அறைக்குள் மெளனம்

This entry is part [part not set] of 48 in the series 20060519_Issue

ஹெச்.ஜி.ரசூல்


ஒரு மீன்குஞ்சைப் போல் வளர்ந்தேன்
அப்போதும் பேசமுடியவில்லை
கண்ணாடிதொட்டி விடுதலைதர
ஆற்றில் விடப்பட்டேன்
அந்தச் சிறுமியின் பேருதவி மறப்பதற்கல்ல
நீரோடும் திசையெல்லாம் ஓடியபோது
கொக்கொன்றின் காத்திருப்பு
பிடுங்கி எறிந்ததில் கரையில் புரள
புதையுண்டழிந்த ஈர்ப்பின் துகள்களாய்
விதையுள் புகுந்து
கீழாநெல்லிச்செடியாய் வடிவெடுத்த
என்னின் தேடலில்
திரும்பவும் உறைந்தது மெளனம்.
ஒரு வெள்ளாடு என்னை மேய்ந்து தின்றது.
குழந்தையின் உதடு சப்புக்கொட்ட
சுரந்தபாலின் நிறமானேன்
அந்த வெற்றுடலில் கவிந்தநிழல்
ஒரு சொல்லைத்தேடிப் பயணித்த களைப்பில்
அறைக்குள் நிறைந்திருந்தது.
———————————————–
mylanchirazool@yahoo.co.in

Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்