காரண சரித்திரக் கவிதை

This entry is part [part not set] of 26 in the series 20100101_Issue

ஹெச்.ஜி.ரசூல்


இந்த காரண சரித்திரக் கவிதையைப் படித்தவருக்கு

நன்மராயம் உண்டாகும்

படிக்கத் தெரியாமல் பிறர்வாசிக்க

காது கொடுத்துக் கேட்டவருக்கு பறக்கத்து உண்டாகும்.

படிக்க வேண்டுமென்ற விருப்பத்தில்

ஆசைமேலிட வாங்கியோ அல்லது

கையெழுத்தில் எழுதியோ
பாதுகாத்து வைத்திருப்போருக்கு

பூரண வணக்கத்தின் தக்வா உண்டாகும்.

மறுமையின் நரகவேதனை

கொடுந்தண்டனை இல்லமல் போகும்

சொர்க்கவாழ்வு கைவசமாகும்

ஹூருலீன்கண்ணழகிகளின் பெருந்துணை கிடைக்கும்

கவுஸல்கவுதர் நதியோரம் நீரருந்த முடியும்

ஆஹிறத்தில் தண்ணீரும் கிடைக்கும்

மீஸாந்தராசில் தீமையின் தட்டு லேசாகும்.

சிறாத்தில் முஸ்தகீன் பாலத்தை

ஒரு மின்னலைப் போல் கடக்கமுடியும்.

வெயிற்சூட்டுக்கு நிழற்குடை விரியும்

நன்மையின்பட்டோலை

இடது கையில் பட்டொளிவீசிதவழும்.

இம்மையில் சகறாத்தின் வேதனை நீங்கும்

கண்ணொளி மங்காமல் ஒளிரும்

கபறின் கேள்விகள் இலகுவாகும்

முன்கர்நகீர் தோழமை கொள்வர்

சரீர எலும்புகள் நொறுங்கிப் போகாது.

நாற்பது ஹஜ் செய்த பலனும்

தவ்றாத்து சபூர் இன் ஜில் குரான்

வேதங்கள் ஓதிய பலனும் சூழும்

தாய்தந்தை உஸ்தாதுவின் குற்றங்களும்

எழுபது தலைமுறை பாவங்களும்

மஹ்சரில் மன்னிக்கப்படும்.

பீஸபீலுடைய நன்மையும்

ஷஹீதுகளுடைய நன்மையும்

பார்வைத்துணையும் கிடைக்கும்

தஜ்ஜாலுடைய தீவினை தொடாது

துனியாவில் மவுத்து என்பதே கிட்ட நெருங்காது.

Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்