கருணையும் கவிதையும் – புரந்தரதாசர் பாடல்கள்

This entry is part [part not set] of 37 in the series 20090312_Issue

பாவண்ணன்


கண்டபிறகு நீ என்னை கைவிடுவாயோ ஹரியே
தாமரை மலர்க்கண்ணா, புருஷோத்தமனே, இறைவா

உறவினர்கள் எனக்கில்லை, வாழ்க்கையிலே சுகமில்லை
நிந்தைகளில் நொந்தழிந்தேன் தாமரைக் கண்ணா
தாயும் தந்தையும் நீயே உற்றார் உறவினர் நீயே
என்றென்றும் உன்னை நம்பினேன் கிருஷ்ணா

ஒருகணம் யுகமாகி புல்லைவிட அற்பமாகி
எண்ணற்ற துயரங்களில் நொந்தழிந்தேன் நான்
சனகன் உள்ளிட்ட முனிவர்கள்கூட்டம் வணங்குகிற
பிரம்மனை படைத்தவனே
பாம்பின்மீது உறங்குபவனே,
பிரகலாதனுக்குக் காட்சியளித்த ஸ்ரீகிருஷ்ணா

அடியார்க்கருளியென்னும் பட்டத்தை ஏற்றபிறகு
அடியவர்கள் சொல் கேட்கவேண்டாமா?
முக்தியை அருள்பவன் நீயே ஹொன்னூரில் வசிப்பவனே
மகாகுரு புரந்தரவிட்டல ஸ்ரீகிருஷ்ணா

*

மனத்தின் கணக்கை நித்தமும் பார்க்கவேண்டும்
தினந்தினமும் செய்யும் பாவபுண்ணியச் செலவுக்கணக்கை

தர்மம், அதர்மம் எனப்பிரித்து
தீவினையின் பக்கம் நீளும் வேரை வெட்டி
புனித வழியில் செலுத்தி
பரபிரும்ம மூர்த்தியின் பாதக்கமலத்தை வழிபடு

உடலை கட்டுக்குள் ஒருமுறை வைத்துப்பார்
உன் மனத்தின் கணக்கையறிந்து பரமாத்மாவைப் பார்
இறுதியில் உன்னை நீயே அறிவாய்
உனக்கு முக்தி வெகுதொலைவில் இல்லை- ஒரே ஒரு அடிதான்

அவன் அடியார்களுக்கு கேடில்லை
பாதகர்களுடன் உறவாட அவன் விடுவதில்லை
நீதிமான்களே, கேளுங்கள்
நமக்கு அவனே அடைக்கலம், புரந்தரவிட்டல

*

கவலை எதற்கோ, வெறும் பீதி எதற்கோ
விஷ்ணுவின் பெயரென்னும் மந்திரத்தைச் சொல்பவர்க்கு

அதிகாலை வேளையில்
காலமறிந்து கூவுகிற
கோழி தன் குஞ்சுகட்கு
பாலுட்டியா வளர்க்கிறது?

வீடுகளில் பெண்மக்கள்
பிரசவத்துக்கு மருத்துவச்சி
காட்டுக்குள் பெற்றெடுக்கும் விலங்குகளை
வைத்துக் காப்பாற்றுபவர் யார்?

பெற்ற தாய் மறைந்த குழந்தை
மீண்டும் கெட்டதென்னும் உலகம்
புற்றிலுள்ள பாம்புக்கும் குருவிக்கும்
உணவூட்டி காப்பாற்றுபவர் யார்

களிமண்ணில் குழந்தையைச் செய்து
வயிற்றுக்குள் வைக்கவில்லை
கொடுத்த கடவுளே கொண்டு சென்றால்
அடித்துக்கொண்டு அழுவது எதற்கோ?

அந்த உலகில் பதவியுண்டு
இந்த உலகில் விருப்பம் உண்டு
குரு புரந்தரவிட்டலரின்
நினைவுகளை மறவாதவனுக்கு

*

குற்றவாளி நானில்லை, தண்டனையும் எனக்கில்லை
கபடநாடக சூத்ரதாரி நீயே

நீ ஆட்டுவித்தால் ஆடும் மரப்பாச்சிப் பொம்மை
அதைத்தவிர வேறெதுவும் தெரியாது அதற்கு
நீ போட்ட சூத்திரத்தால் அசையும் கைகால்கள்
நீ வளைத்தால் வளையும் தானாக உடம்பு

ஒன்பது கதவுள்ள பட்டணத்தில்
தனக்கென்று இருபத்தாறு காவலர்களை
காவலுக்கு நிறுத்திவைத்து என்னை உனக்குள் வைத்து
களைத்துப்போவதுபோல்
அலுத்துக்கொள்வதெல்லாம் நியாயமேயில்லை

எந்திரத்தை இயக்குபவன் நீயே
என்னை நான் சுதந்திரனாக எண்ணுதல் தற்கொலைக்குச் சமம்
பிரம்மனின் தந்தையான லட்சுமி நாராயணா,
நீ எப்படி ஆட்டுவிக்கிறாயோ அப்படி ஆடுகிறேன்
அனந்த மூர்த்தி நம் புரந்தரவிட்டல

*

நானென்ன ஏழையோ, நானென்ன பரதேசியோ
ஸ்ரீநிதி ஹரியே, எனக்கென நீயிருக்கும் வரைக்கும்

பெற்றெடுத்த தாய்தந்தை உயிர்த்தோழன் நீயே
உற்றார் உறவினர்கள் எல்லாம் நீயே
பெட்டிக்குள் உள்ள ஆபரணம் நீயே
திருமூர்த்தி கிருஷ்ணா, நீயிருக்கும் வரைக்கும்

கூடப் பிறந்தவன் நீயே, உடாலச் சுமப்பவன் நீயே
அணிந்துகொள்ளும் ஆடைகளை அளிப்பவன் நீயே
மனைவி மக்களை கரையேற்றுபவன் நீயே
கைவிடாமல் காப்பாற்ற நீயிருக்கும் வரைக்கும்

கல்வியை கற்பிப்பவள் நீயே, அறிவை வழங்குபவன் நீயே
மேம்படுத்துபவனும் என் இறைவனும் நீயே
முத்தான ஸ்ரீபுரந்தர விட்டலனே, உன் காலடியில்
விழுந்திருக்கும் எனக்கு எவ்விதமான பயமுமில்லை

*

என்மீது ஆணை-ரங்கா
உன்மீது ஆணை
எனக்கும் உனக்கும் இருவருக்கும்
பக்தர்கள் மீது ஆணை

உன்னைவிட்டு வேறொருவரை துதித்தால் என்மீது ஆணை-ரங்கா
என்னை நீ கைவிட்டுப் போனால் உன்மீது ஆணை

உடல்மனம்பொருள்வழி வஞ்சகனானால் என்மீது ஆணை-ரங்கா
மனத்தை உன்மீது நிலைநிறுத்த இயலவில்லை எனில் உன்மீது ஆணை

தகாத மனிதருடன் உறவுகொண்டால் என்மீது ஆணை-ரங்கா
லௌகிகப்பற்றை விடுவிக்காவிடில் உன்மீது ஆணை

சீடர்கள் குழுவோடு சேராமல் போனால் என்மீது ஆணை- ரங்கா
தீயவர்கள் உறவை விலக்கிவைக்காவிடில் உன்மீது ஆணை

ஹரியே, உன்னை அடைக்கலமாக கருதாவிடில் என்மீது ஆணை- ரங்கா
புரந்தர விட்டலன் நீ காட்சிதராவிட்டால் உன்மீது ஆணை

*

எதற்காக அஞ்சுகிறாய் மனமே ஒவ்வொரு கணமும்
கொப்பூழில் தாமரையைச் சுமந்தவன்மீது
பக்தி செலுத்தத்தொடங்கியபிறகு
நாராயண என்னும் நான்கெழுத்துகளால்
தீய பாவங்களெல்லாம் தொலைந்துபோகலாம்
ஸ்ரீராமனென்னும் ஆயுதத்தை எடுத்து
ஆறு எதிரிகளையும் தாக்கி வீழ்த்தலாம்.

கேசவன் என்னும் மந்திரச் சொல்லால்
ஏராளமான தீவினைகள் விலகவைக்கலாம்
வைகுண்டபதி என்னும் ஆயுதத்தை எடுத்து
நெருங்கிவரும் எமதூதர்களை நெட்டித் தள்ளலாம்

ஹரிவாசுதேவன் என்னும் அமுதத்தை அருந்தி
பிறப்பிறப்புப் பிணிகளை வெற்றி கொள்ளலாம்
வரமளிக்கும் ஸ்ரீபுரந்தர விட்டலனின் நினைவான
பக்தியென்னும் இன்சுவையைச் சுவைத்துப் பார்க்கலாம்

*

என்ன செய்வதோ மகனே-எதற்கு விடிந்ததோ
என்ன செய்வதோ கிருஷ்ணா

என்ன செய்வது, இங்குள்ள பெண்களனைவரும்
என் மானத்தை வாங்குவார்களோ ரங்கய்யா

பால் தயர் வெண்ணெய் திருடினான் என்பாரோ
மேலே மிதக்கும் ஏட்டை எடுத்துத் தின்றான் என்பாரோ
பிள்ளைகளையெல்லாம் அடித்தான் என்பாரோ
எப்படிப்பட்ட பெண்ணோ இவனைப் பெற்றவள் என்பாரோ

கட்டியருந்த கன்றுகளை அவிழ்த்துவிட்டான் என்பாரோ
பாம்பின் தலைமீதேறி ஆடினான் என்பாரோ
சின்னஞ்சிறுமியர் பின்னே திரிகின்றான் என்பாரோ
எப்படிபட்ட போக்கிரியோ இவனைப் பெற்றவள் என்பாரோ

கங்கையைப்போல புனிதமான உன்னை பெண்பித்தன் என்பாரோ
அழகுமுகக் காரன் உன்னை வீணாகப் பழிப்பாரோ
மங்கள மகிமை ஸ்ரீபுரந்தரவிட்டல
எக்குறையும் இல்லாமல் எங்களைக் காப்பாற்றுவாய்

*

அம்மா உங்கள் வீட்டிலே
எங்கள் ரங்கனைக் கண்டீரோ

காசிப் பட்டு கையில் குழல்
பூசிய சந்தனம் மணக்கும் கட்டுடல்
அழகான துளசி மாலை அணிந்த
வாசுதேவன் வந்ததைப் பார்த்தீரோ

கையில் காப்பு, விரலில் மோதிரம்
கழுத்தில் அணிந்த புலிநக மாலை
தங்க அரளிஇலைக் குண்டலம் காலில் சலங்கை
பாம்புப்படுக்கைக்காரன் வந்ததைப் பார்த்தீரோ

காலில் சிறுசலங்கை நீலப் பட்டாடை
நீலவண்ணன் நடமாடியபடி
வாய்திறந்து உலகத்தைக் காட்டி
மூவுலகுக்கும் உரிய மூலவனைப் பார்த்தீரோ

*

எடுத்துக் கொடுக்க முடியவில்லை
எச்சிற்கையோடு இருக்கிறேன்-
கைக்குழந்தை அழுகிறது , போய்வா ஐயா

வீட்டைப் பெருக்குகிறேன், பானை கழுவுகிறேன்
வீட்டுக்குள் யாருமில்லை. போய்வா ஐயா
பிள்ளைகள் அழுகிறார்கள், நீயொரு தொல்லை
ஒருகணம்கூட நிற்காமல் போய்வா ஐயா

பரண்மீது ஏறி அரிசி எடுக்கவேண்டும்
வயிறும் வலிக்கிறது, போய்வா ஐயா
தீட்டாகி இருக்கிறேன் வீட்டுக்குள் யாருமில்லை
திட்டாமல் கொள்ளாமல் போய்வா ஐயா

வீசை காசுக்கு வாங்கிவந்த தானியம்
குழந்தைக்கே போதாது, போய்வா ஐயா
பேராசைக்காரன் நீ, குறைப்பிறவி நான்
மாமலைவாசா, புரந்தரவிட்டல

*

கேழ்வரகு கொண்டுவந்தீர்களா?- பிச்சையிட
கேழ்வரகு கொண்டுவந்தீர்களா?

சகல தகுதியும் பெற்று சகல இன்பமும் துய்த்து
பாக்கிய சாலிகளாக வாழ்க நீங்கள்

அன்னதானம் செய்பவராகி
அன்னசத்திரம் கட்டியவராகி
பிறர் சொற்களை விட்டவராகி
நித்தமும் வழிபாடு செய்பவராகி

அன்னை தந்தையை வணங்குபவராகி
பாவச் செயல்களை விட்டவராகி
சாதியில் மேம்பட்டு நிற்பவராகி
நீதிவழியில் புகழ்பெற்றவராகி

குரவின் கருணை பெற்றவராகி
குருவின் அருமை தௌiந்தவராகி
குருவின் பாதத்தை நினைப்பவராகி
மாபெரும் புண்ணியம் செய்பவராகி

வேத புராணங்கள் அறிந்தவராகி
உலகையே ஆட்சி செய்பவராகி
துறவொழுக்கத்தைக் கடைப்பிடிப்பவராகி
நூல்பல பயின்று பண்டிதராகி

ஆறு வழிகளை அறிந்தவராகி
மூன்று வழிகளை உணர்ந்தவராகி
விஷ்ணு தத்துவம் தெரிந்தவராகி
தீயோர் தொடர்பை விட்டவராகி

காம குரோதங்களை அழித்தவராகி
நித்திய நியமங்களைச் செய்பவராகி
அவ்வுலகப் பதவியில் மனம் லயித்தவராகி
அன்பில் திளைத்துக் களித்தவராகி
அன்பில் திளைத்துக் களித்தாடுபவராகி

லட்சுமி ரமணனை எப்போதும் நினைப்பவராகி
சுட்டிக்காட்டத்தக்கவகையில் உயர்ந்தவராகி
இனிப்பும் கசப்பும் கலந்த உலகைத் துறந்தவராகி
புரந்தர விட்டலருக்கு சேவை செய்பவராகி

*

தோணிக்காரா, நான் உன்னை நம்பினேன்-
அகிலநாயகிமணாளனே, உன்னை நம்பினேன்

தோணி நிறைந்துள்ளது தோணிக்காரா- அதில்
ஒன்பது ஓட்டைகள் பார் தோணிக்காரா
உற்சாகம் மிகவே தோணிக்காரா- அதன்
இன்பமுணர்ந்து செலுத்து தோணிக்காரா…

ஆற்றின் போக்கைப் பார் தோணிக்காரா-அது
இழுக்கும் வேகம் மிகஅதிகம் தோணிக்காரா
சுழலில் மூழ்கிவிடாதே தோணிக்காரா- என்னை
நீயே அழைத்துச் செல்லய்யா தோணிக்காரா..

ஆறு அலைகள் பார் தோணிக்காரா- அவை
சீறி வருகின்றன தோணிக்காரா
யாராலும் முடியாது தோணிக்காரா- அதை
சமாளித்து ஓட்டிச்செல் தோணிக்காரா

பொழுது போய்விட்டதய்யா தோணிக்காரா- அங்கே
மேலும் ஐந்தாறுபேர் ஏறக்கூடும் தோணிக்காரா
வேகம் கூட்டிச் செலுத்தய்யா தோணிக்காரா- என்னை
சத்திய உலகுக்கு அழைத்துச் செல்லய்யா தோணிக்காரா

பக்தியென்பதோர் துடுப்பய்யா தோணிக்காரா- நீ
அவ்வுலக நாட்டத்தை ஏற்படுத்து தோணிக்காரா
முக்திவழங்கும் நம் புரந்தரவிட்டலரின்
முக்திமண்டபத்துக்கு அழைத்துச்செல் தோணிக்காரா

*

எல்லாரும் செய்வதெல்லாம் வயிற்றுக்காக-
ஒருமுழம் துணிக்காக

பல்லக்கைச் சுமப்பது வயிற்றுக்காக -பெரிய
மல்லர்களுடன் மோதுவது வயிற்றுக்காக
பொய்பொய்யாய் பேசுவது வயிற்றுக்காக
லட்சுமிமணாளனைத் துதிப்பதுவோ முக்திக்காக

சட்டாம்பிள்ளைத்தனம் செய்வது வயிற்றுக்காக
யானை,குதிரை ஏறுவது வயிற்றுக்காக
தீச்செயல்கள் புரிவது வயிற்றுக்காக
லட்சுமிமணாளனைத் துதிப்பதுவோ முக்திக்காக

மலைமீது ஏறுவது வயிற்றுக்காக
ஓசைபட கூவுவதும் வயிற்றுக்காக
உறுதியாப் பற்றி புரந்தர விட்டலரை
தியானித்தல் என்பதுவோ முக்திக்காக

*

கற்கண்டு வாங்குங்களய்யா- நீங்களனைவரும்
கற்கண்டு வாங்குங்களய்யா
கற்கண்டின் சுவையை அறிந்தவர்களே அறிவார்கள்
கிருஷ்ணனென்னும் நறுஞ்சுவைப் பெயரின் சுவையை

எடுத்துவந்து கொடுப்பதுமல்ல, சுமந்துசென்று விற்பதுமல்ல
சாக்குப்பைக்குள் அமுக்கிஅமுக்கி நிரப்பத்தக்கதுமல்ல
எப்பக்கம் சென்றாலும் சுங்கம் செலுத்தத்தக்கதுமல்ல
பத்துப்பதினைந்தாயிரம் என விலைகட்டத்தக்கதுமல்ல

நஷ்டம் வருவதுமில்லை வீணாக அழிவதுமில்லை
கட்டிவைத்தாலும் பாழாயப் போவதுமில்லை
எத்தனைநாள் வைத்திருந்தாலும் கெட்டுப்போவதுமில்லை
பட்டணத்தில் அதன்மூலம் ஆதாயம் மட்டுமுண்டு

சந்தைக்குச் சென்று சிரமத்துக்கு ஆளாக்குவதில்லை
எவ்வகையிலும் விற்பனையென்பது சாத்தியமில்லை
ஆனந்த புரந்தர விட்டரின் பெயரை
எவ்வகையில் நினைப்பினும் பாவத்துக்குப் பரிகாரமாகும்

*

வயிற்றுக்கான வேஷம் இது- நம்
பத்மநாபன்மீது சிறிதளவும் பக்தியில்லை

கருக்கலில் எழுந்து கடகடவென நடுங்கியபடி
ஆற்றிலிறங்கிக் குளித்தேனென பெருமிதமடைவதும்
வெறுப்பு வன்மம் சீற்றமெல்லாம் நெஞ்சில் நிறைந்திருக்க
பார்ப்பவர்களுக்கு வியப்பூட்டும்வண்ணம் காட்சியளிப்பது

கையில் ஜபமாலை வாய்நிறைய மந்திரங்கள்
உச்சந்தலை மறைக்க போர்த்திய ஆடை
அடுத்தவன் மனைவயின் வடிவழகை உள்ளிருத்தி
பற்றற்றவனாகக் காட்டிக்கொள்வது

வெண்கலப் பாத்திரங்கள் நிறைந்த கடையில்
வெண்கலச் சிலைகளை எங்கெங்கும் நிரப்பி
ஒளிரவேண்டுமென கணக்கற்ற தீபங்களை ஏற்றி
வஞ்சத் திட்டமுடன் பூசையைச் செய்வது

( உங்கள் நூலகம்- ஜனவரி2009 இதழில் வெளிவந்த கட்டுரை)
*

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்