கண்ணீர்ப் பிரவாகம்

This entry is part [part not set] of 37 in the series 20090625_Issue

எம்.ரிஷான் ஷெரீப்


ஒரு சமுத்திர உடலின் மேல்
பனிமுகில் போர்வை விழுந்தது
எதன் ஈரத்தை
எது வாங்கிக் கொண்டதென்ற
கணக்குகளேதுமற்ற வெளியின் காற்று
எல்லாத் திசைகளிலும்
துளிகளாய்ப் படிந்தது

அம் மலையினுச்சியில் சிறகடிக்கிறது
ஒரு பெரும் விஷப்பறவை
கூடுகளைக் கிளைகளை
அடைந்திருக்கும் சிறுகுருவிகள்
அச்சத்தில் நடுங்கிடத் தன்
சொண்டூறி வழியும் எச்சிலில்
நகங்களைக் கூர்படுத்துகிறது மாமிசப்பட்சி
உன்னைப் போல

நான் மணற்கரை
கடும்விசை கொண்டு
உன் பாதச்சுவடுகளைத் தழும்பாக்கியபடி
என் மேனி முழுதும் நடக்கிறாய்
உனது தடங்களிலிருந்து தொடர்ந்தும்
எனதுள்ளிருக்கும்
கண்ணீரூற்றுக்கள் பிரவகிக்கின்றன
இருப்பினும் எப்பொழுதும்
இருட்டறைப் பிணங்களை எட்டாது
சுடுகாட்டு நிலாக்கீற்று


நன்றி – வடக்குவாசல் (பெப்ரவரி, 2009)

– எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை.
mrishanshareef@gmail.com

Series Navigation

எம்.ரிஷான் ஷெரீப்

எம்.ரிஷான் ஷெரீப்