எவனோ ஒருவன் – திரைப்பட விமர்சனம்

This entry is part [part not set] of 45 in the series 20071227_Issue

ஜயராமன்


கொஞ்ச நாட்களாகவே நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால், நேற்று யதேச்சையாய் கை வந்தது. ஆறு மணி வாக்கில் உட்லன்ஸ் கொட்டகைக்கு போனால் கார் பார்க்கிங் பண்ணும்போதே டிகட் இல்ல சார் என்றான் காவலாளி. கூடவே நாலைந்து பேர் ப்ளாக் வேணுமா என்று மொய்த்தார்கள். நான் பில்லா படம் பார்க்க வரவில்லை, வேற படம் என்று அவரகளிடம் சொன்னவுடன் என்னை ஏதோ ஜந்து போல வினோதமாய் பார்த்தார்கள்.

அஜித் நடித்த பில்லாவிற்கு ஜனங்கள் அடித்துக்கொண்டிருந்தார்கள். ஈத் முடித்து முக்காடு போட்டு நிறைய பெண்கள் க்யூவில் டிக்கட் கவலையோடு நின்றிருந்தார்கள். அமோகமாய் ப்ளாக் போய்க்கொண்டிருந்தது. ஏகப்பட்ட தட்டிகளும் தோரணங்களும்
வைத்திருந்தார்கள்.

இந்த படம் (எவனோ ஒருவன்) அந்த தியேட்டரில் போட்டு இது மூன்றாவது சனிக்கிழமை மாலை. ஆனால், பட கவுண்டரில் ஒரு ஆள் கூட இல்லை. டிக்கர் கிளார்க் எரிச்சலுடன் “சில்லர குடுங்க” என்று எறிந்து விழுந்துகொண்டே டிக்கட் கிழித்து கொடுத்தார்.

படம் மன நிறைவாய் இருந்தது. என் மனைவி ரொம்ப நாளுக்கு அப்புறம் இந்த படத்தில் லயித்துப்போனேன் என்று சொல்லி
சந்தோஷப்பட்டாள். (எப்போதும் படத்தின் நடுவில் அவளுக்கு வீட்டு விசாரங்கள் எல்லாம் வந்துவிடும். இல்லாவிட்டால் புடவை
டிசைன், ஊர் தெரு காட்சி என்று ஏதாவது படும்..) கடைசியில் என்னை அறியாமல் அழுதுவிட்டேன் என்று கூட சொன்னாள். (சீரியல் பார்த்த பழக்கம் என்று நினைக்கிறேன்…)

பையனைக்கூட்டிக்கொண்டு போகலாமா என்று ஆயிரம் தடவை விஜாரித்து நான் கேரண்டி கொடுத்ததால் படத்துக்கு என் பையனும் வந்திருந்தான். அவன் பதினோரு வருஷத்தில் அவன் பார்க்கும் மூன்றாவது தமிழ்படம் இது. இவனுக்கு லாயக்கான படத்தை தேடியே தமிழ்சினிமாவில் நான் ஒரு அந்நியனாகிப்போனேன்.

ஒரு காட்சியில் வாசு தன் பத்னியை ராத்ரி படுக்கையில் எழுப்புவான். சரி, மசாலா காட்சிதான் போலருக்கு. பையன் கூட வந்து தப்பு பண்ணி விட்டோம் என்று நினைக்கும்போது அங்கு ஒரு அருமையான காட்சியை வைத்துள்ளார் டைரக்டர். “நாளைக்கு வத்சலா ஸ்கூல்ல இண்டர்வ்யூ இருக்கு” என்று தூக்க கலக்கத்தில் சொல்லி திரும்பி படுத்துக்கொண்டு விடுவாள் மனைவி. வாசுவும் மலைத்து படுத்துக்கொள்வான். பரம யதார்த்தமான அந்த காட்சி அவர்களின் தினசரி உழைச்சலின் ஒரு அங்கமாக
அமைந்திருக்கிறது.

இம்மாதிரி பல இடங்கள் மனசை தொடுகின்றன. ச்வாதிமுத்யம் (தமிழில் சிப்பிக்குள் முத்து) என்ற படத்தில் ராதிகாவை விட்டுவிட்டு திரும்பிய கமலஹாசன் ஒரு அலமாரி முன் நின்று அதன் கதவை மூடப்பார்ப்பார். கதவு மூடிக்காமல் மறுபடியும் மறுபடியும் திறந்துகொள்ளும். அவன் மனசு அவளிடமே போகிறது என்று அழகாக காட்டியிருப்பார் டைரக்டர் காசி விஸ்வநாத். அது எனக்கு இந்த படத்தில் ஞாபகம் வந்தது. சில இடங்களில் டைரக்டரிடம் குறும்பான விஷயங்கள் கதைக்கு லாவண்யம் சேர்க்கும். இங்கும் சில இடங்கள் அப்படி உண்டு.

படம் வழக்கமான ஸ்டீரியோ பிம்பமான மனிதர்களை முழுக்க முழுக்க நம்பி இருக்கிறது. இதில் வரும் எல்லோரும் வழக்கான கனவுத்தொழிற்சாலையில் பண்ணிய செப்பு அச்சுப் பாத்திரங்கள். அதனால் அவர்கள் முகத்தை பார்த்தே கதை சொல்லிவிடமுடிகிறது.

ஆனால், விசேஷமாக விதிவிலக்காய், இதில் ரத்தமும் சதையுமாக முதலில் நம்மை ஆக்கிரமிப்பது வாசுவின் பத்னிதான். ஸ்கூலில்
டொனேஷன் கொடுக்க மாட்டேன் என்று வாசு அடம் பிடித்து வீட்டுக்கு வந்ததும் பண்ணும் குமுறல், இன்ஸ்பெக்டரிடம்
சமாளித்து விட்டு உள்ளே வந்து கதவை சாத்திக்கொண்டு அழும் விகாரமான அழுகை. “புரிஞ்சுங்கோ, உங்கள கொண்றுவான்னா… ” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு அழுவது என்று அமர்க்களப்படுத்தியிருக்கிறார். கதைக்கு நிறைய பிடிப்பு கிடைக்கிறது என்றால் இந்த பாத்திரத்தின் உருவாக்கத்தினால்தான். பிதாமகன் முதலிய கிறுக்குப்படங்களில் நடித்ததில் இருந்து இந்த நாயகிக்கு இப்படி ஒரு அவார்ட் வேஷங்களாக கொடுப்பது வாடிக்கையாகி விட்டது. வாசு மாதிரி கிராக்குகள் முதலில் நாசம் பண்ணுவது
அவர்கள் குடும்பத்தைத்தான் என்று தெரிகிறது.

ஆனால், வாசுவின் மன எழுச்சிக்கு அப்புறம் அந்த சந்தியா பாத்திரத்தை அம்போ என்று விட்டு விடுகிறார்கள். தான் சொன்ன ஒரு வார்த்தைதான் வாசுவை அப்படி மாற்றியது என்று தெரிந்த பிறகும், டிவி எங்கும் வாசுவைப்பற்றிய ந்யூஸ் பரவிய பிண்ணும் ஒரு
மாற்றமும் இல்லாமல் மூலையிலேயேஉட்கார்ந்திருக்கிறார். அந்த மனநிலையையும் நிலையையும் இன்னும் கொஞ்சம் காட்டி ஏதாவது காட்சி வைத்திருக்கலாம்.

படம் முழுக்க பிராமண ஏற்றம் தெரிகிறது. ஒரிஜினல் மூலக்கதை மராட்டியானதால் இந்த மாதிரி தமிழுக்கு லாயக்கில்லாமல் இருந்திருந்து அதை அப்படியே இங்கு வைத்திருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. சாதாரணமாக, கார்ட்டூன் சித்திரங்கள் போல
இருக்கும் தமிழ் சினிமாவின் பிராமண பாத்திரங்கள் இதில் நிஜமாகவே உண்மையாக இருக்கிறார்கள். சிலநேரங்களில்
சில மனிதர்கள் தொடங்கி மிகச்சில படங்களிலேயே இந்த பிராமண பிம்பம் சரியாக அமையப்பட்டிருக்கிறது.

அது போதாது என்று, தனராஜ் என்ற கிருத்துவரை கயவன் டாக்டராக காட்டி அரசாங்கத்தில் இலவச நிலம் வாங்கி ஏமாற்றுகிறார்கள் என்று காட்டுகிறார்கள்.

ஜனங்களின் மிகவும் அபத்தமான விமர்சனங்களையும் அவர்கள் இந்த மாதிரி சமுதாயப் பிரச்சனைகளுக்கு தீர்வு என்பதை ஆழமாக யோசிக்காமல் எப்போதும் ஒரு ரிப்போர்டர் பத்திரிக்கை ரேஞ்சிலேயே பார்ப்பது நாட்டு நலத்துக்கு பெரிய இடைஞ்சல் என்றே பல இடங்களில் டைரக்டர் சொல்கிறார்.

அந்த மாதிரி பலப்பல ஜனங்களை காட்டும்போது அவர்களின் மேம்போக்கான பார்வைகள் நமக்கு எரிச்சல் தந்து அந்த காட்சிக்கான பலன் கிடைத்துவிடுகிறது. நெற்றியில் நிறைய பட்டை அடித்த ஒரு பிராமணர் ஒருவர் வாசுவின் நல்ல
நோக்கத்திற்கு அவர் அப்பாவின் ஆர்.எஸ்.எஸ் ஷாகா காரணம் சொல்கிறார். மற்றபடி இதில் விசேஷமாய் ஒன்றும்
அர்த்தமாகவில்லை,எனக்கு.

இந்துத்துவ சப்போர்டோ என்று யோசித்தால் இதற்கு மாறாக, இன்ஸ்பெக்டரிடம் சந்தியா “அவர் எங்க தப்பு நடந்தாலும் தட்டிக்கேப்பார். வினாயகர் சதுர்த்திக்கு மைக் போட்டு சத்தம் போட்டுண்டு இருந்தா இவருக்கு பிடிக்காது… ” என்கிறார். அபத்தமான லாஜிக். மேலும், வினாயகர் பண்டிகையை கேலி செய்கிறது. இது மராட்டியில் வேறு காண்டக்ஸ்டில் இருந்திருக்கிறது.
மும்பையில் இது அங்கு வியாபாரமாக்கப்படும் கலாசாரத்தை விமர்சித்து. தமிழ்நாட்டிலோ இது வேறு அர்த்தம். அதை எடுத்து தமிழில் வைத்தது விபரீதமாகிவிட்டது.

அந்த அடிக்கடி மனசாட்சி பேசும் இன்ஸ்பெக்டர் சூப்பர். ஒவ்வொரு காட்சிக்கும் இவர்மூலமாக டைரக்டர் விமர்சனம் செய்கிறார். பழைய உத்திதான் ஆனால் இங்குபொறுத்தமாய் இருக்கிறது. நமக்கு அவர் மூலமாக பல மெசேஜ் தருகிறார். ஒருஇடத்தில் அவர் சொல்கிறார் “இந்தாளு மேல நமக்கெல்லாம் என்ன தெரியுமா எரிச்சல். நம்ம முகமூடிய கிழிச்சிட்டான்ல.. அதான்…” என்று.

தியேட்டரில் பல காட்சிகளில் ஜனங்கள் விசிலடித்து வரவேற்கிறார்கள்.வாசு அர்த்த ராத்திரி ரோட்டில் நின்று மேலே பார்த்து
ஆண்டவனுக்குஇங்கிலீஷில் ஒரு லெட்டர் எழுதி கத்தும்போது மிகவும் அற்புதமாகஇருக்கிறது.

ஆனால், பல இடங்களில் வசனங்கள் துண்டுதுண்டாக க்ரிப்டிக் ஆக இருக்கிறதோஎன்று தோன்றுகிறது. சாதாரண தமிழ் சினிமாவில்
ஊறிப்போன என்னைப்போன்றபழைய மட்டைகளுக்கு பதவுரை, விளக்கவுரையுடன் எப்போதும் லெக்சர் அடித்துகொண்டே இருக்க
வேண்டும். இந்த படத்தில் அது இல்லை.

படத்தில் அந்த குழந்தைகளை காண்பித்தாலும் அவர்களை கதையில் ஒரு பரிமாணம்கொடுத்து அவர்களை கதைக்கு அங்கமாக்க தவறி விட்டார்கள். சொல்லப்போனால், கதை வாசுவின் மேல் படர்ந்ததும், அவன் குடும்பத்தின் சித்திரம் கலங்கிப்போய் விடுகிறது.

சந்தியா அவள் பிறந்தாத்துக்கு போனில் பேசி “எழுத்த வீட்டுகிருஷ்ணமூர்த்தி அங்கிள் இருக்கார். நான் பாத்துக்கறேன்” என்று சொன்னாலும் இரண்டு மூன்று நாட்களாக தனியாக இருப்பதாக காண்பிப்பது யதார்த்தம் இல்லை. இப்படி நடக்கும் என்று தோன்றவில்லை.

அது போல, அந்த ஆஸ்பத்திரியில் வரும் ஜானகி மாமியும் ஒரு எசகு பிசகான பாத்திரம். அந்த மாமியை நியாயப்படுத்தி அந்த மாமா “என் மனைவி இந்தபிரச்சனைக்கு ராயப்பேட்டை அரசாங்க ஆஸ்பத்திரியில் ட்ரீட்மெண்ட்எடுத்துக்கலாம் என்று சொல்லி சாமர்த்யமாக தீர்த்துக்கொண்டு விட்டாள்”என்று சொல்வார். இதில் என்ன சாமர்த்தியம் வந்தது என்று தெரியவில்லை. ஓடி ஒளிந்துகொள்ளும் ஒரு சராசரி மிடில் க்ளாஸ், சுயநலவாதிதான் அங்கே தெரிகிறார்.

மாதவன் நன்றாக செய்திருக்கிறார் என்று கொஞ்சம் தாராளமனசு இருந்தால் சொல்லலாம். வாசு பாத்திரத்துக்கு பெரிய இடைஞ்சல்
நடிகர் மாதவனின் அழகு முகம். அவர் பால் முகத்தில் ஆக்ரோஷமும் அழகாய்த்தான் இருக்கிறது. அதனால் சில டென்ஷனான
காட்சிகள் எடை குறைந்து விடுகின்றன.வீட்டுக்குப்போகாமல், வாசு பல நாட்கள் ரோட்டில் சுற்றினாலும் முகஷவரம்மட்டும் குறையாமல் மழு மழு என்று இருக்கிறார். டயலாக் டெலிவரியில்(அந்த ராத்திரி ரோட்டில் தனியாக நின்று புலம்புவதை சொல்லலாம்) பல இடங்களில் பூர்ணம் விஸ்வனாதன் சாயல் லேசாக அடிக்கிறது. கொஞ்சம் கவனமாகஇருக்கவேண்டும், பிற்காலத்தில்.

ஆனால், கதை ஒரு ஆழமாக திரைக்காட்சிகளில் உட்கார்ந்திருப்பதால் படத்தில் வாசுவின்அபிப்ராயங்களும், குமுறல்களும் நமக்கும் தொத்திக்கொண்டு நாம் அவனோடு ஒன்றிப்போய் விடுகிறோம். வாசுவின் துடிப்பும், ஆக்ரோஷமும் நமக்கும் பரவுகின்றன.தியேட்டரில் பல கைத்தட்டல்கள் இப்படித்தான்.

வாசு சௌக்யமாக வீட்டிற்கு திரும்ப மாட்டான் என்பதை டைரக்டர் அற்புதமாக பலஇடங்களில் கோடி காட்டுகிறார். உதாரணத்துக்கு, அவன் ஜன்னலோரமாய்உட்கார்ந்தது போன்ற கனவுக்காட்சி. மற்றபடி டைரக்ஷன் ஆர்ப்பரிக்காமல் நம்மை படத்துடன் நன்றாக
ஒட்டச்செய்கிறது, பெரும்பாலான படத்தில். டைட்டிலுக்கு முன்னால் காட்சிகள் மட்டும் டைரக்டருக்கு முத்திரை பதிக்க ஆசைகொண்டு முந்திரிக்கொட்டையாய் தனித்து காட்டுகிறது. அது செயற்கையாய் தெரிகிறது.

படம் பல கேள்விகளை எழுப்புகிறது வாஸ்தவம்தான். வன்முறை ஒரு தீர்வல்ல என்கிறார் டைரக்டர். ஆனால், வேறு என்னதான் தீர்வு என்று சொல்ல மாட்டேன் என்கிறார். படம் பார்த்து திரும்ப வரும்போது மனசு கனக்கிறது.

இப்போதைய ஹிட் தீம் இப்படி சமுதாயத்தை திருத்த பார்ப்பதுதான். இதை வைத்துத்தான் இந்தியன், சிவாஜி என்று பல மூட்டைகளில் பணத்தை அள்ளியிருக்கிறார்கள் தமிழ் டைரக்டர்கள்.

ஆனால், குப்பைக்கூளங்களுடன் இந்த படத்தை சம்பந்தப்படுத்தினால் அது இந்த படத்துக்கு பண்ணும் துரோகம்.


Series Navigation

ஜயராமன்

ஜயராமன்