அவுஸ்திரேலியாவில் உள்ள வெளிநாட்டு மாணவர்கள்

This entry is part [part not set] of 30 in the series 20050616_Issue

என் எஸ் நடேசன்


அவுஸ்திரேலியா

சீனாவைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவி ஒருவர் அவுஸ்திரேலிய தலைநகரான கன்பராவில, தனது வீட்டுக்குள கொலை செய்யப்பட்டார். இவரது உடல் ஏழு மாதங்களின் பின்பே கண்டு பிடிக்கப்பட்டது. ZHANG HONG LE என்ற ஷங்காயை சேர்ந்த இந்த மாணவியை அவளது காதலன் கொலை செய்துள்ளான். இவன் சீனாவுக்கு சென்று பொலிசில் தற்போது சரணடைந்துள்ளான். இந்தக் கொலையில் அவுஸ்திரேலியா, சீன பொலிசுக்கு ஒத்துழைக்க மறுக்கிறது. காரணம் சீனா இன்னும் மரண தண்டனை நிறைவேற்றும் நாட்டில் ஒன்றாகும்.

இந்த மாணவியின் கொலை பற்றிய விடயம் ஏதாவது சில ஊடகங்களில் வந்திருக்கலாம் ஆனால் முக்கியத்துவப்படவில்லை. எந்த சிறு விடயத்தையும் பெரிதாக்கும் அவஸ்திரேலிய வர்த்தக தொலைக்காட்சிகளுக்கு இந்த விடயம் முக்கியமாகப்படவில்லை. The Age என்னும் மெல்பேண் பத்திரிகையில் கல்வி பற்றிய பகுதியில் கட்டுரையாக எழுதப்பட்டிருந்தது. தற்போது அவுஸ்திரேலியாவில் பரபரப்பாக பேசப்படும் சப்பேல் கோபி Chapelle Corby) என்னும் கஞ்சாக் கடத்திய இளம் பெண்ணின் வழக்கில், இந்த மாணவியின் விடயம் பெரிதாக எடுபட்டிராது. இந்த மாணவியின் மரணத்தில் அவுஸ்திரேலியா குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டிருக்கும் நிலை உள்ளது.

கான்பரா பல்கலைக்கழகத்தில் படித்த இந்த மாணவி எப்படி ஏழு மாதங்களாக பல்கலைக்கழக நிர்வாகத்தில் இருந்து தொலைந்து இருந்தாள் ? ஓட்டைக்காற்சட்டையில் போடப்பட்ட நாணயமாகவோ, இருட்டில் தொலைந்த சிறு பொருளாகவோ மறைந்து விட்டாள் ? இவளது பாதுகாப்புக்கு யார் பொறுப்பாளிகள் ?

சீனாவில் தாய் தந்தையர், மகள் அவுஸ்திரேலியாவில் கல்வி கற்பதாக நினைத்துக் கொண்டு இருந்த ஏழு மாத காலத்தில், கன்பராவில் ஒரு வீட்டில் இந்த மாணவியின் சடலம் அழுகிக் கொண்டிருந்தது. பக்கத்து வீட்டுக்காரா,; தபாற்காரர், பல்கலைக்கழகத்து ஆசிரியர், ஏன் சக மாணவிகள் என்று ஒருவரது நினைவிலோ தட்டுப்படாமல் இருந்தது ஆச்சரியம் மட்டுமல்ல எங்கோ ஏற்பட்ட தவறாகவும் கருத வேண்டும்.

அவுஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் இரண்டு இலச்சம் (200,000)வெளிநாட்டு மாணவர்கள் படிக்கிறார்கள். இவர்களில் 99% மானவர்கள் ஆசிய நாட்டவர்கள். சீனா, மலேசியா, தாய்லாந்து தற்பொழுது இலங்கை, இந்திய மாணவர்களும் உள்ளளார்கள். இது அவுஸ்திரேலியாவுக்கு அன்னிய செலவாணி ஈட்டித்தரும் ஒரு தொழில் துறையாகும். பல்கலைக்கழகங்களுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் உற்சாகமளிக்கும் அதே வேளையில் பல்கலைக்கழகங்களில் முகவர்களை நியமித்து ஆசிய நாடுகளில் இருந்து மாணவர்களை தங்களது பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கிக் கொள்கிறார்கள்.

இப்படி மாணவர்கள் வந்தபின் அவுஸ்திரேலிய அரசாங்கம், பல்கலைக்கழகம் எப்படி அவர்களைப் பராமரிக்கிறது ?

சிட்னி, நியூசவுத்வேல் பல்கலைக்கழகத்தில் நான் படித்த காலத்தில் இப்படியான வெளிநாட்டு மாணவ மாணவிகளே எனது சகாக்கள், வழிகாட்டிகள். எனக்கு கம்பியூட்டரைப் பற்றிய அறிவைத் தந்தது ஹொங்கொங்கைச் சேர்ந்த லீ என்பவன். இந்திய ரெஸ்ரோரண்டில் இரவு வேலை எடுத்துத் தந்தது மலேசிய மாணவன். எனது ஆராய்சிக்கு உதவியது தென்கொரியாவைச் சேர்ந்த மாணவியான கிம். இவர்களோடு வாழும் போது, இவர்கள் கலாச்சாரம், வாழ்க்கை முறையை உள்வாங்கினேன். என் பண்பாடுகளை மேன்மை அடைய உதவியது.

மத்திய வர்க்க குடும்பங்களில் இருந்து வந்த இவர்கள் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கான முதல்வருட பணத்தைக் கட்டிவிட்டு விமானமேறியவர்கள். அடுத்த வருடப் பணம் கட்டுவதற்காக சிட்னி, மெல்பேண் என்று எல்லா நகரங்களிலும் உள்ள உணவு விடுதிகளிவும் இரவுகளில் வேலை செய்து விட்டு பகலில் பல்கலைக்கழக பாட நேரங்களில் தூங்கி வழிந்து பாடங்களில் பெயிலாவதும் உண்டு. இவர்கள் பாடங்களைக் கவனிக்காது தேர்வில் தவறினால் இவர்களது விசா ரத்தாகும். வுிசா ரத்தானால் சட்டத்துக்கு எதிரானவராக கருதி குடிவரவுத் திணைக்களம் இவர்களைத் தடுப்புக் காவலில் வைத்துவிடும்.

அவுஸ்திரேலிய குடிவரவு திணைகளத்தினர் மிகவும் சுறுசுறுப்பானவர்கள். அவஸ்திரேலிய குடியுரிமை பெற்றவர்களையும் அவர்களது ஆங்கில உச்சரிப்பில் இருந்து வெளிநாட்டவர் என கருதி தடுப்புக் காவலில் போடுவார்கள் மன நலம் குன்றியவர்கள், ஆங்கில உச்சரிப்பு நன்றாக இல்லாதவர்கள் அவுஸ்திரேலிய பாஸ்போட்டை எப்பொழுதும் கொண்டு செல்ல வேண்டிய காலம் இது.

தற்போது விசா ரத்தானதால் சில இந்திய மாணவர்கள் தடுப்புக் காவலில் இருக்கிறார்கள்.

இப்படியான சில பிரச்சனைகளை எதிர் கொள்ளும் வெளிநாட்டு மாணவர்கள் பலர் அவுஸ்திரேலிய கலாச்சாரப் பழக்க வழக்கங்களை தெரிந்து கொணடும் பலருடன் தொடர்பு கொண்டு இருக்க வேணடியது அவசியம். ZHANG HONG LE க்கு நடந்தது எவருக்கும் நடக்கக் கூடாது.

uthayam@optusnet.com.au

Series Navigation

என். எஸ். நடேசன்

என். எஸ். நடேசன்