வெள்ளைக்காதல்

This entry is part [part not set] of 38 in the series 20071018_Issue

குரும்பையூர் பொன் சிவரசா


வேலையில்லாக் கந்தனுக்கு

வெள்ளையிலே ஓர் தனிப்பிடிப்பு

அப்பா அம்மா பார்த்த பெண்களெல்லாம்

அற்பமாய்த் தெரிந்தார்கள் அவனுக்கு

கொழுத்த சீதனத்துடன் கொண்டு வந்தார்

அப்பா ஓர் பெண்பிள்ளை

குணத்திலே தங்கமான பெண்ணொன்றை

தன்னோடு கூட்டிவந்தார் அவன் அம்மா

பணமும் குணமும் பட்டிக்காட்டான்

பேசும் பேச்சுக்கள் தெரியாதா உங்களுக்கு

வெள்ளையாய் பெண்ணொன்று வேண்டுமென்றான்

வேலையில்லாக் கந்தன்

கறுத்த பெண்ணைக் கைப்பிடித்தால்

கருமம் பிடித்த வாழ்க்கைதான் மிஞ்சுமென்றான்

வெளிநாட்டுக்குப் போனவங்கள்

வெள்ளைகாரியையே கொண்டுவாறாங்கள்

நானும் போறேன் வெளிநாடு

நாட்டுக்கு வாறேன் வெள்ளையோடு

சொல்லிப்புறப்பட்டான்

வேலையில்லாதோர் ஓடும் வெளிநாட்டிற்கு

குளிரும் கூதலுமாய் காலநிலை

கும்மிருட்டு எங்கு பார்த்தாலும்

கடவுளை மனத்தில் வைத்தபடி

காலடி எடுத்து வைத்தான் வெளிநாட்டினிலே

பாசை ஒன்றும் புரியவில்லை அவனுக்கு

பாடசாலைக்குப் போகட்டாம் படிப்பதற்கு

இதுதானோ விதியென்று போனான் பள்ளிக்கு

படிப்பொன்றும் ஏறவில்லை என்றாலும்

பக்கத்து வகுப்பு பமீலாவுடன்

பரிச்சயம் மட்டும் ஏற்பட்டதவனுக்கு

கந்தன் இப்போ கன்டோவாய் மாறிவிட்டான்

கருப்புத்தான் என்றாலும் வெள்ளைக்காரன் தான் நானென்றான்

மாட்டுவண்டியை அவன் மறந்தான்

மாடாய் உழைத்த தன் தந்தையையும் அவன் துறந்தான்

அம்மா என்ற அன்புத் தெய்வத்தை

அடிக்கடி பணம் கேட்கும் தொல்லை என்றான்

பகிர்ந்துண்ணும் பண்பாட்டை பட்டிக்காடென்றான்

வகுப்பில் பமீலாவை தன் பக்கத்தே இருத்தி

பலமான முத்தங்கள் கொடுத்திடுவான்

சில நேரம் நஸ்சாக சில்மிசமும் செய்திடுவான்

வெள்ளைப் பொம்பிளையள் வாழப்பிறந்ததுகள்

எங்கடை பொம்பிளையள் வாய்காட்டப் பிறந்ததுகள்

சொல்லிடுவான் நாக் கூசாமல்

எட்டு முழத்தில் இப்பவும் சேலை உடுக்குதுகள்

எங்கடை பொம்பிளையள் வெளிநாட்டில்

தண்ணி அடித்தால் தரம் கெட்டுப் போகுமாம் தங்களுக்கு

டிஸ்கோ போவது டிசிப்பிளீன் இல்லையாம்

வாழ்வை ரசிக்க வக்கில்லாத பிறப்புக்கள்

இதுகளைக் கைப்பிடித்தால் பாழாகும் வாழ்வென்று

வெள்ளையுடன் இன்பமாய் வாழ முடிவெடுத்தான்

வெளிப்படையாய் பல இரவு பரீட்சித்து பார்த்தபின்பு

பமீலாவை கைப்பிடித்தான் கன்டோவாய் மாறிய கந்தன்

ஒளிவில்லை மறைவில்லை ஒற்றுமைக்கும் குறைவில்லை

ஆணுக்கும் பெண்ணுக்கும் பேதம் ஏதுமில்லை

ஆளுக்குச் சரிபாதி என்ற சமத்துவ சமுதாயம்

இதுவல்லோ வாழ்க்கையென்று இன்புற்று இருக்கையிலே

இடியாய் விழுந்ததோர் செய்தி!

கறுவல் ஒருவனிடம் கள்ளத் தொடர்பாம் பமீலாவிற்கு

கண்டிப்பாய் கேட்டான் கன்டோ

“வெட்கமாய் இல்லை உனக்கு”

ஆம் வெட்கம்தான்! உன்னைப்போல் உலகம் புரியாதவனை

கலியாணம் செய்தது வெட்கம்தான்!

வெட்டொன்று துண்டிரண்டாய் அட்டகாசமாய்

பதிலளித்தள் பமீலா

வெள்ளையைத் தேடி தான் போக

வெறும் கறுவலை நாடி வெள்ளை போவதேனோ!

ஓடி வந்தான் என்னிடத்தில், அழுகையுடன்

காலிலே போடுகின்ற கறுப்புச் சப்பாத்து

கண்ணுக்கழகாய் இருப்பதுவும் தெரியாதோ?

கருங்கூந்தல் வேணுமென்று

கன்னியர்கள் கலங்குவதுவும் உனக்குத் தெரியாதோ?

கன்டோவே கந்தனாய் நீ மாறிவிடு

உடல் கறுப்பென்றாலும்

உள்ளம் வெள்ளை கொண்டவர்கள் நம் பெண்கள்

உன்னையே திருத்தி உருவாக்கும் சக்தியுண்டு அவர்கட்கு

மன்னிக்கும் குணம்கொண்ட மனிதர்கள் எம் பெண்கள்

மடத்தனம் வேண்டாம் இனியும்

மடல் ஒன்று வரைந்திடு உன் அம்மாவிற்கு

கயமை புரிந்தவர்க்கும் கருணை காட்டும் பெண்கள்

இன்றும் உள்ளார் எம் நாட்டில்

அம்மா சொல்பவளை ஏற்றுக்கொள்

அன்பாய் குடும்பத்தை நடாத்திவிடு

வெள்ளை உள்ளத்தை கண்டு கொள்வாய்

வெள்ளைக் காதல் என்னவென்று புரிந்து கொள்வாய்

சொல்லி வைத்தேன் அவனுக்கு!

சூடு பட்டதனால் புரிந்திருக்கும் அவனுக்கு!

ஆம் சூடு பட்டதனால் புரிந்திருக்கும் அவனுக்கு!


ponsivraj@gmail.com

Series Navigation

குரும்பையூர் பொன் சிவரசா

குரும்பையூர் பொன் சிவரசா