‘இருதய சூத்திரம்’

This entry is part [part not set] of 42 in the series 20060505_Issue

தமிழாக்கம் : புதுவை ஞானம்.



பரமிதப் பிரக்ஞை யோகத்தில் பரவெளியில் ஆழ்ந்திருந்தார்
அவலோகதீஸ்வர போதி சத்துவர்.
( ரஸம்,ரூபம்,ஸ்பரிசம்,ஸ்கந்தம்
ஸ்ப்தம் என வட மொழியில் அறியப்படும்)
சுவை, ஒளி, ஊறு, நாற்றம், ஒசை அனைத்தும்
மனக் கவலைகளைக் கடத்தும் வெற்றிடமே எனத்
தெள்ளெனத் தெளிந்தார்.

சாரிபுத்திரா……….!
வடிவம் என்பதோ வெறுமை
வெறுமை என்பதோ
வடிவம் அன்றி மற்றில்லை.
வடிவம் என்பது உண்மையில் வெறுமை
வெறுமை என்பது உண்மையில் வடிவம்.

உணர்ச்சிகள், சிந்தனைகள், உள்ளுணர்வு, செயலூக்கம்
அனைத்தும் அவ்வாறே !

சாரிபுத்திரா……….!
அடிப்படையில் வெறுமையே
அனைத்துப் பண்டங்களும்.
தோன்றுவதுமில்லை மறைவதுமில்லை.
களங்கமும் இல்லை புனிதமும் இல்லை
பெறுவதும் இல்லை இழப்பதும் இல்லை
எனவே…..
வெறுமையுள் வடிவமில்லை
உணர்ச்சியில் உள்ளுணர்வு இல்லை
சிந்தனை இல்லை செயலூக்கமும் இல்லை.

கண்ணில்லை காதுமில்லை
மூக்கில்லை நாக்குமில்லை
உடலில்லை மனமுமில்லை
நிறமில்லை ஒலியுமில்லை
மணமில்லை ருசியுமில்லை.

தொடு உணர்வுமில்லை
சிந்தனைப் பொருளுமில்லை
பார்த்தல் இல்லை கெட்டல் இல்லை
சிந்தனை உட்பட அனைத்துமே இல்லை.

அறியாமை இல்லை
அறியாமையின் முடிவும் இல்லை.
அவ்வாறே
மூப்புமில்லை சாவுமில்லை.

துயரமும் இல்லை
துயர்க் காரணியுமில்லை
துயர் அறுக்கும் பாதையும் இல்லை.

ஞானமொன்றில்லை – அதை
நாடுவதும் இல்லை-ஏனெனில்
அடைவதற்கென்று
எதுவுமே இல்லை.

பரமிதப் பிரக்ஞை நிலையில் சஞ்சரிக்கின்றார்
போதி சத்துவர் அறிவில் தடங்கலின்றி.

தடங்கல் ஏதும் இல்லாததால்
அஞ்சுவதற்கும் ஏதுமில்லை.
திசை திருப்பும் சிந்தனைகளுக்கு அப்பால்
நிர்வாணம் !

நேற்றைய, இன்றைய, நாளைய,
எல்லாப் புத்தர்களும் சஞ்சரிக்கின்றனர்
பரமிதப் பிரக்ஞையில்
அனுத்ரா,சம்யகா, சம்போதி நிலையில்.

எனவே,
பரமிதப் பிரக்ஞையானது
மாமந்திரம்,ஞான மந்திரம்,
கடத்தற்கரிய மந்திரம்
உன்னத மந்திரம்
எல்லாத் துயரங்களையும்
போக்கும் மந்திரம் என்பதை
உணர்ந்து கொள்.
இதுவே உண்மை ஏமாற்று வித்தை இல்லை.

எனவே……..
பரமித மந்திரத்தை ஓங்கி உச்சரி !
தோரண வாயில் தோரண வாயில்
பர வாயில் பர சம வாயில்
போதி ஸ்வாஹா !

மூலம்: ZEN
தமிழாக்கம் : புதுவை ஞானம்.

Series Navigation

புதுவை ஞானம்

புதுவை ஞானம்