பாலியல் கல்வி,சிறார்கள் மற்றும் நாடாண்மை

This entry is part [part not set] of 45 in the series 20071227_Issue

அறிவன்


உலக ஊடகங்களில் வந்த சமீபத்திய செய்திகளில் ஒன்றான இதை எத்தனை பேர் படித்திருப்பார்கள் என்று தெரியவில்லை.பள்ளிகளில் பாலியல்ரீதியான தொந்தரவுகள்,செயல்கள்,சிறார்களை பாலியல்கையாள்கை செய்வது,அதற்குத் தூண்டுவது,சிறார்களைத் தூண்டுவிட்டு உடலுறவுக்குக் கொண்டு செல்வது போன்ற குற்றங்களைச் செய்த லிண்ட்சே என்ற ஆசிரியர் மீது 40 ஆண்டுகளுக்குப் பின்பு-ஆச்சரியப்படாதீர்கள்-அவரது 40 ஆண்டு வேலைக்காலத்திற்குப் பின் அவரது மாணவிகளில் ஒரு பெண்ணான பிராமோவ் தொடர்ந்த வழக்கில் மூலம் ஆசிரியரின் அனுமதிச் சீட்டு(licence) பறிக்கப் பட்டிருக்கிறது.
இதில் இன்னொரு செய்தி அவர் மேல் கடந்த 40 ஆண்டுகளில் 20 க்கும் மேற்பட்ட குற்றங்கள் அவர் பணிபுரிந்த பள்ளிகளில்,கல்லூரிகளில் சுமத்தப்பட்டும் அவை கடுமையான விசாரணையோ,தண்டனையோ இல்லாமல் கிடப்பில் போடப் பட்டிருக்கின்றன.நிர்வாகச் சுழலின் பல மட்டங்களில் செய்த புகார்கள் பயனற்றுப் போகவே,ப்ராமோவ் அரசை எதிர்த்தே வழக்குத் தொடர்ந்த பின் அரசு தண்டணையாக ஆசிரியரின் பணி அனுமதியைப் பறிக்க பரிந்துரைக்கையில்,அவர் சுகமாக விருப்ப ஓய்வும்,பணி அனுமதியை சுய-ரத்தும்(surrender) செய்து விட்டார்.

மேலும் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் கடந்த 10 ஆண்டுகளில் நாடெங்கிலும் இதுபோன்ற சுமார் 2500 குற்றங்கள் நடந்து அவை அடிகார மட்டத்தால் பதிவு செய்யப் படாமலேயே ஆங்காங்கே சமாளிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.இவையெல்லாம் பாலியல் கல்வியும்,சுதந்திரமான கலவியல் சிந்தனைகளும் அனுமதிக்கவும்,வாழ்க்கை முறையாகவும் கருதப்படுகின்ற அமெரிக்காவில் நடந்திருப்பவை !
இந்தியா போன்ற நாடுகளில்,அமெரிக்கா அளவிற்கு மோசமில்லையெனினும்,பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் சமீபத்திய 20 ஆண்டுகளில் அதிகரித்து வந்திருப்பதும் கண்கூடு.
இவை பாலியல் கல்வி,சுதந்திரக் கலவி மனப்பான்மை ஆகியவை பற்றிய கருத்துக்களில் மிகு-மீள் ஆய்வு(revised thoughts/analysis) செய்யப்பட வேண்டிய அவசியத்தை உணர்த்துவதாகவே நான் கருதுகிறேன்.
இந்தியாவைப் பொறுத்தவரை 30 ஆண்டுகளுக்கு முன்புவரை பாலியல் பற்றிய பேச்சுக்கள் பள்ளி,கல்லூரி அளவில் இல்லை;பள்ளி கல்லூரிகள் அளவில் இப்போதிருக்கின்ற அளவு பாலியல் குற்றங்களும் இல்லை.ஆயினும் அதே சமயத்தில் உலகிற்கே கலவி இன்பம் பற்றிய பெரும் கருத்துக் கருவூலங்களாகக் கருதப்படுகிற வாத்சாயனரின் காமசாத்திரம்,தாந்ரிக் மற்றும் கோக்கோகம் முதலிய ஆய்வுகளின் ஊற்றாகவே இந்தியா விளங்கி இருக்கிறது. 5 ஆண்டுகளுக்கு முன் உலகின் பல நாடுகளில் எடுக்கப் பட்ட புள்ளி விவரங்களின் படி குடும்ப ரீதியான கலவியல் வாழ்விலும்,மிக திருப்தியான வாழ்க்கை வாழ்பவர்கள் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருந்த செய்தியும் படிக்கக் கிடைத்தது.

ஆக இந்தியாவைப் பொறுத்தவரை சிறார்கள் கல்விகற்கும் வயதில் இது போன்ற விடயங்களில் இருந்து விலக்கி வைக்கப்பட்ட அதே சமயம்,உரிய பருவத்தினர் கைக்கொள்ள,தேவைப்படும் காலத்தில் தேவைப்பட்ட அறிவு இத்துறையில் கிடைத்தே வந்துள்ளது எனக் கருத வேண்டியிருக்கிறது.

அமெரிக்கா போன்ற சுதந்திர சிந்தனை நாடுகளில் பாலியல் குற்றங்கள் அதிகரித்திருப்பதும்,காட்டுமிராண்டித்தனமாக தண்டனைகள் இருப்பதாகக் கருதப்படும் சவுதி அரேபியா போன்ற நாடுகளில் பொதுவாகவே பாலியல் குற்றங்கள் குறைவாக இருப்பதும்,வேலை போன்ற காரணங்களுக்காக வளர்ந்துவிட்ட வெளி தேசங்கள் செல்பவர்கள்(first world countries) தங்கள் குழந்தைகளில் பதின்ம வயதுகளில் எல்லாவற்றையும் மூட்டைகட்டிக்கொண்டு இந்தியாவுக்கு ஓடி வருவதும்,நடைமுறை வாழ்க்கையின் கண்கூடு !

சிறார்களுக்கு பாலியல் கல்வி கொடுப்பதாலேயே,அவர்களுக்கு இயல்பான மானுடத்தின் தன்மையான செயல்படுத்திப் பார்க்கும் ஆர்வம்(Experimental attitude) முளைக்கிறது என்பதும்,இதை மேலும் தூண்டிவிடுவதன் மூலமே சிறார்களுகெதிரான பாலியல் குற்றங்களில் அவர்களும் பலிகடா ஆக்கப்படுகிறார்கள் எனக் கருதவும் இடம் இருக்கிறது.

இப்போதைய தகவல் வெள்ளக் காலங்களில் சிறார்களுக்கான பாலியல் கல்வி பள்ளிகளில் இருந்துதான் கிடைக்க வேண்டும் என்பதும் ஒப்புக்கொள்ளக்கூடிய கருத்தல்ல.

பாலியல் கல்வி முதிர்ந்த,சுதந்திர சிந்தனையுள்ள நாடுகளில் சிறார்களுக்கெதிரேயான பாலியல் குற்றங்கள் அதிகரித்திருப்பதும்,அதே சமயம் சிறார்களுக்கு பாலியல் கல்வி அவசியம்,அது அவர்களை எச்சரித்து வேண்டாத விதயங்களில் இருந்து பாதுகாக்கும் என்ற சிந்தனையும்,ஒருங்கே நிலவும் கருத்துக்களாக இருப்பது விந்தை.

அனைத்தையும் ஒட்டுமொத்த நோக்கில் பார்க்கும் போது,சிறார்களின் மீதான பாலியல் தாக்குதலை எப்படி சமாளிப்பது,வருங்கால சமுதாயம் எப்படி அமைவது என்ற இரு கூறுகளில் சிந்தித்தாலேயே இவற்றிற்கான தெளிவு கிடைக்க முடியும்.
சிறார்களுக்கு பாலியல் கல்வி தேவை என்பதை விட உடலியல் கல்வி தேவை என்பதே முக்கியமானது.

அவர்களுக்கு பள்ளிகளில் உடலியல் ரீதியான கல்வியைக் கொடுக்கும் அதே நேரத்தில்,தகுந்த வயது வரை பாலியல் ரீதியான தகவல்கள்,செய்திகளைக் கல்வி முறைகளில் இருந்து விலக்கி வைப்பதே ஆரோக்கிய சமுதாயம் உருவாக வழி வகுக்கும்.

சிங்கப்பூர் போன்ற உலகின் ஒரு சில நாடுகளே இவற்றை சரியாகக் கையாளுகின்றன என்பது என் கருத்து. இங்கு பாலியல் குற்றங்கள்-பொதுவாக அனைத்து வகை குற்றச் செயல்களும்-கடுமையாக அணுகப்படுகின்றன;அவற்றிற்கான தண்டனைகள் வேறெவரும் குற்றச் செயல்களில் ஈடுபட பலமுறை யோசிக்கும் வண்ணமே நிகழ்த்தப்படுகின்றன. கொடும் குற்றங்களுக்கு கடும் தண்டனைகளும்,அவற்றை செயல்படுத்துவதில் ஒளிவுமறைவோ,பாரபட்சமோ இல்லாதிருப்பதும் ஒரு நல்ல நாட்டின் நாடாண்மைக்கு(governance) முக்கியத் தேவைகள் !!!!!

அன்புடன்,

அறிவன்,

சிங்கப்பூர்.


தொடர்பு: en.madal@yahoo.com

Series Navigation

அறிவன்

அறிவன்