பிடாரனின் திகைப்பூட்டும் கனவுகளிலிருந்து நான் தப்பிச் செல்கிறேன்

This entry is part [part not set] of 26 in the series 20080626_Issue

சித்தாந்தன்



அழகிய எமது நகரத்தில்
பிடாரன் வசிக்கத்தொடங்கிய நாட்களில்
அவனது ஒளிரும் கண்களில்
உலகம் மின்னுவதாய்
எல்லோரும் நினைத்தார்கள்

பிடாரனின் மூச்சு ஜீவகாருண்ய காற்றென
எல்லோரும் பேசிக்கொண்டார்கள்
காற்றிலே பறக்கும் பட்டாம் பூச்சிகளில்
பிடாரன் முதலில் வாழ்ந்தானென
கதைகள் வளர்ந்தென ஊர்கள் முழுவதும்

பிடாரனின் புதல்வர்கள்
பூக்களை ரசிப்பவர்கள் எனவும்
பிடாரனே ஒவ்வொரு காலையிலும்
கோடிப்பூக்களை புலர்விப்பவனெனவும்
சனங்கள் நம்பத்தொடங்கியிருந்தனர்

எங்கும் பிடாரன் பற்றிய பேச்சே
ஆகச்சிறந்த கவிதையாயிருந்தது

எனது அழகிய குடிசையில்
ஒரு முறை
பிடாரனின் விழிகளின் தீய ஒளிபட்டு
தீ மூண்டதை நான் சொன்னபோது
எவருமே நம்பவில்லை
பிடாரன் பற்றிய தூய கவிதையை
மாசுறுத்தியதாய் என்னைச் சபித்தார்கள்

சபிக்கப்பட்ட காலங்களில்
நான் வாழ்ந்தேன்
நம்பிக்கை மட்டும் ஒரு குளிரோடையாக
எனக்குள் பெருகியபடியிருந்தது

பிறகு வந்த நாட்களிலெல்லாம்
பிடாரனின் புதல்வர்களின்
காலடிகளின் கீழ் பூக்கள் சிதைந்துகிடந்தன
அவர்களின் கைகளில் துப்பாக்கிகள்
புகைநாற்றம் படரும்படியாகவிருந்தன

பிடாரன் நகரம் முழுவதும்
சுவரொட்டிகளில் சிரித்தான்
மிருகங்களின் கடைவாயிதழ்ச் சிரிப்பு
துர்நெடியோடிருந்தது

அவனின் வாசகங்களாக
“இந்தப் பூமியில் தானும்
தனது புதல்வர்களுமே வாழ்வதற்கு
கடவுளால் அனுமதிக்கப்பட்டவர்கள் என்றும்
நான் பூக்களிலல்ல
துப்பாக்கிகளில் வாழ்பவனென்றும்”
எழுதப்பட்டிருந்தது

சனங்கள் முதலில் நம்பவில்லை
நகரில் பிணங்கள் திடீர் திடீரென முளைத்தபோது
அதிர்ந்து போயினர்

பிடாரன் குறித்த ஆகச்சிறந்த கவிதையை
“பூக்களின் வாசனையற்ற அந்தக் கவிதையை”
கிழித்தெறிந்தனர்

மாயக்கவர்ச்சியில் சிரிக்கும் நகரத்தில்
அச்சத்தோடு சனங்கள் வாழ்கிறார்கள்
உயிரைச் செருகி வைத்திருக்கிற அட்டைகளுக்குள்
வாழ்வைப் பத்திரப்படுத்திக்கொண்டு
பிடாரனின் புதல்வர்களின் பார்வைகளில்
மிரண்டபடி வாழ்கிறார்கள்

பிடாரனின்
திகைப்பூட்டும் கனவுகளிலிருந்து
நான் தப்பிச்செல்கிறேன்


Series Navigation

சித்தாந்தன்

சித்தாந்தன்