கற்று மறத்தலும், முன் நோக்கிச் செல்லுதலும் ( மூலம்: ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் )

This entry is part [part not set] of 48 in the series 20060414_Issue

மொழியாக்கம்: ஜடாயு


(இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரை)

(தென்னிந்தியாவில் பிறந்த ஆன்மீக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் (), சிறுவயதிலேயே தியானமும் யோகமும் கைவரப் பெற்றார். ‘சுதர்சன க்ரியா ‘ என்னும் யோகப் பயற்சியை உருவாக்கிப் பயிற்றுவித்து, உலகம் முழுதும் லட்சக் கணக்கான மக்கள் தங்கள் வாழ்வில் அமைதியும், மகிழ்ச்சியும் பெற வழிவகை செய்து கொண்டிருக்கிறார்.

Art of Living என்னும் உலகளாவிய சேவை அமைப்பின் நிறுவனர். ஒருங்கிணைந்த சமுதாய வாழ்வு, மனித நேயப் பண்புகள் வளர்த்தல் போன்ற பணிகளில், இவரது வழிகாட்டுதலின் கீழ் பல அமைப்புகள் இயங்குகின்றன)

வாழ்க்கையில் சில விஷயங்கள் கற்று மறக்கப்பட வேண்டியவை. அவை கற்கப்பட வேண்டும் அதே தவறுகள் மறுபடியும் நிகழாமலிருப்பதற்காக. அவை மறக்கப்படவும் வேண்டும், ஏனெனில் அவை உங்களுக்குள் குடி கொண்டு விட்டால், தீராத மன பாதிப்பை உண்டாக்கி, உங்கள் உள்ளக் கதவுகளை மூடி, வெறுப்பு உணர்வுகளை விதைத்து, உங்கள் கண்ணோட்டத்தையே பாரபட்சமுள்ளதாக்கி விடும் சாத்தியம் கொண்டவை.

எந்த ஒரு மோதலிலும் இரண்டு நிலைப்பாடுகள் உண்டு. ஒன்று பாதிக்கப்பட்டவருடையது, மற்றொன்று குற்றம் புரிந்தவருடையது. பாதிக்கப்பட்டோர் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றிய நினைவுளிலேயே வசிப்பார்களானால், அவர்களது நிலை இன்னும் மோசமாகும். சுய பச்சாதாபமும் வெறுப்பும் அவர்களுக்கு மட்டுமல்ல, யாருக்கும் நன்மை தரப் போவதில்லை. நீங்கள் கட்டாயம் குற்றம் புரிந்தவர்க்கு நீதி புகட்டியே ஆக வேண்டும், அனால் முழுதும் வெறுப்பில் அமிழ்ந்திருக்கையில் அது உங்களால் முடியாத காரியம்.

நீதி புகட்டுதல் என்ற பெயரில், வெறுப்பு பெரும்பாலும் அறிவு பூர்வமாகக் காரணம் காட்டப் படுகிறது. ஆனால் குற்றம் புரிந்தவனை மீண்டும் மீண்டும் குற்ற உணர்ச்சி கொள்ளச் செய்வதால், மனம் மேலும் கடினப் பட்டு, அவன் தன் தவறுகளை நியாயப் படுத்தும் நிலைக்கோ அல்லது முழுதுமாக மறுக்கும் நிலைக்கோ தான் தள்ளப் படுகிறான். ஒருவன் திருந்த வேண்டும் என்று நீங்கள் உண்மையிலேயே விரும்பினால், அவனைக் குற்ற உணர்வில் சதா சர்வ காலமும் வெந்து கொண்டிருக்கச் செய்யக் கூடாது. இங்ஙனம் செய்வது தூரத்தை அதிகரிக்கிறது, தொடர்பைத் துண்டிக்கிறது. அன்பினாலும், புரிதலினாலும் மட்டுமே, குற்றம் புரிந்தவர்களுக்கு சுய உணர்வு ஊட்டி, அவர்கள் தங்கள் தவறுகளுக்காக வருந்தவும், பின்னர் திருந்தவும் செய்ய முடியும்.

கற்று மறக்கப் பட வேண்டிய விஷயங்கள் என்னென்ன ?

உயர் ஜாதி ஹிந்துக்கள் தலித் மக்களுக்கு இழைத்த அநீதிகள் – இவை தெரிந்து கொண்டு பின் மறக்கப் பட வேண்டியவை. இல்லையென்றால், நீங்கள் ஒரு தலித் ஆக இருந்தால் உயர் ஜாதி ஹிந்துக்கள் மீது தீராத வெறுப்பும் வன்மமும் கொண்டு, அவர்களிடமிருந்து எது வந்தாலும் அதை உதறித் தள்ளுவீர்கள், அது மிக மிக நல்லதாக இருந்தாலும் கூட – குளிப்பாட்டிய தண்ணீரோடு குழந்தையையும் தூக்கிக் கொட்டினாற்போல. இதே போல, ஜாதி ஹிந்துக்கள் தங்கள் கடந்த காலத்தை இறுகப் பிடித்துக் கொண்டுவிட்டால், முதலில் குற்றமுள்ளவர்களாக உணர்வார்கள், பின்னர் தங்கள் மரபு சார்ந்த அடையாளமே ஆட்டம் காண்பதாக எண்ணுவார்கள். சொல்லப் போனால், குற்ற உணர்ச்சி யாருக்குமே மகிழ்ச்சி தருவதில்லை, அது கொஞ்சம்

கொஞ்சமாக வளர்ந்து, வெறுப்பாக முகிழ்த்து, பின்னர் வன்முறையாக மாறுகிறது. நடந்ததை மறுப்பதற்குப் பதிலாக, ஒப்புக் கொண்டு விட்டால், தலித் மக்களை முன்னேற்றுவதற்கான ஆக்கபூர்வமான செயல்களில் நீங்கள் ஈடுபடுவீர்கள்.

இதே போல, முஸ்லீம்கள் ஹிந்துக்கள் மேல் இழைத்த கொடுமைகள். முஸ்லீம்கள் பற்பல ஹிந்துக் கோயில்களைச் சிதைத்தனர், ஜஸியா போன்ற கொடும் வரிகளை விதித்தனர். இவற்றையெல்லாம் தெரிந்து கொண்டு பின் மறந்து விடுங்கள். இந்தத் தலைமுறை முஸ்லீம்கள் எல்லோரையும் இதற்காகப் பழிக்க வேண்டாம். அது நியாயமல்ல – நீங்களே குற்றம் செய்திருந்தாலும், உங்கள் குற்ற உணர்ச்சியால் கிடைப்பதொன்றுமில்லை என்னும் போது, கடந்த கால வரலாற்றில் அரசியல் மற்றும் மதத் தலைவர்கள் இழைத்த கொடும் செயல்களுக்காக, ஒரு பெரும் மதக் குழுவையே குற்ற உணர்வு கொள்ளச் செய்வது சரியல்ல. ஏனெனில், குற்ற உணர்வு கொள்ள யாருமே விரும்புவதில்லை. இந்த குற்ற உணர்வு வழிமுறைகள் கண்டிப்பாக மக்களை ஒன்று சேர்க்கப் போவதில்லை.

இதே போல, உண்மைகளை மறுத்தும் மறைத்தும், சில அறிவு ஜீவிகள் வரலாற்றை மறு ஆக்கம் செய்வதாகச் சொல்வதும் கொஞ்சமும் நியாயமில்லாதது – கர்நாடக மாநில அரசுப் பாடப் புத்தகங்களில் ஒளரங்கசீப் மற்றும் பல முஸ்லிம் மன்னர்கள் பக்தியும் சமயப் பற்றுமுள்ள முஸ்லீம்கள் என்று எழுதியிருப்பது போல. சங்தீதத்தைத் தடை செய்த ஒளரங்கசீப் பக்தியுள்ள முஸ்லீம் எப்படி ஆவான் ? சில வரலாற்று ஆசிரியர்கள் இன்னும் ஒரு படி மேலே போய், முகமது கஜினியின் சோமநாதபுரம் படையெடுப்பையே நியாயப் படுத்துகிறார்கள் !

சீக்கியர்கள், மக்கள் தொகையில் குறைவாக இருந்தும், இந்த தேசத்திற்குப் பெரும் கொடைகளை அளித்துள்ளனர் – சீக்கிய குருக்களின் தியாகங்களை யாரும் சிறுமைப் படுத்துதல் கூடாது. முஸ்லீம் மன்னர்களை சமயப்பற்றுள்ளவர்களாக சரித்திரம் காட்டும்போது, சீக்கிய குருக்களின் தியாகம் சிறுமைப் படுத்தப் படுகிறது என்பதில் சிறிதும் ஐயமில்லை.

அறிவியலாளர்கள், மருத்துவர்கள், தத்துவ அறிஞர்கள், மாந்திரீகர்கள் இவர்கள் மீது கத்தோலிக்க சர்ச் கட்டவிழ்த்து விட்ட வன்முறையே ‘ஸ்பனிஷ் இன்குசிஷன் ‘ என வழங்கலாயிற்று – இத்தரப்பட்ட ஆண்களும், பெண்களும் ஆயிரக் கணக்கில் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். கண்மூடித்தனமான மதவெறி என்னும் பெரும் படுகுழியில் விழக் கூடாது என்பதையே இந்த சரித்திரத்தினின்று கற்றுக் கொள்ள வேண்டும். ஆபிரகாம் என்ற தேவதூதரிடமிருந்து தோன்றாத மதங்களை சாத்தான் மதங்கள் என்று தூற்றி, அவற்றைப் பின்பற்றுபவர்களுக்கு காட்டுமிராண்டிகள் என்று பெயர் சூட்டி, மக்களின் மனங்களில் பீதியை உண்டாக்கும்

வழிமுறைகளெல்லாம் 21-ம் நூற்றாண்டில் தொடரவே கூடாது. ஆனால், இத்தகைய பிரசாரங்கள் இன்றும், பாரத நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் நடந்து கொண்டிருக்கின்றன. வேறு ஒரு சமய மரபிலிருந்து எதையும் ஏற்றுக் கொள்வதற்கு மக்கள் மிகவும் பயப்படும் நிலை அங்கு உருவாகியுள்ளது. எல்லா மதங்களுக்கும் இடம் இருக்கிறது, அவை எல்லாம் மதிக்கப் பட வேண்டும்.

அமெரிக்காவின் பூர்வ குடிகள்மீது இழைக்கப் பட்ட கொடுமைகள் பற்றி மிகச் சிலரே அறிவார்கள். ஒரு கோடி அமெரிக்க பூர்வ குடிகள் ஐரோப்பியர்களால் கொல்லப் பட்டனர். இன்னும் ஒரு கோடிப் பேர் ஸ்பானிஷ் காரர்களால் மத்திய மற்றும் தெற்கு அமெரிக்காவில் கொல்லப் பட்டனர். இவற்றில் இரையானவர்கள் மீது துளிக்கூட யாருக்கும் இரக்கமோ அனுதாபமோ இ இருப்பதாகத் தெரியவில்லை.

நிறப் பாகுபாட்டுக் கொடுமைகள் பற்றிய கசப்புணர்வு இன்னும் கருப்பர்களிடையே இ இழையோடிக் கொண்டு தானிருக்கிறது. இவர்களில் பலருக்கு இது நடந்து போன விஷயம் என்று தெரிந்தும் அதன் நினைவுகளிலிருந்து மீள முடிவதில்லை. அந்த வெறுப்பு உணர்வின் எதிரொலியே இன்று பல ஆப்பிரிக்க நகரங்களில் குற்றங்கள் அதிகமாகி வருவதற்குக் காரணம். சுதந்திரத்திற்கு ஆண்டுகள் பின்பும் பாரத நாட்டினர் பிரிட்டன் மீது வன்மம் கொள்வதும், யூதர்கள் சதா சர்வ காலமும் தங்கள் கஷ்டங்களுக்கு ஜெர்மானியரைப் பழி கூறுவதும் சரியல்ல.

மங்கோல் இனத்தவரும் துருக்கியரும் புரிந்த கொடும் செயல்கள், உகாண்டாவிலிருந்து ஆசியர்கள் வெளியேற்றம், ஸ்டாலினின் கொள்கைகளை ஒப்புக் கொள்ளாத மக்கள் லட்சக் கணக்கில் படுகொலை செய்யப் பட்டது, அயர்லாந்தின் செல்டிக் படுகொலைகள், சுமார் , காஷ்மீரி ஹிந்து பண்டிட்டுகள் காஷ்மீர் பள்ளத் தாக்கிலிருந்து ஒழித்துக் கட்டப் பட்டது, குஜராத், மும்பை, மராடு (கேரளா), பீகார், பகல்புர், மீரட்- இவ்விடங்களில் நிகழ்ந்த பெரும் கலவரங்கள், சீக்கியர் மீது வன்முறை இவை எல்லாம் மனித குலத்திற்கு சகிப்புத் தன்மை என்னும் பாடத்தையே கற்றுக் கொடுக்க வேண்டும், இவை போன்ற கொடுமைகள் எதிர்காலத்தில் நிகழ யாரும் அனுமதிக்கக் கூடாது.

இவை ஒவ்வொன்றையும் நாம் மறுக்கத் தொடங்கினால், சரித்திரத்திற்குப் பெரும் துரோகம் இழைத்தவர்களாவோம். ஆனால், இவற்றுக்கான பழிகளை குறிப்பிட்ட மக்கள் மீது சுமத்துவதன் மூலம், நாமும் அதே போன்ற குற்றங்களை எதிரிடையாக செய்பவர்களாகிறோம். நீங்கள் யாரிடமாவது அவர்களது இனம்/குழுமம் நூற்றாண்டுகளுக்கு முன்பு செய்த தவறுகளைச் சுட்டிக் காட்டிக் கொண்டே இருந்தால், அவர்கள் எப்படி உணர்வார்கள் என்று எண்ணிப் பாருங்கள். இந்த நினைவுகளே நீங்கள் குறிப்பிட்ட இனத்தவரோடு நேசமும் நட்பும் கலந்த உறவை வளர்த்துக் கொள்வதற்கு பெரிய முட்டுக் கட்டையாக இருக்கும்.

இதனால் தான் சில வரலாற்றாசிரியர்கள் வரலாற்றை மறு ஆக்கம் செய்ய வேண்டுமென்று நினைக்கிறார்கள் போலும் ! ஆனால் உண்மைகளை ஒளிப்பது சரியான வழிமுறை அல்ல. மக்களுக்குப் பயிற்றுவித்துப் புரிய வைப்பதே சிறந்தது, ஜெர்மனியில் செய்தது போல. ‘ஹோலோக்லாஸ்ட் ‘ என்னும் பேரழிவு பற்றிய விவரங்களை அனைவரும் அறிவார்கள். முன்பு நிகழ்ந்த வன்செயல்கள் மற்றும் அதனால் விளைந்த துயரங்கள் பற்றிய கல்வியே எதிர்காலத்தில் கொடுமைகள் நிகழ்வதைத் தடுக்க வழிவகை செய்யும்.

தங்கள் இனங்களும் குழுக்களும் இழைத்த கொடும் செயல்கள் பற்றித் தெரியவரும்போது, மக்கள் அவற்றால் பாதிக்கப் பட்டவர்கள் மீது இரக்கம் கொள்ளத் தொடங்குவார்கள். தங்கள் காலனி ஆட்சியினால் மூன்றாம் உலக நாடுகள் எந்த அளவுக்குச் சீரழிந்தன என்பதை அறிந்தால், பிரிட்டிஷார் இந்த நாடுகளுக்கு உதவிக்கரம் நீட்ட முனைந்து முன்வருவார்கள்.. குஜராத் பூகம்பத்திற்குப் பின் உலகம் முழுவதிலுமிருந்து அனுதாபமும் உதவியும் பெருக்கெடுத்து வந்ததை எண்ணிப் பார்க்க வேண்டும். (முஸ்லிம் மன்னர்கள் மதுரா கோயிலை அழித்த போது) எப்படி அங்கிருந்த ஸ்ரீநாத்ஜி என்கிற கிருஷ்ணரின் விக்கிரகம் ஒரு காய்கறி வண்டியில் மதுராவிலிருந்து ராஜஸ்தானுக்குக் கொண்டு வரப்பட்டது, அந்த விக்கிரகம் சேதப் படுத்தப் பட்ட போது நடந்த போரில் மதுராவின் மக்கள் அடைந்த சொல்லொணாத் துயரங்கள் – இவைகளை மறைக்கக் கூடாது. கற்று மறப்போமாக.

ஒரு ஆட்சியாளர் தம் இனம் அல்லது குழுவைச் சார்ந்தவர் என்தற்காக, அவர் இழைத்த தவறுகளை ஒளிப்பதும், அவர் வேறு ஒரு இனம் அல்லது குழுவைச் சார்ந்தவர் என்பதால் பழி சூட்டிப் பிரசாரம் செய்வதும் நியாயமானதல்ல. மற்ற மதங்களின் மீது விரல் நீட்டுவதற்குப் பதிலாக, ஒவ்வொரு மதத் தலைவரும் தத்தம் மதங்களின் செயல்பாடுகளுக்கு முன்வந்து பொறுப்பேற்க வேண்டும் – ஹிந்துக்கள் தீண்டாமைக்கும், கிறிஸ்தவர்கள் சாத்தானுக்கும், முஸ்லிம்கள் மதவெறி மற்றும் பயங்கரவாதத்துக்கும் பொறுப்பேற்க வேண்டும்.

இவற்றைத் தீவிரமாக மறுக்கும் மனப்போக்கு உள்ளது. இத்தகைய மறுப்புகளின் மூலம் ஒன்றும் கற்றுக் கொள்ள முடியாது. இந்த பிரசினைகளை மீண்டும் மீண்டும் தூண்டி வளர விட்டுக் கொண்டிருப்பதன் மூலம் சுய பச்சாதாபமும், குற்ற உணர்வுமே மேலோங்குகிறது – இவை இரண்டுமே ஒரு சமுதாயத்தின் நலத்தை அழித்து விடும். மனிதன் நிகழ்காலத்தில் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். பாரபட்சமற்ற நோக்குடன், வாழ்க்கையைக் கொண்டாட வேண்டும். எல்லா நாட்டினரும் இனத்தவரும், சமுதாயத்தினரும் நமக்குச் சொந்தமானவர்கள் என்னும் உணர்வு வேண்டும்.

இதை நாம் கற்றுக் கொள்ளாதவரை, நீதி நிலை பெற்றிருக்காது, கலாச்சாரங்கள் தழைத்தோங்க முடியாது, மனித நாகரிகமே பாதுகாப்பற்றிருக்கும். ஒரு தவறிலிருந்து பாடம் மற்றும் கற்றுக் கொண்டு, குற்ற உணர்வு, வெறுப்பு இந்த இரண்டு வளைகளிலும் சிக்காமல் இருப்பது ஒரு திறமையும் பக்குவப் பட்ட மனநிலையும் ஆகும். இந்த நிலை தோன்றியே ஆகவேண்டும், இல்லையெனில், உலகின் பல்வேறு வகைப் பட்ட மேன்மைகளையும் அழகுகளையும், வன்முறை ஒரேயடியாக இல்லாமல் செய்துவிடும்.

—-

(jataayu_b@yahoo.com)

Series Navigation

ஜடாயு

ஜடாயு