அந்தக் கணம்

This entry is part [part not set] of 32 in the series 20060407_Issue

பசுபதி


****
எந்தக் கணத்தினைச் சொல்வேன் ? — என்றன்
. எண்ணச் சுனாமியை எப்படி வெல்வேன் ?
சிந்தைக் கடலைக் கடைந்தால் — எந்தச்
. சிவனார் வருவார் விடத்தைக் குடிக்க ?

காலக் கசப்புக் கணங்கள் — இன்றுமென்
. கனவைக் குலைத்திடும் எண்ணப் பிணங்கள்
வேலன் அருளால் மறப்பேன் — உள்ள
. வேதனை சொட்டும் கவிதை துறப்பேன் !

எத்தனை கோடிக் கணங்கள் — அவற்றில்
. எங்கேயோ வீசுது ரோஜா மணங்கள் !
செத்தைக்குள் சத்தைப் பிடிப்பேன் — எண்ணச்
. சேற்றில் புதைந்த மலர்கள் தொடுப்பேன்!

[வேறு]

கடமையெனும் மாதவத்தைக் காலமெல்லாம் ஆற்றிவரும்
இடமொன்றாம் மருத்துவர்கள் இல்லத்தின் அறைக்குள்ளே,

விடிகாலை, இருள்மங்கை விடைபிரியும் தருணத்தில்,
கடிகாரம் ஒலியின்றிக் கைதட்டும் லயம்நடுவே ,

வெண்ணுடையில் வைத்தியரும் வெயிலோன்போல் ஒளிபாய்ச்ச,
வண்டினமாய்ச் சீருடையில் மங்கையரும் சுற்றிவர,

பத்தினிவாய் முனகல்கள் பூபாளப் பண்ணிசைக்க,
சித்திரமாய், சிங்காரச் செவ்விதழ்கள் மூடியொரு

அழகுமலர் பிறப்பதைஎன் அகன்றகண்கள் பார்த்திருக்க,
அழுமலருள் என்னுதிரம் ஆர்த்திடுதல் கேட்டுநின்றேன்.

அழுகையெனும் பொத்தானால் ஆனந்தம் ஒளிர்ந்திடுமா ?
குழுவினரின் கண்மலர்கள் குதூகலத்தில் விரிந்தகணம் . .

அந்தக்கணம் இனித்ததடி –ஆகா!
என்றன்மனம் இசைத்ததடி !

கடமையெனும் பாற்கடலைக் கடைந்தால் கனன்றெழுமோர்
விடமும் மருந்தாகும் விதியும் சுதிமாறும் .

அழகணங்கு தந்தசவால் ஆட்டத்தில் பலருடன்நான்;
பழம்பறிக்கும் தருணத்தில் பள்ளமென்கால் உணர்ந்ததுவே!

ஆய்வெனும்அக் கல்மனத்தாள் அதிர்ச்சியிடி தரும்மின்னாள் !
ஓய்வின்றித் தாள்பணிந்தும் உன்பகையைத் தழுவிடுவாள் !

வெற்றிபகர் ஆய்வேட்டை வேறொருவன் வெளியிட்டான் !
பற்றியது பொறாமைத்தீ ; ‘படுபாவி ‘ எனச்சபித்துக்

கட்டுரைக்குள் நீச்சலிட்டேன், கசப்பாற்றில் மனம்மூழ்கி.
பட்டதென்பேர் பார்வையிலே, பத்தியொன்றின் நடுவினிலே !

என்றோநான் சொன்னேனாம்; ஏதோஒர் குறிப்பதனை;
நன்றியுடன் ஆய்வாளன் நவின்றதைநான் பருகிநின்றேன்!

நாலுபக்கக் கட்டுரைக்குள் நாலுசொற்கள் விஸ்வரூபம்
போலெழுந்தென் பொறாமையதன் தலையமுக்கி நின்றகணம் . .

அந்தக்கணம் இனித்ததடி –ஆகா!
என்றன்மனம் நிமிர்ந்ததடி !
===<><>====

[வேறு]

நெகிழ்ச்சிக் குளத்தில் அமிழ்ந்தேன் –ஆனால்
. நினைவோடை நீரில் கரிப்பை உணர்ந்தேன்!
மகிழ்ச்சிப் பழத்தின் அருந்தேன் — நடுவே
. வண்டாய்க் குடைவினா கண்டு பிடித்தேன் !

இற்றை இனிப்பேதான் வாழ்வா ? – என்பேரை
. என்நினை வொன்றுதான் சுட்டுமா ? சீ!சீ!
கற்றோரின் எண்ணத் திரையில் — என்பேரைக்
. காணும் வழிதனைச் சொல்லடி சக்தி!

அந்தக்கணம் இனிக்குமடி ! –ஆகா!
என்றன்மனம் நிறையுமடி !

~*~o0O0o~*~
====
s.pasupathy@yahoo.ca

Series Navigation

பசுபதி

பசுபதி