘ ஆகி விடுகிறது. இப்போது, வெறும் ரோஜாப் பூ, குறி ஆகி விடுகிறது ‘ என்று ரோலான் பார்த் கூறுகிறாராம்—தமிழவன் இயம்புகிறார். ( பூக்கள், பூங்கொத்து, ரோஜாப் பூ, ஆகியவற்றை ‘மலர் ‘ என்று மட்டும் நாம் எடுத்துக் கொள்ளலாம்.)

இங்கே, குறிப்பான், அதாவது, (1) ‘குறிபொருள் ‘ என்பது வேறு; குறிப்பீடு, அதாவது, (2) ‘குறியீடு ‘ என்பது வேறு; (3) ‘குறி ‘ என்பது இவற்றினும் வேறு; என்று முதல் பார்வையில் நமக்குத் தோன்றிட வில்லையா ? ஆனால், இதுதான் மாயம் என்பது!

அதே நேரத்தில், அறிவாண்மையான மயக்கமும் இதுதான் ஆகும்.

ஏனென்றால், ‘அர்த்தப் படுத்தப் படும் ‘ என்னும் ஒரு செயப்பாட்டு வினையின் பயன்பாட்டின் மூலம், ‘குறிபொருள் ‘ என்பதும் ‘குறியீடு ‘ என்பதும் ‘இரு வேறு ‘ பொருள்களாக நமக்குச் சுட்டிக் காட்டப் படுகின்றன; இந்தச் சித்து விளையாட்டின் இறுதியில் ‘மூன்றாவதான ‘ ஒரு பொருளாகக் ‘குறி ‘ என்பது நமக்குச் சுட்டிக் காட்டப் படுகிறது.

ஒன்றை இரண்டாக்கிய முதலாவது சித்து விளையாட்டில் நாம் மதி மயங்கிப் போய் விட்டதால், இரண்டை மூன்றாக்கிய இரண்டாவது சித்து விளையாட்டிலும் நாம் மதி மயங்கிப் போய் விடுகிறோம்.

ஆனால், குறிபொருளாகவும் குறியீடாகவும் குறியாகவும் ஒரு ‘முப் பொருளாக ‘

நமக்குச் சுட்டிக் காட்டப் படுவதோ ‘ஒரே ஒரு பொருள் ‘தான்; ஒரே ஒரு மலர்தான்!

காதலின் குறி பொருள் எது ? மலர்!

காதலின் குறியீடு எது ? மலர்!

காதலின் குறி எது ? மலர்!

அதாவது, மலர் ஒன்றினைப் பறித்துத் தனது காதலியிடம் ஒரு காதலன் கொடுக்கின்ற பொழுது, காதலைக் குறிக்கின்ற ஒரு குறி பொருளாகவும் குறியாகவும் குறியீடாகவும் மலர் மாறி விடுகிறது.

ஏனென்றால், மலரால்தான் காதல் அருத்தப் படுத்த படுகிறதே ஒழிய, காதலால் மலர் அருத்தப் படுத்தப் பட வில்லை. எனவே, காதலின் குறியீடுதான் மலர்; மலரின் குறியீடு காதல் அல்ல!

காரணம், புலன்களுக்குப் புலப்படாத ஒரு பொருளுக்குதான், அதாவது, காதலுக்குதான், ஒரு குறியீடு, அதாவது, புலன்களுக்குப் புலப்படுகின்ற ஒரு பருப் பொருள் தேவையே ஒழிய, ஒரு பருப் பொருளுக்குக் குறியீடு எதுவும் தேவை இல்லை.

ஏனென்றால், அதுவே அதன் குறியீடு!

அதே நேரத்தில், காதலின் குறியீடோ காமம்—உள்ளத்தால் ஒன்றிய இரண்டு உடல்களின் திண்மையும் பருமையும் ஆன நடவடிக்கை!

ஆனால், எத்தனையோ ஆண்டுகளாக அறிவாண்மைச் சந்தையில் இப்படி ஒரு சிந்தனை விற்பனை ஆகிக் கொண்டு வந்து இருக்கிறதே எப்படி ? என்று கேட்டால், ஸ்தாலிசத் தந்திரங்களினால் மார்க்சியச் சிந்தனைகள் மறைக்கப் பட்டு வந்து இருக்கின்ற அவலங்கள்தாம் இதற்குக் காரணம் என்று நான் கூறுவேன்.

சரக்குகளின் மதிப்பு வெளிப் படுத்தப் படுகின்ற வடிவம்தான் பணம் என்று கார்ல் மர்க்ஸ் கூறுகிரார். புலன்களுக்கு எட்டாத மதிப்பு என்பது புலன்களுக்கு எட்டிடக் கூடிய பிறிது ஒரு சரக்கின் உடல் வடிவத்தில்—அந்தச் சரக்கின் பருமையான வடிவத்தில்—வெளிப் படுத்தப் படுகிறது என்று இதற்கு அவர் விளக்கமும் அளிக்கிறார்.

இந்த மார்க்சியச் சிந்தனையில் இருந்து வேறு பட்ட சிந்தனையாளர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்ள முற்பட்டு இருந்த ஒரு வகையான அறிவாளர்கள், இந்த வடிவம் என்னும் சொல்லுக்குப் பதிலாகக் குறியீடு என்னும் சொல்லைப் பயன் படுத்தி வந்திடத் தொடங்கி இருந்தார்கள், அவ்வளவுதான்—அரட்டை என்னும் சொல்லுக்குப் பதிலாகச் சொல்லாடல் என்னும் சொல்லைப் பயன் படுத்திக் கொண்டு வருகின்ற நம் ஊர்ப் புதிய சிந்தனையாளர்களைப் போல!

ஆக, வடிவம் என்பதும் குறியீடு என்பதும் ஒரு பொருள் கிளவிகள்தாம் என்பது வெளிப்படை!

சரி, அது போகட்டும்! ஆனால், குறி பற்றிய இந்த வாதத்தின் மூலம் மலர் என்னும் சொல்லின் வேர் பற்றியோ அதன் பொருள் பற்றியோ புதிதாக எதையாவது நாம் தெரிந்து கொண்டு இருக்கிறோமா ? என்றால் அதுதான் இல்லை. அதே நேரத்தில், புதிதாக எதுவும் இதில் இல்லை என்பதற்காக எதுவுமே இதில் இல்லை என்றும் நாம் கூறி விட முடியாது. ஏனென்றால், எல்லோருக்கும் தெரிந்து இருக்கின்ற விசயங்கள் எல்லாம் மிகவும் புதுமையாக இதில் சொல்லப் பட்டு இருக்கின்றன!

கார்ல் மார்க்சின் முதல்: தொகுதி ஒன்று: ஒன்றாம் அதிகாரத்தின் ஒன்றாம் பக்கத்தில், நமது ஆய்வுக்கு எது தேவை இல்லை என்று எல்லோருக்கும் தெரிந்த ஒன்றை அவர் ஒதுக்குவார்; அது பற்றி ஆய்வது வரலாற்றின் வேலை என்றும் அவர் கூறுவார். அதுதான் சரக்குகளின் பயன்பாடு! அதனைத்தான் மிகவும் வினயமாக எடுத்துக் கொண்டு கவிதை பாடி இருக்கிறார் நமது தமிழவன்!

அதாவது, ஒரு பொருளின் பெயருக்கும் அதன் பயன்பாட்டிற்கும் இடையே உள்ள வேறுபாடு கூட தெரியாமல்—அதே நேரத்தில், அந்த வேறுபாட்டினை மிகவும் மாயமாகப் பயன் படுத்தி—புதியது ஒரு சிந்தனையினைத் தமிழ் கூறு நல் உலகில் உலவிடச் செய்து இருக்கிறார் தமிழவன்!

பல் வேறு வகைகளில் ஒரு பொருள் பயன் படலாம். இதையும் கார்ல் மார்க்ஸ் கூறித்தான் இருக்கிறார் என்ற போதிலும், இதைப் புரிந்து கொள்வதற்கு ஒன்றும் நமக்குக் கார்ல் மார்க்ஸ் தேவை இல்லை.

முகையாக இருந்து பின்னர் இதழ் விரித்து மலர்வதால் பூவுக்கு மலர் என்னும் பெயர் ஏற்பட்டு இருந்து இருக்கலாம். ஆனால், இந்தச் சொல் ஆய்விற்கும் மலர்களின் பயன்பாடுகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பார்த்துச் சுவனிப்பதில் இருந்து அணிந்து மகிழ்வது வரை, ஏன், உணவாகவும் மருந்தாகவும் கூட மலர்கள் பயன் பட்டுக் கொண்டு வந்து இருக்கலாம். ஆனால், இவற்றிற்கும் மலர் என்னும் பெயர் பற்றிய மொழி ஆய்விற்கும் இடையே என்ன தொடர்பு இருந்திட முடியும் ?

இங்கே இன்னொன்றினையும் நான் குறிப்பிட்டு ஆக வேண்டும்.

மதிப்பின் வெளிப்பாட்டு வடிவம் மட்டும் அல்ல பணம்; மதிப்பின் வெளிப்பாட்டில் நிகழ்கின்ற கோளாறுகளை மூடி மறைக்கின்ற பருமை வடிவமும் ஆகும் பணம்; என்று கூறுகிறார் கார்ல் மார்க்ஸ். இது போல, காதலை வெளிப்படுத்துகின்ற மலர், காதல் நாடகத்தை—பசப்பு மொழிகளின் உண்மையான உள்ளடக்கத்தினை—மூடி மறைத்து, பொய்மையைக் கூட மெய்மையாகக் காட்டுகின்ற ஒரு சாதனமாகவும் பயன் படுத்தப் படலாம் அல்லவா ?

இதனால்தான், மனைவிக்கோ அல்லது கணவனுக்கோ, கணவனோ அல்லது மனைவியோ வாங்கிக் கொடுக்கின்ற ஒரு பரிசுப் பொருள், அன்பினை வெளிப் படுத்துகின்ற ஒரு பொருளாகவோ அல்லது அன்பின் திசைத் திருப்பத்தினை மூடி மறைத்து விடுகின்ற ஒரு பொருளாகவோ செயல் படவும் கூடும் என்று ‘வாழ்க்கையின் கேள்விக ‘ளில் நான் எழுதிட நேர்ந்தது.

ஆக, குறி—குறி பொருள்—குறியீடு என்பன போன்ற வகைப்பாடுகள் எல்லாம், பரிட்சையில் தேர்ச்சி பெறுவதற்கு வேண்டும் என்றால் பயன் பட்டிடலாமே ஒழிய அறிவு வளர்ச்சிக்குப் பயன் பட்டிட முடியாது என்பது தெளிவு.

தொலை பேசி: சென்னை:

26172823; 26444637.

sothipiragasam@yahoo.co.in

Series Navigation

சோதிப் பிரகாசம்

சோதிப் பிரகாசம்