மதுரை ஷண்முகவடிவு சுப்புலஷ்மி – 1916-2004 – ஒரு அஞ்சலி

This entry is part [part not set] of 52 in the series 20041216_Issue

பாலா


மதுரை ஷண்முகவடிவு சுப்புலஷ்மி — 1916-2004

எப்பேர்ப்பட்ட இசைப்பெரும்பொக்கிஷம் அவர் ? அவரது தெய்வீகக் குரல் வாயிலாகத் தான், நான் வெங்கடேச சுப்ரபாதமும், விஷ்ணு ஸகஸ்ரநாமமும் பிழையறச் சொல்ல கற்றுக் கொண்டேன்! அவரது அன்னமாச்சார்யா கீர்த்தனைகளை, மனதில் குழப்பமோ வேதனையோ நிலவிய தருணங்களில், எத்தனை முறை கேட்டு அமைதி அடைந்திருக்கிறேன்! முக்கியமாக, ‘பாவமுலோன, பாக்யமு நந்துலு ‘ மற்றும் ‘நானாட்டி பதுகு நாடகமு, கானக கன்னதி கைவல்யமு ‘ ஆகியவை.

உள்ளத்தை உருக்கும், பக்தி ரஸம் சொட்டும் அவரது மீராபஜன், ஸ்ரீரங்கபுர விஹாரா, பஜகோவிந்தம் ஆகியவற்றை பலமுறை கேட்டு ஆனந்தம் அடைந்திருக்கிறேன். ‘காற்றினிலே வரும் கீதம் ‘ பாடலில் அவர் தேன்குரலில் தவழ்ந்து வரும் இவ்வுலகிற்கு அப்பாற்பட்ட ஓரிசையில் (transcendence) லயிக்காத உயிரும் உண்டோ ? குறையொன்றும் இல்லாதவனைப் பற்றி அவர் பாடிய ‘குறை ஒன்றும் இல்லை, மறை மூர்த்தி கண்ணா, குறை ஒன்றும் இல்லை கண்ணா ‘ வைக் கேட்டு நெஞ்சம் நெகிழாதாரும் உண்டோ ?

அவருடைய பாடல்களில் நிலவிய சுருதிசுத்தமும் வாக்சுத்தமும் செளக்யமும் அனுபவிப்பதற்கு, கர்னாடக சங்கீதம் பயின்றிருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அவரது நெஞ்சை உருக்கும் இசையின் வீச்சை, அவர் குரல் பட்டிதொட்டிகளிலெல்லாம் (கோயில் முதல் டாக்கடை வரை) ஒலித்ததன் மூலம் உணரலாம். பலதரப்பட்ட மக்களையும் தனித்துவம் வாய்ந்த தன் குரல் வாயிலாக மயக்கி தன் கட்டுக்குள் வைத்திருந்தார் அந்த இசை சகாப்தம்! மகாத்மா காந்திக்கு மிகவும் பிடித்த ‘வைஷ்ணவ ஜனதோ ‘ பஜன் MS-இன் குரல் வாயிலாகத் தான் பிரசத்தி பெற்றது!

தன்னுடைய இசையால் மொழி வழித் தடைகளை உடைத்தெறிந்தவர் அவர்! திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் விண்ணப்பத்திற்கு இணங்கி, MS தனது 63-வது வயதில், தெலுங்கு கற்று, அதன் தொடர்ச்சியாக, பாலாஜி பஞ்சரத்னமாலா, அன்னமாச்சார்யா சங்கீர்த்தனைகளும் கூடிய ஒரு உன்னத இசைமாலையை தொடுத்து வேங்கடேசப் பெருமானுக்கு சூட்டினார்! பக்தியாலும், உழைப்பாலும் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு MS ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கினார்.

ஒரு முறை, MS ஒரு ரசிகரின் விருந்தினராக அமெரிக்கா சென்றிருந்தார். ஒரு நாள் மதியம், அந்த ரசிகரின் இல்லத்தில் குழுமியிருந்த நண்பர்கள் கேட்டுக் கொண்டதின் பேரில், MS ஒரு சில பாடல்கள் பாடத் தொடங்கினார். அடுத்த வீட்டில் ஏதோ பழுது பார்க்கும் பணி நடந்து கொண்டிருந்தால் ஏற்பட்ட இடைவிடாத சத்தம், சங்கீதத்தை ரசித்துக் கொண்டிருந்தவர்களுக்கு மிகுந்த இடையூராக இருந்தது. ஆனால், அதை பொருட்படுத்தாமல், பக்தியில் லயித்து பாடிக் கொண்டே இருந்தார்!

சிறிது நேரத்திற்குப் பின், அடுத்த வீட்டிலிருந்து வந்த சத்தம் நின்று போய், ரசிகரின் வீட்டுக்குள் நுழைந்த ஹெல்மட் அணிந்த இரு அமெரிக்கர்கள், ‘Can ‘t understand a thing, ‘ one said, ‘but it ‘s very touching. May we listen ? ‘ என்றனர். MS-இன் குரலில் அப்பேர்ப்பட்ட ஒரு தெய்வீக ஈர்ப்பு குடி கொண்டிருந்தது!

மகாத்மாவே ஒரு முறை கூறியது போல், MS பாடும்போது, அவர் கடவுளுக்கு அருகில் செல்வதோடு மட்டுமல்லாமல், கேட்பவரையும் அதே பரவச நிலைக்குக் கூட்டிச் சென்று விடுவார்! அது அவருக்கு மட்டுமே சாத்தியமான ஒன்று! பக்தியும் பாவமும் மேலோங்கும் அவரது மீராபஜன் இதற்கு ஒரு சிறந்த சான்று. பண்டித நேரு ஒரு முறை அவர் பாடலில் லயித்து ‘Who am I, a mere Prime minister, in front of the Queen of Music ? ‘ என்று கூறியிருக்கிறார். இசை வல்லுனர்கள் பலரும் கூட தேவகானம் பாடிய தேவதையாகவே அவரை கண்டார்கள். செம்மங்குடியிடம் அவருக்கிருந்த குருபக்தி அபாரமானது என்று பலரும் போற்றுவர். செம்மங்குடியே, MS-இன் குரல் சுருதியுடன் குழைந்து கலக்கும் விதத்தை, வெண்ணெய் நெய்யாக உருகுவதுடன் ஒப்பிட்டு அந்த சுகானுபவத்தை வர்ணிப்பது கடினம் என்று கூறியிருக்கிறார்!!!

இவற்றுக்கெல்லாம் மேலாக நான் கருதும் விஷயம், அவரது ஒப்பிலா மனிதநேயமே. எண்ணிலடங்கா நல்ல காரியங்களுக்கு அவரது இசை வித்திட்டது என்றால் அது மிகையாகாது. ஆனால், செய்த தானதருமங்கள் வெளியில் தெரியாவண்ணம் அவர் நடந்து கொண்டது தான் அவரை பலரிடமிருந்தும் தனித்து நிறுத்துகிறது. ஐ.நா. சபை வரை தன் இசையை கொண்டு சென்ற அவர், தான் ஈட்டியதில் பெரும்பங்கை பல தர்ம ஸ்தாபனங்களுக்கு வழங்கியதால், ஒரு முறை, வாடகை வீட்டில் குடியிருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதை பலர் அறிந்திருக்க மாட்டார்.

அவர் வாங்கிய விருதுகள் தான் எத்தனை ? வாங்கிய விருதுகளுக்கே பெருமை சேர்த்தவர் அந்த இசை மாமேதை! சிலவற்றை இங்கே குறிப்பிட்டிருக்கிறேன்.

1. செம்மங்ககுடியும், ராஜமாணிக்கம்பிள்ளையும் வழங்கிய ‘இசைவாணி ‘ பட்டம் – 1940

2. பத்மபூஷன் விருது – 1954

3. சங்கீத கலாநிதி விருது – 1968

4. தில்லி பல்கலைக்கழகத்தின் டாக்டர் பட்டம் – 1973

5. ராமோன் மக்ஸாஸே விருது – 1974

6. பத்மவிபூஷன் விருது – 1975

7. தமிழ்நாடு இசை இயல் நாடக மன்றத்தின் தனிப்பெரும்கலைஞர் விருது – 1980

8. தேச ஒற்றுமைக்கான இந்திராகாந்தி விருது – 1990

9. சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி விருது – 1997

10. அனைத்துக்கும் சிகரம் வைத்தாற்போல் பாரத ரத்னா விருது – 1998

கானப்பெருங்குயில் ஒன்று படைத்தவனைக் காண இப்பூவுலகை விட்டு சென்று விட்டது. இன்னும் பல தலைமுறையினர் அவரது ‘கெளசல்யா சுப்ரஜா ராமபூர்வா ‘ வை கேட்ட வண்ணம் தங்கள் விடியலைத் தொடங்குவர் என்பதில் ஐயமில்லை! அதே போல, இன்னும் பல நூற்றாண்டுகள், பல கோடி மாந்தர் MS-இன் மீராபஜனையும், ‘ஹே கோவிந்தா, ஹே கோபாலா! ‘ வையும் கேட்டு கண்ணீர் சிந்தவும், அவரது ‘வைஷ்ணவ ஜனதோ ‘வையும் ‘பஜகோவிந்த ‘த்தையும் கேட்பதின் வாயிலாக மனஅமைதி பெறவும் செய்வர் என்பதிலும் ஐயமில்லை!

என்றென்றும் அன்புடன்

பாலா

**

balaji_ammu@yahoo.com

Series Navigation

பாலா

பாலா