கல்யாண வினாயகர் (கல்லூரிக் காலம்-2)

This entry is part [part not set] of 31 in the series 20031002_Issue

நம்பி.


‘லூப் ‘ நாகரஜுடன் வெளியில் செல்வது ஓணானை எடுத்து காதுக்குள் விட்டுக்கொள்வது போலத்தான். பயல் எந்த நேரத்தில் என்ன செய்வான் என்பது அவனுக்கே தெரியாது. கொஞ்சம் இதயம் பலவீனமாக இருந்தால் ஆளைக் கூட காலி பண்ணிடுவான். திடாரென்று நான்கடுக்கு விடுதி மாடிக்கு போய்விடுவான். அதில் தடுப்புச் சுவர் கால் அடி அகலம் இருக்கும். கீழே விழுந்தால் எலும்புதான் தேறும். லூப் அதில் ஏறி குடுகுடுவென ஓடுவான். இறங்கி வரும் வரை உயிர் நம் கையில் இருக்காது. ‘ஏண்டா இப்படி செய்ற ‘ என்று கேட்பதற்குள் நின்ன நிலையில் ஒரு பல்டி அடித்துவிட்டு ஏதாவது ஒரு மரத்தில் ஏறிவிடுவான். சரி அவனுக்கு கோவணத்த அவுத்த நேரம் அப்படின்னு நாளாக நாளாக அவன் அலப்பறய லூஸ்ல விட்டாச்சு.

கொல்லங்காளி கோயிலுக்கு பின்னால சின்னதா ஒரு குளம் இருக்கும். அதோட தென்கரையிலதான் மரண விலாஸ்னும், லேக் வியூ ரெஸ்டாரண்டும்னும் கடன் கொடுக்குற மூடுக்கு ஏற்ப அழைக்கப்படும் ஒரு சாப்பாட்டுக்கடையும் பொட்டிக்கடையும் இருக்கும். ஒரு நாள் லூப்புக்கு மூடு வந்து அந்தக் குளத்துல குளிக்க கெளம்பிட்டான். கூட வந்த ‘குஞ்சாரம் ‘ கனகவேல கரையில நிக்கச் சொல்லிட்டு லூப் குளத்துல குட்டிக்கரணம் போடுரான். தண்ணி செம்புல புயல் நீராக காவி நிறத்துல இருக்கு. தண்ணிக்குள்ள கும்மாளம் போட்ட லூப் ரெண்டடி நீளமுள்ள கல்ல கண்டெடுத்து கரை மேல தூக்கிப் போட்டுட்டு மறுபடியும் குளத்துல இறங்கிட்டான். ‘குஞ்சாரம் ‘ எள்ளு எண்ணெய்க்கு காயுது எலிப்புளுக்க எதுகாவ காயனும் அப்படின்னு யோசிச்சுகிட்டு இருந்தவனுக்கு திடார்னு பொறி தட்டிச்சு. குஞ்சாரமா கொக்கா ?. அப்படின்னு ஒரு சிரிப்பு வேற. குஞ்சாரம்னா தலையில தொப்பிய கவுத்து அத எடுக்காமலேயே மொட்ட அடிக்குறது. கொஞ்சம் அசந்தா மீசைல உக்காந்து மூக்குலயே வேலைய காமிக்கற பய.

‘டோய் லூப்பு, இந்தக் கல்ல தூக்கினு வாடா ஒரு முக்கிய வேல இருக்குன்னு ‘ குரல் கொடுத்தான்.

மெஸ்ல இருந்து மிளகாப்பொடி, மஞ்சப்பொடி வங்கி வந்து கல்லு மேல தேச்சி, எவனோ காயப் போட்டுருந்த வெள்ளத் துண்ட கட்டிவுட்டு பாத்தா குஞ்சாரத்துக்கு கண்ணு கலங்கிருச்சு. மிளாகப்பொடி அவ்வளவு காரம்.

இத்த எடுத்துகினு போயி அந்த தார் ரோட்டுக்கு அப்பால இருக்க பஸ் நிக்குற புளிய மரத்துக்கு கீழ வைக்கலாம்னு சபை முடிவுபண்ணிச்சு.

இரண்டாவது வாயில் வழியாக விடுதியிலிருந்து கல்லூரிக்கு போகும் மாணவிகள் புளியமரத்தத் தாண்டித்தான் போகனும். ராவோட ராவா ‘கல்யாண வினாயகர் ‘னு ‘பங்கர ‘ சிராஜ் அட்டகாசமா பேனர் எழுதி ஒட்டிட்டான். நம்ம குஞ்சாரம் அதுக்கப்புறம்தான் தொழில ஆரம்பிச்சான். ஒரு தகர டப்பாவ எடுத்து ‘காணிக்கை ‘னு எழுதி கல்லு பக்கத்துல வச்சிட்டான். வகுப்புக்கு மட்டம் போட்டுட்டு முறைமாத்தி காவல் காக்கனும்னு திட்டம்.

காலையில கல்லூரிக்கு வந்த முதல் ஆண்டு மாணவிகள ‘கல்யாண வினாயகர் சக்தி வாய்ந்தவர்மா. கும்பிட்டுட்டு கண்ணத்துல போட்டுகிட்டு

போங்கம்மா. வாத்தியாரு வையமாட்டாரு ‘னு அப்பாவியா சொல்லி விட்டாச்சு. மத்ததெல்லாம் தானே பத்திகிச்சு. மகிமை ஒரு மணி நேரத்திலேயே தெரிய ஆரம்பிச்சிடிச்சு. போற வர்ற பஸ்லேருந்தெல்லாம் காணிக்க வர ஆரம்பிச்சிடிச்சு. கிட்டதட்ட ‘டிரஸ்ட் ‘ போட்டு நிர்வாகம் பண்ணனும் போல ஆயிடிச்சு. சாங்காலம் கலெக்ஷன் இருவத்தி ஏழு ரூவா நாப்பது காசு.

கல்யாண வினாயகர் சக்திய கொஞ்சம் அதிகமா காண்பிக்க ஆரம்பிச்சுட்டார். விளைவு முதல்வருக்கு தகவல் போயி விசாரணை வைக்குற அளவுக்கு விவகாரம் பெரிசாக போயிடிச்சு. உடனே காரியத்துல இறங்கி கல்யாண வினாயகர குளத்துலேயே குந்த வச்சிட்டு கப்சிப்னு அடங்கியாச்சு.

இருந்தாலும் இருவத்து ஏழு ரூவா நாப்பது காச என்ன பண்ணலாம்னு ஒரே யோசனை. அப்பதான் சிக்ரில (CECRI) ‘அலைகள் ஓய்வதில்லை ‘ படம் ராச்சாப்பாடு முடிஞ்சு சல்லிசா போடுறதா நாட்டு நடப்புல தெரிய வந்திச்சு. கனவான்கள் குடும்பத்தோட வந்து பாக்குற இடம். லூப்ப அங்க இழுத்திகிட்டு போனா அடி வாங்கம வரமுடியாதுன்னு வேற பயம். லூப்பு சத்தியம் பண்ணிக் கொடுத்தான். வேணும்னா வால அறுத்து அறைக்குள்ள போட்டுட்டு வாரேன். ஆனா ராதாவ பாக்கம மட்டும் இருக்க முடியாதுன்னு ஒத்த கைய்யில நிக்கிறான்.

சரி வாழ்க்கைல அப்பப்ப கொஞ்சம் ரிஸ்கும் எடுக்க கத்துக்கனும்னு சபை முடிவு பண்ணுனதால போலாம்னு முடிவாச்சு.

அடக்கமா ஒரு மூலையில கும்பாலா உட்கார்ந்தோம். ‘வாடி எங் கப்ப கெழங்கே ‘ பாட்டு வந்ததும் லூப்புக்கு பிச்சிகிட்டு. எப்படியோ மறச்சி வச்சிருந்த கிழிஞ்ச தாள்கள எடுத்துகிட்டு போயி ராதா மேல போட்டுட்டு வந்துட்டான். கணவான்கள் நெளியுராங்க. ஒரு வழியா ஆராவாரம் முடிஞ்சி அமைதியா கொஞ்ச நேரம் இருந்தான்.

‘விழியில் விழுந்து ‘ பாட்டுக்கு பய நெளியுரான். அடக்க முடியாம ஒரு ரூபா காசா திரையில வீசி எறிஞ்சான். கலாட்டாவாயிட்டுது.

எங்களுக்கு அந்த பாட்டோட படம் முடிஞ்சி போச்சு. முறைச்ச கணவான்கள்கிட்ட உதாறு காமிச்சிட்டு வெளிய வந்து நாப்பிளக்க நாலு வசவு குடுத்துட்டு பின்னங்கால் பொடறில அடிக்க விடுதிக்கு ஓடியாந்தாச்சு.

கல்யாண வினாயகர் இன்னமும் குளத்துளதான் இருக்கனும். தண்ணி வத்திச்சின்னா வெளிய தெரிவாரு.

*****

nambi_ca@yahoo.com

Series Navigation

நம்பி

நம்பி