பூட்டு

This entry is part [part not set] of 39 in the series 20030925_Issue

நம்பி.


அது மூன்றாமாண்டு கல்லூரிக் காலம். முதலாம், இரண்டாம் ஆண்டு மாணவர்கள் பயம் தெளியாத நிலையில், இறுதியாண்டு மாணவர்கள் அரியர்ஸை முடிக்கும் முயற்சியில் இருக்க இந்த மூன்றாமாண்டு நேந்துவிட்ட கோயில் மாடுகள் போல இஷ்டத்துக்கும் லூட்டி அடிக்கும் காலம்.

இரண்டாவது ஆட்டம் சினிமா என்பது கல்லூரி காலத்தில் கட்டாயப் பாடம். அது என்ன படமாக இருந்தாலும் சரி. பாவ மன்னிப்போ, பாவம் கொடூரனோ, ஃபைவ் மேன் ஆர்மியோ படத்தைவிட பாடம் பார்க்கச் செல்லும் அனுபவம்தான் முக்கியம். சினா. தானா. கடையில் சைக்கிளை வாடகைக்கு எடுக்கவேண்டும். ஒரு வண்டியில் இரண்டு பேர் கட்டாயம் போகவேண்டும். சிக்கனம். பின்னால் இருக்கை இருக்காது. முன்னால் வைத்து ஓட்ட வேண்டும். கும்மிருட்டாயிருக்கும். விளக்கு இருக்காது. அதுவும் குறுக்கு வழியில்தான் போவோம். ஒற்றையடிப் பாதை. எங்கே முள் செடி, எந்த இடத்தில் சரேலேன்று வளையும் என்பதெல்லாம் அத்துப்படி. சில இடங்களில் கொஞ்சம் பிசகினாலும் சறுக்கி விடும். ஆனாலும் ஆறு, ஏழு சைக்கிள் ஒன்றன் பின் ஒன்றாக போகும்போது மெதுவாகவும் ஓட்ட முடியாது. பின்னால ஓட்டுறவன் லந்து வுடுவான். ‘மச்சிக்கு மாலைக் கண்ணு டோய் ‘. கொஞ்சம் சில்லரை பெயர்ந்தால் கணேஷ் கடையில் ஆளுக்கு ரெண்டு பரோட்டா தொட்டுக்க கொஞ்சம் பீர். அப்படியே போய் ராமவிலாஸிலோ, நடராஜாவிலோ உட்கார்ந்து ‘உய்…. உய்….. ‘னு வாய் வலிக்க விசில் வுட்டுட்டு திரும்பினா பிறவிப் பயன் கிடைச்சிடும்.

இப்படி கலக்கலா போய்கிட்டு இருக்குறப்பா புதுசா வந்த முதல்வர் பதினோரு மணிக்கெல்லாம் விடுதி கதவ சாத்தனும்னு சட்டம் போட்டு செயல்படுத்தியும்ட்டாரு. இன்னாங்கடா இது ?. பார்லிமெண்ட்ல ஒரு சட்டம் திருத்தம் பண்ணவே பத்து வருஷம் ஆவுது. அதுக்கும் மேல அப்பீல், ஸ்டேன்னு எத்தனையோ தகிடுதித்தம் இருக்கு. ஆனாக்க நம்ம ஆளு – நேத்திக்கு மழையில இன்னைக்கு முளைச்சா காளான் நம்மளுக்கு சட்டம் போட்டு அதை செஞ்சும் காட்டிட்டாரேன்னு உஷ்ணமாயிடுச்சு. கும்பல் கும்பலா கூடி நின்னு பேசுனாலும் மனசு ஆறல. எப்படி ஆறும் ?. சாயங்காலாமா ‘மரண விலாஸ் ‘ல சொப்ன சுந்தரி போஸ்டர் ஒட்டிட்டு போயிருக்கான். சுவர் ஏறிக் குதிச்சு போன பசங்க இருட்டுல ஏறுறப்போ கைகால் முட்டில சிராய்ப்பு ஏற்பட்டு அதுக்கு வேற டிஞ்சர் போட்டு அலறுனது ரொம்ப ஃபீலிங் ஆயிடிச்சு.

‘மச்சி இதுக்கு இன்னைக்கு ஒரு வழி பண்ணாம விடக்கூடாதுடா ‘ன்னு ஆவேசப்படான் அடுப்புவாயன் அழகுராஜ். ‘உஷ்ணப்படாத. ஒரு திட்டம் இருக்கு ‘ மர்மமா சிரிச்சான் க.உ.ம (கல் உளி மங்கன்) பிரகாஷ்.

லுங்கிய தொடைக்கு மேல ஏத்தி கட்டிகிட்டு சட்டையில்லாம தோள்ள துண்ட போட்டுகிட்டு வெளிச்சம் மங்குன நேரம் பாத்து சின்னதா தகர டப்பா எடுத்துகிட்டு போனான் க.உ.ம. ‘சரி. வேலை ஆயிருச்சுன்னு நெனச்சுகிட்டு ‘ நிம்மதியா சாப்டுட்டு தூங்க போயாச்சு.

காலையில பாத்தாக்க விடுதியே அல்லோல்படுது. காவலாளி பூட்ட திறக்க முடியாம முதல்வருக்கு தகவல் சொல்ல போயிட்டாரு. ‘இன்னைக்கு விடுப்பு , அடிச்சாண்டா ஆப்பு ‘ விடுதிக்கு உள்ள அடி தூள் பறக்குது டப்பாங்குத்து.

ஒரு வழியா எட்டரை மணிக்கு முதல்வர் வந்தாரு. பூட்டு பூரா தார் ஊத்தி கெட்டியா இறுகிப்போயி கிடக்கு. கொஞ்சம் நேரம் எல்லாரையும் பாத்தாரு. ‘இவனுங்கள இப்படியே சாப்பாடு தண்ணியில்லாம இன்னக்கி முழுசா அடச்சி வச்சிடலாமா ‘ன்னு நினைச்சிருக்கலாம். என்ன இருந்தாலும் முதல்வர் இல்லையா ?. சரிக்கு சரி வம்பு பண்ணா மரியாத இருக்காதுல்ல. பூட்ட உடைக்க சொல்லிட்டு, ‘மத்தியானத்துக்கு மேலே எல்லாரும் வகுப்புக்கு போங்கன் ‘னு சொல்லிட்டு போயிட்டாரு.

அரை நாள் விடுப்பு அதுக்கும் மேல பூட்டு தொல்லயும் அத்தோட ஒழிஞ்சது.

*****

nambi_ca@yahoo.com

Series Navigation

நம்பி

நம்பி