சொற்களைத்திருடிய வண்ணத்திகள்…

This entry is part [part not set] of 32 in the series 20071004_Issue

த.அகிலன்



நான்கு சுவர்களும்
மௌனித்திருந்த ஒருநாளில்
எதை எழுதுவது
எனத் தெரியாது விட்டு வைத்த
என் நாட்குறிப்பின்
இப்பக்கங்களில்
இப்போது நான்
உன் மௌனத்தை எழுதுகிறேன்.

உன்மௌனம்.
ஜன்னலின் விளிம்புகளிற்குள் சிக்கிய
குரலோய்ந்த கடலைப்போலிருக்கிறது.

உன்
கண்களிடமிருந்து
வண்ணத்துப்பூச்சிகளைச் சிறைமீட்ட
அந்த முத்தத்தின் முடிவில்..
நமக்கான சொற்களையும்
திருடிக்கொண்டு…
தம் சிறகுகளால்
காலத்தை கடந்தன வண்ணத்திகள்.

என்ன சொல்வது
உன்
மௌனங்களைப்பற்றி
எழுத நேர்கையில்
முத்தங்களைப் பற்றியும்
எழுதவேண்டியிருப்பதை.


agiilan@yahoo.co.uk

Series Navigation

த.அகிலன்

த.அகிலன்