கீதாஞ்சலி (76) நேருக்கு நேராக நானா?

This entry is part [part not set] of 39 in the series 20060609_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


என் வாழ்வுக்கு அதிபதியே!
நின்றன் நேருக்கு நேராக,
இன்றும் அடுத்த நாளும்
நின் முன்னே நான்
நிற்க லாமா?
கைகட்டி மெய்யாக
நின் முன்னே நான்,
நேருக்கு நேராக,
நிற்க லாமா?
அண்ட கோளங் களுக்கு அதிபதியே!
விண்டுரைக்க முடியாத பேரளவு
வான்வெளிக் கடியில்
நான் ஏகாந்த மௌனத்தில்,
நெஞ்சப் பணிவுடன்
நிந்தன் நேருக்கு நேராக,
நிற்க லாமா?
கடின உடல் உழைப்பில்,
ஆரவாரக் கொந்தளிப்பில்,
போராட்டம் கலந்து,
நெற்றி வேர்வை சிந்த நேரிடும்
நின்னுலகில்,
ஓயாமல் விரைந்தோடும்
யந்திர மாந்த ரிடையே
நான் மட்டும்
நிந்தன் நேருக்கு நேராக,
நிற்க லாமா?
இந்தப் பூவுலகில்
என் வேலைகள் யாவும் முடித்தபின்
தனியாக,
மனம் திறந்து பேசா
மனிதனாக
நிந்தன் நேருக்கு நேராக
நிற்க லாமா?
வேந்தருக் கெல்லாம்
வேந்தே!

*****************

jayabarat@tnt21.com [S. Jayabarathan (June 4, 2006)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா