நினைவுகளின் தடத்தில் – (39)

This entry is part [part not set] of 25 in the series 20091204_Issue

வெங்கட் சுவாமிநாதன்


கும்பகோணத்தில் இருந்த இரண்டு வருடங்களின் அனுபவங்கள் எனக்கு புதிதாகவும் உற்சாகம் தருவனவாகவும் இருந்தன. நினைத்துப் பார்த்தால், நிலக்கோட்டையில் இருந்த காலத்தில் மாமாவின் கட்டுப் பாட்டில் இருந்ததும், ஒரு சில மாதங்கள் மதுரை வாசம் கட்டுக்களைத் தளர்த்தி சுதந்திரம் தருவதாக இருந்தது. திரும்பவும் உடையாளூர். நிலக்கோட்டையை விட கட்டுப் பாடுகள் அதிகம் நிறைந்த இடம். அப்பாவின், உடையாளூர் கிராம வாசத்தின் கட்டுப் பாடுகள். கிராம வாழ்க்கையின், ஆசாரமான வைதீகத்தின் கட்டுப்பாடுகள். நிலக்கோட்டையிலே மதுரையிலோ இருந்திராத கட்டுப்பாடுகள். ஆனால் எதிலும் நான் ஏதோ யாராலோ சுதந்திரம் மறுக்கப்பட்டதாக உணரவே இல்லை. சூழல் எப்படி மாறினாலும் அதை ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சியுடன் இருந்ததாகவே உணர்ந்தேன். எந்தவித இறுக்கமும் உணரவில்லை. ஆச்சரியமாகத் தான் இருக்கிறது. இப்போது அது பற்றியெல்லாம் எழுதும் இக்கணத்தில், சூழல் வெகுவாக மாறிய நிலையில் இறுக்கத்தை எப்படி உணராமல் இருந்தேன் என்பது தெரியவில்லை. கட்டுப்பாடுகளினிடையே இருக்கும் நேரங்களில் அது சுபாவவீகமாகத் தான் இருந்தது. அவை தளர்ந்து, என் இஷ்டத்துக்கு நான் என்னமும் செய்யலாம், எங்கும் போகலாம், யாரும் கேட்பதற்கில்லை என்பது போன்ற ஒரு சூழல் வந்த போது, அதுவும் அந்த சுதந்திரம் அனுபவிக்க வேண்டிய ஒன்றாகவும், அது சுபாவீகமான ஒன்றாகவும் தான் தெரிந்தது. இரண்டு நிலைகளிலும் எனக்கு பெரிய வித்தியாசம் இருந்ததாக மனத்தளவில் உணரவில்லை.

வெகு ஆழமான பதிவுகளை மனத்தில் இருத்திச் சென்ற அனுபவங்கள் மிகச் சாதாரணமாக நிகழ்ந்தவை. ஐந்தாவது படித்துக்கொண்டிருந்த போது, என் பதினோராவது வயதில் வேதநாயகம் பிள்ளையின் பிரதாப முதலியார் சரித்திரம் படிக்கக் கிடைத்தது. படிக்கக் கிடைத்தது. தேடிச் செல்லவில்லை. அந்த வயதில் தான் காந்தியைப் பார்க்க அம்மைய நாயக்கனூருக்கு குறுக்கு வழியில் ஒத்தையடிப் பாதையில் சென்றேன். ஆர் கே நாராயணனின் சுவாமியும் சினேகிதர்களும் படிக்கக் கிடைத்தது. தேடிச் செல்லவில்லை. ஆனால் கிடைத்தவற்றை விட்டு விடவில்லை. பதினாலாவது வயதில் மதுரை தமுக்கம் மைதானத்தில் அருணா ஆச•ப் அலி பேச்சைக் கேட்டே ஆகவேண்டும் என்ற ஒரு வேகம் மனதில். ஓடினேன். அருணா ஆச•ப் அலி பற்றியும் அவரோடு ஜெயப்ரகாஷ் நாராயண் பற்றியும் மனதில் ஒரு புரட்சி தீ கொழுந்து விட்டெரியும் பிம்பம் ஒன்று இருந்தது. நிலக்கோட்டையில் இருந்த போது 12-13 வயது காலத்தில் கல்கி பத்திரிகையிலும் ஆனந்த விகடனிலும் வந்த கல்கி, லக்ஷ்மி தொடர்கதைகளைப் பற்றிச் சொல்லவில்லை. அவை என் முன்னே கிடந்தவை. எந்த வயதுப் பிள்ளைகள் படிப்பவை தான். அந்த வயதில் ஹிட்லரின் ‘(Mein kemph’ – எனது போராட்டம்)’ புத்தகத்திற்காக கொட்டையூர் போய் நண்பன் வீட்டிலிருந்து வாங்கி வந்தேன். கோலாலம்பூரில் பிரசுரம் ஆனது 600 பக்கப் புத்தகம் என்பது நினைவில் இருக்கிறது. “எனது நாட்டுக்கு, என் மக்களுக்கு ஒரு நல்ல கொள்கையையோ கடைப் பிடிக்க வேண்டுமென்றால் அதை நான் அது பற்றித் தெரியாத நானூறு பேருக்கு முன்னால் வைத்து அவர்களுக்கு அத்திட்டத்தை விளக்கி அவர்களது அனுமதி பெற வேண்டும் என்பதுதான் ஜனநாயகம் என்றால் அது பைத்தியக்காரத்தனமல்லவா?” என்று ஹிட்லர் தன் சுய சரிதையில் ஒரு இடத்தில் (இதே வார்த்தைகளில் அல்ல, இந்த அர்த்தம் தொனிக்கும் எழுத்துக்களில்) எழுதியிருந்தது எனக்கு இன்னமும் நினைவில் இருக்கிறது. அப்போது ஹிட்லர் இன்னம் ஜெர்மன் சான்ஸலர் ஆகி விடவில்லை. ம்யூனிக் பீர் ஹால் கலவரத்தில் கைதாகி சிறையிலிருந்த போது எழுதப்பட்டது அனேகமாக அது 1921க்கும் 1923க்கும் இடைப்பட்ட காலமாக இருக்கும். இத்தகைய ஒரு விஸ்தாரமான படிப்பு அக்கறையில் வெ. சாமிநாத சர்மா எழுதிய புத்தகங்களும் ( முஸ்த•பா கெமால் பாஷா உட்பட) சுபாஷ் சந்திர போஸின் இளைஞனின் கனவும் இருந்தன. இப்போது நினைத்து பார்க்கும் போது அவை மிக சுவாரஸ்யமான நாட்களாகத் தான் இருந்தன. யோகி சுத்தானந்த பாரதியின் புத்தகங்கள் என்றால் தேடித்தேடி படிப்பேன். சரித்திர பாடம் நடத்திய சுந்தரம் பிள்ளை எனக்கு மிகவும் பிடித்த ஒரு அரிய மனிதராக இருந்தார். அவர் வகுப்புக்களை நான் தவறவிட்டதில்லை. மற்ற எந்த வகுப்பும் எந்தப் பாடமும் எனக்கு சுவாரஸ்யம் அளிக்கவில்லை. தமிழ் பாடப் புத்தகத்தில் மிகச் சாதாரண விஷயங்களை அடுக்கிச் சென்ற அன்பு கணபதி போன்றவர்கள் எப்படி தமிழறிஞர்கள் ஆனார்கள், பாப்பா பாட்டு மாதிரி ஏதோ எழுதிய தேசிக விநாயகம் பிள்ளை எப்படி பாடப் புத்தகத்தில் இடம் பெறும் கவிஞர் ஆனார் என்று எனக்குள் சந்தேகங்கள் எழும். பின் வருடங்களில் அன்பு கணபதி, ஆர் பி. சேதுப் பிள்ளை போன்றவர்களைப் பற்றிய என் அபிப்ராயங்கள் மாறவில்லையே தவிர, தேசிக விநாயகம் பிள்ளையின் ஆசிய ஜோதி, உமர் கய்யாம் பாடல்களைப் படிக்க நேர்ந்த போது அவரைப் பற்றிய என் அபிப்ராயங்கள் மாறின தான்.

ஒரு சில விஷயங்களில் எனக்கு ஏற்பட்ட ஆர்வம் பின் வருட என் ஆர்வங்களுக்கு ஆரம்பமாகவே இருந்தனதான். அது தெரிகிறது. ஆனால், அந்த 14-15 வயதில் இரவு 1 மணிக்கோ என்னவோ விழித்துக்கொண்டு, பாட்டியை அழைத்துக்கொண்டு பாட்டியின் பெட்டியையும் தூக்கிக்கொண்டு தனியே வயல் வழியே மூன்று ஆறுகளைக் கடந்து ஒரு பயணத்தை அப்போது மேற்கொண்ட துணிவு இப்போது இருக்குமா என்பது சந்தேகமே. அப்போது பாட்டி எங்கே இருக்கிறாள் என்று வீடு வீடாகத் தேடிக்கொண்டு 24-25 மைல் தூரம், சுவாமி மலை, பாபுராஜபுரம், உமையாள் புரம் என்று அலைந்தது, பாட்டிமீது இருந்த பாசத்தினால் என்பது இப்போது புரிகிறது. ஆனால் இப்போது அதுபோல் செய்வேனா என்பது தெரியாது. பாசமும் பிடிவாதமும் ஒன்றிணைந்து விட்ட சிறுவயது வேகம் அது. ஆனால் எத்தனை பேருக்கு அந்த வயதில் இப்படிப்பட்ட அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும். ஓரு சிலருக்கு முற்றிலும் வேறு விதமான அனுபவம் இருந்திருக்கக் கூடும். ஆனால் ஒரு சிலருக்குத் தான்.

இப்போது இந்நினைவுகளைத் திரும்ப அசை போடும்போது அப்போது அவற்றில் இருந்த சுவாரஸ்யம் இப்போது இவ்வளவு வருடங்களுக்குப் பின் எழுதும்போதுகூட மங்கி விடவில்லை. ஏதோ ஒரு பாட்டி வீட்டில் தங்கி இரண்டு வருடங்கள் ஒரு பள்ளியில் படித்தோம் என்ற அளவுக்கு அவை சப்பென்று இல்லை தான். இரவு கிட்டத் தட்ட ஒரு மணிக்கு திண்ணையிலிருந்து “திருடன் டா எழுந்து உள்ளே வந்து படுத்துக்கோ” என்று பாட்டி எழுப்ப, வெளியே போய அந்தக் கூட்டதோடு ஸ்டேஷன் வரை சென்று மூன்று மணிக்கு ஒரு கிளூகிளுப்பான கதைத் திருப்பத்தோடு திரும்ப திண்ணைக்கு வந்து படுத்துக் கொண்ட அனுபவம் அந்த வயதில் எத்தனை பேருக்கு இருக்குமோ தெரியாது.

விடுமுறை நாள் ஒன்றில், உடையாளூர் கிராமத்தில், மாலை நாலு மணிக்கு அம்மாவிடம் “எனக்கு ஸ்பெஷல் க்ளாஸ் இருக்கு சாப்டுட்டு போகணும்” என்று அம்மாவிடம் சொல்லி சாப்பிட்டுக்கொண்டிருக்கும் வேளையில் நான் சொல்வதைக் கேட்டுக் கொண்டே கொல்லைத் தாழ்வாரத்திலிருந்து சமையல் அறைக்குள் நுழைந்த அப்பா, வைதீக ஆசாரங்களைக் கடுமையாகப் பின்பற்றும், எதையும் விட்டுக் கொடுக்காத அப்பா, “ஸ்பெஷல் க்ளாஸாவது மண்ணாவது, பொய் சொல்றான், கறுப்புச் சட்டைக் காரனுங்க போடற மீட்டிங், அதுக்குப் போறான், எப்படியோ கெட்டுத் தொலையட்டும் போ” என்று சலிப்பும் கோபமுமாகப் போக, நான் அன்று சாயந்திரம் கும்பகோணம் காந்தி பார்க்கில் அண்ணாதுரை, ஈ.வே.ரா பேச்சை இரவு வரை கேட்டுவிட்டு பட்டினியோடு யார் வீட்டுத் திண்ணையிலோ படுத்திருந்து மறுநாள் காலையில் உடையாளூரை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

இதற்கு என்னைத் தயார் செய்தது, மகாமகக் குள மேற்குத் தெருவோடு வடக்கே, அரசலாற்றுக்குப் போகும் திசையில் கொஞ்ச தூரம் நடந்து வலதுகைப் பக்கம் பிரியும் முதல் தெருவில் திரும்பி நடந்தால் ஒரு சின்ன கடையின் எட்டுக்கு எட்டு இடத்திலிருந்த திராவிட கழகம் நடத்திய படிப்பகம் தான். அங்கு விடுதலை, திராவிட நாடு, முல்லை, போர்வாள் இப்படி இன்னும் என்னென்னவோ நிறைய பத்திரிகைகள் அங்கு பரப்பிக் கிடக்கும். கழகம் சாராத ஒரே ஒரு தினசரிப் பத்திரிகையும்கூட அங்கு இருக்கும். பத்திரிகைகள் எல்லாம் தாள் தாளாக ஒவ்வொருவர் கையில் பிரிந்து கிடக்கும். தினசரி பத்திரிகை படிப்பது என்ற பழக்கம் என்னில் தொடங்கியது அங்கு தான். திராவிட கழகத்தைத் தவிர வேறு எந்தக் கட்சியும் இவ்விஷயங்களில் அந்நாட்களில் அக்கரை காட்டியதில்லை. இப்போதுதான் கழகங்களுக்கு அந்த அக்கறை இல்லை. ஆட்சியைப் பிடித்து விட்டதால் அதற்குத் தேவையும் இல்லை என்று ஆகியுள்ளது. அந்நாட்:களில், வேறு எந்த கட்சியும், மிக பலமான, பரவலாக வேறூன்றிய காங்கிரஸ் கூட மெத்தனமாகத் தான் இருந்தது. ஆனால் திராவிட கழகம் மேடைப் பேச்சு, சினிமா, நாடகம், பத்திரிகை என எல்லாச் சாதனங்களையும் தன் பிரசாரத்திற்குக் கருவியாக்கிக் கொள்வதில் அக்கறை காட்டியது. காங்கிரஸ் கட்சி இவ்விஷயங்களில் முன்னோடியாக இருந்த போதிலும், இடையில் அது மிகுந்த மெத்தனத்தோடு தன் இடத்தைக் காலி செய்ய கழகம் அதைப் பற்றிக்கொண்டு பூதாகாரமாக வளர்த்துக் கொண்டுவிட்டது.

இந்த பத்திரிகைகளில் திராவிட நாடு எனக்கு ரொம்ப பிடிக்கும். தவிர அண்ணாத்துரையின் பேச்சும் என்னை மிகவும் கவர்ந்தது. அடுக்கு மொழி என்று சொல்வார்கள். ஆனால் அந்த மொழி எல்லோருக்குமே பிடித்தது என்று தான் நினைக்கிறேன். அந்நாட்களில் ஈ.வே.ரா, அண்ணாதுரை தவிர திராவிட கழகத் தலைவர்கள் வேறு யாரும் எனக்குத் தெரிந்ததில்லை. என்னைக் கவரவும் இல்லை என்று தான் சொல்லவேண்டும். கே.கே நீலமேகம் என்பவர் கும்பகோணத்தில் இருந்த லோகல் தலைவர். டைமண்ட் டாக்கீஸ் இருந்த தெருவில் கொஞ்சம் தள்ளி அவர் வீடு இருந்தது. அவ்வளவு தான். அதற்கு மேல் அவரைப் பார்த்ததுமில்லை. அவர் பேசிக் கேட்டதுமில்லை. ஆனால் பலர் பல பட்டப் பெயர்களோடு தான் பேசப்படுவார்கள். எல்லோருக்குமே ஏதோ ஒரு ஆரவாரமான பட்டப் பெயர் இருக்கும். தென்னாட்டு லெனின் பெரியார், தமிழ் நாட்டு ரூசோ பெரியார், தமிழ் நாட்டு இங்கர்சால் என்று தான் ஊர்வலங்களில் முழக்கங்கள் எழும். சிந்தனைச் சிற்பி சி.பி. சிற்றரசு என்று ஒருவர் நினைவுக்கு வருகிறார். சின்னராசு என்ற பெயர் தான் சிற்றரசு என்று ஆயிற்று நினைக்கிறேன். ஆனால் சி.பி. என்ற ஆங்கில இனிஷியல் என்னவோ மாறவில்லை. இப்படி திராவிட கழகத்தில் எல்லோருக்குமே ஒரு ஆரவாரமான, அலங்காரமான பட்டப் பெயர்கள் இருந்தன. நடமாடும் பல்கலைக் கழகம், பேராசிரியர், திராவிடத் தந்தை, பகுத்தறிவுப் பகலவன் என்று இப்படி. காமராஜ், பக்தவசலம் என்று வெறும் பெயரோடு உலவியவர்கள் திராவிட கழகத்தில் யாரும் இருக்கவில்லை. அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலைவரிலிருந்து தொண்டன் வரை எல்லோருக்கும் ஆரவாரம், அலங்காரம் தேவையாக இருந்திருக்கிறது. தங்களை வித்தியாசப்படுத்திக்கொள்ளவோ அல்லது தம்மை இப்படி உயர்த்திக் காட்டிக்கொள்வதோ அவசியம் என்றோ அவர்கள் நினைத்திருக்கக் கூடும். இப்போது நமக்கு இதெல்லாம் வேடிக்கையாக இருக்கலாம். ஆனால் அன்று இப்பட்டங்கள் ஜனங்கள் மனதில் ஒரு மயக்கத்தைத் தந்தன. தொண்டர்களுக்கும் தலைவர்களுக்கும் இன்றும் கூட அந்த மயக்கம் நீங்கியதாகத் தெரியவில்லை. இருப்பினும் அப்போது அண்ணாதுரை வெறும் தளபதியாகத் தான் அறியப்பட்டார். ஆனால் அண்ணாதுரை எம்.ஏ. என்று கட்டாயம் குறிப்பிடப்பட்டார். அறிஞரும் பேரறிஞரும் ஆனது பின்னால் தான். இந்தப் பட்டப் பெயர் கலாச்சாரமும் மோகமும் திராவிட கழகத்தின் அடையாளமாக இருந்தது. வேறு எந்தக் கட்சியின் மூளையிலும் இப்படிப்பட்ட ஒரு பிரச்சார உத்தி தோன்றவில்லை. .அண்ணாதுரையிலிருந்து பலரும் கதைகள், நாடகங்கள் என்று எழுதினார்கள். அன்னாட்களில் டி.கே.சீனிவாசன் என்பவர் வித்தியாசமானவர் என்று சொன்னார்கள். ‘ஆடும் மாடும்”- என்றோ என்னவோ ஒரு சிறுகதைத் தொகுதி அவரது வெளிவந்திருந்தது. நான் படித்ததில்லை. அவருக்கு ஏனோ கழகம் ஏதும் விருது தரவில்லை. பின் வருடங்களில் அவர் பெயர் கழகத்திலேயே மறக்கப்பட்டு விட்டது. இதனாலேயே அவரது எழுத்து திராவிட கழகத்தில் மற்றவர் எழுத்திலிருந்து வித்தியாசப்பட்டதாக இருந்திருக்குமோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

எனக்கு இவற்றில் எல்லாம் ஒரு மயக்கம் இருந்தது. முக்கியமாக அண்ணாத்துரையின் பேச்சிலும் எழுத்திலும். கும்பகோணத்தில் இரண்டு முறை அவர் பேச்சைக் கேட்டிருக்கிறேன். அவர் பேச்சைக் கேட்கவென்றே இரண்டு முறையும் உடையாளூரிலிருந்ததால், வீட்டில் ஏதோ பொய் சாக்குச் சொல்லி கும்பகோணம் வந்து இரவு ஏதோ வீட்டுத் திண்ணியில் தூங்கி காலையில் எழுந்து ஊர் திரும்பிருக்கிறேன். கழகப் பேச்சாளர்களிலேயே அவரிடம் தான் நாவன்மை மட்டுமல்ல, எந்தக் கருத்தையும் கேட்கத் தூண்டும் வகையில் அழகாகவும் கடூரமின்றியும் சொல்லம் திறனும் இருந்திருக்கிறது. கழகத் தொண்டர்களும், தலைவர்களும் இன்னமும் தம்முள் ஆத்திரம் பொங்கும் போதெல்லாம் ‘வந்தேறிகள், கைபர் கணவாய், மத்திய ஆசியவிலிருந்து….” என்றெல்லாம் கொட்டித் தீர்ப்பவர்களாக இருந்தாலும், அன்று, 1947-ல் அண்ணாதுரை இப்படியெல்லாம் பேசியவரில்லை. அவருக்கே உரிய சிரிப்பும், அலங்கார தமிழுமாகச் சொல்வார், “எங்களுக்கு உங்களிடம் பகையில்லை. நீங்களும் தமிழர்கள் தான். ஆரியர் திராவிடர் என்ற பாகுபாடெல்லாம் என்றோ எப்போதோ, ஆற்றங்கரையோரத்திலே, மலர்ச் சோலையிலே, அடர்ந்த காடுகளின் அரவணைப்பில், அன்னாளின் கடைக்கண் கணை வீச, அன்னாரும் அதில் மயங்கி….” இப்படி நாம் ஒன்று கலந்து நூற்றாண்டுகள் பவ கழித்துவிட்டோம்.”

அவரது வானொலிப் பேச்சுக்கள் சிறு சிறு வெளியீடுகளாக வந்தன. “கல்வியோ, பதவியோ, பணமோ சாதியை முற்றாக அழித்து விடுவதில்லை. நேரில் பார்க்கும் போது, “நாயக்கரய்யா” என்று குழைந்து பேசும் நாக்கு, தலை மறைந்ததும், “நாயக்கரய்யா” மறைந்து “வடுகப்பய” ஆகிவிடும். என்று அவர் ஒரு வானொலிப் பேச்சில் பேசியது நினைவில் இருக்கிறது. இம்மாதிரியான ஒரு பரந்த பார்வை அவரைத் தவிர கழகத்தவர் வேறு எவரிடமும் காணப்பட்டதில்லை. அவர்கள் பேச்சிலும் எழுத்திலும் வெறுப்பு, உரத்தகுரல் வசை கேலி எல்லாம் மாறாது விரவியிருக்கும். அன்று இந்த வேறுபாடுகள் தீவிரமாக எனக்கு உரைத்ததில்லை. அவரவரது சுபாவம் இப்படி, பேசும் தோரணை இப்படி என்றே நினைத்துக் கொள்வேன். ஆனால் இது பொதுவான சாதிப் பாகுபாட்டைக் கண்ட சீற்றம் இல்லை. அவர்கள் குறியிட்டுத் தாக்குவது சாதியை அல்ல, அவர்கள் குரோதம் கொண்டுள்ள சாதியினரைத் தாக்குவதற்கு கையாளும் வெற்றுக் கோஷம் தான் சாதி ஒழிப்பு என்பது சில வருடங்கள் கழித்தே எனக்குத் தெரிந்தது.

(தொடரும்)

Series Navigation

வெங்கட் சுவாமிநாதன்

வெங்கட் சுவாமிநாதன்