This entry is in the series 20070614_Issue

தாஜ்



வேத கிறக்கத்தில்
அடித்தொடுத்தவர்களும்
படியெடுத்தப் பொடியார்களும்
மிரண்டு போக
இன்னொரு அடியாய்
அவர்களில் அவன்
சிலிர்த்து வெளிப்பட்டான்
நான் எதிர்பட்டேன்
கடவுள் தானென
பிரகடனப் படுத்திக் கொள்ள
விரைந்து போய்
தடுத்தாட்கொண்டேன்.

கடவுளைத் தேடிய காலங்கள்
என்னுள் புன்னகைச் செய்ய
என் முன்னே கடவுள்
பழைய நட்புடன் சிரித்தார்
வரும்மொழிச் சொன்னேன்
பார்வையால் தழுவி
பரவசமாய் கும்பிட்டார்
பார்க்க முடிவதில்லை யென
சிலாகித்தார்.

நலம் விசாரித்தேன்
கண்கள் பணிக்க
தன்னை யாரும் அறிந்து
கொள்ளாததில் நொந்து
கிறுக்கர்களின்
லோகமென்றார்
தலையசைத்தேன்
ருத்திரத் தாண்டவம் ஆடி
ஏக அசைவுகளையும்
நிறுத்தட்டுமா என்றார்
புன்முறுவல் காட்டினேன்
இறங்கிவந்தக் கடவுள்
முகம் சிவந்தார்
பெண்டாட்டியை
ராட்ஷக்ஷி என்றார்
பிள்ளைகளை சிணுங்கினார்
தலைமேல் வைத்திருப்பவளை
மூச்சுக் காட்டவில்லை.

கடவுளானவனுக்கு
ஆருதல் அநாவசியம்
யோசித்த நாழியில்
கடவுளை
கந்தசாமியென விளித்து
அதட்டி அடக்கிய அவனது
அடியார்கள் என்னிடம்
பித்தனோடு பைத்தியமா என்றார்கள்.

**********
satajdeen@gmail.com
www.tamilpukkal.blogspot.com

Series Navigation