திருப்பூர் ம. அருணாதேவியின் கவிதைகள்

This entry is part [part not set] of 38 in the series 20071018_Issue

திருப்பூர் ம. அருணாதேவி



1.
புத்தனே
தியானம் போதும்
எழுந்திரு.
யசோதராவின் கனவுகளில் வந்து போகும் ஆண்களை
விரட்ட வேண்டாமா.
யசோதராவுக்கு கனவுகள் அபூர்வம்.
ஆனால் சமீபமாய் வரும் கனவுகளில்
ஆண்கள் வந்து போகிறார்கள்.
யசோதராவுக்கு தியானம் பழக்கு.
அல்லது கை கோர்த்துக் கொள்.
யசோதராவாகி பார் புத்தனே.
உனக்கும் அவள் தெரிவாள்.
அவள் உடம்பை உணர்வாய்.
தியானம் தனி ஒருவனின் நிம்மதிக்காகவா.
எல்லோருக்கும் தான்.
தியானம் என்றால் உலகம்.
புத்தர் என்றாலும் உலகம்.

புத்தனே தியானம் போதும்.

2.

பேசி நாளாகின்றன்.
பார்வை கூட
நேருக்கு நேர் இல்லை.
கேள்வி கேட்கும்போது
சுவர் பார்த்து கேள்.
பதில் சொல்லும் போது
வானம் பார்த்துச் சொல்.
மேஜையில் வைக்கப்படும்
உணவில் சூடில்லை.
வார்த்தைகளில் வெப்பம் தொடாமல்
அறைக்குள் நடக்கப் பழகு.
யாரோ உறவினர்கள் வருகிறார்கள்.
கேட் திறக்கும் சப்தம்.
புன்னகை முகமூடியை அணிந்து கொள்.
சிரித்து வரவேற்பு தா.
உறவினர் போன பின்
புன்னகை முகமூடியை கழற்றி எறி.
அடுத்து
பக்கத்துவீட்டுக்காரன் அல்லது தபால்காரன்
வரும் வரை
புன்னகை முகமூடி
இருட்டில் கிடக்கட்டும்.


arunaa_devi2007@rediffmail.co.in

Series Navigation

திருப்பூர் ம. அருணாதேவி

திருப்பூர் ம. அருணாதேவி